கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் தமிழ் அறிஞர் ஜி.யு.போப்புக்குச் சிலை!
நோர்வே பயணத்தொடர் (4) : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே - ஶ்ரீரஞ்சனி -
- தாயொருவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் சிற்பம் -
Fløyen மலையின் அழகுடன் எங்களின் அடுத்த நாள் ஆரம்பமானது. மலையின் இயற்கை அழகைக் கண்குளிரக் கண்டு களித்துவிட்டு, University Museum of Bergenக்குள் காலடியெடுத்து வைத்த எங்களை வாசலிலிருந்த சிற்பம் அதிசயிக்க வைத்தது. தாயொருவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் காட்சி மிகத் தத்ரூபமாக அங்கு வடிக்கப்பட்டிருந்தது. அந்தத் தாயின் பார்வையிலும் முகத்திலும் அத்தனை பரிவு, அன்பு, கரிசனை, பெருமை என உணர்ச்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பால்குடித்துக்கொண்டிருப்பது போலவிருந்த அந்தப் பச்சிளங் குழந்தையும் அவ்வாறே நிஜம்போல அழகாயிருந்தது. மனித வாழ்வின் இயற்கையான ஒரு தருணத்தைக் காட்டும். அற்புதமான அந்த சிருஷ்டிப்பைவிட்டு என் கண்களை அகற்றுவது சிரமமாகவிருந்தது. அதன் அழகைப் படத்துக்குள் அடக்கலாமா எனப் பல கோணங்களில் நின்று முயற்சித்துப் பார்த்தேன், இருப்பினும் சிலையிலிருந்த உயிர்ப்பைப் படங்களில் கொண்டுவர முடியவில்லை. மானுடவியல், தொல்லியல், தாவரவியல், புவியியல், விலங்கியல், எனப் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்பான கலை மற்றும் கலாசார வரலாறுகளைக் கூறும் இவ்வாறான வியத்தக்க பொருள்கள் நிறைந்திருந்த அந்த அருங்காட்சியகத்தைச் சூழ்ந்திருந்த தாவரவியல் பூங்காவும் செழிப்பும் அழகும் மிகுந்ததாக அமைந்திருந்தது.
பயணத்தொடர்: வட இந்தியப் பயணம் (1) - - நோயல் நடேசன் - -
- இந்தியா வாயில் (India Gate) -
இந்த (2023) வருடம் மார்ச்சில் புது டில்கி போயிருந்தபோது முன்னைய வாலிப காலத்துப் பயணம் நினைவுகள் சிறகடித்தது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு( 1985) முன்பாக போயிருந்தேன். அப்பொழுது சித்திரை மாதம். கோடை வெயில் காலம். அக்காலத்தில் மெட்ரோ ரயில் இல்லை. ஓட்டோவும் நடராசாவுமே. சூரியன் தலைக்கு நேரே வந்து எங்கள் மேல் தரையிலும் தலையிலும் எரிதணலைக் கொட்டியதுபோல் இருந்தது. நடக்கும்போது சிறுவயதில் எங்களது ஊரில் கோவிலின் முன்பாக பார்த்த தீ மிதிப்பு நினைவுக்கு வரும். டெல்லித் தெருவில் தீ மிதித்தபடி நடக்கும்போது அடிக்கடி கரும்புச் சாறு, மிளகுத் தண்ணீரென குடித்தபடி நண்பன் விசாகனோடு நடந்தேன்.
இறுதியில் மாலையில் நாங்கள் தங்கிய மாடிக் கட்டிடம் உள்ளே சென்றபோது செங்கல்லைச் சூடாக்கும் சூளைபோல் நெருப்பாகக் கொதித்தது. புகை வராததுதான் மிச்சம்! அக்காலத்தில் கட்டிடங்களில் அதிகம் ஏர் கண்டிசன் வசதிகள் இருக்கவில்லை. நாங்கள் நின்ற வீட்டின் பகுதியில் புல்லால் ஆன யன்னல் தட்டியில் நீர் வந்து சிதறி அறையை குளிராக்கும் ஒரு விசித்திர பொறிமுறையை அமைத்திருந்தார்கள். அதில் பட்டு வரும் காற்றின் மூலம் அறையின் வெப்பம் குறைய வேண்டும். ஆனால் நாங்கள் நின்ற அன்று அந்தப் பொறிமுறை வேலை செயதாலும் வெப்பத்தில் மாற்றமில்லை. வேலை செய்த ஃபான் தொடர்ந்து அக்கினி கலந்த காற்றை உள்ளே சுமந்து வந்தது. தரை, கட்டில், மேசை எல்லாம் கொதிநிலையிலிருந்தன. எப்படி இரவில் படுத்து உறங்குவது என்ற சிந்தனையின் இறுதியில் இரண்டு வாளி நீரை சீமந்து தரையில் ஊற்றிவிட்டு அதன்மேல் கம்பளத்தை விரித்துப்படுத்தோம்.
