பல்கலை வித்தகர் பாடும் மீன் ஸ்ரீகந்தராசா அவர்களின் பாராட்டு விழா நிகழ்வு
Zoom Meeting-ID: 250 977 0769 | Pass Code: 246810
Zoom Meeting-ID: 250 977 0769 | Pass Code: 246810
முன்னுரைபண்டைத் தமிழர்கள் மரபுகளைப் போற்றிக் காப்பவர்களாகவும், தம் முன்னோர் கற்றுக் கொடுத்த பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். இத்தகையச் சிறப்புகளுக்கு எல்லாம் அவர்களின் மரபே காரணமாக அமைந்தது. பழக்கம், வழக்கம், மரபு எனும் மூன்றும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க இயலாதவை. எளிதில் மாற்ற முடியாதவை. எனவே “பழக்கம் என்பது தனி மனிதனைச் சார்ந்தது என்றும், வழக்கம் என்பது சமுதாயத்தைச் சார்ந்ததென்றும், மரபு என்பது சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு எனவும் கூறலாம்”1 அவ்வகையில் பழக்கம் வழக்கமாகி நிலைபெற்ற மடல் ஏறுதல் குறித்த தரவுகளைத் தொகுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
மடலேறுதல்
ஆடவன் ஒருவன், தான் விரும்பியப் பெண்ணை மணம் செய்வதற்காக மேற்கொள்ளும் வழிமுறைகளில் ஒன்று மடலேறுதலாகும். காதல் கைகூடாது கைவிட்டுப் போகும் என்ற அச்சத்தில், ஆண்மகன் தன் காதலை ஊரார்களின் முன்னிலையில் தெரியப்படுத்துவது அல்லது தன் காதலை உணர்த்தும் நிலையாகும்.
“ஏறிய மடல் திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே ” 2
பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் மடலேறுதல் நிகழ்வினைத் தொல்காப்பியர் எடுத்துரைத்துள்ளார்.
பனங்கருக்காற் செய்த குதிரை வடிவான ஒன்றில், தலைவி படமும் பெயரும் எழுதிய ஒன்றை வைத்துக் கொண்டு எருக்கம் மாலை முதலியன அணிந்து, அதன் மேல் ஏறி ஊர்வது, ரத்தம் கசிய உயிர் விடுவதாகும். மடலேறுவேன் என வாயால் அச்சுறுத்துவது அன்பின் ஐந்திணையுள் அடங்கும். அல்லாமல் மடலேறிவிடுவதில் முடியுமாயின், அது பெருந்திணையில் அடங்கும்.
நாம் படிக்கும் காலத்தில் பெண்களின் பாடசாலைகளை நோக்கி சைக்கிளில் செல்லும்போது ஓரிரு மடந்தைகள், நிலம் பார்த்தபடி அடியெடுத்துச் செல்வார்கள். தலை சீவி புது உடுப்புடன் உடலெங்கும் ரெஸ்ரெஸ்ரோன் நிறைந்த இரத்தம் காவேரிப் புதுவெள்ளமாகப் பாய்ந்தபடி செல்லும் எங்களுக்கு, அவர்கள் கண்கள் எங்களைத் தொற்றாது புறக்கணிக்கும்போது , ஆணவம் நொந்துபோய், வாய் வார்த்தையில் வந்த தூசணம் காற்றில் மிதக்கும் . அப்போது எம்மில் அறிவாளி ஒருவன் ‘அவளுக்குக் கண்ணகி என்ற நினைப்பு ‘ என்பான்.
'கண்ணகிக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்' என எங்கள் ஆணவத்தை எண்ணெய் போட்டுத் தடவிவிட்டு அடுத்த இலக்கை நோக்கி நகருவோம்.
கண்ணகி என்ற வார்த்தைக்கு அர்த்தம், சிலப்பதிகாரத்தைக் கேள்விப்படாத ஒருவனுக்கு மட்டுமல்ல, அரிச்சுவடி எழுதாதவனுக்கும் புரியும். அந்த அளவுக்குப் படித்தவர்கள் தொடக்கம் பாமரர்கள் வரை கண்ணகி என்றால், கற்பு, நெருப்பு, துணிவு, கோபம் என்றவாறான விம்பத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு கலை வடிவங்களில் நின்று நிலவிவரும் சிலப்பதிகாரத்தின் கதைமூலம் தமிழ் மக்களின் மூளையை பதிவுசெய்துவந்திருக்கிறது.
அந்தச் சிலப்பதிகாரத்தை, அழகான நாடகக்கதையாக்கி மெல்பேனில் மேடையேற்றிய, பாரதி பள்ளி மாணவர்களுக்கு நன்றி. மேடை ஏற்றத்திலிருந்து, நிர்வாகம், பாடல்கள் என மாவை நித்தியானந்தனின் உழைப்பையும் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.
சிலப்பதிகாரத்தை முறையாக வாசிக்காத போதிலும் நானும் நீங்களும் அறிந்த கதையது. கண்ணகி-கோவலன் - மாதவி என்ற மூன்று பாத்திரங்கள் நமது இலக்கிய வெளியில் மட்டுமல்ல, சமூக, குடும்ப வெளியிலும் இன்றும் நடமாடுபவர்கள். இதனாலேயே சில இலக்கியங்களை எக்காலத்திற்கும் இசைவாகச் சாகாவரம் பெற்றவை என்கிறோம்.
சோதிடம் மூலம்தான் நாங்கள் முதலில் கிரகங்கள் பற்றி அறிந்திருந்தோம். நவக்கிரகங்கள் என்று சொல்லி ஒன்பது கிரகங்களைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அறிவியல் சார்ந்து பார்த்தால், இன்று கிரகங்களின் நிலையை அறிய மட்டுமல்ல, நிஜமாகவே எங்களால் அவற்றைப் பார்க்கவும் முடிகின்றது. ‘சோலார் பமிலி’ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்ற எங்கள் சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் இருந்தன. ஆனால் அதில் ஒரு கிரகத்திற்கு வேண்டிய தன்மைகள் இல்லாததால், ‘பு@ட்டோ’ என்ற அந்தக் கிரகத்தை வெளியே எடுத்து விட்டார்கள். இப்பொழுது எட்டுக் கிரகங்கள் மட்டுமே சூரியக்குடும்பத்தில் கணக்கிடப் படுகின்றன.
இப்போது இரவு வானில் சில அதிசயங்கள் நடப்பதை அறிந்திருப்பீர்கள். இந்த அதிசயங்களை ‘கிரகங்களின் அணிவகுப்பு’ என்று அழைக்கின்றார்கள். நவீன தொழில் நுட்ப வசதிகள் மூலம் சாதாணர மனிதர்களாலும் இப்போது நடக்கும் கிரகங்களின் அணிவகுப்பைப் பார்க்க முடிகின்றது. இரவு வானத்தைப் பார்த்தால் தெளிவான வானத்தில் ஏராளமான நட்சத்திரங்களைக் காணமுடியும். இதில் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தூரத்தில் இருப்பதால், எவை என்பதை அடையாளம் காண்பது கடினமானதாகும். இதைக் கருத்தில் கொண்டு இதற்காகக் கணனி மென்பெருளை வடிவமைத்திருக்கிறார்கள். உங்கள் செல்போனில் இதைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் வானத்தில் அவை இருக்கும் திசையை அறிந்து உங்களால் இலகுவாகப் பார்க்க முடியும்.
பொதுவாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் அணிவகுப்புகள் மிகவும் அரிதானவையாகும். 2025 ஜனவரி 21 ஆம் திகதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கிரகங்களும் இரவு வானத்தில் அணிவகுத்திருந்ததால், அவற்றைப் பார்ப்பதற்கு ஒரு அரிய சந்தர்ப்பம் அனேகருக்குக் கிடைத்திருந்தது. இந்த அணிவகுப்பில் உள்ள நான்கு கோள்களை சாதாரண கண்களால் பார்க்க முடியும். இவற்றில் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை மிகத் தூரத்தில் இருப்பதால் அவற்றைப் பார்ப்பதற்கு தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன.
கடந்த வாரம் இலங்கை மலையகத்திலிருந்து எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, சிட்னியில் வதியும் மூத்த இசைக்கலைஞர் திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுத்தர முடியுமா..? எனக்கேட்டார். அவரது சில பாடல்களை அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஏற்கனவே இலங்கை வானொலிக்காக இசையமைத்து பாடியிருக்கிறார். அவற்றின் ஒலிநாடாக்கள் தொடர்பாக பேசுவதற்குத்தான் வடிவேலன் அருந்ததியின் தொடர்புகளைக் கேட்டிருந்தார்.
“நான் வசிப்பது மெல்பனில். அருந்ததி சிட்னியிலிருக்கிறார். எவ்வாறாயினும் முயற்சித்து அவரது தொடர்பிலக்கத்தை பெற்றுத் தருகின்றேன். “ என்று அவருக்குச்சொல்லிவிட்டு, சிட்னியில் வதியும் எழுத்தாளர்களும் வானொலி ஊடகர்களுமான கானா. பிரபா, மற்றும் நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசர் ஆகியோரை தொடர்புகொண்டு, அருந்ததி பற்றி விசாரித்தேன்
அவர்கள் அருந்ததியின் தொடர்பு இலக்கத்தை பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாகச் சொன்னார்கள். அதற்கிடையில் கடந்த 17 ஆம் திகதி திங்கட் கிழமை, அருந்ததி மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான தகவலை கானா. பிரபா சொன்னார். எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்பதை இசையரசி கலாநிதி அருந்ததியும் நிரூபித்துவிட்டார்.
அருந்ததி ஶ்ரீரங்கநாதனை முதல் முதலில் 1980 களில் இலங்கை வானொலி கலையகத்தில் சந்தித்திருக்கின்றேன். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவ்வேளையில் அங்கு தமிழ்ச்சேவைப் பணிப்பாளராகவிருந்த ( அமரர் ) வி. ஏ. திருஞானசுந்தரம். இவர் இலங்கை வானொலியில் கலைக்கோலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குமாறு கேட்டதுடன், அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அருந்ததி ஶ்ரீரங்கநாதனை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒரு சில வருடங்கள் அந்த நிகழ்ச்சியை பதிவுசெய்வதற்காக அங்கே சென்ற சமயங்களில் அருந்ததியுடன் உரையாடும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அருந்ததி ஒரு கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அவ்வேளையில் அறிய முடிந்தது. அம்பிகா, ஞானா, யோகா, ஜெயலக்ஷ்மி, ஆகிய சகோதரிகளுக்குப்பின்னர் ஐந்தாவது பிள்ளையாக பிறந்தவர். அம்பிகா தாமோதரம், ஜெயலக்ஷ்மி கந்தையா ஆகியோரும் அருந்ததி ஶ்ரீரங்கநாதனும் எங்கள் நீர்கொழும்புக்கும் இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்காக முன்னர் வந்திருப்பவர்கள்.
கடல் அலையெழுந்து இடையிடையே வள்ளத்தைப் பக்கவாட்டில் ஆட்டிக் கொண்டேயிருக்குது.காற்றும் கொஞ்சம் கூடுதலா அடிக்குது.கைகூப்பிக் கும்பிட்டுக்கொண்டே,பக்தர்களும் பயத்தில்;"அம்மாளாச்சி,ஈஸ்வரி, பார்வதிதாயே,நாகதம்பிரானே,எங்களைக்காப்பாற்றும்" என வேண்டுதல்களாக உரத்துக்கத்தும் ஒலிகளே வள்ளத்திற்குள் நிரம்பி அதிருது. இந்தச் சத்தத்தையும் தாண்டி,வள்ளத்துக்குள்ள மாறி,மாறி தேவாரம், திருவாசகம் என பெரியவர்கள் பாடிக்கொண்டே இருக்கின்றார்கள்.
" ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே"என்று
அப்பாவும் பாடுகின்றார்.அதுக்குள்ள இருந்த குழந்தைகளும் வீரென்று கத்தி அழுகின்றன.
இப்படியான அவலம் நிறைந்த சந்தர்ப்பத்திற்கு காரணம்; விடிஞ்சா நயினாதீவு நாகபூஷணி அம்மாள் தேர்.அம்பாளைப்பார்க்க வெளிக்கிட்டு வள்ளத்தில போய்க்கொண்டிருக்கின்றோம்.
அப்போதுதான் இப்படியாக எல்லாமே நடக்குது.
"நான் அப்பவே சொன்னனான்,இந்தக்காத்துக்குள்ள 'இறுப்பிட்டி'யிலயிருந்து இப்ப வெளிக்கிடுவது எனக்கு நல்லதாப்படேல்ல.விடிய நேரத்துக்கு வெளிக்கிட்டாலும் தேர் ஓட்டம் பார்த்திடலாம்.தம்பி நான் சொல்றதைக்கேளுங்கோ"என்று அப்பா வள்ளத்தின்ர சுக்கான் பிடிப்பவரிடம் சொன்னதை நானும் கேட்டனான்.
உடல் நலம் குன்றியிருந்தமையால், இந்த முதல் சந்திப்பு தொடர், கடந்த சில மாதங்களாக வெளிவரவில்லை. எனினும் மீண்டும் எழுதப்படுவதால் உடல் நலம் சீராகிவிட்டது என்பது அர்த்தமும் அல்ல. ஏதோ, மீண்டும் எழுத முயற்சிக்கின்றேன். சமகாலத்தில் எனது பெரும்பாலான பொழுதுகள் எனது பேரக்குழந்தைகளுடன் கடந்து செல்கின்றன. அவர்கள் தினசரி தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும், சுட்டிக்கண்ணம்மா முதலான காணொளி பதிவுகளை நானும் பார்த்து ரசிக்கின்றேன்.
குழந்தைகளை கவரும் வகையில் அத்தகைய தொலைக்காட்சி காணொளிகளை தயாரித்து இயக்குவது எத்தகைய கடின முயற்சியோ, அதுபோன்றே, குழந்தைகளுக்காக இலக்கியம் படைப்பதும் கடினமானதுதான். பிரான்ஸில் வதியும் திருமதி பத்மா இளங்கோவன் இதுவரையில் சில குழந்தை இலக்கிய நூல்களை படைத்திருக்கிறார். குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டவர்களினால்தான், அத்தகைய முயற்சிகளில் ஆக்கபூர்வமாக ஈடுபட முடியும். பத்மாவை முதல் முதலில் 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறையில் அவர்களது பெற்றோருடன் சந்தித்தேன். பத்மாவின் தந்தையார் ஆசிரிய பணியிலிருந்தவர் என்பது எனது அவதானம்.
அக்காலப்பகுதியில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பாரதி நூற்றாண்டு பணிகளில் ஈடுபட்டிருந்தேன். நாம் கொழும்பில் பாரதி நூல்களின் கண்காட்சியையும், ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் ஒளிப்படக் கண்காட்சியையும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, சங்கத்தின் செயலாளர் ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரன், என்னை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார். அங்கே இலக்கிய நண்பர் வி. ரி. இளங்கோவனின் அழைப்பின்பேரில் கொழும்புத்துறைக்குச்சென்றேன். இளங்கோவன், கலை, இலக்கிய, அரசியல் செயற்பாடுகளின் பின்னணியில் வாழ்ந்தவர். வளர்ந்தவர். மூத்த எழுத்தாளர்கள் நாவேந்தன், துரைசிங்கம், மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் தகைமைசார் பேராசிரியர் தமிழ்மாறன் ஆகியோரின் சகோதரர்.
