வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் 8!
அவர் ஒரு கொடுங்கோலராக இருந்தார். சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபடி எல்லாப் பிள்ளைகளையும் அந்தக் கோல் மூலமாகவே கட்டுப்பாட்டிலும், பயத்திலும் வைத்திருந்தார். உக்கு பண்டாரவுக்கு அந்த இயலாத உடம்பில் தொங்கிக்கொண்டிருந்த மெலிந்த கைகளினால் எவ்வாறு இலக்கு வைத்து ஓடிக்கொண்டிருக்கிறவர்ளை கோலினால் தாக்கமுடிகிறதென்ற ஒரு வினா எப்போதும் இருந்துகொண்டிருந்தது.
அந்தச் சுற்றாடலிலுள்ள குழந்தைகள் விளையாடக் கூடுமிடம் அந்த வீட்டு முற்றமாக இருந்தது. அவர் தவிர வீட்டில் வேறு யாருமில்லையென்பதுடன், மறைவதற்கு அடி பருத்த பெரிய பெரிய கித்துள் மரங்களும், கூடலாய் வளர்ந்த கட்டையான ஈரப்பலா மரங்களும்கொண்ட விசாலமான வளவும் கொண்டிருந்தது. அந்த கொடுங்கோலுக்குப் பயந்துதான் முனசிங்க மாமாவின் மகன் சரத்சந்ர மொட்டையடிக்க தன்னை ஒப்புக்கொடுத்து மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு புத்த சங்கத்திலே சேர்ந்து போனான். குசுமவதிகூட ஒருபோது அந்தக் கொடுங்கோலினால் விளாசல் பெற்றிருக்கிறாள். ‘வா, குசும இவ்விடம்’ என்று உறுக்கியதற்கு நெளித்துக்கொண்டு அப்பால் ஓடி குசுமவதி தவிர்ந்துகொண்டாள். ‘உங்களையெல்லாம் நல்லாய் உதைக்கவேணுமடி. உங்களால்தான் பிக்கு ஆகவேண்டிய பையன்களெல்லாம் பித்துப்பிடித்து அலைந்துகொண்டிருக்கிறான்கள். என் கையிலே அகப்படு, அப்போ பார்த்துக்கொள்கிறேன்’ என்று மஹாபத்திர தாத்தா திட்டினார்.
அன்று மாலைக்குள்ளேயே குசும அவரிடம் வசமாக மாட்டிக்கொண்டாள். தூங்குவதுபோலத்தான் கண்ணை மூடி, கழுத்தைச் சரித்து தாத்தா சாய்மனையில் படுத்திருந்தார். கூடத்துக்குள் நீரருந்த திண்ணையிலேறி படபடப்புச் சத்தமுமின்றி ஒரு பறவைபோல காற்றைக் கிழித்துக்கொண்டு குசும ஓடிப் போனாள். ஆனாலும் தாத்தா தூங்குவதாக நினைத்ததால் போதுமான வேகத்தை அவள் அதில் பிரயோகித்திருக்கவில்லை. வாசலை அவள் நெருங்க காத்திருந்த தாத்தா திடீரென கண்விழித்து பட்டென கொடுங்கோலை எடுத்து வீசினார். சளாரென்ற சத்தத்துடன் முதுகில் விளாசல் இறங்கிய குசும வீரிட்டுக் கத்தினாள். அபூர்வமாய்க் காட்டும் அந்தச் சிரிப்புடன் கொடுங்கோலை மறுபடி அருகே வைத்துக்கொண்டு சாய்மனையில் சாய்ந்தார் தாத்தா. ஒரு நிமிடம் துள்ளி, ஒரு நிமிடம் நெளிந்து முதுகைத் தடவியபடி அழுது அடங்கிய குசும வெளியேறும்போது, ‘நீ கெட்ட தாத்தா. அனோமா மாமியோட உன்னை உரிஞ்சானாய்க் கண்டன்’ எனக் கத்திவிட்டு ஓடிப்போனாள். அதைக் கேட்டு தாத்தா கடகடவெனச் சிரித்தார். பின் தனது தலையை நிமிர்த்தி மீசையை முறுக்கினார். அவரது கண்கள் சிவந்திருந்தன. முடியில்லாத ராஜா ஶ்ரீராஜசிங்கன்போல அப்போது அவர் உக்கு பண்டாரவுக்குத் தோன்றினார். குசும அதன் பிறகு அந்த வீட்டுக்கு விளையாட எந்த நாளும் வந்ததில்லை.
முன்னொரு காலத்தில் மாத – வார இதழ்களில்தான் சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. முன்னொரு காலம் என்றால், பழந்தமிழ் இலக்கியம் அறிமுகமான அந்தக்காலம் அல்ல. குறிப்பிட்ட முன்னொரு காலத்தில் இலங்கையில் இலக்கியத்துறையில் மறுமலர்ச்சிக்கால இலக்கியம் , மண்வாசனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம், பிரதேச மொழி வழக்கு இலக்கியம், தலித் இலக்கியம், போர்க்கால இலக்கியம், இடப்பெயர்வு இலக்கியம் என்று சிலவகை இலக்கியப்படைப்புகளை இலங்கையில் மாத இதழ்கள் தாங்கி வெளிவந்தன. தமிழ்ப்பத்திரிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிட்ட வார இதழ்களும் இலக்கியப்படைப்புகளுக்கு போதியளவு களம் வழங்கின. காலம் மாறியது. இலங்கையில் இனநெருக்கடி உச்சம் பெற்றதனால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கியவாதிகள், புகலிடத்திலிருந்து இதழ்களை வெளியிட்டு வந்ததுடன் புகலிட இலக்கியத்தையும் பேசுபொருளாக்கினர். மாறிக்கொண்டிருப்பது காலம். சமகாலத்தில், முகநூலின் வருகையையடுத்து பலரும் அதிலும் எழுதி உடனுக்குடன் எதிர்வினைகளையும் வரவாக்கிக்கொள்கின்றனர். நவீன தொழில் நுட்பத்தின் தீவிர பாய்ச்சலினால், வரப்பிரசாதமான இணைய இதழ்களும், முகநூல்களும் இலக்கியம் பேசிவருகின்றன. எவரும் தத்தமக்கென வலைப்பூவை வைத்துக்கொண்டும் தங்கள் அன்றாட பதிவுகளை அதில் ஏற்றமுடிகிறது.
