நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்! (பகுதி இரண்டு) - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவாக 17.11.2022 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நிகழ்த்திய நினைவுப் பேருரையின் எழுத்துவடிவமே இக்கட்டுரை. இக்கட்டுரையாசிரியர் முனைவர் செல்லத்துரை சுதர்சன் - சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். - * நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்! (பகுதி ஒன்று)
யாழ்ப்பாணத்தில் சமயக் காலனியம்
ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னரேயே போர்துக்கீசரும், ஒல்லாந்தரும் தங்களது ஆட்சியை நிலைநிறுத்தவும் கிறிஸ்தவத்தினைப் பரப்பவும் சைவாலயங்களை அழிப்பதிலும் சைவ வழிபாடுகளை மறுப்பதிலும் ஈடுபட்டனர். ஆலயத்தை அழித்தல் என்பது, அதை மையமாகக்கொண்டியங்கிய உள்@ர் நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை அகற்றும் தன்மையையும் கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் வந்த ஐரோப்பிய மிஷனரிகள் தாம் எழுதிய குறிப்புக்களில், தம் வருகைக்கு முன்னரான சைவாலய அழிவுகளைப் பதிவுசெய்தனர். மிஷனரிமார்களில் ஒருவரான ஹரியற் எல். வின்சிலோ (Harriet L. Winslow) என்பார் தமது நாட்குறிப்பில் பதிவுசெய்யும் பின்வரும் பகுதியை நோக்கலாம்.
“போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்திலே தமது வர்த்தக மையங்களை நிறுவியவேளை, றோமன் கத்தோலிக்க மதத்தை நிறுவினார்கள். கடவுள் நம்பிக்கையற்ற மக்களின் கோயில்களை அழித்தனர். தமது வழிபாட்டி டங்களையும் ஆலயங்களையும் கட்டினார்கள். உள்@ர்வாசிகளிற் பலரைத் திருமுழுக்கு எடுக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், 1656ஆம் ஆண்டு, ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் தமது ஆட்சி பலத்தையும் அதனூடான செல்வாக்கையும் பயன்படுத்தி, போர்த்துக்கேயரைப் போலவே புரட்டஸ்தாந்து மதத்தின் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். அவர்கள், கடவுள் நம்பிக்கையற்றோரின் இடிக்கப்பட்ட ஆலயங்க ளைப் புனர்நிர்மாணம் செய்யவும் சமய வழிபாடுகளைப் பகிரங்கமாக நிகழ்த்தவும் இடமளிக்கவில்லை” (ஹரியட் வின்சிலோ., 1835:182- 183)
மேற்குறித்த பதிவிலிருந்து சைவர்களின் ஆலயங்கள் அழிக்கப்பட்டமையும் சைவ வழிபாடுகள் மறுக்கப்பட்டமையும் மத மாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்டமையும் புலனாகின்றது. ‘கடவுள் நம்பிக்கையற்ற மக்களின் கோயில்களை அழித்தனர்’ என்னும் குறிப்பு, சுதேசிகளின் சமயத்தினை அவர்கள் சமயமாகக் கருதவில்லை என்பதையே புலப்படுத்துகிறது.