தாத்தாமாரும் பேரர்களும். ஏம்.ஏ.நுஃமான். கல்முனை 6: வாசகர் சங்க வெளியீடு, நூரி மன்சில், 1வது பதிப்பு, மார்ச் 1977. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி). 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5. அளவு: 20.5*14 சமீ.


இத்தொகுப்பிலுள்ள நெடுங்கவிதைகள் வருமாறு:

1. உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்
2. அதிமானிடன்
3. கோயிலின் வெளியே
4. நிலம் என்னும் நல்லாள்
5. தாத்தாமரும் பேரர்களும்

இந்நூலை நுஃமான் கவிஞர் மஹாகவிக்கும், நீலாவணனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.

இன்று கவிதைகள் என்னும் பெயரில் நூற்றுக்கணக்கில் எழுதிக்குவிப்போர் ஒரு கணம் நுஃமான் போன்றோரின் கவிதைகளை வாசித்துப்பார்க்க வேண்டும். அப்பொழுது புரிந்து கொள்வார்கள் ஒருவருக்கு மரபுக்கவிதையின் அறிவு எவ்விதம் இன்றைய கவிதையினை எழுத உதவியாகவிருக்கும் என்பதை. உதாரணத்துக்கு நூலிலுள்ள நுஃமானின் 'அதிமானிடன்' கவிதையிலிருந்து ஒரு பகுதியைப்பார்ப்போம்:

அதிமானிடன்

எங்கும் இருட்டாய் இருந்தது. அந்தக்
கங்குற் பொழுதில் கறுத்த வானிலே
மின்னல் ஒன்று மின்னி மறைந்தது.
மின்னலின் பின்னால் மிகப் பெரிதாக
இடி இடித்துக் குமுறி இரைந்தது.

இடியின் ஒலியில் இருண்டு கிடந்த
கானகம் அதிர்ந்து கலகலத்தது.
யானைகள் பயந்து பிளிறி இரைந்தன.
தாரகை போலத் தணலாய்ச் சிவந்த
கண்களை உடைய புலிகள் உறுமின.

அடர்ந்த அந்தக் காட்டின் இடை ஓர்,
இருட்டுக் குகையுள் இருந்தான் மனிதன்.
பரட்டைத் தலையன். பிறந்த மேனியாய்க்
கையில் தடியுடன் காவல் இருந்தான்.

இந்தக் கவிதையை வாசிக்கும்போதே மனதுக்கு மொழி இன்பமளிக்கவில்லையா? இதற்குக் காரணம் என்ன? அதற்குக் காரணம் கவிதையில் கவிஞரின் மரபுக்கவிதை பற்றிய அறிவின் தாக்கம் இருப்பதுதான்.

எங்கும், கங்கும் (எதுகை), இருட்டாய், இருந்தது (மோனை), மின்னல், மின்னி, மறைந்தது (மோனை), இவை போல் கவிதையில் சொற்கள் எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் இயல்பாக வந்திருப்பதால்தான் கவிதை சிறக்கிறது. மேலும் கவிதையில் ஈரசைச்சீர்களை (ஆசிரியப்பா கவிதை வடிவத்திலுள்ளதைப்போல்) நுஃமான் அதிகமாகப்பாவித்திருக்கின்றார். அதுவும் கவிதையைச் சிறக்க வைக்கின்றது. இவ்விதம் கவிதை சிறப்பாக அமைந்திருப்பதற்கு நுஃமானின் மரபுக்கவிதை பற்றிய பாண்டித்தியம் உதவியிருக்கின்றதென்பதென் எண்ணம்.

சூத்திரங்களுக்குள் சிக்கிக்கிடக்கும் மரபுக்கவிதையின் அடிமை நிலையினைச் சிறிது நீக்கி, அதற்கேயுரிய சிறப்பான பண்புகளுடன் , படைக்கப்பட்ட கவிதைகள் நுஃமானின் கவிதைகள்.

அதற்காகக் கவிதையென்றால் இவ்விதம்தான் மரபுக்கவிதையின் அம்சங்களுடன் கூடி இருக்க வேண்டுமா என்று யாரும் கேட்கலாம். அதற்கான என் பதில்: இல்லை என்பதுதான். மொழியைத் திறமையாகக் கையாள்வதற்குக் கவிஞர் ஒருவருக்கு மரபுக்கவிதை பற்றிய அறிவு உதவும் என்பது நம்பிக்கை. உதாரணத்துக்கு அ.யேசுராசாவின் புகழ்பெற்ற கவிதையான 'நல்லம்மாவின் நெருப்புச் சட்டி'யில் இவ்விதமான மரபுக்கவிதையின் அம்சங்கள் அதிகமாக இல்லை. ஆனால் அக்கவிதை சிறப்பாக வந்திருப்பதற்கு அதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி, விரவிக்கிடக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு ஆகியவை முக்கியமான காரணங்கள்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை 'நிலம் என்னும் நல்லாள்'.

நூலுக்குக் கவிஞர் முருகையன் நல்லதொரு முன்னுரையினை எழுதியிருக்கின்றார்.

நூலின் முன்னுரையில் நூலிலுள்ள கவிதைகளைப்பற்றிக் கவிஞர் முருகையன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

"'உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்' என்பது முதலாவது கவிதை.காலமும் இடமுமாய் விரிந்து பரந்து கிடக்கும் உலகுக்கும், தனிமனிதன் ஒருவனுக்குமுள்ள தொடர்பு என்ன? இசைவு எப்படிப்பட்டது? இத்தகைய வினாக்களை இக்கவிதை எழுப்புகிறது. கவிதையின் பெரும்பகுதியில், ஐயங்களும், வியப்புகளும், திகைப்புகளுமே காணப்படுகின்றன. ஆனால், கவிதை வளர்ந்து முடிவுறும் தருணத்தில், கவிஞன் வெளிப்படுத்த எண்ணிய கருத்து நன்கு புலப்படுகிறது. தனிமனிதர்கள் தம் மனத்திலே உலகு பற்றிப் பலவாறாக எண்ணிக் கொள்ளலாம்; ஆனால் அந்த எண்ணங்களுக்குப் புறம்பாக, அந்த எண்ணங்களுக்குக் காலாக, யதார்த்தமான புறவுலகு உண்டு என்னும் தெளிவு உதயமாகிறது. இந்த உதயமே அக்கவிதையின் அடிக்கருத்து எனலாம்.