சமீபத்திய சில சிறுபான்மையினர் மொழிப்படங்கள் : - சுப்ரபாரதிமணியன் -
1. 'பாராக்குருவி' ( இருளா மொழித்திரைப்படம்)
அட்டப்பாடி பகுதியில் வசிக்கும் இருளர் மக்களின் மொழியில் எடுக்கப்பட்ட ஒரு படம். பிரியநந்தனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. 'பாராக்குருவி' : அதன் தலைப்பு .அட்டப்பாடி பழங்குடி மக்கள் மற்றும் தமிழருடைய வாழ்க்கை சொல்கிறது அப்படம். பெரும்பாலும் தமிழர் குடும்பங்களையும், அவர்களின் பயன்பாட்டு கொச்சை தமிழ் வசனங்களையும் இந்த படம் கொண்டிருக்கிறது. நம்முள் தமிழ் மழை பொழிந்து கொண்டே இருக்கிறது முடிவில்லாமல். .ஆனால் தமிழ்க் குடும்பங்களின் வேதனையும் நதியாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
தமிழ் மருத்துவம் பார்க்கும் குடும்பங்கள் சில.. அங்கு நடக்கும் ராமயாண நாடக நிகழ்ச்சியினைப் பார்த்து அதே போல சீதா வேடம் போட ஆசைப்படும் பெண் பாப்பா . ஆனால் காலம் காலமாக ஆண்கள் தான் அந்த வேடம் போடுகிறார்கள். பெண்ணுக்கு இது நடக்காது என்று அவள் அம்மா சொல்கிறார். அவள் அம்மாவுக்கு சாராயம் காச்சும் வேலை. தமிழ் குடும்பம் அப்பா ஐந்தாவது மனைவியாக ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு எங்கோ வாழ்கிறார். இந்த பெண்ணுக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது அம்மாவின் சாராயம் காய்ச்சும் தொழிலை செய்துவிடக்கூடாது என்ற பயம் இருக்கிறது. அவள் பாப்பா 15 வயது. அவளுடைய தோழி லிங்கே பாப்பாவின் அம்மா லக்கி சாராயம் வாங்க வருபவர்களின் சீண்டலுக்கும் பலாத்காரத்திற்கும் ஆளாகிறாள். இதிலிருந்து தப்பிக்க ஆசைப்படுகிறாள். ஆனால் மகள் எப்படியோ பலியாகிவிடுகிறாள் .பாப்பா அவள் கர்ப்பமாக இருக்கிறாள். பாப்பாவின் கர்ப்பத்தை கலைக்க ராமி அவளை சில இடங்களுக்கு வைத்திய முறைக்காக கூட்டிக்கொண்டு போகிறாள். ஜோசியர்கள், மந்திரவாதிகள் இவளிடமெல்லாம் கூட்டிக்கொண்டு போகிறாள். கடைசியில் சாமியாடி ஒருவன் அவளிடம் உள்ள பேயை விரட்டுவதாகாச் சொல்லி அடித்து துவம்சம் செய்கிற போது அவள் அபார்ஷன் செய்து விட வேண்டும் என்று நினைக்கிற முயற்சிகளைத் தாண்டி அப்படியே ஆகிறது. அவள் தனக்காக புதுப்பித்துக் கொள்கிறாள். அவளை இந்த நிலைக்குக் காரணம் யார் என்று சொல்லப்படுவதில்லை. . இருளர் மற்றும் பழந்தமிழருடைய உண்மையான முகங்கள், அவருடைய இசை, நடனம், நாட்டியம், நாடகம் முதல் கொண்டு பல விஷயங்களை ஆட்டப்பாடியின் பின்னணியில் சொல்லி இருப்பதில் இந்த படம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது .அட்டப்பாடியில் வசிக்கும் கூலி தமிழர்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே சரியாக சொல்லி இருக்கிறார்கள்.
வாசிப்பு அனுபவம்: ஆசி கந்தராஜாவின் 'அகதியின் பேர்ளின் வாசல்' - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
மிகைப் படுத்தல்களும் திரிபுபடுத்தல்களும் இல்லாது, வரலாற்றினை அடியொற்றி எழுதிய 'அகதியின் பேர்ளின் வாசல்' என்னும் இந்நாவல் ஈழத்தமிழர்களின் ஆரம்பகால புலம்பெயர்வின் தெளிவான குறுக்கு வெட்டுமுகம் எனலாம்.
ஜேர்மனிக்கான அன்றைய புலம்பெயர்வின் பயணப்பாதைகள் பற்றியும் அதன் பின்னணியில் ஆதிக்க நாடுகளின் பனிப்போர்கள் பற்றியும் இதுவரை அறியப்படாத பல உண்மைகளை வாசகருக்கு எளிய முறையில் தெளிவு படுத்தி உள்ளது.
தமிழினத்தின் மீதான அரசவன்முறைகளை அடுத்து, தமிழ் இயக்கங்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியிலிருந்து ஆயுதப் போராட்டத்துக்கு மாறிய காலமாகிய 1970 களில் ஆரம்பமாகி 2017 இல் நிறைவுபெறும் ஐந்து தசாப்தங்கள் , நாவலின் பேசுபொருள்.
பேரினவாதத்தின் அரசியல் ஆதாயங்களுக்காக தாயகத்தில் தமிழினத்துக்கான பல வாயில்கள் மூடப்பட்டன. இதுவே, சர்வதேச அரசியலின் தந்திரோபாய நடவடிக்கைகளால் மேற்குநாடான ஜேர்மனியில் முன்னமே திறந்திருந்த மற்றுமோர் வாயிலை புலம்பெயர்ந்த அகதிகளுக்கு இனங்காட்டியது.
புலம்பெயர்வின் வரலாற்றுப் புலங்களும் காட்சிப்புலங்களும் நாம் அறிந்தவை, அறியாதவை என இரு பிரிவுகளுள் அடங்குகின்றன. உண்மையிலேயே நாட்டில் வாழ முடியாத உயிராபத்து நிறைந்த சூழ்நிலையில் அரசியல் தஞ்சம் கோரி புலம் பெயர்ந்தவர்கள் ஒரு பகுதியினர். நிலைமையை சாதகமாகப் பயன் படுத்தி பொருளாதார மேன்மைகளுக்காக அகதி என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றுமோர் பகுதியினர்.
சிறுகதை : எலிப்பொறி - சுப்ரபாரதிமணியன் -
எலி பொறியை மழையில் கிடத்திவிட்டது சட்டென ஞாபகத்திற்கு வந்தது கிருஷ்ணனுக்கு .மழை சோ என்ற சப்தத்துடன் நீ கோடுகளாய் கீழே இறங்கிக் கொண்டிருந்தது .நெடு நேரமாய் மழை பெய்து கொண்டிருப்பதாக தோன்றியது இவ்வளவு நேரம் மழை பெய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று ஞாபகம் வந்தது .
எலி பொறியில் ஏதோ கிடப்பதே அவன் சலனத்தின் மூலம் அவன் அறிந்து கொண்டான்.கருவாடு ஒன்றை குத்தி வைத்தது சரியாகத்தான் பயன்பட்டது என்று நினைத்தான். வாழைப்பழம் இருக்கும் வரைக்கும் மசியாத எலி கருவாட்டுக்கு சரண் அடைந்து விட்டது. அதை எப்படி அடித்துக் கொல்வது என்பது அவனுடைய ஞாபகத்தில் வரவில்லை .
அம்மா சாக்குல போட்டு நாலு சாத்து சாத்து என்றாள்.. அது சும்மாவா இருக்கு டப்பா லிருந்து எல்லா பாத்திரத்தையும் ஓட்டை போடுது. பிளாஸ்டிக் டப்பாவேச் சொல்லவே வேண்டாம் . துணி ஒன்னும் வெளியே கிடக்கக்கூடாது. அதை குறிவைக்கிறது.கடுச்சு சேதம் பண்ணுது. இது மாதிரி எத்தனை இருக்கும்
அப்படியே கொண்டு போய் வாசல் முற்றத்தில் வைத்தபோது மேகம் கருத்துத் தெரிந்தது. மழை வருமா என்பது சந்தேகமாக இருந்தது .
ஆனால் பத்து நிமிடங்களில் மேகங்கள் திரண்டு கொண்டது போல மழை பொழிய ஆரம்பித்தது. தொடர்ந்த மழை அவனை உடம்பை ஏதாவது ஸ்சொட்டர் போட்டு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று ஞாபகம் ஊட்டியது. அவன் உடம்பின் கருப்பு நிறத்திற்கு எந்த ஸ்சொட்டர் போட்டாலும் அது ஒத்து வராது .கொஞ்சம் லைட்டான கலரிலும் இருக்க ஆசைப்பட்டிருக்கிறான். அப்படித்தான் அவனின் கருத்த உடம்புக்கு ஏதாவது இறுக்கத்தை சேர்க்கிற மாதிரி இருந்தது. இந்த மழையில் தவிர்த்து விட முடியவில்லை பச்சை நிறத்தில் இருந்த்தை எடுத்து மாட்டிக்கொண்டான். அது இதயத்திற்கு அருகில் ஒரு ரோஜா பூவை சிவப்பு நிறத்தில் கொண்டு வந்திருந்தது. அந்த எம்பிராய்டரி அவனுக்கு பிடித்திருந்தது .பக்கத்தில்கூட எம்பிராய்டரி சார்ந்து இயந்திரங்கள் இருப்பதை அவன் பார்த்திருக்கிறான் .ஆனால் அவை எல்லாம் ஒரே நொடியில் ஆயிரக்கணக்கான பூக்களை பூக்க வைத்து விடுகின்றன. நூற்றுக்கணக்கான மலர்களைத் துளிர்க்கச் செய்துவிடுகின்றன. ஆச்சரியமாக இருக்கிறது அவற்றிலிருந்து சாயப்பட்டறை வாசம் கிளம்புவதாக தான் அவனுக்கு தோன்றியது. ஆனாலும் அந்த பூக்கள் உடைய வாசனையை அவனால் மறுக்க முடியவில்லை .அதேபோலத்தான் வாசனை சார்ந்த ஷர்மிலி எண்ணங்களும் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. வெளியில் போகிறபோது எங்காவது அவள் தட்டுப்பட்டு விடுகிறாள்.
அஞ்சலி: செக் நாவலாசிரியர் மிலன் குந்தேரா மறைவு! புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா - நேர்காணல்: ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி
நவீன உலக இலக்கியத்தில் முக்கியமானதோர் இலக்கிய ஆளுமையான செக் நாவலாசிரியரான மிலன் குந்தேரா தனது 94ஆவது வயதில் காலமான தகவலை இணையத்தின் மூலம் அறிந்தேன். அவரது இழப்புக்கான் ஆழ்ந்த இரங்கலைப் பதிவுகள் செலுத்துகின்றது. இவரது இவரது இருப்பின் தாங்க முடியாத மென் தன்மை (The Unbearable Lightness of Being) இவர் எழுதிய நாவல்களில் மிகவும் புகழ்ப்பெற்ற நாவல். இதுவே இவரது மிகச்சிறந்த நாவலாகவும் கருதப்படுகின்றது. இந்நாவலைப்பற்றித் தனது வலைப்பூவில் எழுத்தாளர் ஜெயமோகன் 'மிலான் குந்தரே எழுதிய புனைவுகளில் ஆகவும் சிறந்ததாக The Unbearable Lightness Of Being நாவலை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நாவலின் முதல் இரண்டு பக்கங்களின் எந்தப் புள்ளியில் இருந்து அந்த நாவல் அவரில் தொடங்கியது என்பதை எழுதிவிடுகிறார். அதில் நீட்சே வருகிறார். Parmenides வருகிறார். இன்னும் சில தத்துவவாதிகள் வருகிறார்கள். அவர்களது கருத்துக்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும் குந்தரே, தனக்குள்ள கேள்விகளையும் முன் வைத்து அவர்களை மறுதலிக்கவும் முயல்கிறார். அதில் இருந்து தனக்கான தேடலை முன்னகர்த்துகிறார். அப்படியாகத்தான் இந்த நாவல் உருக்கொள்கிறது' என்று கூறுவது கவனத்துக்குரியது.
இத்தருணத்தில் எழுத்தாளர் ராம் முரளியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணலைப் 'பதிவுகள்' நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறது. இந்நேர்காணல் அவரது கலை, இலக்கிய மற்றும் அரசியல் சிந்தனைகளை வெளிப்படுத்துவதால் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்.காம் -
நேர்காணல் ஒன்று: புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா - நேர்காணல்: ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி
நம் காலத்தின் மகத்தான படைப்பிலக்கியவாதிகளில் ஒருவர் மிலன் குந்தேரா. பத்து நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், கட்டுரைகள் என இவரது இலக்கிய உலக பங்களிப்பு பரந்து விரிந்தது. எனினும், நாவல் எழுத்தையே பெரும்பாலும் தமக்குரிய கலை வெளிப்பாட்டு தேர்வாக கொண்டிருக்கிறார். இலக்கியத்தின் ஒரு அங்கம் என்றில்லாமல், நாவல் எழுத்தே தனியொரு கலை என்பது இவரது கருத்து. தற்போது 90 வயதை கடந்துவிட்ட நிலையில், அவரது படைப்புகள் வெளிவருவது தோய்ந்துவிட்டது. 2014ம் வருடத்தில் வெளியான The festival of insignificance என்பதே கடைசியாக வெளிவந்த இவரது நாவலாகும்.
