துப்பாக்கிக்கு மூளை இல்லை (போருக்கும் வன்முறைக்கும் எதிரான கவிதைகள்! - தங்கம் -
இத்தொகுப்புக்குச் சொந்தக்காரர் ஈழத்து எழுத்துப்பரப்பில் கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, மொழியிலாளராக நன்கறியப்பட்ட ஓய்வுநிலை தமிழ் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள். இத்தொகுப்பு 2022 இல் காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட தமிழ்மொழியைப் பேசும், எழுதும் பலருக்கு நுஃமான் அவர்களின் படைப்புக்கள் பரீட்சயமானவை. இதுவரை இவற்றைப் படிப்பதற்கான வாய்ப்புக்கிடைக்காதவர்கள் அவருடைய கவிதைகள், கட்டுரைத்தொகுப்பு, மொழிபெயர்ப்புக்கவிதைகள் மற்றும் தமிழ் இலக்கணம் சார்ந்த நூல்களையும் எண்ணிமவடிவில் நூலகத்தில் வாசிக்கலாம்.
கவிதைகளுக்குள் செல்லுமுன்
2022 ஆண்டு மார்கழியில் இத்தொகுப்பை காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் வெளியிட்டுள்ளது. மார்கழி 22 ஆம் ஆண்டு தாளில் அச்சிடப்பட்ட புத்தகம் மாசி மாதத்தில் அமசன் கின்டெல் மூலம் கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி, இந்த மகிழ்ச்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒருபக்கம் புத்தகங்கள் இலகுவில் வாசகர்களை சென்றடையும் அதேவேளை அமசன் கின்டெலுக்கு புத்தகங்கள் செல்வதால் வேலை வாய்ப்பை இழக்கும் தொழிலாளர்கள், குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் தொழிலாளர்கள் என துன்பங்களைக் கொண்டதாகவும் இது அமைந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.