இக்கவிதையைப் படுக்கும் போது Dylan Thomas என்பார் எழுதிய 'Under Milk Wood' என்ற ஒலி நாடகம் என் நினைவுக்கு வருகிறது. குரல்களுக்கென எழுந்த அந்நாடகம், கடற்கரைப் பட்டினமொன்றில் வாழும் மாந்தர் சிலரின் நடத்தையைச் சித்திரமாக்குகிறது. ஒரு நாள் வைகறைப் பொழுதிலே தொடங்கி மறுநாள் வைகறைப் பொழுதில் நாடகம் முடிகிறது. அந்த நாடகத்தில், இடப்பரப்பு ஒரு குறிப்பிட்ட பட்டினத்தின் எல்லைக்குள் மட்டுப்பட்டு நிற்கிறது. காலப்பரப்போ ஒரு முழுநாள் என்னும் எல்லைக்குள் மட்டுப்பட்டு நிற்கிறது. ஆனால், நுஃமானின் கவிதையில் மேற்படி மட்டுப்பாடுகள் இல்லை. அந்த நாடகத்திலே தோமஸின் நோக்கம் மனித உறவுகளையும் நடத்தைகளையும் படம்பிடிப்பதே ஆகும். இந்தக் கவிதையிலே, நுஃமானின் நோக்கம், உலகுக்கும் மனிதனுக்குமுள்ள உறவுகளை விசாரணை செய்வதே ஆகும். அந்த நாடகமும் இந்தக் கவிதையும் பல வித்தியாசங்களை உடையன. ஆனால் வியக்கத்தக்க ஒற்றுமைகள் சிலவற்றையும் நான் காண்கிறேன்.

'அதிமானுடன்' என்னும் கவிதை, நுஃமானின் படக்காட்சி உத்திக்கு நல்ல உதாரணம். வரலாற்றின் ஓட்டத்திலே பற்பல நூற்றாண்டுகளின் படுவேகமான சுழற்சியை மிகவும் இலாவகமாகக் கையாளுகிறார் கவிஞர். மனித குலத்தின் இரு பாதிகளிடையும் உள்ள உள்முரண், வரலாற்றை நடத்திச் செல்லும் உந்தலாய் அமைவதை இக்கவிதையில் உணர்த்துகிறார் நுஃமான்.

'கோயிலின் வெளியே' நாடகப் பாங்கான அமைப்பு. நான் எழுதிய 'கோபுர வாசல்' என்னும் நாடகத்தின் இறுதிப் பகுதியிற்கூட, நுஃமான் கவிதையின் செல்வாக்குச் சிறிதளவு படிந்திருப்பதை நான் இப்போது உணர்கிறேன்.

அடுத்து 'நிலம் என்னும் நல்லாள்' என்னும் கவிதை வருகிறது. இது கிழக்கிலங்கைக் கமச்செய்கையின் யதார்த்தச் சித்திரமாகும். நம்மவர்களின் சிறுகதைகளும், நாவல்களும் கூட, இக்காட்சிகளை இத்துணை நடப்பியல் நயம் பொருந்த விபரித்துள்ளன எனல் கூடாது. கே. ஜயதிலக என்னும் சிங்கள நாவலாசிரியர் தமது 'சரித துணக்' என்னும் நாவலில், சிங்களக் கிராமத்துக் கமச் செய்கை பற்றியும், சேனைப் பயிர்ச் செய்கை பற்றியும் இயற்றிக் காட்டியுள்ள சொல்லொவியங்கள், நுஃமானின் கவிதைகளைப் படிக்கையில் என் நினைவுக்கு வந்தன. '

தாத்தாம்ரும் பேரர்களும்' என்பது முஸ்லிம் சமுதாய சரித்திர நோக்கு உடையது. ஏற்கனவே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ள இக்கவிதை இனியும் மக்களின் சிந்தனையைத் தூண்டுவதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலே சொல்லப்பட்டவை வெறும் அறிமுகக் குறிப்புகளே. நுஃமானின் கவிதைகள் விரிவான ஆய்வுக்கு உட்பட வேண்டியவை எனினும் இந்த முன்னுரையில் இக்குறிப்புகளே போதும் என எண்ணுகிறேன்."

இந்நூலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு

நிலம் என்னும் நல்லாள்

அப்போது நான் சிறுவன்
அப்பா வயலுக்குள்
எப்போதும் தன்னோடு
எனைக்கூட்டிச் செல்வதுண்டு.

பள்ளவெளிக் குள்ளே
பதினாலு ஏக்கர் எமக் குள்ளது.
மேலும் ஒரு பத்தேக்கர்ப் பூமியை
ஒத்திக்குச் செய்கின்றோம்.
மும்மாரி, அல்லிமுல்லை,
மாட்டுப் பழைக்குள்ளும்
எம்மாத்திரம் காணி
எங்களுக்குச் சொந்தம் என
ஊரே புகழ் பாடும்.
உண்மையும் தான்; நாங்கள் எல்லாம்
பாரம் பரியப் பணக்காரப் போடிகள்தான்.