- எம் பேரன்புக்குரிய வானொலிக் கலைஞர்களிலொருவர் அமரர் இராஜேஸ்வரி சண்முகம். அவரது காலகட்டத்தில் அவரது குரலுக்கு அடிமையாக நாமனைவருமிருந்தோம். அவருடன் பணியாற்றிய சக வானொலிக் கலைஞரும் ,ஊடகவியலாளருமான எஸ்.கே.ராஜென் அவர்கள் அவரைப்பற்றிய நினைவுகளைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார். அத்துடன் இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் அரிய புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். அவருக்கு எம் நன்றி. - பதிவுகள்.காம் -
தமிழ் கலைகளில் வானொலிக்கலை என்பதும்ஓர் அங்கமாகியது. வானொலித்தமிழ் எனும்வடிவம் தோற்றம் பெற்றது. இவற்றுக்கு வழிவகுத்தது இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு. இலங்கை வானொலித்தமிழ் தனித்துவம்நிலைநாட்டிய அந்தநாள்கள் மனமகிழ்வுக்குரியவை. இலங்கையிலும்தமிழகத்திலும் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும்பலநாடுகளில் இருந்தும் ‘வானொலித்தமிழ்’ என்ற கருத்து கல்வியாளர்களால் முன்வைக்கப்பட்டது. அப்படி ஒரு பொற்காலம்இருந்தது, அப்பொழுது இலங்கைத்தமிழ்ஒலிபரப்பாளர்கள் பெருமைப்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது யாவும் சென்னை வியாபாரத்தமிழால் செழுமை குன்றிப்போயுள்ளன. மூத்த ஒலிபரப்பாளர்களின் ஆளுமைமிக்க அனுபவங்கள் பேணப்படாது புறக்கணிக்கப்படுகின்றன. இப்படிப்பல்வேறு விடயங்கள் இன்றைய வானொலி ஒலிபரப்புக்கள் தரம்குன்றிப்போவதற்குக் காரணிகளாய் அமைந்துள்ளன. இவற்றுக்கு மத்தியிலும் வாழ்வின் பெரும் பகுதியை இலங்கை வானொலி தமிழ்ஒலிபரப்பில் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்த, அரும் பெரும் அறிவிப்பாளர்கள் எமதுமனங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களில் ஒருவரை இந்தப்பகுதியில்பதிவிடுவது மனதுக்கு மகிழ்வு தருகிறது. இலங்கை வானொலி என்றதும் எமதுமனங்களில் எழுந்து வரும் அறிவிப்பாளர்கள்வரிசையில் உயர்ந்து நிற்பவர் வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள். மயில் ஆடினால் அழகு, குயில் கூவினால் இனிமை, இராஜேஸ்வரி சண்முகம்அவர்கள் அறிவிப்பு நிகழ்த்தினால் இனிமையோ இனிமை. இலங்கைத் தமிழ்ப் பெண்களுள் கலை ஆளுமைகளில் சிறந்து விளங்கினார்.
சமூக வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சாதியம் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது. சாதியம் சமூகத்தின் மொழி, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, நடைமுறை போன்ற அனைத்து தளங்களிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றதென்பதை அவதானித்தல் அதற்கெதிரான செயல்பாடுகளை பல்வேறு தளங்களில் முன்னெடுத்தல் அவசியமானதொன் று. இக்கட்டுரை யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கம் பற்றிய ஒரு அறிமுகம்.
தென்னாசிய சமூகங்களில் சாதியத்தின் இருத்தல் பற்றிய பல்வேறு ஆய்வுகள் வந்திருக்கின்றன. சாதியத்தில் இருத்தலை இவ்வாய்வுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. சாதியம் பண்டைய சமூகத்தின் எச்சசொச்சம். அது நிலப்பிரபுத்துவத்தின் வடிவம். நவீன சமூக பொருளாதார வளர்ச்சி சாதியத்தை இறுதியில் இல்லாமல் ஆக்கிவிடும் என்ற பார்வை இன்று கேள்விக்குறியாக எமக்கு முன் நிற்கிறது. அகதிகளாக அனைத்தையும் இழந்து வந்தவர்கள் கூட சாதியத்தை மட்டும் விடாமல் தூக்கிகொண்டு வருவது ஏன்? அல்லது நாடு கடந்து ஐரோப்பா அமெரிக்காவென்று வந்தவர்கள் சாதியை மட்டும் விடாமல் இருப்பது ஏன்? ஒரு புதிய சமூக பொருளாதார அரசியல் சூழலில் வாழ்பவர்கள் கூட சாதியத்தை கைவிடாமல் இருப்பதன் பின்னணி என்ன?