“நவாஷ், முனீரா என்ன சொல்கிறாள்?”
“Sir, மனம் பற்றி படித்து, அவளின் மனசே உடைந்து விட்டதாம்….’
“முனீரா, உங்கள் உடைந்த மனதை காட்டுங்கள்…”
இந்த உரையாடல் பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறைக்கான விரிவுரை அறையில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. கேள்வியைத் தொடுத்தவர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள். ‘மெய்யியல் பிரச்சினைகள்’ வரிசையில் அன்றைய விரிவுரை மனம் பற்றியதாக அமைந்திருந்தது. வெண்பலகையில் எழுதியவாறு மனம் பற்றிய மெய்யியல் அணுகலை பேராசிரியர் தெளிவு படுத்திக்கொண்டிருந்தார். மெய்யியலின் அரிச்சுவடியில் அமர்ந்திருந்த எமக்கு எதுவும் தெளிவாகவில்லை. ஆனால், “உங்கள் உடைந்த மனதை காட்டுங்கள் பார்ப்போம்” என்று பேராசிரியர் உரைத்ததும் எமக்கு மெய்யியல் பற்றி கொஞ்சம் உறைக்கத்தொடங்கியது. குறிப்பாக என் தேடலுக்கான ஊக்கியாக இது அமைந்தது. பல்கலைக்கழக நூலகத்தில் மெய்யியல் பற்றிய நூல்களை ‘பார்க்க’த்தொடங்கி, மெல்ல மெல்ல படிக்கவும் ஆரம்பித்தேன். பேராசிரியர் அனஸ் அவர்களின் விரிவுரைகள் எனக்கு பிடித்தமாயிற்று. தடித்த நான்கைந்து ஆங்கில மொழிமூல நூல்களுடன் விரிவுரை அறைக்கு வருகைத் தரும் அவர். கதிரையில் அமர்ந்துகொண்டு எம்முடன் சற்று நேரம் உரையாடுவார். இது சோக்கிரடீஸ் பாணி என்பது பின்நாட்களில்தான் புரிய ஆரம்பித்தது. அதன் பின் எழுந்து வெண்பலைகையில் எழுதியவாறு எடுத்துக்கொண்ட பாடுபொருளை பிரக்ஞைப் பூர்வமாக துலக்குவார். பின்னர் குறிப்புக்களை சொல்லத்தொடங்குவார். ஆங்கில நூல்களை பார்த்தவாறு தமிழில் சொல்லிக் கொண்டே போகையில் ரயில் பறக்கும். சில சந்தர்பங்களில் நாம் எழுதுவது எமக்கே விளங்குவதில்லை. நண்பர்கள் எழுதிய குறிப்புக்களை அறைக்கு எடுத்துவந்து, நான் எழுதியதையும் வைத்துக் கொண்டு திரும்பத்திரும்ப வாசித்து தெளிவாக அந்த குறிப்புக்களை பதிவுசெய்து கொள்வேன். இதனால் குறித்த மெய்யியல் விஷயஞானம் எனக்குள் பதியமாயிற்று. என்னால் முதலாம் வருட தேர்வில் மெய்யியல் பாடத்துக்குரிய புலமைப் பரிசிலையும் (IBRAHIM JAFEERJIE MEMORIAL SCHOLARSHIP FOR PHILOSOPHY – G.A.Q Ex. 91/92; 11.05.1992) மிகச் சிறந்த சித்தியையும் பெறமுடிந்ததால், மெய்யியல் என் சிறப்புக் கற்கைத்துறையாயிற்று. பேராசிரியருடன் ஆப்தநேசத்தோடு பழகும் வாய்ப்பும் எனக்குக்கிடைத்தது.
ஜெயகாந்தனின், சில நேரங்களின் சில மனிதர்களின், ‘கங்காவின்’ முகமே இறுதியில் மாறிவிடுகின்றது. குடிக்கின்றாள், சிகரெட் பிடிக்கின்றாள். அவளது உதடுகள் கூட, மனுவலின் உதடுகள் போலவே கருமைத் தட்டி போகின்றது.
முன்னுரையில், ஜெயகாந்தன், பின்வரும் பொருள்பட எழுதுவார்: “இப்படியெல்லாம் நடக்குமா? இப்படியெல்லபம் நடக்கிறதா? இப்படியெல்லாம் நடக்கலாமா? இக்கேள்விக்கெல்லாம், வாழ்க்கையானது ‘ஆம் ஆம்’ என பதில் கூறுகிறது.
இதே கேள்வியை, ஐத்மாத்தாவும், கையில் எடுத்துள்ளார் எனலாம்.
மனுக்குலத்தின் காலம் முழுவதிலும், மனிதர்கள், வாழ்க்கைத் தொடர்பில், ஜெயகாந்தன் எழுப்பிய இதே கேள்வியை கையில் எடுத்து பதில் வழங்கியுள்ளனர்.
ஐத்மாத்தாவும், தன் பங்குக்கு இதே கேள்வியை பரிசீலித்துள்ளார். ‘வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்குமா? இது சாத்தியமா? வாழ்க்கை இப்படியும் மாறுமா? அல்லது மாறி அமையுமா'-இதுவெல்லாம் ஐத்மாத்தா எழுப்பிய கேள்விகளின் சாரமாகின்றது.
இவ் அடிப்படையிலேயே அவர் தனது ஓவியத்தையும் தீட்ட முனைந்துள்ளார்
அதாவது, அவரது இந்த ஓவியத்திற்கும், தமிழ் இலக்கியம், இதுவரை முன்னிறுத்தி இருக்கக்கூடிய ஓவியத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் எம்மை சிந்திக்கவே செய்கின்றன.
‘அக்கினி பிரவேசத்தின் முடிவை மாற்றி எழுதிப்பார்த்தேன். இப்படி நடக்குமா? ஆம்,ஆம் என பதில் கூறியது வாழ்க்கை.
கேள்வி: அப்படியெனில், இவ்வாழ்க்கையை கட்டுவித்தது யார்? இதே மனிதன் தான். விடை இதுவெனில், இதனை மாற்றி அமைக்க வேண்டியதும் அவனது கடமையாகின்றது.
- ஆய்வாளர் மன்னர் மன்னன் -
அண்மையில் யு டியூப் காணொளி ஒன்று பார்த்தேன். ஆய்வாளார் மன்னர் மன்னனுடையது. Saattai யு டியூப் சானலிலுள்ள நேர்காணல். இதனைத் தனது தர்க்கங்களுக்கு ஆதாரங்களாகக் காட்டும் தமிழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் என் முகநூற் பதிவொன்றுக்கான எதிர்வினையாகப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=507VJQgMg68
சரி உதவிப் பேராசிரியர் பகிர்ந்திருக்கின்றாரே இவர் என்னதான் கூறுகின்றாரென்று பார்ப்போமே என்று பார்த்தேன். இதில் அவர் கூறிய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. அவற்றைப் பட்டியலிடுகின்றேன்.
1. ஒற்றெழுத்து சொல்லுக்கு முதலில் வராது.
