திருக்குறள் முன்வைக்கும் மருத்துவச் சிந்தனை! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
ஆய்வுச் சுருக்கம்நோய் – மருந்து. மருந்து - நோய் என்ற இந்த இரண்டும் மனித வாழ்வில் நீங்காத இடத்தை பிடிக்க கூடியதாக உள்ளதை நாம் பார்க்க முடிகிறது. நோய் நீங்குவதற்கு மருந்து உண்பதும் உண்ட மருந்தினால் உண்டாகக்கூடிய பக்க விளைவு குறித்தும் இன்று நாம் அதிகம் கவனம் செலுத்துகிற ஒரு சூழலை பார்க்க முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் தமிழ் மருத்துவம் குறிப்பாக, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இருந்த மருத்துவத்தின் செயல்பாடு அச்செயல்பாடு இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்களுக்கு எந்த வகையில் பொருத்தம் உடையதாக இருக்கிறது? என்பது குறித்த செய்தியை நாம் திருக்குறளின் பின்புலத்தில் பார்க்கிறோம். அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்த கட்டுரை முன்வைக்கிறது.
குறிச்சொல் – நோய், மருந்து, இயற்கை உணவு, செயற்கை உணவு, மனிதனுடைய பண்பாட்டு செயல்பாடுகள், நாகரீக வாழ்வியல் முறை.
முன்னுரை
இனம், மதம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து மனித சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் நூலாக விளங்கக்கூடியது திருக்குறள். ‘பல்கால் பழகினும் தெரியா...’ உள்ள நூல்களுள் ஒன்று. தமிழ் மொழியில் ஆகச்சிறந்த நூல்களுள் ஒன்றான திருக்குறளில் ஏராளமான அறிவியல் சார் கருத்துக்கள் சிதறி கிடக்கின்றன. அவை மனித சமூகத்தின் எக்காலத்தவற்கும் உரிய பயனைத் தரக்கூடியவையாக விளங்குவன. அவற்றில் நோய் - நோய்க்கான காரணி - அந்நோய்க்கான தீர்வு என்ற முறையில் சொல்லப்பட்டுள்ள மருத்துவச் சிந்தனைகள் குறித்து மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாகக் காணலாம்.