கவிஞர் கற்சுறா தன் முகநூற் பக்கத்தில் பின்வருமாறு கேள்வியொன்றினை எழுப்பிக் கவிதையொன்றினைப் பகிர்ந்திருந்தார். அக்கவிதையை அவர் 2014இல் பகிர்ந்திருக்கின்றார்.
கற்சுறாவின் குறிப்பு - கவிதை பற்றிய ஈர்ப்புடையோர் சொல்லுங்கள். சொல்லுங்கள். என்னாச்சு? 11 வருட உரையாடல்.
அவரது கவிதை -
நிழலை நகர்த்தி
உயர்த்தியது
சூரியன்.
நிழல் குளிர
சூடு பட்ட இடத்தில்
வெளிச்சம்.
வெளிச்சத்தில் சூடற்று
குளிர்ந்து போன
நிழலுக்குள்
ஒழிவதென்ன
விளையாட்டு?
கற்சுறாவின் இக்கேள்விக்கும் சிலர் விருப்பு தெரிவித்திருந்தார்கள். ஆனால் கருத்துத் தெரிவிக்கவில்லை. பொதுவாகவே முகநூல் நண்பர்களின் பதிவுகளை வாசிக்காமலேயே விருப்பு தெரிவிப்பவர்கள்தாம் அதிகம். இந்நிலையில் கற்சுறா எதற்காக மீண்டும் 11 வருடங்கள் காத்திருகக் வேண்டுமென்று தோன்றியதால் என் எதிர்வினையை இங்கு முன் வைத்து , கற்சுறாவின் ஆதங்கத்தைத் தீர்த்து வைக்கலாமென்று முடிவு செய்திருக்கின்றேன். அதன் விளைவே கீழுள்ள என் எதிர்வினை.
ஒரு கவிதையைப் பலரும் பலவாறு புரிந்து கொள்வர். இது நிச்சயம் என் புரிதல். நிச்சயமாகக் கற்சுறா இவ்விதமெல்லாம் சிந்தித்து இக்கவிதையை எழுதியிருக்க மாட்டார். அவரது ஆளுமையை ஓரளவு உணர்ந்தவன் என்னும் வகையில் நிச்சயமாக இக்கவிதை ஒரு வகை விமர்சனப்பாணியிலுள்ள கவிதையாகவே இருக்க முடியும். மானுட வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்து நேரத்தைக் கடத்தும் ஆளுமை அவருடையது அல்ல.
இதுவரை அதற்கான உரையாடலை நம் கவிஞர்களும் சரி, விமர்சகர்களும் சரி முன்னெடுக்கவில்லை. கவிஞர்கள் பலருக்குத் தாம் எழுதும் கவிதைகளையே புரிவதில்லை. இந்நிலையில் இந்நிலை எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. விமர்சகர்கள் பலரும் பிறர்தம் கருத்துகளை மேற்கோள் காட்டி விமர்சனம் செய்யப் பழகியவர்கள். அதனால் அதுவும் ஆச்சரியம் தரவில்லை. இக்கவிதையை நான் இப்பொழுதுதான் பார்த்தேன். இது பற்றிய என் எதிர்வினையே இது.
நிழலை நகர்த்தி
உயர்த்தியது
சூரியன்.
நிழல் குளிர
சூடு பட்ட இடத்தில்
வெளிச்சம்.
வெளிச்சத்தில் சூடற்று
குளிர்ந்து போன
நிழலுக்குள்
ஒழிவதென்ன
விளையாட்டு?
நிழலை நகர்த்தி
உயர்த்தியது
சூரியன்.
காலையில் கிழக்கில் சூரியன் எழுகையில் ஒருவரின் நிழல் அவருக்குப் பின்னால் நீண்டு கிடக்கும். நேரம் செல்லச் செல்ல , அந்நிழல் குறுகிக் கொண்டே வந்து, நண்பகலில் அந்நிழல் காணாமலே போய்விடும், இதனை நிழலானது , அதாவது நிலத்தில் படுத்திருந்த நிழலானது உயர்ந்து வந்து நின்றது என்று பொருள் கொள்ளலாம். நண்பகலின் பின் சூரியன் மீண்டும் நகர நகர , அந்நிழல் உச்சியிலிருந்து இறங்கி , தரையில் படுக்கும் வரையில் இறங்கி வரும். சூரியனோ ஒளியின் இருப்பிடன். ஆனால் நிழல் இருள் வடிவமானது. மனிதன் ஒருவன் மேல் படும் ஒளி சூரியனின் கதிரென்றால், அவனது நிழல் இருளைக் குறிக்கும். இவ்வகையில் மனிதனின் வாழ்வின் ஒளி மிகுந்த பக்கத்தையும், இருண்ட பக்கத்தையும் குறிப்பவையாக முறையே சூரிய ஒளியையும் , அவனது நிழலையும் குறிக்கலாம்.