ஆனந்த் டெல்டும்ப்டே என்ற அறிஞர் கூறுகிறார், ’’1853இல் புகையிரத சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது சாதியத்தை உடைக்க போக்குவரத்து நவீனமயமாக்கல் உந்துசக்தியாகுமென்று மார்க்ஸ் எழுதினார். ஆனால் உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய புகையிரத சேவையை கொண்டுள்ள இந்தியாவில் சாதி அழியவில்லை. மாறாக சாதியானது நவீன வடிவங்களுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து (adaptive) வருகிறது.’’
சாதியமானது நவீன மயமாக்கல், முதலாளித்துவ உலக மயமாதல் போன்ற அனைத்து வளர்ச்சிப் போக்குகளுடாக தன்னை தகவமைத்து புதிய வடிவங்களை எடுக்கிறது. சாதியம் ஒருபுறம் மாறுகிறது. மறு புறம் சாதியம் திரும்பவும் தளைக்கிறது. புதிய அவதாரங்களை எடுக்கிறது. சாதியத்தின் சமூக இருப்பை அங்கீகரிக்காமல் அதன் நேரடி-மறைமுக ஆதிக்கத்தை உணராமல் ஒரு சமூக விடுதலை அல்லது குறைந்த பட்ச ஜனநாயக வாழ்வு சாத்தியமில்லை.
ஒப்பிட்டுப் பார்த்து உளமுடைந்து போகாதீர்
கிட்டிய வாழ்வினைத் கிழித்துவிட எண்ணாதீர்
பேராசை அலையில் சிக்குண்டு மாளாதீர்
பெற்றதை மனமிருத்தி பெருமகிழ்வு எய்திடுவீர் !
பைந்தமிழும் செந்தமிழும்
பாரிலங்கும் என்றபின்னும்
அந்தமிலாத் தென்றலுமே
ஆடிவரும் அம்மானை
அந்தமிலாத் தென்றலொடும்
ஆடிவரும் ஓசையிலே
சொந்தமெனப் பாடிடுவோர்
செப்பிடுமோர் அம்மானை !
Antonio Gramsci தென் இத்தாலியின் ஸார்டினியாவை சேர்ந்தவர். நெப்போலியனின் பிரெஞ்சு பேரரசு தகர்ந்த பின் சுதந்திரமடைந்த ஸார்டினியா 1861 ல் ஐக்கிய இத்தாலியின் பகுதியாக சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய பிற்போக்கின் குறியீடாக, மூர்க்கத்தனமான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பெயர்போன நிலப்பிரபுத்துவ முறையையும் ஒடுக்குமுறை யந்திரங்களையும் கொண்டிருந்த அரசின் கீழ் இருந்தது. பிரான்ஸ்கோ கிராம்ஷி, ஜியுஸெப்பினா மார்ஸியாஸ் இணையருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவரே அந்தோனிய கிராம்ஷி ஆவர்.1897 ல் நடந்த இத்தாலிய நாடாளுமன்ற தேர்தலின் போது பிரான்ஸ்கோ கிராம்ஷி ஊழல் செய்த ஒருவரை எதிர்த்து போட்டியிட்ட இளம் வேட்பாளரை ஆதரித்த காரணத்தால், கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்தார் என்ற பொய்யான வழக்கு தொடரப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு குழந்தைகளுடன் அந்தோனிய கிராம்ஷியின் தாயார் மிகவும் மோசமான வறுமையில் இரவுபகல் ஓய்வொழிச்சலின்றி உறக்கமின்றி ஆடைகள் தைத்து விற்று பணம் ஈட்டுகிறார். கிராம்ஷி சிறையில் இருக்கும்போது தாயார் பற்றி கீழ்க்கண்டவாறு நினைவு கூறுகிறார்.
“ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அம்மா செய்ததை எல்லாம் நம்மால் செய்ய முடியுமா? அத்தகைய ஒரு பேரழிவை எதிர்த்து தன்னந்தனியாக நின்றிருக்க முடியுமா? அல்லது குழந்தைகளை அதிலிருந்து காப்பாற்றியிருக்க முடியுமா? அம்மாவின் வாழ்க்கை நமக்கு பெரிய பாடம். கடந்துவர முடியாதவையாக என்று மாபெரும் நெஞ்சுரம் கொண்ட மனிதர்களுக்கு கூட தோன்றிய இன்னல்களை கடந்து வருவதில் மனோ உறுதி எவ்வளவு முக்கியமானது என்பதை அப்பாடம் எமக்கு காட்டியது. ….நமக்காக தன் வாழ்நாள் முழுதும் உழைத்தார். நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்கள் செய்தார்.”
கிராம்ஷியின் முதுகு இயற்கையிலேயே கூனலாக இருந்தமையால் அவரது வளர்ச்சி குறுகிக் காணப்பட்டது. பள்ளியில் மிகச்சிறந்த மாணவர். வீட்டின் வறுமை காரணமாக பதினொரு வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். அந்த அனுபவத்தை கிராம்சி பின்னர் இவ்வாறு எழுதுகிறார். “ என்னைவிட கனமான புத்தகங்களை சுமந்து செல்வதுதான் எனக்குள்ள வேலை. யாருக்கும் தெரியாமல் பல இரவுகள் நான் அழுததுண்டு. என் உடம்பு அப்படி வலிக்கும்.”1904 இல் தந்தை தண்டனைக்காலம் முடிந்து வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தில் ஓரளவு அமைதி நிலவுகிறது. கிராம்சி தமது படிப்பை மீண்டும் தொடர்கிறார்.