செக் குடியரசின் புரூனோ நகரில் 1929ல் பிறந்தவர் என்றாலும் 1975ல் இருந்து பிரான்ஸிலேயே வாழ்ந்து வருகிறார். 1993க்கு பிறகு, பிரெஞ்சு மொழியிலேயே தமது புனைவெழுத்துக்களை எழுதி வருகிறார். இளம் பருவத்தில் கம்யூனிஸ இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், செக் குடியரசின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அவ்வியக்கத்துடனான தமது உறவுகளை முறித்துக்கொண்டார். விளைவாக, இவரது படைப்புகள் செக் குடியரசில் தடை செய்யப்பட்டன; குடியுரிமையும் ரத்துசெய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, பிரான்ஸுக்கான இவரது இடப்பெயர்வு நிகழ்ந்தது. பலமுறை நோபல் பரிசுக்கான பரிந்துரைகளில் இவரது பெயர் பரிசீலனை செய்யப்படிருக்கிறது என்றொரு வழக்குப் புழக்கத்தில் இருக்கிறது. எனினும், தமது நிலைபாடுகள், செக் குடியரசில் இருந்து வெளியேறியது, சோஷியலிஸ அரசுடனான அவரது சிக்கல் மிகுந்த உறவு போன்றவற்றால், குந்தேராவுக்கு நோபல் பரிசு கிடைப்பது சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வடபகுதி நிகழ்ச்சிகளில் மாணவர் ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும்! - முருகபூபதி -
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப் பெறும் வடமாகாண மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும், தகவல் அமர்வும் அண்மையில் வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றன.
வவுனியா பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதியும், யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் 01 ஆம் திகதியும் , முல்லைத்தீவில் 02 ஆம் திகதி விசுவமடுவில் திறன்விருத்தி கேட்போர் கூடத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வவுனியாவில் நீண்டகாலமாக இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ( Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD ) தலைவர் திரு. த. கணேஷ் தலைமையிலும், உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்சினி சஜீவன் முன்னிலையிலும் வவுனியா பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடந்தது.
மறக்க முடியாத அராலி இந்துக் கல்லூரி! - வ.ந.கிரிதரன் -
என்னால் மறக்க முடியாத கல்லூரி 'அராலி இந்துக் கல்லூரி' . நான் அங்கு படித்ததில்லை, ஆனாலும் என் ஆழ்மனத்தில் அதற்கோரிடமுண்டு. காரணம் இங்குதான் என் அன்னையார் 'நவரத்தினம் டீச்சர்' (திருமதி மகேஸ்வரி நவரத்தினம்) 1972இலிருந்து எண்பதுகளில் ஓய்வு பெறும் வரையில் ஆசிரியையாகக் கற்பித்தவர். அதற்கு முன்னர் அவர் யாழ் இந்துக்கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியையாகப் பணி புரிந்தவர். இங்குதான் என் தங்கைமார் இருவர், தம்பி ஆகியோர் படித்தனர். இவையே முக்கிய காரணங்கள். இங்கு நான் படிக்காவிட்டாலும் எந்நேரமும் இக்கல்லூரியைப்பற்றி வீட்டில் கதைத்துக்கொண்டிருப்பார்கள். அவற்றிலிருந்து இக்கல்லூரி பற்றி, ஆசிரியர்கள் பற்றியெல்லாம் அறிந்துகொண்டேன். கடந்த வெள்ளிக்கிழமை 7.7.2023 அன்று அராலி இந்துக் கல்லூரி தனது நூற்றாண்டைக் கொண்டாடியது. வாழ்த்துகள். அதன்பொருட்டு கல்லூரி வெளியிட்ட சிறப்பு மலரில் அராலி இந்துக்கல்லூரி பற்றிய எனது நனவிடைதோய்தற் குறிப்புமுள்ளது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
அராலி இந்துக் கல்லூரிக்கு இணையத்தளமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பு மலரினை வாசிப்பதற்குரிய வசதியுமுள்ளது. அங்கும் இக்குறிப்பினை வாசிக்கலாம். கல்லூரிக்கான இணையத்தள முகவரி - https://www.aralyhindu.com
விழா மலரில் 1970 -இன்று வரையில் அராலி இந்துக் கல்லூரியில் படிப்பித்த, படிப்பித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் பெயர்களை ஆவணப்படுத்தாதது ஏமாற்றத்தையளித்தது. அவர்களின் பெயர்ப்பட்டியலையும் நிச்சயம் இணைத்திருக்க வேண்டும். மலரில் தவறவிட்டதை அராலி இந்துக் கல்லூரியின் இணையத்தளத்தில் ஆவணப்படுத்தலாம்.
பாரதியாரின் 'நடிப்புச் சுதேசிகள்' பற்றி வித்துவான் வேந்தனார்! - வேந்தனார் இளஞ்சேய் -
அன்பர்களே! எனதருமைத் தந்தையார் வித்துவான் வேந்தனார் அவர்களால் , க.பொ.த- சாதாரணதரம்- தமிழ் இலக்கியப் பாடத்திற்கு எழுதப்பட்ட "பாரதியார் பாடல்கள் விளக்கவுரை" என்ற நூல் எனக்கு சில மாதங்களுக்கு முன் கிடைக்கப் பெற்றது. அதில் பாரதியார் "நடிப்புத் சுதேசிகள்" என்ற தலைப்பில் எழுதிய கவிதைகளுக்கு என் தந்தையார் எழுதிய விளக்கவுரையை நேற்று வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அதை வாசிக்கையில் இன்றும் எம்மிடையே வாழ்கின்ற சிலர், பாரதியார் குறிப்பிட்ட நடிப்புச் சுதேசிகளிலும் கீழ்த்தரமான நடிப்புச் சுதேசிகளாக வாழ்வதை எண்ணிப் பார்த்தேன். பாரதியாரின் இத் தலைப்பிலான பாடல்களுக்கு வேந்தனார் எழுதிய விளக்கவுரைகளில் ஓரிரண்டை, இன்று பாரதியின் 136 ஆண்டு பிறந்தநாள் நினைவாக, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
ஒட்டாத உறவுகள் ! -ஸ்ரீராம் விக்னேஷ்-
எல்லோரும் அழுகின்றார்....!
ஏனென்று பார்க்கின்றேன் !
என்னால் பேச முடியவில்லை...!
ஏனென்றால் நான் செத்துவிட்டேன்...!
உறவுகள் எல்லாம்கூடி,
ஒப்பாரி வைக்கின்றார்கள்....!
உருண்டுருண்டு ஒரு மகள்,
“ஓ”வென அலறுகிறாள் !