சூடடித்த நெல்லைச் சுமந்து வருகின்ற
மாடுகளைக் கண்டால்
வருத்தப் படுவார்கள்.
எப்போதும்
எங்கள் வளவுக்குள் இடம் இன்றி
முப்பதுக்கு மேல் வண்டி
மூட்டை சுமந்து வரும்.

மண்டபத்துக் குள்ளேயும்
வாசல் விறாந்தையிலும்
கொண்டுவந்த நெல்லையெல்லாம்
கூரை வரை உயர்ந்த
பட்டடைகள் கட்டி, அவற்றுள்
பவித்திரமாய்க்
கொட்டிவைப்போம்.
பட்டடைகள் கொள்ளாத நெல்லையெல்லாம்
மூட்டைகளாய்க் கட்டி
அறைகள் முழுவதிலும்
மோட்டுயரத் துக்கே அடுக்கி முடித்து வைப்போம்.

வீட்டுக்குள் நெல்வாடை வீசும்
எனக் கென்றால்
தும்மல் பறக்கும் தொடர்ந்து.

விளக்குவைத்துக்
குந்தி இருந்து படிக்கத் தலைகுனிந்தால்
அந்துப் பூச் செல்லாம்
அநேகம் படை எடுத்து
வந்துவந்து மொய்க்கும்
வரியில் முகத்திலெல்லாம்.

தொல்லை தராது
சுவரில் இருந்து வரும்
பல்லி, அவற்றைப் பசியாறிச் செல்வதுண்டு!
அட்டூழியம் செய்யும்
எலியை அழிப்பதற்குப்
பட்டடையில் எங்களது
பூனை படுத் திருக்கும்!

2

அப்போது நான் சிறுவன்
ஆனாலும் எங்களது
அப்பா அழைப்பார்
'அட தம்பி நாளைக்கு
வட்டைக்குப் போகலாம்
நீயும் வா' என்று; எனக்குள்
மட்டுப் படாத மகிழ்ச்சி தலைதூக்கும்.

ஆயினும்
காலை அலர்ந்து வருவதன் முன்
தாய் வந்து நின்றபடி
'தம்பி எழும்பு' என்று
என்னை அரட்டி எழுப்ப முனைகையிலே
கோபம் தான் உண்டாகும்.

கொஞ்சம் பொறுத் தெழுந்து
போவதற் காகப் புறப்படுவேன்...

எங்களப்பா
நல்ல உயரம், நரைத்த சிறுதாடி,
வெள்ளை உடம்பு மினுங்கும்.
மிதியடிதான்
காலில் அணிவார்; கழுத்தை வளைத்து ஒரு
சாலுவை தொங்கும்
சரியாய் அலங்கரித்து
தொப்பி அணிந்து
சுருட்டொன்றை வாயில் வைத்து
அப்பா நடப்பார்
அவர்பின்னால் நான் நடப்பேன்.

அப்பாவின் பின்னால்
அவர்தோளில் தொங்குகிற
அந்தக் குடையின் அசைவில் லயித்தபடி
நான் நடந்து செல்வேன்.
பின் நாங்கள் மெயின் வீதி வந்து
சிறி திருந்து
வஸ் ஏறிப் போய் விடுவோம்.

3

பள்ளவெளி தூரப் பயணம் தான்;
நாம் அங்கே
போகும் பொழுதே பொழுதேறிப் போயிருக்கும்
காலை வெயிலின் கதிர்கள்
மரம் செடிகள்
மேலே விழுந்து, மினுங்கி
வளைந்து வரும்
வாய்க்காலில் கொட்டி
வழி எங்கும் புன்னகைக்கும்.

வாய்க்கால் அருகே
வளர்ந்த மருதையெல்லாம்
காய்த்துக் கிடக்கும்
கிளிகள் கலகலகலப்பாய்க்
கத்திப் பறக்கும்
கிளைகள் சலசலக்கப்
பொத் தென்று வீழ்ந்து ஓடிப்
போகும் குரங்குகள்
சற்றெம்மை நோக்கிப் பின் தம்பாட்டில் ஓடிவிடும்.

புல்நுனிகள் எங்கும்
பனியின் பொழு பொழுப்புத்
தள்ளித் தெரியும்
சரிவில் எருமைசில
நின்று, தலையை நிமிர்த்தி எமைப்பார்க்கும்.

எட்டி அடிவைத்து நடக்கும் இடத்திருந்து
வெட்டுக் கிளிகள் சில
'விர்' என்று பாய்ந்து செல்லும்
கஞ்சான் தகரைகளில்
குந்திக் களித்திருக்கும்
பஞ்சான் எழுந்து பறந்து
திரும்ப வரும்.

அப்போது நான் சிறுவன்.
அந்த வயற் பாதை
இப்போதும் நன்றாய்
நினைவில் இருக்கிறது.

எங்கள் வயல் அருகில் எல்லாம்
மருதமரம்
செங்காய்ப் பருவத்தில்
தின்னவரும் கிளிகள் அத்தனையும் உண்டுதான்;
ஆனாலும் அங்கெல்லாம்
தொட்டாச் சுருங்கி
தொடர்ந்து வளர்ந்திருக்கும்
சட்டென்று காலின்
சதையைக் கிழித்துவிடும்.

வாப்பா நடக்கும் வரம்புகளில்
தொட்டாவைக்
கண்டாலே போதும்
வயற்காரக் காக்காவைக்
கூப்பிட்டுக் காட்டி, ஒரு
கொம்பல் தொடங்கிடுவார்.

4

எங்கள் வயற்காரர்
இஸ்மாயில் காக்கா, ஓர்
தங்க மனிசன்; தலையைக் குனிந்தபடி
மண்வெட்டி கொண்டு
வரம்பை செதுக்கி வைப்பார்
மண்டை உருகும்
வயல் வெளியில் மட்டுமல்ல
வீட்டிலும் கூடஅவர் வேலைபல செய்வதுண்டு

காட்டில் தறித்த பெரும் கட்டைகளை
எங்களுக்காய்க்
கொத்தி அடுக்கிக் கொடுப்பார்.
பழுதான
வேலியினைக் கட்டுவதும்
வீட்டுக் குசினியின் தென்
னோலைக் கிடுகை ஒருக்கால் புதுக்குவதும்
எல்லாம் அவரேதான்.