நான் விஜய் தொலைக்காட்சியினரின் 'சுப்பர் சிங்கர்' நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பார்த்தவனல்லன். அவ்வப்போது பார்த்து வருபவன். 'சுப்பர் சிங்கர்' அறிமுகப்படுத்திய பாடகர்களில் இளம் பாடகி பிரியங்கா தனித்து ஒளிர்கின்றார். இவருக்குக் கலையுலகில் நீண்டதோர் எதிர்காலமுண்டு. இவரது குரல் தனித்துவமானது; இனிமையானது.
"மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவெனச் சொன்னது
உறவு
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவெனச் சொன்னது
உறவு
நில்லடி என்றது நாணம்
விட்டு செல்லடி என்றது ஆசை" - கவிஞர் வாலி.
கவிஞர் வாலியின் சிறந்த பாடல்களிலொன்று. இடம் பெற்றுள்ள திரைப்படம் 'மேஜர் சந்திரகாந்த்'. இத்திரைப்படத்தின் மூலமே நடிகர் சுந்தர்ராஜன் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படத் தொடங்கினார். இத்திரைப்படத்தில் நடிகர் நாகேசும், ஜெயலலிதாவும் சகோதர, சகோதரிகளாக வருவார்கள். மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள். பெண்களைத் தன் வலைக்குள் இழுத்து ஏமாற்றும் ரஜனிகாந்த் என்னும் பாத்திரத்தில் நடிகர் ஏ.வி.எம். ராஜன் நடித்திருப்பார். அவரிடம் ஏமாந்த பெண் விமலாவாக நடித்திருப்பார் ஜெயலலிதா. இறுதியில் தன் உயிரை மாய்த்துக்கொள்வார். பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் இசையமைப்பாளர் வி.குமார்.
- கவிஞர் மேமன்கவி மார்ச் 23 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட உரை -
" கண்ணகி கால் சிலம்பை கழற்றினாள். சிலப்பதிகாரம் படித்தோம்
என்மனைவி கை வளையல்களை கழற்றினாள்
நீங்கள் கண்ணீர்ப்பூக்கள் படிக்கிறீர்கள்."
இந்தக் கவிதையைப் படித்திருப்பீர்கள். அல்லது அறிந்திருப்பீர்கள். கவிஞர் மேத்தா, தனது கண்ணீர் ப்பூக்கள் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் சேர்த்துக் கொண்ட கவிதை இது. சிறிது காலத்தில் மேத்தா, ஆனந்தவிகடன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சோழநிலா நாவல் எழுதி, முப்பதாயிரம் ரூபா பரிசினைப் பெற்றபொழுது , ஈழத்தில் எழுத்தாளர் நந்தினி சேவியர், நண்பர் இளங்கோவன் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட வாகை இலக்கிய ஏட்டில் இவ்வாறு பதில் கவிதை எழுதினார்,
“ அவர் மனைவி வளையல்களைத்
திருப்பிக்கேட்டாள்,
நீங்கள் 'சோழநிலா' வைப்
படிக்கிறீர்கள்.."
இப்படி ஒரு சுவாரஸ்யம் எங்கள் இலக்கிய உலகில் நிகழ்ந்தது. மனைவிமாரிடம் ஏச்சும் திட்டும் மாத்திரம் நாம் வாங்க வில்லை. எமக்கு அவசியம் நேர்ந்த சமயங்களில் அவர்களிடமிருந்து நகைகளும் வாங்கியுள்ளோம். இது தமிழ் எழுத்தாளர் பரம்பரையின் இலட்சணம். அவ்வாறு தனது அருமை மனைவியின் தாலிக்கொடியை ஈடுவைத்து கவிதைப் புத்தகம் வெளியிட்டவர் கவிஞர் ஈழவாணன். " உமக்கேனய்யா … இந்த வேலை? " என்று நண்பர்கள் சினந்தாலும் முகம் சுழிக்காத இலக்கிய உணர்வுமிக்க அருமையான பெண்மணி திருமதி. தர்மபுவனா ஈழவாணன். எனினும் கணவர் கேட்டாரே என்பதற்காக தாலிக்கொடியை அவர் கழற்றியிருக்கக்கூடாது என்று பேசினார்கள் நண்பர்கள். ஏனென்றால் கவிஞர் மேத்தாவுக்கும் மற்றும் பல தமிழக எழுத்தாளர்களுக்கும் கிடைத்தது போன்று பல்லாயிரக்கணக்கான ரூபாய் பரிசில்கள் ஈழத்து எழுத்தாளனுக்கு என்றைக்குமே கிடைத்ததும் இல்லை. கிடைக்கப் போவதுமில்லை. விற்ற நகையை மீட்பதற்கு.