ஓடிவந்து பிடித்தவரை,
உதறிவிட்டு அடுத்த மகள்,
பாய்ந்தென்மேல் விழுந்தழுது,
பாசத்தைப் பூசுகிறாள் !
சிறுகதை: சந்தியா அப்பு! - செ.டானியல் ஜீவா -
எனக்கு பிடித்த மனிதர்கள் என்று என்னுடைய ஊரில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் சிலர் தான் இருக்கிறார்கள். அவர்களில் சந்தியா அப்பு மிக முக்கியமானவர். வயது எண்பதை நெருங்கினாலும் சோர்வில்லாமல் உழைத்த மனுஷன். வாளிப்பான தேகம், விறைப்பான முறுக்கு ஏறிய தோல் பட்டைகள். ஒரு காலத்தில் பெயர் போன சிறகு வலைத் தொழிலாளியாக அறியப்பட்டவர். இப்போது விடு வலைத் தொழிலுக்கும், கூடு வைக்கிற தொழிலுக்கும் போய் வருகின்றார். எங்களுடைய ஊர் கோயிலில் இருக்கும் சிறிய அறை ஒன்றிலே நானும் என் தந்தையின் தகப்பனாரான செபஸ்தி என்று ஊரவர் அழைக்கும் செபஸ்தியார் அப்புவும் வசித்துவந்தோம். அப்பு வசிப்பதற்காகவே கோயில் நிர்வாகத்தினர் அந்த அறையை கொடுத்திருந்தார்கள். நாங்கள் எல்லோரும் அப்பையாவை அப்பு என்றுதான் அழைப்பது வழக்கம். அப்பு கோயிலில் சங்கிடத்தார் வேலை செய்கிறவர்.
நான் பதினான்கு வயது வரைக்கும் அங்கே இருந்து தான் பள்ளிக்குச் சென்று வந்தேன். ஒரு மார்கழி மாதக்குளிரோடு அப்புவின் உயிரும் அடங்கிப்போனது. அப்பு இறந்த பின்னர் நான் பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு கடல் தொழிலுக்குப் போகத் தொடங்கினேன். அப்புவோடு நான் இருந்த காலத்தில், ஒரு நாள் ஞாயிறு காலையில் அப்புவை தேடி ஒருவர் வந்தார். அவர்தான் சந்தியா. தென்மோடிக்
கூத்தில் போட்ட ஒப்பனை கலையாத முகத்துடன் அவர் அங்கு வந்திருந்தார்.
“இவன் என்ர பேரன் கொஞ்சம் முசுப்பாத்தியாக எப்பவும் கதைப்பான்” என்று. சொல்லிக்கொண்டே அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் அப்பு. முதல் நாள் இரவு நடந்த கூத்தில் கோமாளி வேடமணிந்த சந்தியாவின் நடிப்பை ஏற்கனவே நான் எங்கட அப்புவுக்கு நடித்துக் காட்டியபோது அவர் விழுந்து விழுந்து சிரித்து விட்டு
"அவர் நல்ல நடிகன், அதோட நல்ல மனுஷன். ஒருத்தரைப் பார்த்து வா போ என்றுகூடக் கதைக்க மாட்டார். மிகவும் மரியாதையாகப் பழகுபவர். சிறு வயதில் இருந்தே நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறம். ஒருவகையில் அவரும் நம்மட சொந்தக் காரர்...! " என்று அப்பு சொன்னார். அவரைப் பற்றி சொல்லும் போது அப்புவின் கண்களில் ஏதோ ஒரு இனம் புரியாத கசிவும், இரக்கமும் கரைந்து இருந்ததை கூர்ந்து அவதானித்தேன். அப்பு தொடர்ந்து ஏதாவது அவரைப் பற்றி கதைப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அதற்குமேல் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். ஏதாவது சோகம் அவரது நெஞ்சை நிறைக்கும்போது, எதுவும் பேசாமல் அமைதியாகவே இருப்பது அவரது வழக்கம். என்னுடைய ஆச்சியின் மரணம் அவரை நடைப்பிணமாக்கிவிட்டது.
நோர்வே பயணத்தொடர் : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே (3) - ஶ்ரீரஞ்சனி -
- Bryggen துறைமுகம் -
காலையுணவின் பின்னர், Bergenக்குச் செல்லும் 8 :30 மணி பஸ்ஸில் ஜீவாவும் விமலாவும் எங்களை ஏற்றிவிட்டனர். அந்த பஸ்ஸின் மேல் தட்டில் இடது பக்கமாக இருந்த முன் சீற்றில் இருந்து நோர்வேயின் இயற்கை அழகை ரசித்தபடி, வெவ்வேறு சுரங்க வழிகளினூடாகவும், பஸ்ஸுடன் சேர்ந்து இரண்டு தடவைகள் கப்பலிலும் நாங்கள் பயணித்தோம்.
நோர்வேக்கு வருகிறோம் என்றதும், “எங்கடை இடம் நல்ல வடிவான இடம், வாங்கோ, எங்கடை வீட்டிலையே தங்கலாம்” என கமலினி அன்புடன் வரவேற்றிருந்தா. நான்கு மணி நேரப் பயணத்தின் முடிவில், Bergenஇல் இறங்கியபோது கமலினி சொன்னதில் எவ்விதமான மிகைப்படுத்தலுமில்லை என்பது தெளிவாக, அந்த அழகில் நாங்கள் சொக்கிப்போனோம். மலைகளின் நடுவில் அங்கங்கே வீடுகள் செருகப்பட்டிருப்பது போன்ற அந்தக் காட்சி picture post card ஒன்றைப் பார்ப்பதுபோல இருந்தது. ‘என்னமோ ஏதோ’ என்ற கோ திரைப்படப் பாடல் இங்குதான் படமாக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Bergen பஸ் நிலையத்துக்கு இளைய மகன் அஜனுடன் வந்த கமலினியுடன் அவரின் வீட்டைச் சென்றடைந்தோம். எதையெல்லாம் பார்ப்பதற்கு சங்கி விரும்புகிறா எனக் கேட்டபடி, சங்கிக்கு மிகப் பிடித்த உணவான பால் அப்பங்களைச் சுடச் சுட கமலினி பரிமாறினா. அவவுக்கு உதவியாகக் குசினியில் அஜனும் நின்றிருந்தது இன்றைய இளம் சமுதாயத்தில் நிகழும் மாற்றத்துக்கு ஒரு சாட்சியாக இருந்தது. சாப்பாட்டு மேசையில் இட்டலியும் கூடவே இருந்தது. விருந்தினர்கள் வருகிறார்கள் என்பதையறிந்த கமலினியின் சினேகிதி ஒருவரின் உபகாரம் அது என அறிந்தபோது, அந்தச் சினேகிதி அப்படிச் செய்யுமளவுக்குக் கமலினியும் அவவுக்கு உதவிகளைச் செய்திருக்கிறாரெனப் புரிந்தாலும், காலில் சில்லுப் பூட்டியதுபோல ஓடித்திரியும் நாங்கள் வாழும் ரொறன்ரோவில் இப்படியெல்லாம் நிகழுமாவென என்னை அது அதிசயிக்க வைத்தது.
