சிறுகதை: பெரணா - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்போசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
1
மொட்டெ அக்கா வீட்டின் முன்ஜன்னலை உடைத்தபோது முகத்தில் அறைந்த, குடலைப் பிரட்டும் பிணநாற்றம் செள்ளியைப் பீடித்திருந்தது. அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு முற்றத்தின் மூலையில் முழங்காலிட்டு வாந்தியெடுத்த நினைவு அவளின் தலைக்கேறியிருந்தது. வாயை அகலத்திறந்து, நாக்கை நீட்டி நீட்டி, காற்றை இழுத்து இழுத்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கெல்லாம் சிக்காது, பிரட்டலாக அடிவயிற்றிலேயே நின்றெரிந்த அந்த நாளைவிட இந்தநாள் அதிகக் கனத்தது.
அன்று, மூக்கைத் துவாலையால் கட்டிக்கொண்டு, ஜன்னல்வழியே உள்ளிறங்கி கதவின் தாழ்பாள் அகற்றப்பட்டதும் எழுந்த புளித்த பிணவாடை அங்கிருந்த எவரையும் முகம் சுளிக்கவைக்காமல் விடவில்லை. உள்ளே மொட்டை அக்காவிற்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த மரணித்த நெடியே அறைகூவியது. யாரும் உள்ளே நுழையும் முன்னமே ஆங்காங்கே தொடக்கிய ஒப்பாரிக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த நெடியின் சுளிப்பு.
பல நாட்களாய் மூடியிருந்த அவ்வீட்டிலிருந்து எழுந்த நாற்றம் முப்புறமெரித்த நெற்றிக்கண்ணாய் எவரையும் அணுகவிடாது தாண்டவமாடியது. உள்ளே என்ன நிகழ்ந்தது என்பதை அறியும் ஆர்வத்தையும், மொட்டை அக்காவின்மீதான அக்கறையையும் தகர்த்துக்கொண்டிருந்த அந்த நெடியைத்தாண்டி, மூக்கை மூடாமல், முகத்தில் சிறு சுளிப்புமின்றி, பதற்றத்துடன் முதலில் நுழைந்த குப்பியின் முகம்தான் இன்று காற்றுப்புகாத நெகிழியால் மூடப்பட்டிருந்தது.
அந்தப் பழைய இரட்டையறை வீட்டின் எட்டாத உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டையாலான மின்விளக்கின் பொத்தானை அழுத்துவதற்கு முன்பாகவே குப்பி மொட்டையை எட்டியிருந்தாள். அவளின் உடலை சூழ்ந்திருந்த ஈக்கள் கலைந்து ரீங்காரமிட, ஒன்றிரண்டு ஈக்கள் ஆழமாக இறங்கி மொய்த்திருந்த, புழுத்துப்போன அவளின் கண்களை தன் வலக்கரத்தால் மூடினாள். அடுப்படியில் அகன்று படுத்துக்கிடந்த அவளின் விலகிய ஆடையை சரிசெய்தாள். அவளைத் தாண்டிச்சென்று பின்கட்டு ஜன்னலைத் திறந்தாள். சடலத்தை தாண்டுவது மரபல்ல என்று அவளுக்கு நன்கு தெரியும். இருந்தும் நிலைப்பிற்கு மரபை மீறுவது தவறல்லவே. மொட்டையைவிட வயதில் மூத்திருந்தும் அவளைத் தாண்டியதற்காக அவளது காலில் விழுந்து வணங்கினாள். மரபு மீறல்கள் எல்லாமே மனம் ஒப்பினால் பிரயாசித்தத்திற்கு உட்பட்டதுதானே.