மு.தளையசிங்கத்தின் 'தியாக' மரணம் பற்றி இப்போது கேள்வி எழுந்துள்ளது. சு.வில்வரத்தினம் மு.த.பற்றிய போலீஸ் தாக்குதலைப்பற்றிப் பேசினால் உணர்ச்சியின் எல்லைக்கே போய்விடுவார் என்பதெல்லாம் அவர் மு.த.பற்றி கொண்டிருந்த உணர்வுபூர்வமான ஈடுபாட்டைக் குறிப்பதாகும். அவர் புங்குடுதீவில் அஹிம்சை வழி நின்று போராடிய நிகழ்வு வணக்கத்திற்குரியது. ஆனால், அவருடைய மரணம் குறித்து கேள்வி எழுந்ததும் சென்டிமென்டல் கூச்சல் போடவேண்டியதில்லை. புத்தர்பிரான் மறைவு குறித்தே அவர் food poisoning இல் இறந்தாரா, அவர் தானம் பெற்று உண்ட உணவு பற்றி இன்று ஆய்வுகள் நடக்கின்றன.புத்தர் இலங்கை வந்தது எப்படி என்றால், பவுத்த பிக்குகள் உங்களை அறைவார்கள். அக்கேள்வியை எழுப்பினாலே அவர்கள் உணர்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவார்கள். உணர்ச்சியின் எல்லைக்கு போவது ரொம்ப லேசு. அது புத்தி செயல்படும் நேரமில்லை. Anthony Burns என்ற கறுப்பின அடிமையானவர் தப்பிச்சென்று , பின் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்ட நிலையில் அவரைச் சிறையிலிருந்து மீட்க அடிமை முறையினை எதிர்த்தவர்கள் முயன்றபோது, அவருக்குக் காவலில் இருந்த James Batchhelder சுட்டுக்கொல்லப்பட்டபோது, அவரின் autopsy மரணவிசாரணை அறிக்கை பற்றி இன்றும் பேசப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடந்தது 1854 ஆம் ஆண்டு.. இன்றைக்கு 167 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். இந்த மருத்துவச் சான்றிதழ் முக்கியமானதுதான். பாரதியார் யானை தாக்கி மரணமுற்ற நிகழ்ச்சி பற்றி மு.புஷ்பராஜன் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.அந்த விளக்கத்திற்கு புஷ்பராஜனிடம் தான் மருத்துவச் சான்றிதழ் கேட்கவேண்டும். விஷயம் தெரியாதவன் கேள்வி கேட்டால், அவனிடம் போய் மரணமடைந்தவர் பற்றி நீ ஆதாரம் தா என்று கேட்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.
முன்னுரை
நீலகிரிமலையில் வாழும் மக்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்நாவல். அங்கே வழிவழியாய் வாழ்ந்து வரும் படகா் என்ற இன மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களே உருவமெடுத்துள்ளன. இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து வந்த அம்மலைவாழ் மக்களின் வாழ்க்கைப் போக்குகளை, வெளியில் பெருகி வரும் நாகரிக மாற்றங்களும், வணிகமும், தொழில் வளா்ச்சியும் பாதிக்கின்றன. மலையில், காப்பி, தேயிலை பயிரிடும் தொழில்கள் ஏற்படுகின்றன. இவற்றால் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மலைக்கு வெளிப்புற மனிதா்கள் இயல்புகள் மலைவாழ் மனிதரிடையேயும் மெல்லப் பரவுகின்றன. இச்சமூகம், பொருளாதார மாற்றங்களால் படகா் குடும்பத்தில் சிக்கல்கள், அதனால் ஏற்படும் உணா்ச்சிப் போராட்டங்களும் இந்நாவலில் அடிப்படையாக அமைந்துள்ளன.
இக்கட்டுரையில் “குறிஞ்சித்தேன்” நாவல்வழி உதகமண்டலம்(ஊட்டி) வாழ் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகள் தொகுத்து ஆராயப்படுகின்றன.
படகா்
குறிஞ்சித்தேன் என்னும் நாவல் மலையில் வாழும் மக்களை மையமாக வைத்து எழுத்தப்பட்டது. நீலகிரி மக்கள் என்றால் நம்மில் பலருக்கும் ஆதிக்குடிகளான தொதவரே நினைவுக்கு வருவார்கள். நீலகிரியைத் தாயமாகக் கொண்டு வாழும் மக்களின் இந்த மலையின் வரலாற்றிற்கும் வளத்திற்கும் பெருமைக்கும் காரணமாக இருப்பவா் இவா்களே எனலாம். பதினெட்டாவது நூற்றாண்டில் மைசூரை அரசாண்ட திப்பு சுல்தான் ஆட்சியின்போது படகா் மைசூரிலிருந்து பண்டியூா்க் காட்டின் வழியாக நீலகிரிக்கு வந்ததாக அறிகிறோம்.
முன்னுரை
தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கன்னிப் பெண்கள், பிற கன்னிப் பெண்களைத் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி இறைவனை வழிபடுவர். இதனைப் பாவை நோன்பு என்பர். இப்பாவை வழிபாட்டைப் பரிபாடலில் தைந்நீராடல்1 என்று குறிப்பிடுகிறது. இதனுடைய தொடர்ச்சியாகச் சைவ சமயத்தில் மாணிக்கவாசகர் திருவெம்பாவையையும் வைணவ சமயத்தில் ஆண்டாள் திருப்பாவையையும் பாடியிருக்கிறார்கள். எனவே பாவை வழிபாடு என்பது தொன்றுதொட்டு ஒரு மரபாகவே இருந்து வருவதைக் காணலாம். தமிழர்கள் சைவத்தையும் வைணவத்தையும் தங்கள் இருகண்களாகப் போற்றினர். அவ்வகையில் திருவெம்பாவையில் இடம்பெறும் பாவை நோன்பு குறித்த கருத்துக்கள் “சைவமும் பாவை வழிபாடும்” என்னும் தலைப்பில் இக்கட்டுரையின் வழியாக எடுத்துரைக்கப்படுகிறது
திருவெம்பாவை உள்ளடக்கம்
சைவசமயக் குரவர்களுள் ஒருவர் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகர் பக்தியின் உச்சமாகக் கருதப்படுகிறார். அவர், திருவண்ணாமலையில் பாடிய பாடல்களே திருவெம்பாவை ஆகும். தன்னைப் பெண்ணாகப் பாவித்து மற்றப் பெண்களுடன் மார்கழி நீராடி அண்ணாமலையானையும் தில்லையம்பலத்தானையும் வழிபடுவதாக அமைந்துள்ளது திருவெம்பாவை. திருவெம்பாவையில் இருபது பாடல்களில் உள்ள செய்திகள் பகுத்தாயப்படுகின்றன.
- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய இணையவழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை -
பெண்களுக்கெதிரான,பலதரப்பட்ட வன்முறைகள,பல காரணங்களால்; காலம் காலமாக,அகில உலகின் மூலை முடுக்கெல்லாம்; தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது(17-3-2021) பிரித்தானிய தொலைக்காட்சியில் பிரதமருடனான கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ;திரு.கியர் ஸ்ராமர், 'பாலின வன்முறையால் பாதிக்கப்படும்; பெண்களில் 1;.-5 விகிதமானவர்கள் மட்டுமே சட்டத்தை நாடி உதவி பெறும் நிலை இன்றிருக்கிறது' என்று கூறிக்கொண்டிருக்கிறார். மிகவும் பணக்காரநாடுகளில் ஒன்றான பிரித்தானியாவிலேயே பாலினக் கொடுமையை எதிர்நோக்கும் பெண்களின் நிலை இதுவென்றால், சாதி, சமய, பொருளாதார ஒடுக்குமுறையால் அவதிப்படும் ஏழைநாடுகளில் பெண்கள் அனுபவிக்கும் பாலினக்கொடுமைகளைக் கற்பனை செய்ய முடியாமலிருக்கிறது.
பெண்களின் துயர்நிலை அவள் பிறந்த வீடு, புகுந்தவீடு, படித்த இடம், பதவி வகிக்குமிடம், அரசியல் காரணங்கள், அகதிநிலை என்பவற்றுடன் மட்டுமல்லாமல், ஒரு பெண் தனது, வாழ்க்கையின் உணவுக்கும் உடைக்கும், அத்துடன் தனது ஏழ்மையான குடும்பத்தின் வாழ்க்கைக்கும் வழிதேடி பணிப் பெண்ணாக முன்பின் தெரியாத அன்னிய இடங்களுக்கு உழைக்கச் செல்லும்போதும் பன்முகத் தன்மையான வன்முறைகளுக்க முகம் கொடுக்கிறாள்.
பணிப் பெண்களுக்கான கொடுமைகள் அவள் வீட்டுவேலை செய்யும் இடத்தில், அவள் வேலை செய்யும் வீட்டாரால் மட்டும் கொடுபடுவதில்லை. அவர்களின் வீட்டுக்கு வருபவர்களாலும் நடக்கிறது. அந்தப் பாலினக் கொடுமையைப்;; பல பெண்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை எனது சொக்கலேட் மாமா என்ற கதையொன்றில் பதிவிட்டிருக்கிறேன். (மனிதன் - ;பத்திரிகை-1992)
இன்றைய கால கட்டத்தில், ஆண்கள்,பெண்கள் என்று கிட்டத்தட்ட 232 கோடி மக்கள் பல்விடங்களுக்கும் சென்று அடிமட்ட ஊதிய வேலைகளான, சாரதி, தோட்டக்காரன், பணிப்பெண்கள் போன்ற பல்விதமான வேலைகளையும் அகில உலக ரீதியாகச் செய்கிறார்கள்.
குறிப்பாக, வெளிநாட்டு பணிப் பெண்களை மட்டுமல்லாமல் மற்ற வேலையாளர்களையும் மனித நேயமின்றி நடத்தும் மத்திய தரைக்கடல் நாடுகளில், மூன்றில் ஒருத்தர் பணிப் பெண்களாகத் துன்பப் படுகிறார்கள் (செல்வி.பிலேஸா வீரரத்தினா 2014. ஐ.பி.எஸ் அறிக்கை).
கடலும் தாமிரபரணியும்
வெகுண்ட இரண்டு ஆதிசேடன்கள்போல
மோதிய பண்டை நாட்கள் போலாயிற்று
என் ஹைக்கூ காதல் வாழ்வு.
*
உண்மையில் ஆரி மக்சிமோட்டோ
கடலைப்போல பொறுமையானவள்தான்.
காதலில் மட்டும் சுனாமி என்றிருந்தேன்.
எனினும் எனினும் அமைதிக்கடல்
ஊழிப் பேரலையாய் எழுகிறதல்லவா?
வரலாற்றில் ஒருநாள்
காலைத்தூக்கி மூன்று தடவைகள்
காயல்களின் மணல்பற்கள் உடைய
தாமிரபரணி ஆற்றை உதைத்ததல்லவா?
யாழ்ப்பாணத்தில் நான் பழகக் கிடைத்த நண்பர்களில் புஷ்பராஜன் அபூர்வமானவர். அழகான இளைஞனாக - அமைதியும் தேட லும் வாசிப்பும் மிக்க இலக்கிய ரசிகனாக புஷ்பராஜனும் நானும் ஏ.ஜே.யுமாக யாழ் ரீகர் தியேட்டருக்கு முன்னால் உள்ள தேநீர்க்கடையில் உரையாடிக் கொண்ட நாட்கள் என் மன அடுக்கில் என்றும் தேங்கிக்கிடப்பவை.