எங்கள் குடும்பத்தார்
செல்லாத்தா என்று
சிறப்பாய் அழைக்கும் அவர்,
பெண்டாட்டி கூடப்
பெரிதும் உதவி செய்வாள்.

வெண்கலங்கள் எல்லாம்
மினுக்கிப் புதுக்கிடுவாள்
தின்பண்டம் எல்லாம்
தெவிட்டா ருசியோடு
கொண்டாட்ட காலத்தில்
சுட்டுக் கொடுத்திடுவாள்.

உண்டு முடிந்ததன்பின்
மிஞ்சி உளவற்றைக்
கொண்டு செல்வாள் தன்னுடைய
வீட்டுக் குழந்தைகட்கு.

5

எங்கள் வயற்காரர் மேனியிலே
எப்போதும்
பொங்கி வரும் வேர்வை
பொசிந்தபடி இருக்கும்.
உண்டு கொழுத்த உடலல்ல;
வேலைசெய்து
கட்டான தேகம்
வயலின் கரும் கரிபோல்
சுட்டுக் கறுத்திருக்கும் சூரியனின் வெம்மையினால்.

மொட்டைத் தலையில்
முளைத்த சில நரைகள்
மூடுண்டிருக்கும் அவர்
முண்டாசுக் கட்டினுள்ளே
ஓடித் திரிவார் வயலில் ஒருஇடமும்
நில்லாம,
வேலை நிகழ்ந்த படிஇருக்கும்.

எல்லோரும் போல இவரும்
இடுப்பிலே ஒரு
பச்சைவடச் சிறுவால் போட்டு
வழுவாமல்
அச்சிறுவால் மேலால்
அரைஞாணை விட்டிருப்பார்.
கூலிக் குழைக்கின்ற
ஆட்களினைக் கூட்டி வந்து
வேலைசெய் விப்பார்.

அவர்கள் வியர்வையினைக்
கையால் வழித்தெறிந்து விட்டுக்
கடும் வெயிலில்
செய்வார்கள் வேலை தினமும்.

6

அந்நாட்களிலே
மாடுகளைக் கொண்டே வயலை உழுவார்கள்.
பாடிக் குரல் கொடுத்துக் கொண்டு
பதமாக
மண்ணைப் புரட்டி
வயலைத் தயார் செய்வார்.
கண்ணைப் பறிக்கும் படியாய்க்
கசிவுள்ள
மண்ணாக மாற்றி வளப்படுத்தி வைப்பார்கள்.
பின்னர்,
பெரியகைப் பெட்டிகளின் உள்ளே
கொழுக்கிப் புழுப்போலக்
கூர்விழுந் துள்ள
முளையை நிறைத்து
முழங்கால் புதைசேற்றில்
நின்றபடி
கையால் நிலமெங்கும் வீசிடுவார்.

கொன்று விடும்போல் எரிக்கும்
கொடு வெயிலைத்
தாழாமல் அங்கே
சடைத்த மருதமர
நீழலிலே
என்தகப்பன் நிற்பார் குடைபிடித்து

சாலுவையால் வீசிடுவார்
சற்றைக் கொருதரம்
என்னை வெயிலில் இறங்க விடமாட்டார்.
உண்மையும் தான்
நாங்கள் உழைக்கப் பிறந்தவரோ!

7

விதைப்பு முடிந்துவிட்டால்
வெட்டும் வரைக்கும்
வயற்காரர் தான்அவ் வயலின்
முழுப் பொறுப்பும்.
எங்கள் வயலின் நடுவில்
இளைப்பாற,
தங்கி இருக்க,
சமைக்க,
படுக்க, என
வாடிஒன்று கட்டி உள்ளோம்
மண்ணால் சுவர்வைத்து.
வாடி இணக்கியதும்
வயற்காரக் காக்காதான்.

கூரையிலே நாடங் கொடிகள்
படர்ந் திருக்கும்.
பாரமாய்க் காய்கள் படுத்திருக்கும்.
வாடியினைச் சுற்றிவர உள்ள
சொற்ப நிலத்தில்
மரக்கறிகள் -
வெண்டி, வழுதுணங்காய் காய்க்கும்.
குரக்கனும் சோழனும்
கூட வளர்த்திருப்பார்.

வீட்டுக்கு நாங்கள்
திரும்ப விரும்புகையில்
சாக்கிலே கட்டித் தருவார்.
அவைகளினைத்
தூக்க முடியாமல் தூக்கிச் சுமப்பேன் நான்.

8

வாடியிலே காவல் அவரும் மகனும்தான்.
பாடிக் கொண்டே இருப்பான்
அந்தப் பயல். அவனும்
என்னைப்போல் சின்னவன் தான்
என்றாலும் என்னைவிடக்
கெட்டித் தனம் உடையான்
கேலிக் கதைபேசிச்
சட்டி கழுவிச் சமைப்பான் ருசியாக.

ஆற்றுக்குச் செல்வேன் அவனோடு,
நீர்குறைந்த
சேற்றைக் கடந்து, சிறிதுபோய்
அங்குவலை வீசிப் பிடிப்பான்
துடிக்கின்ற மீன்களினை

ஆசைப்படுவேன் அவன்போல் பிடிப்பதற்கு
ஆனாலும் என்னால்
அதைச் செய்ய ஏலாது.
மீனின் துடிப்புகளைப் பார்த்து வியந்திருப்பேன்.

முள்ளிக்காய் ஆய்ந்து தருவான்
முழுவதையும்
அள்ளிவருவேன்; அவனோ தடிபோன்று
சுள்ளி உருவம்,
எனைப்போல் தொடராகப்
பள்ளிக்குச் சென்று படிக்க விடவில்லை.

9

காற்றில் அலையடிக்கும் கம்பளம் போல்
பச்சைவயல்
தோற்றம் கொடுக்கும்.
தொலைவில் படுவானின்
அந்திப் பொழுதின் அழகு
வயலெங்கும்
சிந்திக் கிடக்கும்.
சிறுவன் வரம்புகளில்
வக்கடைகள் கட்டி வருவான் தகப்பனுடன்.

கொக்கும் குருவிகளும்
குறியிடங்கள் நோக்கி அந்திச்
செக்கர்வான் ஊடே பறந்துசெல்லும்.
ராமுழுதும்
உட்கார்ந்த வாறு
வயலை உழக்குதற்குப்
பன்றி வரும் என்று
பார்த்திருப்பார் அவ்விருவர்.

ஒன்றிரண்டு மூலைவெடி
ஓசை எழுப்பிடுவார்.
மூடி இருக்கும் உடம்பு முழுவதையும்,
தேடிக் கடிக்கும் சிறிய நுளம்புகளுக்
காக அவர்கள்
புகையுள் அமர்ந்தபடி
தூங்கா திருப்பார்கள்.

நெற்காய் தொடங்கியதும்
ஆங்கு வருமே
குருவிகள் ஓர் ஆயிரம்!
ஆம்
பாட்டமாய் வந்து
கதிரிற் படுத் தெழுந்தால்
எல்லாம் பதர்தான்.

இவர்கள் விடிந் தெழுந்து
வெய்யோன் சரிந்து விழுந்து விடும் வரையும்
"டய்யா...! டய்யா....!!" என்றே
சத்தம் எழுப்பிடுவார்.

கஞ்சான் தகடுகளைக் கட்டி அசைப்பார்கள்.
நெஞ்சைப் பிடித்தபடி
நீண்ட குரல் கொடுப்பார்.
கல்லைத் தகரத்துள் கட்டி அடிப்பார்கள்.

10

எல்லாம் முடிந்தால்
இனி வெட்டும் காலம்தான்
சூடடித்த நெல்வேறாய்த்
தூற்றி எடுக்கும் வரை
பாடு படுவார்கள் அவர்கள்
பதர்வேறாய்
கூட்டி எடுத்தே அளந்து குவிப்பார்கள்.

எல்லாம் விளைந்திருந்தால்
எண்பதுக்கு மேல் அவணம்
கொள்ளும்.
பிறகு செலவுக் குறிப்பேட்டை
எங்கள் தகப்பன் எடுத்துக்
கணக்குகளைக்
கூட்டிக் கணிப்பார்.
மறந்த குறைகளையும்
போட்டுக் கணித்தால் செலவு புலப்படும்.

எல்லாச் செலவும் கழித்தால்
இறுதியில்
உள்ள வற்றில் நான்கில் ஒருபங்கைக்
கொண்டு செல்வர்
எங்கள் வயற்காரர்
இஸ்மாயில் காக்கா - ஓர்
பத்தவணம் தேறும் அவருடைய பங்கு;
அதில்
அத்தனை நாளும் அவர் எங்கள் தந்தையிடம்
பெற்ற கடனைக் கழித்துப், பின்
மிஞ்சியதை
விற்றால் அவருடைய வேலைபல முடியும்.

வீட்டுக்குக் கூரைகட்டி
வேலி திருத்திடுவார்.
மூத்த குமர்ப் பெண்கள் மூவருக்கும்
ஏதேனும்
சீத்தைப் பிடவை சிலதை எடுத்தளிப்பார்.

சின்னவனின் கையில்
சிலரூபாய்த் தாள் கொடுப்பார்.
இன்னும் கடன்கள் இருக்கும்
இறுத்து - மறு
கன்னை வரைக்கும்
கடன்வாங்கிக் காத்திருப்பார்.

11

வீட்டில் குமர்கள்
பெருமூச்சு விட்டபடி
உட்கார்ந் திருப்பதனை உன்னி
உருகுவதும்
எந்நாளும் உண்டு.

ஒருநாள் என்தந்தையிடம்
'என்ன தம்பிசெய்யிறது
இப்பிடியே நாளெல்லாம்
போகுதே. இந்தப் பொடிச்சிகளுக்
கேதேனும்
ஆகுதும் இல்லை' என
அழுதார் அவர்; அதற்குப்

'பாப்பமே காக்கா
படைச்சவன் ஆரையெனும்
சேக்காமலா விடுவான்'
என்றார் எனதப்பா.

அப்போது நான் சிறுவன்.
அந்த நினை வென்னுள்
இப்போதும் நன்றாய் இருக்கிறது.

பின் ஒருநாள்
மூத்த குமரை முடித்துக் கொடுத்தார்கள்
காத்தான் குடியில்
கலியாணம் செய்து - பின்
விட்ட ஒருவனுக்கு.

வேலைகளில் ஒன்று முடி
வுற்றதனால் போலும் - ஒருநாள் அவர்படுத்து
விட்டார்
ஆட்கள் சிலபேர் அழுதார்கள்;
இஸ்மாயில்
காக்கா இறந்து கனகாலம் ஆகிறது.

காக்காவின் மற்றக் குமருள்
கடைசி மகள்
இன்னும் சும்மாதான் இருக்கின்றாள்.
மற்றவளைப்
பின்னர் ஒருநாள்
பிழைப்பதற்கு வந்த ஒரு
அத்தர் வியாபாரி அடைந்தான்.

சிலகாலம்
ஒத்திருந்து விட்டு
பிறகெங்கோ ஓடிவிட்டான்.

அந்தக் குடும்பம்
அலைக்கழிந்து போயிற்று.

