ஆய்வு: பழங்குடிகள் போற்றும் இயற்கையறம்! - முனைவர் செ. துரைமுருகன் -
நிலவுலகில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழலினை ஏற்படுத்தி தருவது இயற்கையின் அறமாகும். இயற்கையின் சமநிலைத்தன்மையில் ஏதேனும் இடர்கள் நேரிட்டால் பாதிப்பென்பது அதன் ஒவ்வொரு கூறிலும் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படுவதை, மனிதனை தவிர்த்த பிற உயிரினங்கள் அனைத்தும் தங்களின் நுண்ணுணர்வினால் உணர்ந்து கொள்ளவியலும் . ஆனால் அதை உணரும் திறனை மனித சமூகமானது தொடர்ந்து இழந்து கொண்டே வருகின்றது. தவிரவும் ஒவ்வொரு தலைமுறையும் தொடர்ந்து இயற்கையின் பிணைப்பில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவே விரும்புகிறது. இவ்வாறு விலகி செல்லும் மனிதர்கள், இயற்கையின் அருட்கொடையாக விளங்கும் இயற்கையின் அறத்தினை மட்டும் எவ்வாறு அறிந்திட இயலும். அதனுடன் ஒன்றி, உறைந்து வாழ்பவர்களால் மட்டுமே அதை உணர்ந்திட இயலும்.
அவ்வழியில் இயற்கையுடன் தங்களின் வாழ்வினை இடையறாமல் இணைத்தும் பிணைத்தும் வாழும் பழங்குடி மக்களால் மட்டுமே அதன் சிறப்பினை உணர்ந்திட இயலும். நீலகிரியானது மேற்குத்தொடர்ச்சிமலையின் தொடர்ச்சியாகவும் தமிழ்நாட்டின் மலை மாவட்டமாகவும், உலகின் தலைசிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாகவும், தொல்பழங்குடிகள் செறிவாக வாழும் பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு இயற்கையுடன் இயைந்த வாழும் பணியர் என்னும் பழங்குடிகளின் காடுபடுபொருள் சேகரிப்புச் செயல்பாட்டிலும், காட்டுநாயக்கர் பழங்குடிகளின் வாய்மொழிப் பாடலிலும், ஆலுகுறும்பர் பழங்குடிகளின் விடுகதைகளிலும் எவ்வாறு இயற்கை அறமானது வெளிப்படுகிறது என்பதை தக்க சான்றுகளுடன் இக்கட்டுரை வழியே காணலாம்.
அன்பும் அறமும்
அறக்கூறுகளில் தலைசிறந்ததாக ஒன்றாக விளங்குவது அன்பாகும். ஆகவேதான் அன்பு அறத்தில் உறைந்திருக்கிறது. அன்புடைய ஒருவர் இவ்வுலகில் எதையும் தமக்கு மட்டுமே உரிமை உடையது என்று எண்ணமாட்டார். பொதுமை உணர்வினை உருவாக்கும் இயல்பு அன்புக்கு உண்டு. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு எனும் அப்பொதுமை உணர்வே அறம் எனப்படுகிறது. எனவேதான் அன்பினூடாக அறம் பிறக்கிறது. அன்பின் வழியில் பிறப்பதே அதன் தனிச்சிறப்பாகும் . அன்பற்ற வழிகளில் அறம் பிறக்குமானால் அது அழிவுக்கே வழிகோலும் என்கிறார் திரு.விக. அத்தகு உயர்ந்த மாண்பினை பெற்றது அன்பும் அறமுமாகும்.