மகிழ்ச்சியான ஒரு தீவு! (2) - ஶ்ரீரஞ்சனி -
முதல் நாளிரவு நேரம் பிந்திப் படுக்கைக்குச் சென்றதால், அடுத்த நாள் ஆறுதலாக விழித்தெழுவது என்பதுதான் திட்டம். ஆனால், ரொறன்ரோ நேரத்தைவிட ஒரு மணி நேரம் முந்தியதாக இருந்த Aruba நேரம் என்னை ஏழு மணிக்கு முன்பாகவே விழிக்கச்செய்து விட்டது. ‘மீராவின் தம்பி’, ‘சிறகடித்துப் பறப்போம்; என்ற என் இரண்டு சிறுவர் நூல்கள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த வீடியோவைத் தனுசன் அனுப்பியிருந்தார். நேரத்துடன் எழும்பியதால் அதனை உடனேயே பார்க்க நேரமிருந்தது. அதனூடாக முன்பின் தெரியாத இரு ஆசிரியர்கள் என் நூல்கள் பற்றிப் பார்வையைப் பகிர்ந்ததைக் கேட்கமுடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை முழுமையாகப் பார்த்துமுடித்ததும் அது பற்றி ஒரு குறிப்பெழுதவேண்டும் போலிருந்தது. உடனடியாக எழுதி, தனுசனுக்கு அனுப்பிச் சரிபார்த்துவிட்டு, வீரகேசரி வாரஇதழுக்கு அனுப்பினேன்.
எங்களின் சுற்றுலாவை Arubaஇன் பிரபல்யமான தேசிய பூங்காவான Arikok National Parkஇல் ஆரம்பிப்பது என முடிவெடுத்திருந்தபடி, மகள் எழுந்ததும் அதனைச் செயலாக்கினோம். Parkஇன் வரவேற்புப் பகுதியில் இருந்தோர் Four-wheel drive இல்லாமல் Parkஐ முழுமையாகப் பார்க்கமுடியாதென்றனர். சரி பார்க்கக்கூடியதைப் பார்ப்போமென முதலில் அங்கிருந்த குகைகளுக்குச் சென்றோம். 310 அடி அகலமான Fontein Cave இயற்கையின் ஓர் அதிசயமாக நின்றிருந்தது. மேலிருந்து தொங்கும் icicles போன்ற அமைப்புக்களும், கீழிருந்து கூம்பு வடிவில் மேலெழுந்து நிற்கும் அமைப்புக்களும் (stalagmites & stalactites) நிறைந்திருந்த அந்தக் குகையின் உட்புறத்தில் வளர்ந்திருந்த அல்காக்கள் மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் அதனை வர்ணமிட்டிருந்தன. அத்துடன் குகையில் கூரையில் அழகான ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன. இருப்பினும் குகைக்குள் இருந்த அதிகமான வெக்கையும் ஈரப்பதனும் நீண்ட நேரம் அதற்குள் நிற்கவிடாமல் வியர்த்து விறுவிறுக்கச் செய்தது.