கனடியபத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவம் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனின் ஆக்கங்கள்! - சுலோச்சனா அருண். செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். -
கனடிய தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் வகையில் இதுவரை தொடராக வெளிவந்த புதினங்கள் பல, நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. தமிழில் வெளிவரும் ஆக்கங்கள் நூல் வடிவம் பெறுகின்றன என்றால், அவை தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கின்றன என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினருக்கான ஆவணங்களாகவும் நிலைத்து நிற்கப் போகின்றன என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் தமிழ் இலக்கியத்திற்கு முதலிடம் தந்து, புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் வெள்ளிவிழாக் கொண்டாடும் உதயன் பத்திரிகை, செந்தாமரை, தாய்வீடு, விளம்பரம், மற்றும் இருசு பத்திரிகை, பதிவுகள், திண்ணை போன்ற இணையத்தளங்களில் வெளிவந்த பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் சிறுகதைகள், சில புதினங்கள் பற்றி அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்வதற்காக இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.
இலங்கையில் இருந்து வெளிவரும் ஜீவநதி இதழ் தனது 150வது இதழைச் சமீபத்தில் ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழாக 475 பக்கங்களில் வெளியிட்டிருந்தது. அதில் எழுத்தாளர் குரு அரவிந்தனின் கனடியபத்திரிகையில் தொடராக வெளிவந்த சில நாவல்களும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தன. இதைவிடச் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச ரீதியாக நடந்த சிறுகதை நாவல் விமர்சனப் போட்டியிலும் குரு அரவிந்தனின் சிறுகதைகள், மற்றும் நாவல்கள் சில, 14 நாடுகளில் இருந்து வாசகர்களால் திறனாய்வு செய்யப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்களில் இருந்தும் சிலவற்றை இங்கே எடுத்துக்காட்டிக் குறிப்பிட விரும்புகின்றேன்.
உதயன் பத்திரிகையில் கடந்த காலங்களில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனின் நாவல், சிறுகதைகளில் உறங்குமோ காதல் நெஞ்சம் (2004) உன்னருகே நானிருந்தால் (2004) எங்கே அந்த வெண்ணிலா (2006) சொல்லடி உன் மனம் கல்லோடி (2018) அம்மாவின் பிள்ளைகள் (2019)ஆகிய தொடர் நாவல்கள், மற்றும் குமுதினி போன்ற குறுநாவல்களும் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. இதைவிட உதயன் பத்திரிகையில் வெளிவந்த அனேகமான சிறுகதைகளும் இதுதான் பாசம் என்பதா (2002), என்காதலி ஒரு கண்ணகி (2001), நின்னையே நிழல் என்று (2006), தங்கையின் அழகிய சினேகிதி (2020), சதிவிரதன் (2019), குரு அரவிந்தன் சிறுகதைகள் (2005) போன்ற சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்புக்கள் தமிழ்நாட்டில் உள்ள மணிமேகலைப்பிரசுரம், இனிய நந்தவனம் பதிப்பகம் போன்றவற்றால் வெளியிடப்பெற்றன. கனடிய பத்திரிகையில் வெளிவந்த இந்த ஆக்கங்கள் பற்றிச் சில சான்றோர்கள், எழுத்தாளர்கள் குறிப்பிட்டதையும் இங்கே தரவிரும்புகின்றேன்.