”புலம்பெயர்த் தமிழர்களின் இணையத் தமிழ்ப் பங்களிப்பு” - முனைவர் செ சு நா சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி.
”உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும், கணிப்பொறியில் வல்லமை பெற்ற தமிழர்கள் தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர். அம்முயற்சியின் விளைவே இன்று, இணையப் பயன்பாட்டில் தமிழ், தலைசிறந்து வளர்கிறது. தமிழில் இணையதளங்கள் உருவாகப் பிறிதொரு காரணமும் முக்கியமாகும். 1983 க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் கலவரத்தால் தமிழர்கள் உலகம் முழுக்க புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. அது போன்று தமிழகத் தமிழர்களின் பணியின் பொருட்டு அயல் நாடுகளுக்குச் சென்றனர். இவ்வாறு சென்ற தமிழர்கள் தாய் நாட்டுடன் தொடர்பு கொள்ளவும், பிற நாடுகளில் வாழும் தமிழர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், இணையத்தைப் பயன்படுத்தினார். இதில் தங்களை ஒன்றிணைக்கத் தமிழ் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர்” என்று இலங்கைத் தமிழர்களின் இணையப் பங்களிப்புக் குறித்துத் தமிழ் விகாஸ் பீடியா கூறுகின்றது. இது மிகச் சரியான கூற்றும், வரலாற்றுச் செய்தியும் ஆகும்.
இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து சென்ற நாளிலிருந்து மொழியில் ஏற்பட்டு வரும் இலக்கிய முன்னேற்றம் மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட வேண்டியதும், பதிவு செய்யப்பட வேண்டியதுமான விடயமாகும். இப்பின்னணியில் தான் தமிழ், இணையத்தில் வளர்ந்தது என்று திட்டவட்டமாகக் கூறலாம். வேறு காரணிகள் இருப்பின் இக்காரணமே மிகுத்திருக்கும் எனலாம். அந்தளவிற்கு இலங்கைத் தமிழர்கள் இணையத்தின் மூலம் தமிழை மேம்படுத்தி உள்ளனர்.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கலாசூரி சிவகுருநாதன் நினைவு நூல் வெளியீடு! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -
தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.சிவ குருநாதனின் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 'இலங்கை இதழியலில் சிவகுருநாதன்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிக்க , பிரதம அதிதியாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீட பணிப்பாளர் சிசிர பரணதந்திரி கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நடராஜா காண்டீபன், ‘ஞானம்’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் சாகித்யரத்னா ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தவுள்ளனர்.
யாழ் அராலி இந்துக்கல்லூரி நூற்றாண்டு விழா (1923 - 2023) - தகவல்: குகதாசன் குகநேசன் -
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 'இலங்கை இதழியலில் சிவகுருநாதன்' நூல் வெளியீடு! - தகவல்: ஐங்கரன் விக்கினேஸ்வரா -
* படத்தைத் தெளிவாகப் பார்க்க ஒரு தடவை அழுத்தவும்.
மகாஜனக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்! - குரு அரவிந்தன் -
மகாஜனக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியும், நிறுவுனர் நினைவு தினமும் சென்ற சனிக்கிழமை 24 – 6 - 2023 ஸ்காபரோ மக்கோவான் வீதியில் உள்ள மிலிக்கன் பூங்காவில் இடம் பெற்றது. கல்லூரியின் பழைய மாணவர்களான பெற்றோரும் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளுமாகக் குடும்பமாக வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கோவிட் - 19 காரணமாக ஒதுங்கி இருந்தவர்கள் பலரை மீண்டும் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தம்பையா தர்மலிங்கம் அவர்களைச் சங்கத் தலைவர் திரு. விஜயகுமார் அறிமுகம் செய்து வைத்தார். இப்போது கனடாவில் இருக்கும் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர்களில் மிகவும் மூத்தவரான இவரது 100வது பிறந்த தினத்தையும் கேக் வெட்டி, பாராட்டுக் கவிதைபாடிப் பழைய மாணவர்கள் கொண்டாடினார்கள். 1923 ஆம் ஆண்டு யூன் மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியில் பிறந்த இவர் ஆரம்ப கல்வியை அளவெட்டி ஞானோதயா பாடசாலையிலும், அதைத் தொடர்ந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும், உயர்கல்வியை பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார்.