இக்கூற்று பொதுவாகச் சரியென்று பட்டாலும் , ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இதற்கெதிராகவும் தர்க்கிக்க முடியும். உதாரணத்துக்கு ஒரு வசனத்தை எடுப்போம். அது - நான் திரைப்படம் பார்த்தேன். இதன் முதலெழுத்து நா. நெடில். இவ்வசனத்தில் முதற் சொல்லான நான் என்பதைப் பிரித்து எழுதினால் அது எப்படி இருக்கும்? இப்படி இருக்கும் - ந்+ஆ+ன் . அதாவது நான் என்பதன் முதல் எழுத்து ந். இப்படிப்பார்த்தால் இவ்வசனத்தின் முதலெழுத்து ஒற்றெழுத்தில் ஆரம்பமாகின்றது எனத் தர்க்கரீதியாக வாதிடலாமல்லவா.
2. இரண்டாவது திராவிடம் என்பது வடமொழி. தாய் மொழிக்கு எப்படி அந்நிய மொழியில் பெயர் வைக்கலாம்? அப்படி யாராவது வைப்பார்களா?
இதற்கு என் பதில்: தமிழ் மொழியில் பல சொற்கள் பல திசைகளிலிருந்து வந்து சேர்ந்துள்ளன. அவ்வகையில் தமிழில் பல வட சொற்கள் அடங்கியுள்ளன. சுதந்திரம், சுந்தரம், பிரபாகரன், இப்படிப் பல. பலர் தம் குழந்தைகளுக்கு இவ்விதம் அந்நிய மொழியில் பெயர்களை வைக்கின்றார்கள். இதற்குக் காரணம் இம்மொழிச் சொற்கள் அவ்வளவுதூரம் தமிழில் கலந்துள்ளன. பாரதியாரின் கவிதைகள் பலவற்றில் வட சொற்கள் உள்ளன. உதாரணத்துக்கு வீர சுதந்திரம் வேண்டி நின்றார் என்னும் கவிதையினைக் கூறலாம்.
திராவிடம் என்னும் சொல்லை மேனாட்டு அறிஞரான கால்ட்வெல் தென்னிந்திய மொழிபேசும் மக்கள் அனைவரையும் குறிப்பதற்குப் பயன்படுத்தினாலும் , வடமொழியில் தமிழ் என்பதைக் குறிக்கவே பயன்பட்டது என்பர் தேவநேயப் பாவாணர் போன்ற மொழி அறிஞர் பலர். எனக்கும் அதில் உடன்பாடே.
மேலும் மன்னர் மன்னன் 17ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் யாராவது திராவிடம் என்னும் சொல்லைப்பாவித்துள்ளனரா என்று கேள்வி கேட்கின்றார். பின்னர் அதை மறந்து போய் வடமொழியில் திராவிடம் என்னும் சொல் பாவிக்கப்பட்டதையும் ஏற்றுக்கொள்கின்றார்.
எங்களது படகின் அடுத்த தரிப்பு, பவேரியா மாநிலத்தில் நூரம்பேக் நகரமாக இருந்தது. ஆனால், படகின் வழிகாட்டும் பொறுப்பாளர்கள் . “இலவசமாக நகரத்தின் மத்திய பகுதிகளை நாங்கள் சுற்றிக் காட்டுவோம். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட பணம் கொடுத்தால், ஹிட்லரது நாஜி கட்சியினது முக்கிய தலைவர்கள் , அதிகாரிகளுக்கு எதிராக, நேசநாடுகளால் நடத்தப்பட்ட வழக்கு நடந்த இராணுவ நீதிமன்றத்திற்கும் , ஹிட்லரது கட்சி பிரசாரத்திற்கும், கூட்டங்கள், அணிவகுப்புகளுக்கு எனக் கட்டப்பட்ட ஸ்ரேடியம், அணிவகுப்பு மைதானம் போன்ற பகுதிகளுக்கு உங்களை பஸ்சில் கொண்டு சென்று, உங்களுக்குக் காட்டுவதுடன், ஆங்கிலத்தில் விடயங்களைத் தெளிவாக விளக்குவதற்கு ஒருவரை ஒழுங்கு பண்ணமுடியும்“ என முதல் நாள் இரவே சொன்னபோது அங்கு செல்வது எனது நோக்கமாகியது.
இப்படியான வரலாற்றில் விருப்பம் இல்லாத போதும், சியாமளா வருவதற்கு சம்மதித்ததால் காலையில் பஸ்சில் ஏறினோம்.
அது ஓர் அழகான கோடைக்காலத்து நாள்: பிரகாசமாக வெயில் அடித்தது. எங்கள் பஸ் நகரத்தூடாக சென்றது. அப்பொழுது எமது வழிகாட்டி இது இங்கிலாந்தில் லிவர்பூல், மான்செஸ்டர் போன்று தொழிற்சாலைகள் , தொழிலாளர்களைப் பெரிதளவு கொண்ட நகரம் எனப் பிரித்தானியத் தொனியில் சொன்னது எனது காதில் விழுந்தது. ஆனால், கண்கள் வெளியே பார்த்தன. மனத்தில் ஹிட்லரது பன்னிரண்டு வருட கால ஆட்சிபற்றி இதுவரை கேட்ட , படித்த , திரைப்படங்களில் பார்த்த காட்சிகளோடு கலந்து அரைத்த ஆந்திரா மிளகாய்த் தூளாக மனத்தில் காரமாகத் பற்றி எரிந்தது.
இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்றப்பின்பு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் வெளிநாட்டுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும் பத்து வருடங்களுக்கு மேலாக இலங்கையிலுள்ள இராஜபக்ஸ அரசை ஹெக் என்ற ஒல்லாந்து நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஏற்றுவோம் எனச் சூளுரைத்த பேச்சுகளைக் கேட்டு நான் காது புளித்தவன். மேலும் ஜெனிவா மனித உரிமை ஆணையத்திற்கு இரு முறை சென்றுள்ளதால் ஓரளவு அதன் நடைமுறைகளைப் பார்த்தவன். எப்பொழுதும் வென்றவர்களே நியாயம், அநியாயம், நீதி என்பவற்றைத் தீர்மானிப்பார்கள். அக்காலத்தில் ரோமர்கள் எந்த அநியாயமான போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என வரலாற்றில் படித்தவன். அதுபோல் தற்காலத்தில் அமெரிக்கர்கள் நியாயமற்ற போரில் ஈடுபடுவதில்லை என்பதும் தெரிந்தவன் என்பதால் நூரம்பேக்கில் நடந்த இராணுவ நீதிமன்றத்தின் அமைப்பையே பார்க்க விரும்பினேன்.
நூரம்பேக்கில் 1945இல் நடந்த இராணுவ நீதிமன்றத்தில் போட்ட முட்டையில் அடைகாத்துப் பின்பு பொரித்த கோழிக்குஞ்சே ஹெக் ( ICC) நீதிமன்றம். மேற்கு நாடுகள் சில, ஆபிரிக்காவில் சில சர்வாதிகாரிகளோடு சேபியாவின் தலைவர்களைத் தண்டித்ததோடு களைத்துவிட்டது.
அக்காலத்தில் நூரம்பேக் இராணுவ நீதிமன்றத்தை முன்னின்று நடத்திய அமெரிக்கா, தற்போது இஸ்ரேல் பிரதமர் நெத்தனியாகுவை பாதுகாப்பதுடன், ரஸ்ய அதிபர் புட்டினை நீதிமன்றத்தின் முன் நிறுத்த விரும்புகிறது. தற்கால அரசியல் இத்துடன் முடிகிறது.