'காக்கா குடும்பம் க்ஸ்டப் படுகிறதே
ஏன்?' என்று கேட்பேன் நான்.
'எல்லாம் அவர்கள் விதி'
என்பார் தகப்பன்.
இருக்கும் என நினைப்பேன்
அப்போது நான் சிறுவன்.

12

ஆனால்
அவர் உழைப்பால்
எப்போதும் எங்கள் வளவுக்குள் இடமின்றி
முப்பதுக்குமேல் வண்டி
மூட்டை சுமந்து வரும்.

மண்டபத்துக் குள்ளேயும்
வாசல் விறாந்தையிலும்
கொண்டுவந்த நெல்லையெல்லாம்
கூரை வரை உயர்ந்த
பட்டடைகள் கட்டி
அவற்றுள் பவித்திரமாய்க்
கொட்டிவைப் போம்.

பட்டடைகள் கொள்ளாத நெல்லை எல்லாம்
மூட்டைகளாய்க் கட்டி
அறைகள் முழுவதிலும்
மோட்டுயரத் துக்கே
அடுக்கி முடித்து வைப்போம்.

வீட்டுக்குள் நெல்வாடை வீசும்
எனக் கென்றால்
தும்மல் பறக்கும் தொடர்ந்து.

விழித்தபடி
அட்டூழியம் செய்யும்
எலியை அழிப்பதற்குப்
பட்டடையில் எங்களது
பூனை படுத் திருக்கும்.


அதிமானிடன்

எங்கும் இருட்டாய் இருந்தது. அந்தக்
கங்குற் பொழுதில் கறுத்த வானிலே
மின்னல் ஒன்று மின்னி மறைந்தது.
மின்னலின் பின்னால் மிகப் பெரிதாக
இடி இடித்துக் குமுறி இரைந்தது.

இடியின் ஒலியில் இருண்டு கிடந்த
கானகம் அதிர்ந்து கலகலத்தது.
யானைகள் பயந்து பிளிறி இரைந்தன.
தாரகை போலத் தணலாய்ச் சிவந்த
கண்களை உடைய புலிகள் உறுமின.

அடர்ந்த அந்தக் காட்டின் இடை ஓர்,
இருட்டுக் குகையுள் இருந்தான் மனிதன்.
பரட்டைத் தலையன். பிறந்த மேனியாய்க்
கையில் தடியுடன் காவல் இருந்தான்.

உள்ளே ஒருபுறம் உலர்ந்த விறகுகள்.
தணலும் சாம்பலும் ஆகக் கிடந்தன.
காலையில் கொன்ற பெரிய பன்றியின்
பச்சை மாமிசம் ஒரு பக்கம் இருந்தது.
சருகுகள் பரப்பிய தரையில், சற்றுத்
தள்ளிக் குழந்தைகள் சயனித் திருந்தன.

பிள்ளைகள் கிடந்த இடத்தில் ஒருபால்
மல்லாந்து கிடந்தனள் மங்கை; அவளின்
இமைகள் மூடி இருந்தன. பெரிய
சுமையாய்த் திரண்ட மார்பின் மீதில் ஓர்
கைகிடந்தது, கழுத்தின் கீழ் மறு
கைகிடந்தது.

காவல் இருந்த
மனிதன் அவளது வதனம் பார்த்தான்
விம்மிக் கிடந்த மார்பை வெறித்தான்
அகன்று கிடந்த கால்களின் இடைஅவன்
கண்கள் மேய்ந்தன.

கல்லில் குந்தி
இருந்தவன் எழுந்தான்; இருள் அருகமர்ந்து
கட்டி அணைத்தான்; கன்னம் முகர்ந்தான்
மார்பினை வருடிஅம் மனிதன் மகிழ்ந்தான்.

வெளியே,
எங்கும் இருட்டாய் இருந்தது; அந்தக்
கங்குற் பொழுதில் கறுத்த வானிலே
மின்னல் ஒன்று மின்னி மறைந்தது.
இடியும் மழையும் இரைந்து கலந்தன.
கானகம் அதிர்ந்து கலகலத்தது.

2

பரந்து கிடந்த பசும்புல் வெளியில்
மாடுகள் மேய்ந்தன. மனிதன் ஓர்புறம்
நின்று கொண்டிருந்தான் ஏதோ நினைவுடன்.
கன்று பசுவைக் கத்தி அழைத்த
சத்தம் கேட்டது. தனித்த ஓர் மாட்டின்
ஏரியில் நின்ற காகம் ஒன்றும்
கத்தியது. அவதன் கைத்தடி கொண்டு
குத்தி நிலத்தில் குழூண்டாக் கினான்.

பரந்து கிடந்த பசும்புல் வெளியில்
புற்கள் குறைந்து போய் இப்போது
நாட்கள் பலப்பல நடந்து விட்டன.
ஆயினும் மனிதன் அவ்விடம் விட்டுப்
போவதற் கின்னும் புறப்பட வில்லை.
எங்கு போகலாம் என்பதைப் பற்றிய
நினைவில் ஆழ்ந்து அவன் நிலத்தைக் கிண்டினான்.
மாடுகள் இளைத்து வாடி இருந்ததைக்
கண்ட போதவன் கண்கள் கலங்கின.

அகன்ற ஓர் மரத்தின் அடியிலே வந்து
குந்தினான் மனிதன். குடிசையில் இருந்து
வந்த அவனின் மனைவி, புதிதாய்ச்
சுட்ட கிழங்கும் சுட்ட இறைச்சியும்
தொட்டுக் கொள்ளத்ச் சொற்ப தேனும்
கொண்டு கொடுத்தாள். அவளும் அவனுடன்
உண்கையில் வழிந்த உதட்டுத் தேனை
நக்கிச் சிறிதே நகைத்தான் மனிதன்.