'அபத்தம்' மின்னிதழும் , விருதுகளும், சில கருத்துகளும்! - வ.ந.கி -
'அபத்தம்' மின்னிதழின் ஆசிரியரான நண்பர் ஜோர்ஜ்.இ.குருஷேவ் ஆடி 'அபத்தம்' இதழில் எழுதிய கட்டுரைகளில் என் கவனத்தை ஈர்த்த சில பகுதிகளை இங்கு குறிப்பிடுவது நல்லதென நினைக்கின்றேன். ஓரிடத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"......... தாயகத்தில் எழுதியவர்கள் எல்லாம் இயல் விருதுக்கு அழைப்புக் கிடைத்து ஆஜராவது போல், எனக்கு ஒரு போதும் அழைப்புத் தரப்பட்டதுமில்லை. கிடைக்காதது பற்றி அலட்டிக்கொள்வதுமில்லை. Black Tie Affair இல், முத்தரின் Coat Tail இல் தொங்கிக்கொண்டு ஈடேற நினைக்கும் அளவிலும் எனக்குத் தேவை இல்லை"
இங்கு அவர் ' தாயகத்தில் எழுதியவர்கள் எல்லாம் இயல் விருதுக்கு அழைப்புக் கிடைத்து ஆஜராவது போல், எனக்கு ஒரு போதும் அழைப்புத் தரப்பட்டதுமில்லை' என்று குறிப்பிடுவது தாயகத்தில் எழுதிய எழுத்தாளர்களை அவமானப்டுத்துவதுபோல் தென்பட்டதால் யார் யார் தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல் விருதின் ஒரு பிரிவில் விருது பெற்றவர்கள் என்று சிந்தித்துப்பார்த்தேன். எஸ்.பொவுக்கு வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காக இயல் விருது கிடைத்துள்ளது. அவருடனான பாரிஸ் இலக்கியச் சந்திப்பு பற்றித் தாயகத்தில் தொடரொன்று வந்துள்ளது. ஆனால் எஸ்.பொ தாயகத்தில் எழுதியுள்ளாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால் அவர் எழுதவில்லையென்றே வைத்துக்கொள்வோம். இதுபோல் தான் கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தனும். அவரும் எழுதியது மாதிரியும் உள்ளது. ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. அதனால் அவரும் தாயகத்தில் எழுதவில்லையென்று தற்போது வைத்துக்கொள்வோம். அவருக்கும் அபுனைவுக்காக அவரது கூலித்தமிழ் நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது கிடைத்துள்ளது. எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்திக்கும் புனைவுக்காக இயல் விருது கிடைத்துள்ளது. அவரும் தாயகத்தில் எழுதியிருக்கக் கூடும். ஆனால் உறுதியாகத் தெரியாததால் அவரையும் எழுதாதவர் பட்டியலில் சேர்த்து விடுவோம். எழுத்தாளர் மு.புஷ்பராஜனுக்கும் இயல் விருது கிடைத்துள்ளது. அவரும் தாயகம் சஞ்சிகையில் எழுதியிருக்கக் கூடும். ஆனால் உறுதியாகத் தெரியாததால் அவரையும் தற்காலிகமாக எழுதாதவர் பட்டியலில் சேர்த்து விடலாம்.
குறளினிமை கேட்டிடுவோம் & சேவையைத் தொடர்ந்திட வேண்டும்! - வேந்தனார் இளஞ்சேய் -
1. குறளினிமை கேட்டிடுவோம்
குறளினிமை கேட்டிடுவோமே.
கருத்ததுவும் அறிந்திடுவோமே.
பொருளினிமை உணர்ந்திடுவோமே.
பொய்யாமொழி படித்திடுவோமே.
அறத்துப் பாலதின்
அருமை தெரிந்திடுவோமே.
பொருட் பாலதின்
பெருமை கற்றிடுவோமே.
காமத்துப் பாலதின்
காதல் கண்டிடுவோமே.
பேரின்ப வாழ்வதின்
பேற்றை நுகர்ந்திடுவோமே.
தமிழ்மொழி வாசித்தல் திறன் மேம்பாட்டில் புதிய தொழில்நுட்பத் தேவைகள் - முனைவர் சி. சிதம்பரம், துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624 302, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு. -
மொழி கற்பித்தலின் முகம் இன்று உலக அளவில் பல்வேறு பரிமாணங்களை எட்டிவிட்டது. நம் மாணவர்களின் கற்றல், மனனம் செய்யும் திறமையை மட்டும் தேக்கிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இன்று இல்லை. கற்றலின் மூலம் மாணவர்களின் கேட்டல், படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் சூழல் அறிவு, வரலாற்று அறிவு, தேவைகளைத் திறன்பட அடையத் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ளும் அறிவு போன்ற பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் கல்விக்கொள்கைகளை உள்ளீடாகக் கொண்டு கற்றல் கற்பித்தல் தொடர்பான புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமே இன்றைய உலகமயமாதல் சூழலில் மொழிக்காப்பு முயற்சிகள் முழுவெற்றி பெற முடியும். “பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி மொழியாகும். அவன் வாழ்ந்ததும், வாழப்போவதும் மொழியாலே தான். மக்கள் வாழ்வில் பிறந்து மக்களால் வளர்க்கப்பட்டு மக்களின் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்தி வரும் அரிய கலை மொழியே. ஆறறிவு பெற்ற மனித சமுதாயத்தையும் ஐந்தறிவு கொண்ட விலங்குகளையும் வேறுபடுத்துவது மொழி. மனித வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய உணர்வோடு முயன்று வந்த முயற்சியின் முற்றிய வளர்ச்சியே இன்றைய மொழியாகும்.” 1 எனினும் தொடக்க காலத்தில் மனிதன் விலங்குகளிடமிருந்தே மொழியைக் கற்றுக்கொண்டான். விலங்குகள் காட்டும் சைகை, எழுப்பும் ஒலி ஆகியவற்றின் அடிப்படையில் மொழியைக் கற்கத் தொடங்கினான். மனிதனின் தோற்றம் குரங்கிலிருந்து வந்தது (பரிணாம வளர்ச்சி) என்று உறுதிப்படுத்தும் அறிவியல் ஆராய்ச்சியில், குரங்கு எழுப்பும் 31 வகை சைகைகளையும், 18 வகை முகபாவங்களையும், சில ஒலிகளையும் பயன்படுத்தி தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்த முயற்சிப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு விலங்கிலிருந்து மொழியைக் கற்கத்தொடங்கிய மனிதன் படிப்படியாக எழுத்துகளையும், சொற்களையும், தொடர்களையும் ஏற்படுத்தத் தொடங்கினான். வரிவடிவம், இலக்கியம், இலக்கணம் எனப் பல்வேறு வளங்களைப் பெருக்கி இன்று உலக மொழிகளுள் முன்னோடி மொழியாகவும் உயர்தனிச் செம்மொழியாகவும் தமிழ்மொழியை உயர்த்திய பெருமை ஒவ்வொரு தமிழனையும் சாறும். “ஆற்றங்கரை ஓரங்களில் வாழ்ந்த மக்களே நாகரிக வளர்ச்சி பெற்றுள்ளனர்” 2 என்ற கருத்திற்கு தக்க சான்றுகளாகச் சிந்து சமவெளி, ஹரப்பா, மொகஞ்சதரா நாகரிகங்கள் அமைந்துள்ளன.