உயிர்களில் உயர்வும் தாழ்வும் உண்டாம்
உலகம் நோக்கிய உத்தமம் இதுவாம்
கீழ்சாதி மேல்சாதி இரண்டாம் - இவை
அனைத்தும் செய்யும் தொழிலின் பிறப்பாம்
பணக்காரனும் ஏழையும் வேறாம் - இப்படி
பகர்பவன் பகுத்தறியாத பண்பற்ற பிணமாம்
சமூகச் செயற்பாட்டாளர் பாக்கியநாதன் முருகேசு அவர்கள் காந்தியம் அமைப்பின் ஆரம்பத்திலிருந்து மருத்துவர் ராஜசுந்தரம், கட்டடக்கலைஞரும், நகரத்திட்டமிடல் நிபுணருமான எஸ்.ஏ.டேவிட் (டேவிட் ஐயா) ஆகியோருடன் செயற்பட்டு வந்தவர். தற்போது முகநூலில் தன் சுயசரிதையினை எழுதி வருகின்றார். அதன் அங்கங்கள் 23, 24 காந்தியம் அமைப்பின் தோற்றம் பற்றிக்குறிப்பிடுவதால் முக்கியத்துவம் மிக்கன. அவை முக்கிய் ஆவணங்களும் கூட. அவற்றின் ஆவணச்சிறப்பின் காரணமாக பகிர்ந்து கொள்கின்றேன்.
அங்கம் 23
1974ஆம் ஆண்டு கிளிநொச்சி, உருத்திரபுரம் “காந்தி சேவா சங்கம்” பொதுக்கூட்டம் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற ஒழுங்கு செய்து இருத்தார் அதன் செயலாளர் அமரர் சி.க.வேலாயுதபிள்ளை அவர்கள் அதன் தலைவர் திரு.பெரியதம்பி (முன்னாள் பாராளுமன்ற சமநேர மொழிபெயரப்பாளர்) இந்தக் கூட்டத்திற்கு காந்திய வாதிகளான திருகோணமலை காந்தி மாஸ்ரர் அவர்கள், உருத்திரபுரம குருகுலம் கதிரவேலு அப்பு ஆசிரியர், ஆ.ம.செல்லத்துரை ஆசிரியர், சி.க.நல்லதம்பி. எஸ்.ஏ.டேவிட், சோ.இராச்சுந்தரம், மு.பாக்கியநாதன், எஸ். ஶ்ரீரங்கன், இராதாகிரஷ்ணன் இன்னும் பலர் கிட்டத்தட்ட 75-80 பேர் பார்வையாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். கூட்டத்தில் பலர் பேசினார்கள். மத்ய போசனம் வழங்கப்பட்டது். வழமைபோல காந்தி மாஸ்ரர் புத்தகக் கடையை கடை விரித்திருந்தார். வாசகர்களுக்கு அது விருந்தாயற்று பலர் நூல்களை வாங்கினார்கள். நானும் சில நூல்களை வாங்கினேன். அவர் எங்கு புத்தகக் கடை வைத்தாலும் அவருக்காக புத்தகங்கள் வாங்குவேன். சிறிய சிறிய நூல்கள் பல நூல்களை அவருக்கு உதவ செய்யும் நோக்கிலும் வாங்குவேன். கூட்டம் முடிந்து எல்லோரும் கலைந்தனர்.
காந்தியம் பிறக்க அடித்தளமிட்ட வரலாறு.
அடுத்தநாள் நான் சாந்தி கிளினிக்கிற்குப் போனேன். அப்போது இராசுந்தரம் அவர்கள் கூறினாரகள் நாம் இந்த ஊரில் சாதியில் ஒதுக்கப்பட்ட ஒரு குடியிருப்பு உண்டு. அவர்கள் நகரசுத்தி தொழிலாளர்கள். அவர்களே இந்த நகரத்தைச்சுத்தமாக வைத்திருக்க உதவுகிறார்கள் இவர்கள் முழுப்பேரும் மலையத்தை சேரந்த மிகப்பிற்படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு சிறுவர் கல்வி, போசாக்கு உணவு , சுகாதார வாழ்க்கை போன்றவற்றை கற்பிக்க வேண்டும். இங்கிருந்து எமது சமூகத்திற்கு சில இங்கு இருந்து அத்திபாரம் போடுவோம் என முடிவு செய்து இரண்டு இளம் படித்த பெண் பிள்ளைகளை தெரிவு இதில் ஒரு பெண்பிள்ளை அந்த சமூகத்தில்இருந்தே தெரிவு செய்தோம். முதலில் வவுனியா நகரத்தில் உள்ள படித்த முற்போக்கு எண்ணம் கொண்ட பத்துப்பேர் வரையில் இராச்சுந்தரம் அவர்கள் அழைத்து பி .எஸ். மொகமட் கட்டிடத்தின் மேல் மாடியில் அவர்களது அனுமதி பெற்று 10-12 பேர் ஒன்று கூடி ஒரு விளக்கக் கூட்டம் நடத்தி அதில் நாம் சூசைப்பிள்ளையார் குளத்தில் குடியிருக்கும் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறுவர் பாடசாலையும் சத்துணவுக் கூடமும் நடத்துவதென்று முடிவு செய்து், மாதம் ஒருவரிடம் 10 ரூபா வீதம் வங்கி கட்டளை மூலம் பெறுவதென்று முடிவு செய்து அதனை இராச்சுந்தரமும் பாக்கியநாதனும் சேர்ந்து சேர்க்க வேண்டும் என்ற முடிவுடன் வந்தவர்கள் யாவரும் வங்கி ஸ்ராண்டிங் ஓடரில் 10ரூபா செலுத்த கையெழுத்திட்டனர்.
பெரியார் திருமணத்தை எதிர்த்தாராம்..
அதனால்
பெரியார் குடும்பத்தை எதிர்த்தாராம்.
மனிதர் மிருகங்கள் போல்
மாறி மாறி உறவு கொள்ளலாமாம் என்றாராம்.
மூடரே!
பெரியார் எதிர்த்தது குடும்பத்தை அல்ல.
பின்
திருமணம் என்னும் சடங்கை.
ஏன்?
அது பெண்ணை அடிமையாக்கியது
என்பதனினால்.
சடங்கைத்தான் எதிர்த்தார்.
சேர்ந்த் வாழ்ந்து சந்ததி
பெருக்கும் அன்புமிகு
உறவை அல்ல.
சடங்கை ஏன் எதிர்த்தார்.
சடங்கு எப்படி பெண்ணை
அடிமையாக்கிய்து?
வெள்ளைக்காரன் சட்டம் போடும் வரைக்கும்
வெங்காயங்களே
பெண்களை உடன் கட்டை ஏற்றினார்களே
ஏன்? அந்தச் சடங்கால்தானே.
அதனால்.
உடன் கட்டை ஏற்றுவதற்காகப்
பாடையில் படுக்க வைத்து மனைவியைக்
கை ,கால் கட்டி தூக்கிச் செல்வார்களாம்.
கூடவே ஒருத்தன் பின்னால் தடியுடன் செல்வானாம்.
எதற்கு?
அப்பெண்ணின் கை, கால் அசைந்தால்
அடிப்பதற்காம். அதற்காகவாம்.
அதனால்தான் அதனை அனுமதிக்கிற
சடங்கை எதிர்த்தார் பெரியார்.
அதனால்தான் அவர் தந்தை.
அவர் பெண்கள் மேல் அன்பு வைத்திருந்த
தந்தை. அதனால் பெரியார்.
முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று இலேச அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் இலேச அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
இலேச அணி
கருதியதை வெளிப்படுத்தும் சத்துவமாகிய குணங்களைப் பிறிதொன்றால் நிகழ்த்துவனவாக மறைத்துக் கூறுவது இலேசம் என்னும் அலங்காரமாகும்.
"குறிப்பு வெளிப்படுக்கும் சத்துவம் பிறிதின்
மறைத்துரை யாடல் இலேசம் ஆகும்"
(தண்டியலங்காரம் 38)
சொல்லில் மறைத்துக் கூறுதல், உடல் மொழி வழி வெளிப்படுத்துதல்.
