நூல் அறிமுகம்: போருக்குப்பின்னர் வெளிவந்த நூல்களின் வரிசையில் மெல்பன் சுந்தரின் Dare to Differ - முருகபூபதி -
இலங்கையில் நீடித்திருந்த உள்நாட்டுப்போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்திருந்தாலும், அதன் பாதிப்புகள் தொடர்பான விவாதங்கள், விசாரணைகள், ஆய்வுகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
அந்த கொடிய போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உடன்பிறப்புகள், உறவினர்கள் நடத்திவரும் அறப்போராட்டங்களும் முற்றுப்பெறவில்லை. அதேசமயம் நீடித்த அந்தப்போரின் உறைபொருளையும் மறைபொருளையும் பின்னணியாக வைத்து நூல்கள் வெளிவருவதும் முற்றுப்பெறவில்லை. தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் இலங்கை உள்நாட்டுப்போர் அல்லது தமிழ் ஈழ விடுதலைப்போர் என்பதை கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் பல வெளிவந்தன. வந்தவண்ணமிருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணியில் முக்கிய பொறுப்பிலிருந்து, போர் முடிவுற்ற காலத்தில் சரணடைந்து, புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியேறிய தமிழினி சிவகாமி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில், விடுதலைப்புலிகளினால் கடல்பரப்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கடற்படையைச் சேர்ந்த கொமடோர் அஜித் போயாகொட எழுதிய காத்திருப்பு, ஆகிய நூல்கள் சிங்கள – தமிழ் மொழிகளில் வந்திருப்பதுபோன்று, மேஜர் கமால் குணரட்ண எழுதிய Road to Nandikadal என்ற நூலும் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது.