சிறுகதை : ' புல்லாங்குழலே என் ஜாதி , நீயும் நானும் ஒரு ஜாதி' - கடல்புத்திரன் -
' நான், இதுவரையில் காதல் கதை எழுதியதில்லை . ஏன் , எழுதக் கூடாது ? ... உமா உனக்கு ஏன் இப்படி , பையித்தியக்கார எண்ணங்கள் எல்லாம் வருகின்றன ' . நம்மவர்களிற்கு தமிழீழக்கனவு வரவில்லையா , அப்படி . கூடவே ,சொரூபி சரஸ்வதிப்பூஜையின் போது குச்சுப்பிடி பிடித்தது அவன் நினைவிற்கு வந்தது . நடனம் பழகியவள் , ஆடினாள் . குட்டிப் பெட்டை . நானும் அன்று குருணி தான் . கண் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன் .சினிமாவிலே அக்கா , அம்மாமார் ஆடுறதைப் பார்த்திருக்கிறேன். ' பத்மினி , தாரகை , இந்த குண்டு அம்மாவால் எப்படி உடம்பை வளைத்து , கிளைத்து உடற்பயிற்சி எடுக்க முடிகிறது ' ஆச்சரியம் என்றாலும் அங்கே அம்மா என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது . உமாவிற்கு , இடம் பெயர்ந்த பிறகு இப்படி ஊர் நினைப்புகளை அசை போடுவதே பழக்கமாகி போய் விட்டது . இலங்கையோ... நம் தாய்நாடில்லை 'என்று மறக்க வைக்க முயல்கிறார்கள் . முட்டாள்கள் . இறந்த பிறகு 'ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது ' என்பது அவர்களுக்குப் புரியவில்லை . மறை இருந்தால் அல்லவா புரிவதற்கு ? . நம் பிராய காலத்தையாவது கலாயிப்போம் என நினைப்பை மாற்றினான்.
குழந்தாய் சொரூபிக்கு என்னை விட நாலு வயசு குறைவாக இருக்கும் . ' நாதம் என்னும் கோவிலே நானும் விளக்கு ஏற்றி வைத்தேன் ' வரிகளுக்கு ...அடேயப்பா எத்தனை உணர்ச்சி அபிநயங்கள் , மிச்சபாட்டைத் தான் அவனுள் மனம் இட்டுக்கட்டி பாடிக் கொண்டு போகிறதே ...! . ஒரு கவிஞரின் வரிகள்...பல்லவி , சரணத்தில் .. நேராக அல்லது தட்டி நெளிக்கப்பட்டோ ...வாழ்கிறது தான் . நீங்களும் கவிதை எழுதுங்கள் . ' புல்லாங்குழலே என் ஜாதி , நானும் நீயும் ஒரு ஜாதி ! ' இப்படி , முணு முணுக்க உங்களுக்கே தெரியாத ஊர்பேர் தெரியாத பலபேர் இருக்கிறார்கள் .