இலேச அணியின் வகைகள்:2
"புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
பழிப்பது போலப் புகழ்புலப்படுத்தலும்
அவையும் அன்னதென்று அறைகுநர் உளரே"
(தண்டியலங்காரம் 39)
ஒன்றைப் புகழ்ந்துரைத்தலைப் போன்று காட்டிப் பழித்தலும், பழித்தலைப் போன்று காட்டிப் புகழை விளம்புதலும் ஆகிய இவ்விரண்டும் இவ் இலேச அலங்காரத்தின் வகையாக உரைப்பவரும் உள்ளனர்.
* ஓவியம் - AI
59 இல் நான் பிறந்தபோது என் ஞாபககார்த்தமாக அப்பா ஒரு றலி சைக்கிள் வாங்கினார்.அப்போது அதன்விலை 150 ரூபா. யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் அப்போது சாம்பசிவம், மணியம் சைக்கிள் கடைகளென இவையிரண்டும்தான் பிரபல்யம்!சாம்பசிவத்திலேயே தரமான Brooks சீற்றும்,Miller டைனமோவும் சேர்த்து வாங்கினாராம்.அன்று தொடக்கம் அதுவும் எம்மோடு ஒன்றாய் வாழ்ந்தது.மழையில அது நனையக்கூடாது.மழையில் அது நனைந்தாலும் உடனே முழுமையாக மென்மையான மஞ்சள் துணியால் சைக்கிளை துடைத்துவிட்டுத்தான் சாப்பிடுவார் அப்பா.
அப்பாவைப்போல துப்புரவா, மினுக்கிக்கொண்டு வெளிக்கிட்டு றலி ஒரு மிடுக்காத்தான் நிற்கும்.புழுதியில் படிந்த தூசியை நித்தம் துடைத்து,கீறு விழாது பக்குவமா பாதுகாத்து,அதையும் போக வர பார்த்து மகிழ்வதே அப்பா அதன்மீது கொண்ட நிரந்தரப் பாசம். இவற்றையெல்லாம் நான் பார்த்துப் புரிந்துகொள்ள அதற்கும் ஏழு வயதாகிவிட்டது.தம்பியும் பிறந்து அவனிற்கும் 4 வயதாகிவிட்டது. வீட்டில ஒரு விலையுயர்ந்த அன்றைய ஆடம்பர பொருளென்றால் அது றலிதான்.அதுதான் வாழ்க்கைக்கு முதுகெலும்பா நின்று உழைச்சுக்கொடுத்தது என்றும் சொல்லலாம்.வீட்டுக்கு ஒன்று என்று படலையடியிலயோ அன்றி கேற்றடியிலயோ ஒன்று நின்றது.அது நின்றால் வீடும் தனியழகுதான்.
முற்றத்து மூலையில ஒரு பூவரசு.
பக்கத்தில பூத்துக்குலுங்கும் செம்பருத்தி.
அருகில வாழையோ மாமரமோ அத்துடன்
விவசாயம் செய்கின்ற செம்மண் ஊருக்குள்ள
சோடிச்சுக்கொண்டு றலியும் நிற்பதைப்பார்த்தாலே
இதன் வடிவு ஒரு படி மேல!
அவுஸ்திரேலிய பத்திரிகையான த ஏஜ் (The Age ) வார இதழ் கலைப் பகுதியில் சினிமா மற்றும் புத்தகங்களின் விமர்சனங்கள் இடம்பெறும். அந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் அதிக விற்பனையில் உள்ள புத்தகத்தின் பெயர் இடம் பெறும். கடந்த இரண்டு வருடங்களாக அவுஸ்திரேலியாவில் அதிக தொகையில் விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் முதல் மூன்று இடத்தையும் பெற்றபடி இருந்தது சுவீடிஸ் மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி மாற்றப்பட்ட மூன்று நாவல்கள்;. இந்த மூன்று நாவல்களும் ஒருவரால் எழுதப்பட்டது. வெளிநாட்டு புத்தக வரிசையில் அமெரிக்க அல்லது பிரித்தானிய புத்தகங்கள் மட்டுமே நான் அறிந்தவரையில் கடந்த 20 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையாகின்றன. வேறு மொழியில் வந்த நாவல் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் முன்னணியில் இருப்பது ஒரு புதுமையான விடயம்.
The Girl with the Dragon Tattoo
The Girl who played with fire
The Girl who kicked the hornets’ nest
BY STIEG LARSSON
வாசிப்பதற்கு ஆவல் கொண்டு வாங்க நினைத்துவிட்டு இந்த நிலையில் இந்த மூன்று பத்தகங்களின் கனதியையும் விலையையம் பார்த்து பின்பு சிறிது யோசிப்பேன். வாங்கினால் வாசிப்பேனா அல்லது இடையில் விக்கிரம் சேத்தின் சூட்டபிள் போய் ( Vikram Seth-A Suitable Boy) அரைவாசியில் விட்டது போல் இவற்றையும் இடையில் நிறுத்திவிடுவேனோ என நினைத்துப் பார்ப்பேன். ஓவ்வொரு புத்தகமும் சராசரி 550 பக்கங்களுக்கு மேல் உள்ளவை. புத்தகக் கடைகளில் எட்டிப் பார்த்துவிட்டு விலகிச் செல்வேன். பின்பு மூன்று நாவல்களும் நியூஸ் பிரிண்டில் மலிவு விலையில் ஒன்றாக வந்தபோது சிறிது கவரப்பட்டாலும் நேரமின்மையால் சுவிஸ் சொக்கிலேட்டை பார்த்து விலகிச் செல்லும் நீரிழிவு வியாதிக்காரர் போல் விலகினேன்.
ஒரு முறை தொழில் முறை மாநாடு நிமித்தம் ஜெனிவா செல்லக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஐரோப்பிய விடுமுறையாக மாற்றியபோது பயணத் துணையாக இருக்கட்டும் என மெல்பேன் விமான நிலையத்தில் உள்ள புத்தக சாலையில் வாங்குவதற்கு கையை வைத்த போது முதல் நாவலில் சினிமாவாக எடுக்கப்பட்டதாக எழுதி இருந்தது. வாசிக்கத் தொடங்கியபின் கீழே வைக்க முடியவில்லை. இளம் வயதில் இருந்த போது மட்டுமே இரவுநேரத்தில் தொடர்ச்சியாக விடியும் வரை வாசிப்பது வழக்கம். அதன் பின் பல்கலைக் கழகம் வேலை அத்துடன் தொலைக்காட்சி என்பவற்றால் அதிக நேரம் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் விடை பெற்றுக்கொண்டது. முப்பது வருடங்களுக்குப் பின் இரவுகள் விழித்திருந்து அதிகாலை வரை வாசித்தவை இந்த நாவல்கள்தான்.
ஊடகத்தின் சிம்ப சொப்பனமாய்
சிகரம் தொட்ட பாரதி அண்ணன்
இவ்வளவு சீக்கரம்
நம் எல்லோரையும் விட்டுச் செல்வாரென
பேனாக்களிலிருந்து ஊற்றெக்கும் கண்ணீர்க்குளங்கள்
கவிதையாய் பத்தியாய், சித்திரமாய்
செம்மொழியாய் சொல்லி அழுகின்றன.
அவரின் உள்ளம் மென்மையானவை
ஆனாலும்
அவரின் எழுத்துக்கள்
குட்டக் குட்ட குனியும்
எழுத்துக்கள் அல்ல.
ஒரு சமூகத்தின் விடியலுக்காய்
வீராப்புடன் வீறு கொண்டு எழுந்து
நிமிர்ந்து நிற்கும் வித்துக்கள்.