நிழல் குளிர
சூடு பட்ட இடத்தில்
வெளிச்சம்.
நிழல் இருந்த பகுதியில் சூரியனின் கதிர்களின் சூடு பட்ட இடத்தில் வெளிச்சம் ஆக்கிரமிக்கும். அதாவது மனித வாழ்க்கையின் ஒளி மிகுந்த பக்கமானது அவர்தம் இருண்ட பக்கத்தை நீக்கி , அதனை ஒளிமயமானதாக ஆக்கிவிடுவதாக இதனைக்கருதலாம். ஆனால் நிழல் குளிருமா? நிழலாக இருக்கும் வரையில் அது குளிராக இருக்கும். ஆனால் சூடு பட்ட இடத்தில் , அதாவது கதிரின் சூடு பட்ட இடத்தில் நிச்சயமாக அது குளிராக இருக்கப்போவதில்லை. ஆனால் இருண்ட வாழ்வில் ஒளியில்லை. அதனால் ஒளிக்குரிய சூடும் இல்லை. அப்பொழுது நிழல் குளிராக இருக்கும், ஆனால் அதே சமயத்தில் குளிர்தல் என்பதை குளிர்தல் என்னும் நேரடி அர்த்தத்தில் பார்க்காமல், குளிர்ந்து போவதை சிறுத்துக்கொண்டு போவதைக் குறிக்கும் ஒரு குறியீடாகக் கருதினால், குளிர்ந்து போவதென்பது குறைந்து போவது என்பதற்குரிய குறியீடாகக் கருதினால் , அதாவது குளிர்தல் என்பது வெப்பநிலை குறைவதைக் குறிப்பதால, குறையும் என்னும் அர்த்தத்தைக் குறிக்கும் குறியீடாகக் கருதினால், நிழல் குளிர என்பதை நிழல் குறைய என்னும் அர்த்ததில் பார்க்கலாம். அதன்படி நிழல் குளிர அதாவது நிழல் நீங்க, அல்லது குறைய, அதாவது ., மனித வாழ்வின் இருண்ட பக்கம் குறைய, கதிரின் வெம்மை பட்ட இடத்தில், அதாவது நிழல் இருந்த இடத்தில், இருண்ட காலம் இருந்த இடத்தில், சூரிய வெளிச்சம் நிறைகிறது.
இங்கு நிழலை மனித வாழ்வின் இருண்ட பக்கமாகவும், கதிர் வெளிச்சத்தை ஒளி மிகுந்த பக்கமாகவும் கருதலாம். அதே சமயம் மானுட வாழ்வின் இருண்ட பக்கங்களாக போர், வறுமை, துயரம், போராட்டம் என்ப் பலவற்றைக் கருதலாம். வெளிச்சத்தை மகிழ்ச்சி, அமைதி, வறுமை நீங்கிய பொருளியல் ரீதியில் ஏற்பட்ட உயர் நிலை என்பவற்றைக் குறிப்பதாகக் கருதலாம்.
வெளிச்சத்தில் சூடற்று
குளிர்ந்து போன
நிழலுக்குள்
ஒழிவதென்ன
விளையாட்டு?
வெளிச்சத்தில் வாழ்வதற்கு வழிகள் இருக்கையில் எதற்காக மானுட இனம் மீண்டும் மீண்டும் நிழலுக்குள் போய் ஒளிகிறது? இதென்ன விளையாட்டு என்று கவிஞர் கேள்வி எழுப்புகின்றார். என் புரிதலில் இக்கவிதை மானுட வாழ்வின் இருப்பின் இருண்ட பக்கத்தை விமர்சனம் செய்கிறது. அதற்கான ஒளிம்யமான பககத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இருந்தும் ஏன் மானுடர் மீண்டும் மீண்டும் இருண்ட பக்கத்துக்குள்ளேயே போய், விட்டில் பூச்சிகள் விளக்கு வெளிச்சத்துக்குள் போய் மீண்டும் மீண்டும் வ்ழுவதைப்போல , இருண்ட பக்கத்துக்குள்ளில் போய் விழுகின்றார்கள் என்று கேள்வியை எழுப்புகிறது.