அவளின்
இடையில் கட்டி இருந்த இலைகள்
வாடி இருப்பதைக் கண்டான். உடனே
ஓடிச் சென்று பெரிய இலைகளாய்
ஆய்ந்து அவளை அணியச் செய்தான்.

3

ஆற்றிலே அலைகள் புரண்டன. மெதுவாய்க்
காற்று வீசியது. கரையில் நின்ற
மரங்களில் பூத்த மலர்கள் உதிர்ந்து
ஆற்று நீரின் அலைகளில் மிதந்தன.

பச்சையாய்த் தெரிந்த பயிர் வயல்களிலே
உச்ச மான விளைவை உண்டாக்கப்
பாய்ந்த அந் நீரில் பரிதியின் கதிர்கள்
பட்டுத் தெறித்தன. பல அலங்காரக்
கட்டிடங்கள் காட்சி அளிக்கும் ஓர்
தெருவினை நோக்கி விரைந்ததேரிலே
ஒருபுறம் மனிதன் உட்கார்ந் திருந்தான்.
மடியிலே அவனின் மனைவிக்காக
வாங்கிய ஆடையை மடித்துவைத் திருந்தான்.

ஆடையின் மெதுமையைத் தடவிய போதில்
மாதின் மேனியை வருடுதல் போல
உணர்ந்தான்; உடனே உடல்சிலிர்ப் படைந்தான்.
காட்டுப் பாதையில் மலர்ந்து கமழ்ந்த
பூக்களில் அவளின் புன்னகை கண்டான்
வானிலே அவனது தேரை முந்திப்
பறந்து சென்றஓர் பறாஇயும் கண்டான்.

வாசலில் வருவதும் வந்து பார்த்துப்
பூசலுடனே உட்புறம் போவதும்
ஆக நடந்தும் அலுக்கா அவளின்
பாதம் பழுத்துச் சிவந்துபோம் என்பதை
எண்ணிய போதில் இவன்மிக நொந்தான்.
'பாகா இன்னும் வேகமாகப்
போ' எனச் சொல்லி வெளிப்புறம் பார்த்தான்.
குதிரையின் வாயில் நுரைமிக வழிந்தது
அதைமிக அடித்து விரட்டினான் பாகன்.

4

கறுத்த முகில் வானில் கவிந்தன.
இறுக்கமாகைருள்கையில், காற்றும்
வேகமாக வீசிச் சுழன்றது.

கடலிலே அலைகள் குமுறி எழுந்தன
அலைகளில் மிதந்த அச்சிறு கப்பல்
ஆடி அசைந்தே அமிழப் பார்த்தது.
மூடி இருந்த உட்புற எங்கும்
அலைநீர் புகுந்தது. அதனுள் இருந்த
மனிதன் கப்பலை வளைத்துத் திருப்பினான்
நனைந்தவாறே நல்ல இருட்டில்
பாய்மரக் கம்பம் ஏறிப் பணித்தான்.

அவளும் அவன்போல் நனைந்துபோய் இருந்தாள்.
கூதலும் பயமும் சேர்ந்து கொடுகினாள்.
'என்ன பயமா?' என்றான் மனிதன்.
'இல்லை' என்றாள் இவள். அவன் சிரித்தான்.

'கரைகாண் வரைநான் கப்பல் விடுவேன்
அலையும் புயலும் அடிக்கினும் என்ன
பயப்பட வேண்டாம்' என அவன் பகர்ந்தான்.
கரை தெரியாத கடலிலே, அச்சிறு
கப்பல் சென்றது கடும்புயல் இடையே.

5

வெயில் எறித்தது; வியர்வைத் துளிகளை
மனிதன் விரல்களால் வழித்து நிமிர்ந்தான்.
விழித்த காலைப் பொழுதிலே இருந்து
அழித்த காட்டிடை, அதுவரை அமைத்த
தண்ட வாளத் தொடரின் வழி அவன்
கண்கள் சென்றன; களைப்படைந் திருந்தான்.

தொலைவில் மேகம் துயின்று கிடந்த
மலையினை அந்த மனிதன் பார்த்தான்.
அந்த மலையின் அப்பால் செல்லத்
தண்ட வாளம் சமைக்கும் தனது
திறமையில் ஒருகணம் பெருமிதம் உற்றான்.

மலையினைத் துளைத்து வெடிமருந்துகளை
அடைத்தபின் திரியினை அப்பால் இழுத்துச்
சென்று, திரியினில் தீயினை வைத்தான்.
சீறி எரிந்த திரியினை விட்டும்
தூர ஓடினான். தொலைவிலே உள்ள
மறைவிடம் வந்ததும் மலையினைப் பார்த்தான்.
தொலைவிலே மேகம் துயின்று கிடந்த
மலையிலே வைத்த மருந்து வெடித்தது.
கானும் மலையும் அதிர்ந்த பேரொலியிடை
வானிலே கற்கள் சிதறிப் பறந்தன.

தொலைவில் நின்ற மனிதனின் நெற்றியில்
சிறியதோர் கல்லின் சிதறல் விழுந்தது.
'அம்மா' என்றே அவன் அதைப் பொத்தினான்.

'ஐயோ' என்றே அவள் அவன் அருகே
ஓடி வந்தாள்; ஒருகணம் அவளின்
மெய் சிலிர்த்தது. மேனியில் கிடந்த
துணியினைக் கிழித்து நீரிலே தோய்த்தாள்
பிளந்த நெற்றியில் வழிந்த குருதியைச்
சற்றே துடைத்துச் சுற்றிக் கட்டினாள்
'வலிக்குதா' என்றனள் மங்கை.
'இல்லை' என்றே இவன் நகை செய்தான்.