லண்டன் வந்த பிறகும் அந்த நல்ல நண்பரின் இனிய நட்பு நீடித்தது. விமர்சனக்கூட் டங்களில், கலந்துரையாடல்களில், கருத் தரங்குகளில், திரைப்பட நிகழ்வுகளில், ஒன்றுகூடல்களில், கடற்கரைச் சுற்றுலாக்களில், குடும்ப நிகழ்வு களில் எல்லாம் நண்பராய் - நல்ல சகோதரனாய் பழகிய புஷ்பராஜன், லண்டனைவிட்டு, தன் குடும்பத்துடன் இணைந்து வாழ கனடா சென்றபோது, அந்தப் பிரிவினைத் தாங்க முடியாதவன் நான் மட்டுமல்ல, மிகப்பல லண்டன் இலக்கிய நண்பர்களும்தான். இருந்தாலும், கனடாவில் இன்றும் அவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொள்ள முடிவது திருப்தி தருவது.
புஷ்பராஜன் மென்மையான சுபாவம் கொண்டவர். மாமரத்து நிழலின் கீழ், மருந்துக்கு நிற்கையிலே, அருகில் இருந்த பெர்ணபேத் என்னும் தன் சின்னப்பெரியம்மாவை| நினைவுகூரும் மென்மை அது. மு.தளையசிங்கம், ஏ.ஜே.கனகரட்ன போன்ற ஆளுமைகளின் சிந்தனைகளால், பழக்கத்தால் வார்க்கப்பட்ட மென்மை அது. தன் முடிவுகளில் உறுதியாக இருந்தாலும், கூட்டங்களில் தன் குரலை உயர்த்தாத மென்மை. 'அலை' ஆசிரியர் குழுவில் இருந்தாலும், அலை பற்றி நீட்டி முழக்கி, டமாரம் அடிக்காமல் மௌனமாய் விலகும் மென்மை. அயலவரை, ஊரவரை அணைத்துக்கொள்ளும் மென்மை.
கலகக்காரன் போன்ற tagகளை அவர் குத்திக் கொள்வதில்லை. நாலு பரப்புக்காணியைத் திரும்பத் திரும்ப உழுத கதையாய் - மாய்ந்து மாய்ந்து பேட்டி கொடுக்கும் அவஸ்தை அவரிடம் இல்லை. ஆரவார இலக்கியச் சந்தையில், ஙொய் ஙொய் என்று ரீங்காரமிடும் ஈக்களின் தொல்லைகளிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பவர்.
பதிவுகள் இணைய இதழ் மற்றும் முகநூலில் தொடரும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் ,தன் கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றார் இலண்டனில் வசிக்கும் சமூக, அரசியற் செயற்பாட்டாளரான ராகவன்.
சாதியச் சிந்தனையும் நடைமுறையும் மொழி , பண்பாட்டு வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அது அனைத்து தளங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்படுகிறது. இந்தத் தொழிற்பாட்டின் பின்னணியில் சாதிய அதிகாரக் கட்டமைப்பு இயங்குகிறது. சாதிய அமைப்புக் கொண்ட சமூகங்களில் சாதிய சிந்தனை எவ்வாறு தொழிற்படுகிறது? அது எவ்வாறு இயல்பாக்கம் அடைந்திருக்கிறது? என்பதை அவதானிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கு.
"சாதியம் என்பது வெறும் பாகுபாடு காட்டுதல் அல்ல. பாகுபாடு என்பது சாதியத்தைச் சட்டரீதியாக அணுகும் பக்கம் மட்டுமே. பாகுபாடு காட்டுதல், தீண்டாமை, மனிதவுரிமை மீறல்கள் போன்றவைக்கு அப்பால், மேலோட்டமாகப் பார்க்கையில் இயல்பாக்கம் அடைந்த சாதிய நடைமுறைகள் ஆபத்தற்றவை என்ற தோற்றப்பாட்டை அளிக்கின்றன" என்கிறார் பாலமுரளி நடராஜன் என்ற ஆய்வாளர்.
பண்பாட்டுத் தளத்தில் பார்க்கும் போது, மத ஆசாரங்கள் தொடங்கி கல்வி, இசை , நாடகம், வழிபாடு, சடங்குகள், அரசியல் , மொழி போன்ற பல்வேறு தளங்களிலும் தினசரி வாழ்க்கை நடைமுறைகளிலும் சாதியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்படுகிறது. சாதியம் என்பது வாழ்முறையின் பிரிக்க முடியாத அங்கமாகி அரூபமாகத் தொழிற்படும் ஒரு நச்சுக்கிருமி. அத்துடன் ஆதிக்கசாதியைச் சேர்ந்தவரின் சாதி அந்தஸ்து ( caste privilege) என்பதும் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. தீண்டாமை, அக மணம், சாதிய வன்முறை போன்ற நேரடியான அடக்குமுறைகள் இலகுவாக அடையாளப்படுத்தக்கூடியவை. எனவே இயல்பாக்கம் பற்றியே இந்த கட்டுரை பேசுகிறது.
