சேப்பியன்ஸ்: மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -
‘கோடானு கோடி உயிரினங்களில் ஒன்றாகவும், அரைகுறை ஆடைகளுடனும், பறட்டைத் தலையுடனும், காய்கனிகளைப் பொறுக்கிக் கொண்டும், எதிர்ப்பட்ட விலங்குகளை வேட்டையாடித் திரிந்து கொண்டும் இருந்த மனித இனம், படிப்படியாக மாறி, இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்ற ஓர் மனித இனமாக உருவானது இப்படித்தான்’ என்பதுதான் சேப்பியன்ஸ். நம் இனத்தின் கதையை அழகாகவும், சுவாரசியமாகவும்ச் விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் நம்மை மலைக்க வைக்கின்றார் முனைவர் யுவால் நோவா ஹராரி. இதனைத் தமிழில் மொழிபெயர்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
‘மனிதக் கலாச்சாரங்களின் பரிணாம வளர்ச்சிதான் வரலாறு என்று அழைக்கப்படுகின்றது’ என்று கூறும் ஆசிரியர் ‘அறிவுப்; புரட்சி’, ‘வேளாண் புரட்சி’,‘அறிவியல் புரட்சி’ போன்ற மூன்று முக்கிய புரட்சிகள் மூலம் மனித வரலாற்றின் பாதையைச் செதுக்கியிருக்கிறார். அதாவது இம்மூன்று புரட்சிகளும் எவ்வாறு மனிதர்களையும் அவர்களுடைய சக உயிரினங்களையும் பாதித்துள்ளன என்பதை நுட்பமாக ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
ஹோமோ சேப்பியன்ஸ் அறிவார்ந்த மனிதன் என்று எடுத்துக்கொண்டாலும் ஹோமோ என்பது பேரினத்தின் ஒரு விலங்கு. இந்தச் சாதாரண உண்மை, வரலாற்றில் பாதுகாக்கப்பட்ட ஒரு ரகசியமாக இருந்தது. தாங்கள் விலங்குகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தில் தங்களைப் பார்ப்பதில் ஹோமோ சேப்பியன்ஸ் நெடுங்காலமாகவே விரும்பி வந்திருந்தனர். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானதாக உள்ளது. நமக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ நாம் எல்லோருமே மனிதக்குரங்குகள் என்ற மிகப்பெரிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். இப்போது வாழ்ந்துகொண்டிருக்கின்ற சிம்பன்சிதான் நமக்கு மிகவும் நெருக்கமானவை. 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே ஒரு பெண் மனிதக்குரங்கு இரண்டு மகள்களைப் பெற்றெடுத்திருக்கிறது.. அவற்றில் ஒன்று அனைத்துச் சிம்பன்சிகளின் மூதாதையாக ஆனது. மற்றொன்று வேறு யாருமல்ல, நம்முடைய சொந்தப் பாட்டிதான்.