6

அந்தி சாய்ந்தது; அந்த வீட்டிலே
வானொலி மெதுவாய்ப் பாடுதல் கேட்டது.
குளியல் அறையில் அவன் குதூகலத்துடன்
சவர்க்கா ரத்தைத் தாடியில் பூசினான்.

அடுத்த அறையில் அவள் அவன் பெட்டியில்
ஒவ்வொன் றாக உடுப்பினை வைத்தாள்.
வெவ்வே றாகக் கிடந்த சப்பாத்தினைத்
துடைத்தே ஒருபுறம் தூக்கி வைத்தாள்.
அவன்உள் நுழைந்தான்; ஆடையை அணிந்தான்
கழுத்திலே ரையைக் கட்டிக் கொண்டான்.
தோளிலே கமறா தொங்க விட்டான்.
வாயிலே சிகரட் வைத்த வாறு
வெளியிலே வந்தான். மென்மையான
மணம்பரவியது. அவளும் வந்தாள்.
காரிலே அவன் அவள் கைவிரல் நகத்தைத்
தடவிய போதவள் சற்றே சிலிர்த்தாள்

விமானம் எழுந்து மேலே பறந்தது.
அவன் அவள் இடையை அணைத்துப் பிடித்தான்.
சன்னலின் ஊடே தரையில் தெரிந்த
காட்சியை அவளைக் காணச் செய்தான்.
மேகமண்டல மெத்தையில் உரய்ந்து
சென்ற ஜெட் விமான நீள்புகைக் கோடுகள்
நீல வானில் நெளிந்து தெரிந்தன.

ஏழாம் திகதி இங்கிருந்து போய்
ஆறாம் திகதி அமெரிக்காவின்
பட்டண மொன்றில் பகல் உணவுண்டார்.
ஜப்பான் அரங்கின் நாட்டிய நிகழ்ச்சியை
அமெரிக் காவில் அமர்ந்து அவர் கண்டார்.

7

காலைப் பனியும் குளிரும் கலந்து
விண்மீன் வெளிறி விடிகிற பொழுதில்
வான் வெளிக் கப்பலில் மனிதன் அமர்ந்தான்.

கருவிகள் அனைத்தும் பரிசோதித்தான்.
சரி, இனி எதுவும் தாமதம் இல்லை.
பேரொலி ஒன்று வெடித்துப் பிறந்தது.
தீப் பிழம் பினது திரண்ட புகையிடை
ஏவுகணையின் இயக்கம் நிகழ்ந்தது.
நூறு கோடி டாலரைச் சுமந்து
அப்பலோ பூமியின் அப்பாலாகி
காற்று மண்டலம் கடந்து பறந்தது.

வான் வெளிக் கப்பலுள் மனிதன் இருந்தான்.
பூமியைச் சுற்றிப் புதிய திசையிலே
மேல்கீழ் அற்ற வெளியிலே சென்றான்.
கரிய கம்பளத் திரையிலே பதித்த
ஒளிமுத் துக்களின் இடையிலே ஊர்ந்தான்.
தொலைவிலே நீல மேகம் சூழ்ந்த
மண்ணின் வடிவ வனப்பினைக் கண்டு
உடல் சிலிர்ப் படைந்தான். உடனே தரையில்
இருந்தவளுக்கும் இதனைக் காட்டினான்.

வீட்டின் ஓர் அறையில், மேசைமுன் அமர்ந்து
இரண்டரை இலட்ச மைல்களுக் கப்பால்
சந்திரத் தரையின் சாம்பல் மண்ணிலே
காலடி வைத்த கணவனைக் கண்டாள்.
ஏணிப் படியில் இறங்கிய போது, அவன்
இதயத் துடிப்பை எண்ணிக் கணித்தாள்.
'தந்தையே' என்றவன் தனையன் அழைத்தான்
'மகனே' என்றவன் மறுமொழி சொன்னான்.

8

உலகைக் கையின் ஒருபிடிக் குள்ளே
அடக்கிக் கொண்டு, அதற்கப்பாலே
விண்வெளி கடந்து வெளியிலே உள்ள
கோளங் களிலே வாழ முனையும்
பாதி மனிதனின் மற்றையப் பாதி
வீதி தோறும் அலைந்து திரிந்தான்.
பரட்டைத் தலையும் பசித்த கண்களும்
மெலிந்து தோன்றும் மேனியு மாக
வீதி தோறும் அலைந்து திரிந்தான்.

தொழிற்சாலைகளின் உலைக் களங்களிலே
வெந்து வெந்து மேனியின் வலிமை
அனைத்தையும் யார்க்கோ அர்ப்பணம் செய்தான்.
கழனிச் சேற்றில் வியர்வையைக் கலந்து
பொன்விளைவித்துப் போடிமார்க் களித்தான்.
பழைய கஞ்சியைப் பருகி இருந்தான்.
ஆலயக் கதவுகள் அவன் நுழையாது
மூடிக் கிடந்தன
முடிவிலே மனிதனின்
இரண்டு பாதியும் இருவேறாக
முதிர்ச்சி அடைந்ததால் மோதிக் கொண்டன.

இளைத்த பாதியின் இதயத் துள்ளே
உயிர் வாழ்வதற்கோர் வேட்கை உதித்ததால்
பூமியில் அவன்ஓர் போரிலே குதித்தான்.

தலையிலே பெரிதாய்த் தடிஅடி வீழ்ந்தது.
பிளந்த தலைமிகப் பெரிதாய் வளர்ந்தது
குண்டுகள் உடலைத் துளைத்துச் சென்றன
துளைகளில் இருந்து அசுரர் தோன்றினார்.

இளைத்த பாதியின் இதயத் துள்ளே
உயிர்வாழ் கின்ற வேட்கை உதித்ததால்
அவன் அதிமானிடன் ஆக மாறினான்.

மாறிய அந்த மனிதன்
பூமியில் புரியும் போர்மிகப் பெரிதே.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்