- லண்டன் வொல்த்தம்ஸ்ரோவ் தமிழ்பபாடசாலைப் பெற்றோருக்கு,13.3.21ல் கொடுத்த சொற்பொழிவின் விளக்கவுரை -
எங்கள் தெய்வத் தமிழ் மொழிக்; கல்வியை லண்டன் மாநகரில்,எங்கள் இளம்தமிழ்ச் சிறார்களுக்கு முன்னெடுக்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். எங்கள் தமிழ் மொழி மிகவும் நீண்டகால வரலாற்றைக் கொண்ட முதுமொழி.இன்று உலகில் பேசப்படும் கிட்டத்தட்ட 7000 மொழிகளில் முதல் வழிவந்த மூத்த மொழி.மனித இனத்தின் மேன்மைக்குப் பற்பல நூல்களை உலகுக்குத் தந்த மொழி.'எம்மதமுமு; சம்மதமே' என்ற உயரிய தத்துவத்தைக் கொண்டது'.'யாதும் உரோ யாரும் கேளீர்' என்ற அற்புதமான நான்கு வரிகளில் உலகில் நான்கு திசைகளிலுமுள்ளவர்களையும் ஒன்றாய் அணைக்கும் மொழி எங்கள் மொழி.
'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்'; என்றுரைத்து ஒரு குழந்தைக்குத் தன் தாய் தந்தையரின் சொற்களை மனதில் உறுத்தி எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டுவது எங்கள் தமிழ். 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று இறையுணர்வை மனதில் பதிப்பது எங்கள் பக்தித் தமிழ். 'தாயைச் சிறந்த ஒரு கோயிலுமில்லை,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று தாரக மந்திரத்தைக் குழந்தையின் மனதில் பதிக்கும் தெய்வீக் மொழி; எங்கள் அருமைத் தாய்மொழயான தமிழ் மொழி. ஓரு மனிதனின் வாழக்கையில் 'எண்ணும் எழுத்தும் இரு கண்ணாகும்'; என்றும்இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்றுரைத்துக் கல்வியின் மகத்துவத்தை இளம்மனதில் வித்திட்டவர்கள் எங்கள் தமிழ்; மூதாதையர்கள். 'பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்றுரைத்து ஒரு குழந்தையின்,தன்னைப் பெற்ற தாயையும் தன்னைத் தாங்கிய பிறந்த நாட்டைப் போற்றவும் மனதில் கடமையுணர்சி;சியைப் பதிப்பது எங்கள் தனித்தமிழ். 'அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்கேயுலகு' என்று எங்கள் வாழ்க்கையை எங்கள் மொழியுடன் இணைக்கும் மனத்திடத்தைத் தந்தது எங்கள் தெய்வத் தமிழ்.
- தற்போது முகநூலில், பதிவுகளில் இடம் பெறும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் இடம் பெறும் கருத்துகளையிட்டு , எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது கருத்துகளை அனுப்பி வைத்துள்ளார். அவற்றையும் இங்கு பகிர்கின்றோம். - பதிவுகள் -
1966 அக். 21 ல் சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் எனும் கோசத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆர்த்தெழுந்த மக்கள் பேரணி தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமாக சகல விளிம்பு நிலை மக்களுடைய இயக்கமாக பரிணமித்தது. அதன் பின்னணியில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி. சாதி ஆணவத்திற்கு எதிரராக நின்றமையால் ஆதிக்க சாதிவெறியர்களாலும், அவர்களது காவல் நாய்களாலும் தாக்கப்பட்ட, அடைக்கப் பட்ட எண்ணிறைந்தவர்களை என்னால் அடையாளப்படுத்தப்பட முடியும். நான் மு.தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த இதனை எழுதவில்லை அவரது பணியை வரவேற்கிறேன். ஆனால் அவரை அவரது செயலை விதந்து பேசுவோர்களது அரசியல் உள் நோக்கம் என்ன.? நான் கூறப்போகும் இரண்டு விசயங்கள் உங்களுக்கு தெரியாதது என சாட்டுச் சொன்னாலும். மு.தளையசிங்கம் இதனை கண்டு கொள்ளவில்லை என்பது எனது குற்றச்சாட்டு.
1. நிச்சாமப் போராட்டம் பற்றி உலகமே அறியும். மாவிட்டபுரம், பன்றித்தலைச்சி ஆலயப்பிரவேசப் போராட்டம் பற்றி மட்டுவில், மந்துவில், கன்பொல்லை சாதி எதிர்ப்பு நடவடிக்கைககள்பற்றி தளையசிங்கம் அறியாததல்ல. அதுபற்றி அவர் ஏன் எழுதவில்லை..?
2. மான் முத்தையா எனும் சங்கானையைச் சேர்ந்தவர். ஒருகாலம் சங்கானை நகரசபைச் சேர்மனாக இருந்தவர். பஞ்சமர் சமுகத்தைச் சேராதவர். நிச்சாம. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்றமையால் தனது சமுகத்தவர்களால் பொலிசில் காட்டிக்கொடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, சிறுநீர் பருக்கப்பட்டு கொடூரத்தை அனுபவித்த வரலாறு உண்டு. இதனை இந்தப் பிரபஞ்சயதார்த்தவாதியை சிலாகிக்கும் பிரமுகர்கள் அறியவில்லையா, மு.த கூட அறியவில்லையா.?
Witty Gardedn என்னும் யு டியூப் சானலில் வ.ந.கிரிதரனது சிறுகதைகளிலொன்றான 'கணவன்'சிறுகதையைச் சுவையாக அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அதற்கான காணொளியைப் பார்த்து,கேட்டு இரசிக்க: https://www.youtube.com/watch?v=1I-_WztAltM