ஓர் உலகக் குடிமகனின் தன் நாட்டு அரசியல் பற்றிய சிந்தனைகள்... - வ.ந.கிரிதரன் -
சமஷ்டி, சுயநிர்ணய உரிமை பற்றி ஜனாதிபதி வேட்பாளருடன் பேசத் தயார் என்று தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. நமது அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேத்திக் குளிர் காய்வதில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தி.
தனி நாடு கேட்டு, அதாவது பிரிந்து தனி நாடு அமைப்பதற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது 2009இல். இவ்விதமானதொரு சூழலில் இலங்கையில் எந்த அரசாவது சுயநிர்ணய உரிமையினை அதாவது நாடு பிரிந்து செல்லும் நிலையினை ஏற்றுக்கொள்ளுமா? தமிழரசுக் கட்சி பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையினைப் பற்றி இங்கு கூறுகிறதா அல்லது தமிழர்கள் சுயமாக ஒற்றமைக்குள் இருந்தவாறே, தம் காணி, பொலிஸ் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் சுயமாக முடிவெடுக்கும் நிலை ஏற்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றதா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.
வலிமையான பாரதத்துடன் ஏற்படுத்திய 13 அம்ச ஒப்பந்தத்தையே இதுவரையில் நடைமுறைப் படுத்தாமல் இலங்கை அரசு இருக்கும் நிலையில், முதலில் செய்ய வேண்டியது அதனை நடைமுறைப்படுத்த வேண்டி வலியுறுத்துவதுதான். அவ்விதமானதொரு சூழல் எற்பட்டால், அத்திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டால், காலப்போக்கில் இலங்கையில் மாகாண சபைகள் நன்கு செயல்படத் தொடங்கினால், மாகாண சபைகளின் குறைபாடுகளை மேலும் நிவர்த்தி செய்யும் கோரிக்கைகளை வலியுறுத்தலாம். அடுத்த கட்டமாக மாகாண சபைகளை மாநில அரசுகளாக மாற்றும்படி , சமஷ்டி முறையிலான மாநில அரசுகளாக மாற்றும்படி வலியுறுத்தலாம்.