எழுத முடியாமல் மை தீர்ந்து போன
வெற்றுப் பேனாக்களையும்
இளம் குரும்பட்டிகளையும்
ஊடக நாற்காலியில் அமர வைத்து
அழகு பார்த்தவர் என்று
நாங்கள் காது கொடுத்து கேட்காமல்
இருந்து விட்டோம்.
அறிமுகம்தமிழ்ப் புனைகதைத் துறைக்கு வளஞ்சேர்க்கும் படைப்பாளிகள் வரிசையில், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆசி. கந்தராஜாவும் ஓருவர். அறிதொழில் சார்ந்த தனது பேராசிரியர் பணிக்கு அப்பால் இலக்கியத் துறையிலும் ஈடுபட்டு வருபவர். 80களின் பின்னர் போரும் வாழ்வும் இடப்பெயர்வும் ஆயுதக்கலாசாரமும் என்று சுற்றிக்கொண்டே இருந்த ஈழப் புனைகதைப் பரப்பில் ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியோடு புதிய வாழ்வியல் அனுபவங்களையும் தந்தவர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். அவரின் முதலாவது சிறுகதைத் தொகுதியாகிய 'பாவனை பேசலன்றி' (2000, மித்ர பதிப்பு) குறித்த பார்வையாகவே இக்கட்டுரை அமைகின்றது.
ஆசி. கந்தராஜா தனது தொழிலின் நிமிர்த்தம் உலகின் பல பாகங்களுக்கும் பயணப்பட்டவர். அதன்மூலம் தனது தரிசனங்களைத் தனது கதைகளுக்குப் பகைப்புலமாகக் கொண்டுள்ளார். மிகப் பரந்த ஒரு புறவுலகச் சித்திரிப்பின் ஊடாக கதை சொல்லியாகத் திகழும் அ. முத்துலிங்கத்தின் தொடர்ச்சியாகப் பல புதிய களங்களையும் கதைகளையும் ஆசி. கந்தராஜாவும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அதில் சில கதைகளை இத்தொகுப்பில் காணலாகும்.
தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. குடும்ப வாழ்வு குறித்த சிக்கல்கள், போலிப் பெருமைகள், புதிய களங்களில் கிடைத்த அநுபவங்கள், தனித்துப்போன முதியோரின் வாழ்வில் ஏற்படுகின்ற ஏமாற்றங்கள் ஆகியவற்றை இத்தொகுப்பு மையமாகக் கொண்டமைந்துள்ளது.
குடும்ப வாழ்வு குறித்த சிக்கல்கள்
தொகுப்பில் உள்ள கதைகளில் அம்மா பையன், அடிவானம் ஆகியவை குடும்பத்தில் ஆண் பெண் குறித்த சிக்கல்களைக் கூறும் கதைகளாக உள்ளன. இக்கதைகளின் ஊடாக மேலைத்தேயக் குடும்பங்களையும் தமிழர் குடும்பங்களையும் இரண்டு புறமும் வைத்து சீர்தூக்கிப் பார்க்கின்றார்.
இவ் ஓவியனின் தேடலை, தூண்டிவிட்டிருக்கும் கதைவருமாறு:
ஓவியன் சிறுவனாய் இருந்தபோது, பறவைகளின் கூடுகளைக் கலைப்பதற்காகக் குன்றின்மேல் இருக்கும் பாப்ளர் மரங்களின் உச்சிக்கு ஏறுகின்றான். மரங்களின் உச்சியை அடையும் சிறுவர்களின் முன் இயற்கை அப்படியே விரிந்து கிடக்கும். ‘பூமியின் மகத்துவம் எங்களை வியப்பில் ஆழ்த்தும். மங்கிய, சூடேறிய ஸ்டெப்பியின் காற்றில், கன்னிநிலம் ஒய்யாரமாய் படுத்துக்கிடக்கும் - ‘கண் பார்வை எட்டும் வரை ஒரே நீல பூமி... வார்த்தைகளுக்கு அகப்படாத பெரும் நிலப்பரப்பு’ ஆறுகள், தொடுவானத்தருகே மெல்லிய நூலிழையாகி மறையும். மரக்கிளைகளில் நாம் ஒன்றி படுத்தவாறே விண்ணுலகத்து காற்றின் ஓசைகளையும் ரகசியங்களையும் செவிமடுப்போம். இலைகள், அந்த ரகசியங்களை எல்லாம் எம்மிடம் அன்போடு முணுமுணுத்தன.
இப்படியாக, இயற்கையை அன்போடு விசாரிக்கும், இதே சிறுவர்களில் ஒருவன் மரங்களை நட்டவன் குறித்தும் கேள்விகளை எழுப்பிக்கொள்கின்றான்:
‘யார் இந்தமரங்களை, இக்குன்றுகளில் நட்டிருப்பவர்? நட்டவரின் நம்பிக்கை என்ன? அவரது கனவுதான் யாது?’
சிறுவனின் தேடல்கள் சிலவிடயங்களை எமக்குப் புகட்டுவதாய் உள்ளன.
பொட்டல் காடாய் இருந்த இக்குன்றில்தான், ‘தூய்ஷேன்’ பள்ளிக்கூடம் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தூய்ஷேன், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை, இந்தப் பின்னடைந்த லம்பாடி கிராமத்தினரிடையை (அசோக மித்திரனின் பாஷையில்) பிரதிநிதித்துவம் செய்தவர் என்றும் கூறினர்.
தூய்ஷேன்தான் இந்தப் பள்ளிக்கூடத்தை இங்கு ஆரம்பித்தவராம். இப்போது சாந்தமான தாடிகார தபால்காரராய் இருக்கின்றார் இவர். 1924 இல், இக்கதையின் நாயகிக்கு. 14 வயதாய் இருக்கும்போது ஓர் இளைஞன் போர்வீரனின் மேல்கோட்டோடு, இந்தப் பின்தங்கிய கிராமத்திற்கு வந்துசேர்கின்றான்.
குட்டிப்போட்டால், அக்குட்டிகளையும் குதிரைகளையும், குளிர்காலத்தில் அடைத்துவைக்கும், வசதிபடைத்தோரின் இந்தக் களிமண் குதிரைக் கொட்டிலை, இவர்தான் ஆரம்பப் பள்ளியாக மாற்றியவர். சுற்றிலும் முட்புதர்கள். களைகள். சுவர்கள் மலையில் நனைந்து, நனைந்து கரைந்து இடிந்துபோய் நின்றன. கதவு ஆடிக்கொண்டிருந்தது.
ஆகவே, இவ் இளைஞன் முன் இரண்டு பொறுப்புகள் கிடந்தன. ஒன்று சீரழிந்து போன இம்மண் கொட்டகையை, சின்னஞ்சிறுசுகள் படிக்கக்கூடிய இடமாக எப்படி மாற்றுவது என்பது முதலாவது. அடுத்ததாய், இப்பள்ளிக்கான, சிறுபிள்ளைகள் கூட்டத்தை, இப்பின்னடைந்த கிராம மக்களிடையே இருந்து எப்படி இழுத்து வந்து சேர்ப்பது என்பது இரண்டாவது.
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி எனது வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தியும் ஒரு படமும் வந்திருந்தது. அனுப்பியவர் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான நண்பர் தெய்வீகன். இலங்கையில் சில தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவரான இராசநாயகம் பாரதி, திடீரென உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக படத்துடன் அந்தச்செய்தி கூறியது. தற்போது இலங்கையில் நிற்கும் நண்பர் தெய்வீகனை தொடர்புகொண்டு, பாரதியின் சுக நலன் விசாரித்து, பாரதி விரைவில் நலம்பெறவேண்டுமென பிரார்த்தித்தேன். எமது பிரார்த்தனைகள் சில வேளைகளில் இந்த விதியின் செவிகளுக்கு எட்டுவதில்லைப்போலும் !? கடந்த 09 ஆம் திகதி ( இரண்டு வாரங்கள் கழித்து ) பாரதி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி வருகிறது. மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டியவரின் உயிரை காலன், இரக்கமின்றி பறித்துவிட்டானே என்ற கோபம்தான் எழுகிறது.
