கடுப்பூட்டும் கட்டுரைகள் - அருண்மொழிவர்மனின் 'தாயகக்கனவுகள்' நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும் - வாசன் -
அருண்மொழி வர்மனின் ‘தாயகக் கனவுகள்’ நூல் பார்வையிடக் கிடைத்தது. ‘பிரதிகளை முன் வைத்து ஓர் உரையாடல்’ என்ற தலைப்புடன் தனது வாசிப்பனுபவங்களையும் வாழ்பனுவங்களையும் திரட்டி அவர் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வெளிவந்திருக்கின்றது. ஆழமானதும் விசாலமானதுமான அவரது வாசிப்பும், அந்த எல்லைகளின் விஸ்தீரணமும் வியக்க வைக்கின்றது. தமிழிலும் ஆங்கிலத்திலுமான அவரது வாசிப்புப் பயணமானது மிலன் குந்த்ரோவின் ‘மாயமீட்சி’ இல் இருந்து தமிழினி, ஷோபா சக்தி, அகரமுதல்வன் போன்றவர்களின் படைப்பிலக்கியங்கள் ஊடாக பயணித்து , கோர்டன் வைஸ் இன் ‘The Cage’ வரை விரிவடைகின்றது. பல்வேறு அமைப்புக்களுடன் சேர்ந்தியங்கும் ஒரு செயற்பாட்டாளராகவும், பல்வேறு இதழ்களிலும் ஆசிரியர் குழுக்களிலும் , உதவி ஆசிரியராகவும் தொழிற்படும் இவர் தனது இந்த வாசிப்பனுபவங்களை வெறும் விமர்சன ரீதியாக மட்டும் அணுகாமல், எமது சமூகத்தின் கடந்த காலப் போக்குகள், நிகழ்வுகள் , தவறுகள் என்பவற்றை ஆய்வுரீதியாக நோக்குவதுடன் எதிர்காலத்தில் ‘இனி என்ன செய்ய வேண்டும்’ என்ற சிந்திப்புடன் கூடிய எதிர்வு கூறல்களுடன் அணுகுகின்றார்,
டி.டி.கோசாம்பி அவர்கள் தனது ‘இயங்கியல் முறையில் சில பயிற்சிக் கட்டுரைகள்’ நூலிற்கு உப தலைப்பிடும் போது, ‘கடுப்பூட்டும் கட்டுரைகள்’ என்ற பெயரினை இட்டார். அதாவது உழைக்கும் மக்களிற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஆதரவாக இருக்கும் எனது கட்டுரைகள் முதலாளிகள், பாசிஸ்டுகள், மக்கள் விரோத அறிவு ஜீவிகளுக்கு கடுப்பூட்டும் கட்டுரைகளாக இருக்கும் என்றார். இந்நூலினை மொழிபெயர்த்த தோழர் சிங்கராயர் "இவை மக்கள் விரோத அறிவு ஜீவிகளுக்கு கடுப்பூட்டுபவையாக இருக்கின்ற போதிலும் எம் போன்றவர்களுக்கு ‘களிப்பூட்டும் கட்டுரைகள்’ ஆக இருக்கின்றன" என்றார். அருண்மொழி வர்மனின் இந்தக் கட்டுரைகளும் யாருக்கு கடுப்பூட்டுகின்றன, யாருக்கு களிப்பூட்டுகின்றன என்று ஆராய்வதே எனது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.