பல்கலைக் கலைஞர் 'மாஸ்டர்' சிவலிங்கம்! - வ.ந.கிரிதரன் -
- எனது மாஸ்டர் சிவலிங்கம் பற்றிய கட்டுரை ஜீவநதி சஞ்சிகையின் மாசி 2023 வெளியான அதன் ஆவணச் சிறப்பிதழில் வெளியாகியுள்ளது. ஜீவநதி சஞ்சிகையை வாங்க, வாசிக்க ஆசிரியர் பரணீதரனுடன் +94 77 599 1949 என்னும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள். அவரது முகநூல் அடையாளம் - Bharaneetharan Kalamany. மின்னஞ்சல் முகவரி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நான் முதன் முதலில் எழுத்தாளர் மாஸ்டர் சிவலிங்கத்தை அறிந்து கொண்டது எழுபதுகளில் அவர் சிந்தாமணியின் வாரவெளியீட்டில் வெளியான சிறுவர் சிந்தாமணியில் எழுதிய சிறுவர் புனைகதைகள் மூலம்தான். அழகான ஓவியங்களுடன் பிரசுரமான் அக்கதைகள் மூலம் என்னை மிகவும் கவர்ந்து விட்டார் மாஸ்டர் சிவலிங்கம். அவரது எழுத்து நடையும், உலகின் பல பாகங்களிலிருந்தும் பெற்ற கதைகளை அவர் சிறுவர்களுக்காக எழுதிய பாங்கும் எனக்கு அவரைத் தமிழகத்தின் சிறுவர் இலக்கியத்துக்கு மிகப்பெரும் பங்களிப்பு செய்தவரான வாண்டுமாமாவுடன் ஒப்பிட வைத்தன். உண்மையில் அவர் என்னைப்பொறுத்தவரையில் ஈழத்து வாண்டுமாமாதான்.
'தாய்வீடு' பத்திரிகையின் ஓகஸ்ட் 2014 பதிப்பில் வெளியான 'மாஸ்டர் சிவலிங்கம்' என்னும் அதிரதனின் கட்டுரையும் நல்லதொரு கட்டுரை. அதில் மாஸ்டர் சிவலிங்கம் பற்றி பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
"மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் எனும் கிராமத்தில் 28.03.1933 அன்று பிறந்தார். தந்தையார் திரு.ந.இரத்தினம் ஆசிரியர். தாயார் திருமதி செல்லத்தங்கம். மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் மஞ்சந்தொடுவாய் சென்மேரிஸ் பாடசாலையில் கல்வியைத் தொடங்கி (1ம் 2ம் வகுப்புக்கள்) பின் கல்லடி உப்போடை இராமகிருஸ்ண மிஷன் மகளிர் பாடசாலையில் 3ம் 4ம் 5ம் வகுப்புக்களைக் கற்றார். தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி சிவானந்த வித்தியாலத்திலும் (6ம் 7ம் வகுப்புக்கள் – 1946/47) பின் மட்டக்களப்பு அரசினர் கல்லூரியிலும் (தற்போது இந்துக்கல்லூரி -1948/52) கல்வி கற்றார். புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதர் வி.சி.கந்தையா ஆகியோர் இவரது ஆசான்களாக விளங்கினார். பள்ளிப்பருவத்திலேயே நல்ல ‘பகடிகள்’ சொல்லி மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். .... பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களின் புதல்வியார் மங்கையற்கரசி அவர்களே இவரது வாழ்க்கைத் துணை. காலஞ்சென்ற எஸ்.டி.சிவநாயகம் அவர்களே இவரது இலக்கியத்துறை வழிகாட்டி. 1966ம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டு எஸ். டி.சிவநாயம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினபதி (தினசரி), சிந்தாமணி(வாரமலர்) ஆகிய பத்திரிகைகளில் அவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பணிபுரிந்தார். இப்பத்திரிகைகளின் ‘சிறுவர் பகுதி’க்கு இவரே பொறுப்பேற்றிருந்தார். இப்பத்திரிகைகளின் ஆசிரியபீடத்தில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்த சுமார் பதினேழு ஆண்டுகள் சிறுவர் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பு பாரியது. இவரது ஆசிரியரான புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை இவரை இலங்கை வானொலியில் ‘சிறுவர் மலர்’ நிகழ்சியை நடாத்திக்கொண்டிருந்த முதலாவது ‘வானொலி மாமா’வான சரவணமுத்து அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்த பின்னர், இலங்கை வானொலியில் கதை சொல்ல ஆரம்பித்தார். 1983 ஆடிக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு, குடும்பத்தினருடன் கொழும்பிலிருந்து வெறுங்கையுடன் மட்டக்களப்பு மீண்டார். "