எனது இசைப்பயணம்: இன்னிசைவேந்தர், சங்கீதபூஷணம், கலாநிதி பொன். சுந்தரலிங்கம்
Join Zoom Meeting | Meeting ID: 847 6151 5414 | Passcode: 531227
சிறுகதை: கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய்! - வ.ந.கிரிதரன் -
- 2.7.2023 ஈழநாடு வாரமலரில் வெளியான சிறுகதை. -
"இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று, மற்றில்ல,
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே"
- வெள்ளிவீதியார் ((குறுந்தொகை) -
1.
இருண்டு விட்டிருந்த டொராண்டோ மாநகரத்து இரவொன்றில் தன் அபார்ட்மென்டின் பலகணியில் வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே விரிந்திருந்த விண்ணை நோக்கினான் கேசவன். நகரத்து இரவு வான் ஒரு சில நட்சத்திரங்களுடன் இருண்டிருந்தாலும், அன்று பெணர்ணமி நாளென்பதால் தண்ணொளியில் இரவு குளித்துக்கொண்டிருந்தது. அவனுக்குச் சிறு வயதிலிருந்தே நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானை இரசிப்பதென்றால் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளிலொன்று. இரவு வானின் விரிவும், நட்சத்திரக் கன்னியர்களின் கெக்களிப்பும் எப்பொழுதும் அவனுக்குப் பிரமிப்புடன் இருப்பு பற்றிய சிந்தனைகளையும் ஏற்படுத்தின. எவ்வளவு நேரமென்றாலும் அவனால் இரவு வானை இரசித்துக்கொண்டேயிருக்க முடியும்.
வனங்களும், குளங்கும் நிறைந்த வன்னி மண்ணில் வளர்ந்தவன் அவன். எத்தனை புள்ளினங்கள்! எத்தனை மிருகங்கள்! எத்தனை வகை வகையான விருட்சங்கள்! வன்னியில் அவனை மிகவும் கவர்ந்தவை செந்தாமை, வெண்டாமரைகள் பூத்துக்குலுங்கும் குளங்களும், புள்ளினங்களும் , பல்வகை மரங்களுமே. வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிச் செல்லும் வீதியில் அமைந்திருந்தது குருமண்காடு. அங்குதான் அவன் வளர்ந்தான். குருமண்காடு வனப்பிரதேசமாகவிருந்த காலகட்டத்தில் அவனது வாழ்க்கை அங்கு கழிந்திருந்தது. அதனால் அவனுக்கு எப்பொழுதும் குருமண்காடும், அக்காலகட்ட நினைவுகளும் அழியாத கோலங்கள்.
ஆய்வு: கம்பராமாயணத்தில் கட்குடியர் மெய்ப்பாடு - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
- கம்பர் -
முன்னுரை
கள் குடிப்பதை சங்கால மக்கள் தவறாகக் கருதவில்லை. ஊர் வளத்தைப் பேசும்போதும், கள்ளின் மிகுதியையும் பேசியுள்ளனர்.நன்கு புளித்த கள் “தேள் கடுப்பன்ன” கடுமை உடையதாகும். உள் நாட்டுக் கள்ளைத் தவிர வெளிநாடுகளிலிருந்தும் வருவித்துக் குடித்தனர். மன்னனின் சிறப்பைக் கூறும்போதும் கள் குடித்தது குறித்தும் கூறப்பட்டுள்ளது. கள் உண்டு களிக்கும் விழா ’உண்டாட்டு விழா’ எனப்படும். வீரர்களுக்கு மன்னன், தன் கையால் கள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மதியை மயக்கும் மதுவை அருந்துதல் கூடாது. மது அருந்துவது என்பது தனிமனித ஒழுக்கக்கேடு. சமுதாயத் தீமை. மது உண்பதால் முதலில் உடம்பானது ஒரு விபரீத நிலையை மேற்கொள்கிறது. பின்னர் உண்டவனின் அறிவு மயங்குகிறது என்று வள்ளுவர் கூறுகின்றார். அத்தகைய கள் குறித்தும், கள் அருந்துவதால் தோன்றும் மெய்ப்பாடுகள் குறித்தும் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஆராய்வோம்.
பஞ்சமாபாதகங்கள்
கொலை, களவு, கள்ளுண்ணல், பொய் உரைத்தல், குரு நிந்தனை ஆகிய ஐந்தும் “பஞ்சமாபாதகங்கள்” என்பர். குடிக்கும் பழக்கம் உடையவர்கள் முதலில் தம் அறிவை இழக்கின்றனர். பின்னர் மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள். அவர்கள் உடல் நலமும், உள்ள நலனும் கொடுகின்றனர்.
மூளையின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும்
நமது மூளையின் ஆரோக்கியமும் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களைப் பொறுத்தது. சில உணவுப் பொருட்கள் நம் மூளைக்கு நல்லது. மற்றவை மூளையின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். மதுபானம் அல்லது பானம் என்பது எத்தனால் கொண்ட ஒரு பானமாகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். மதுபானம் மனக் கிளர்ச்சியுடன் நடந்து கொள்ளத் தூண்டும். கவனம் செலுத்துவதில் சிரமம். நினைவாற்றல் இழக்கும். உணர்வு இழப்பு ஏற்படும். மங்கலான பார்வை, விபத்துக்கள், வாய்மொழி அல்லது உடல் ரீதியான தாக்குதல் போன்ற விரிவான விளைவுகளை ஏற்படுத்தும். சில செயல்கள் நடந்த பின்னர் வருத்தப்பட செய்யும். ஆல்கஹால் எத்தனால் ரசாயன சேர்மம் ஒரு நியூட்ரோக்சன் இருப்பதினால் மூளை செல்களுக்கு இடையேயான தொடர்பைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. ஒருவரால் சரியாகப் பேச முடியாமல் போகும். உடலுக்கும், மூளைக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்கும். இது நரம்பு மண்டலத்தைச் சீர்குலைத்து விடுகிற அளவுக்கு அல்லது அழித்து விடுகிற அளவிற்கு சக்தி வாய்ந்தது.எனவே, தான் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமலும், தெளிவில்லாமலும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டும் கள் குடித்தவர்கள் நடந்து கொள்கின்றார்கள்.