உலகின் உயரமான மலை ஹவாய் தீவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? - குரு அரவிந்தன் -
‘உலகிலே அதி உயரமான மலையின் உச்சியில் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்’ என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தாள் வரவேற்பில் நின்ற, தலைமுடியில் ஒற்றைப்பூ செருகிய இளம் பெண்மணி. ஹவாயில் உள்ள மௌனாகியா மலையின் உச்சியில் நாங்கள் அப்போது நின்றிருந்தோம். இமயமலை ஆசியாவில்தான் இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை ஒரு கணம் கேள்விக்குறியாக்கினாள். நேபாளத்திற்கும், தீபெத்திற்கும் இடையே உள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலே அதிக உயரமான சிகரம் என்பதும், அதன் உயரம் 29,028 அடி என்பதும் மாணவப்பருவத்தில் இருந்தே என் மனதில் பதிந்திருந்தது. அதன்பின் இன்றுவரை இமயமலை 4 அங்குலம் வளர்ந்திருந்ததும் தெரியும். வரவேற்பில் நின்ற பெண்மணிக்கு அனுபவம் போதவில்லை, எவெரெஸ்ட் பற்றி இவர் அறிந்திருக்கவில்லை என்ற நினைவோடு, அவரைப் பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவரோ அருகே இருந்த பதாதையை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டினார். மௌனாகியா மலையின் படத்தையும் அதைப்பற்றிய குறிப்பையும் வாசித்த போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒருகணம் தடுமாறிப் போனேன்.