வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (2) - கலாநிதி சு. குணேஸ்வரன் -
3.2 இலக்கிய நாடகங்கள் : கதையும் கதைப்பண்புகளும்
சங்க இலக்கியம் முதலானவற்றையும் அவ்விலக்கியங்களில் வருகின்ற கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்படுகின்ற நாடகங்களை இலக்கிய நாடகங்கள் என்று அழைக்கலாம். நடுகல் பேசும், வாய்மை காத்த மன்னன், வீரகாவியம், வீராதி வீரன் இந்திரஜித், சதுரங்க வேட்டை, இராமவீரம், சத்தியவேள்வி (பீஷ்மரின் தியாகம்), வள்ளுவர் பொதுமை, இளங்கோவின் இலட்சியம், நாவுக்கரசரின் ஞானம் பக்தி தொண்டு ஆகியவற்றை இந்த அடிப்படையில் நோக்கலாம். இவற்றில் இதிகாசக் கதைமரபுகளுடன் தொடர்புபட்ட இராமாயணம், மகாபாரதம் முதலான கதைகள் உள்ளனவெனினும் அவை ஆய்வு வசதிக்காக இலக்கியப் பிரதிகள் என்ற வகைப்பாட்டிலேயே நோக்கப்பட்டுள்ளன.
3.2.1 இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட பிரதிகள்
நடுகல் பேசும், வீராதிவீரன் இந்திரஜித், இராம வீரம் ஆகிய மூன்றையும் இராமாயணக் கதைகளின் அடிப்படையில் நோக்குவோம். நடுகல் பேசும் என்பது மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. இராமனுடன் போரிட்டு மாண்ட இராவணனின் வீரம் இந்நாடகத்தில் சொல்லப்படுகிறது.
கடலுக்குச் சென்ற மீனவர்கள் தங்கள் வலையில் அகப்பட்ட பெரியதொரு இரும்புப் பெட்டியைத் திறந்து பார்க்கிறார்கள். அப்பெட்டியில் ஏட்டுச் சுவடி அகப்படுகின்றது. அதை ஒரு பண்டிதரிடம் எடுத்துச் சென்று அதில் இருப்பது என்னவென அறிந்து கொள்கிறார்கள்.