கவியரசு கண்ணதாசன், 1981 இல் அமெரிக்கா – சிக்காகோவில் திடீரென மறைந்தபோது, கவிஞர் வாலி சொன்ன கூற்றுத்தான் தற்போது நினைவுக்கு வருகிறது. வாலி இவ்வாறு சொன்னார்: “ எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருத்தன். அழகிய கவிதைப் புத்தகத்தை கிழித்துப்போட்டுவிட்டான். “
1997 ஆம் ஆண்டு கொழும்பு – மட்டக்குளியாவில் தினக்குரல் நாளிதழும் வார இதழும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே எனக்கு பாரதியின் அறிமுகமும் தொடர்பாடலும் கிடைத்தது. அதற்கு முன்னர், பாரதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றிய காலப்பகுதியில் நான் அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டேன். அக்காலப்பகுதி இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் போர் மேகங்களினால் சூழ்ந்திருந்தது.
மானுட இனதத்தின் வளர்ச்சிப் போக்கில்
பல படி நிலைகள்.
குரங்கிலிருந்து வந்தவர் மனிதர் என்ப்ர்.
புதுமைப்பித்தனோ முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு
என்றாலே மகிழ்வர் எம்மவர் என்பார்.
குரங்கிலிருந்து வந்தவர்,
குகைகளில் வாழ்ந்தார்.
குழுக்களாக வாழ்ந்தார்.
பெண் வழிக்குடும்பத்தைக் கண்டார்.
பொதுவுடமை பேணினார்.
தனியுடமை கண்டார்.
தனித்து வாழத்தொடங்கினார்.
வர்க்கங்களாகப் பிரிந்தார்.
வர்ணங்களாகப் பிரிந்தார்.
மதம், மொழியெனப் பிரிந்தார்.
'யாரும் ஊரே! யாவரும் கேளிர்!" என்றான்
நம் கவிஞன். கேட்டாரா?
குரங்கிலிருந்து வந்தவர்
காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்.
நம்மவரோ
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
யார் வாழ்ந்தார்? வாழ்வார்?
யார் இருந்தார்? யார் இருப்பார்?
சிரேஸ்ட ஊடகவியலாளரான, பலராலும் அறியப்பட்ட இராசநாயகம் பாரதி அவர்கள் தனது 62 ஆவது வயதில் திடீரென எம்மைவிட்டு நேற்றுப் பிரிந்த செய்தி (9-2-25) அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருக்கின்றது. ஊடக தர்மத்தை கடைசிவரை கடைப்பிடித்த இவர், போர்ச் சூழலில் பல இன்னல்களைச் சந்தித்தது மட்டுமல்ல பலதடவை உயிராபத்தையும் எதிர் கொண்டிருந்தார். பழகுவதற்கு இனிமையான இவர், ஞாயிறு தினக்குரல் ஆசிரியராக இருந்த போதுதான் என்னுடன் முதலில் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது தினக்குரல் பத்திரிகையின் உரிமையாளராக எனது மனைவி மாலினியின் உறவினரான திரு. எஸ்.பி. சாமி அவர்கள் இருந்தார்கள். இலங்கையில் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் இரண்டு தடவைகள் எனது நூல்களை வெளியிட்ட போது, திரு. எஸ்.பி. சாமி அவர்கள் ஒருமுறையும், ஞானம் ஆசிரியர் திரு. ஞானம் அவர்கள் ஒருமுறையும் தலைமை தாங்கியிருந்தார்கள். திரு. இராசநாயகம் பாரதி அவர்களும் இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
கனடாவில் 2019 ஆம் ஆண்டு கனடிய தமிழ்ப் பெண்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான ‘நீங்காத நினைவுகள்’ என்ற தொகுப்பைத் தொகுத்து வெளியிட்ட போது, எனது 50 ஆண்டுகால இலக்கிய பணியைப் பாராட்டும் முகமாக என்னை நேர்காணல் ஒன்று செய்து தினக்குரலில் வெளியிட்டிருந்தார். அதன் பின் எனது கட்டுரைகள், சிறுகதைகள் என்று பலவற்றைத் தினக்குரலில் வெளியிட்டு இலங்கையில் வாசகர்கள் பலரை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். சுமார் 40 ஆண்டுகால ஊடகத்துறை அனுபவம் கொண்ட இவர் தமிழர் தகவல் விருது பெறுவதற்காகக் கனடா வந்த போதும் அவரைச் சந்தித்துப் பாராட்டி உரையாடியிருந்தேன்.
அதன் பின் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றிய போதும் என்னுடைய சிறுகதைகள், கட்டுரைகளுக்கு முன்னுரிமை தந்து பிரசுரித்திருந்தார். கடைசியாக இவர் வீரகேசரி யாழ்பாண பிராந்தியப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி இருந்தார். இரு வாரங்களுக்கு முன்பும் தொலைபேசியில் வீரகேசரி முன்னாள் ஆசிரியர்களைக் கௌரவிக்க இருப்பதாகவும், அவர்களில் ஒருவரான கனடாவில் வதியும் மகாஜனக்கல்லூரி நண்பர் சிவநேசச்செல்வன் பற்றியும் விபரங்களைப் பெற்று என்னுடன் உரையாடியிருந்தார். அப்போது என்னை யாழ்ப்பாணம் வரும்படியும், வரும்போது எனக்கு ஒரு பாராட்டு விழா அங்கே எடுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். என்ன செய்வது, சில ஆசைகள் நிறைவேறாமலே போய்விடுவதுமுண்டு.
- ரீஜன்ஸ்பேர்க் நகரக் காட்சி -
எங்களது பயணத்தில் அடுத்ததாக வரும் நாடு ஜெர்மனி : அதாவது ஜெர்மனியின் கிழக்குப் பகுதியான பவேரியா மாநிலம். ஒரு முக்கியமான விடயம் இங்கு சொல்ல வேண்டும். ஜெர்மனியின் வடக்கு பிரதேசங்கள் ஸ்கண்டினேவியா நாடுகள் போல் புரட்ஸ்டான்ட் மதத்தை தழுவியவர்கள். ஆனால், பவரியா மற்றும் தென்பகுதியினர் கத்தோலிக்க மதத்தினர். இங்கு இன்னமும் இவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு வரி செலுத்துகிறார்கள்.
டானியுப் நதியில் நாங்கள் சென்ற அடுத்த நகரம் மிகவும் முக்கியமானது . பவேரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் பழைய தலை நகரமான ரீஜன்ஸ்பேர்க் (Regensburg) நதியோரத்தில் உள்ளது.
இங்கே காலையில் படகிலிருந்து இறங்கி, வழிகாட்டியுடன் நதிக்கரையோரமாக நடந்தபோது, அது பழமையான நகரமாகவும், அதே நேரத்தில் அந்த பழமை பாதுகாப்பாகவும் உள்ளது. புதிய கட்டிடங்களும் எங்களால் பார்க்கக்கூடியதாகவும் உள்ளது. புதுமையும் பழமையும் அழகாக இணைந்து இருந்தன. பழமையை பேணியபடி, புதுமையை உருவாக்குவது எப்படி என்பதை ஐரோப்பியர்களிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய முக்கிய பாடமாகும்.