அறிஞர். அ.ந. கந்தசாமி - அந்தனி ஜீவா -
- அ.ந.கந்தசாமியின் இளமைத்தோற்றம் -
- எழுத்தாளர் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் இக்கட்டுரை பூபாலசிங்கம் பதிப்பகம் வெளியிட்ட அவரது ' இவர்கள் வித்தியாசமானவர்கள்' நூலிலிருந்து மீள்பிரசுரமாகின்றது. அ.ந.க பற்றி இவர் எழுதி தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியான 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடர், 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூல், அவ்வப்போது மல்லிகை சஞ்சிகையில் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. அந்தனி ஜீவா அவர்களின் இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது. மலையகத்தமிழ் மக்கள் பற்றி, அவர்கள்தம் கலை, இலக்கியப் பங்களிப்புகள் பற்றி அவரது எழுத்துகள் , வெளியிட்ட நூல்கள், 'கொழுந்து சஞ்சிகை' ஆகியவை முக்கியமானவை. தற்போது சிறிது உடல்நலம் குன்றி இருப்பதாக அறிகின்றோம். விரைவில் அவர் பூரண நலத்துடன் மீண்டு வந்து மீண்டும் முன்னரைப்போல் செயலாற்றுவார் என்று எதிர்பார்ப்போம். வேண்டிக்கொள்வோம். - பதிவுகள்.காம் -
கொழும்பில் என்னை ஓர் இளைஞர் தேடி வந்தார். “கலாநிதி சபா" ஜெயராசா உங்களிடம் அனுப்பினார். இலக்கிய முன்னோடி அ.ந. கந்தசாமியைப் பற்றிய குறிப்புகளைத் தந்துதவ வேண்டும், அ.ந. கந்தசாமியைப் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுக்கு குறிப்புகள் தேவை என்றார். அந்தப் பல்கலைக் கழக மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் வார மஞ்சரியில் சில வாரங்கள் தொடராக எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமியைப் பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்ற கட்டுரையையும், மற்றும் அ.ந.க.வை பற்றி எழுதிய மற்றும் குறிப்புகளையும் கொடுத்து அனுப்பினேன்.
நினைவு நாள்
அதற்குச் சில தினங்களுக்கு பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிஞர் அ.ந. கந்தசாமியின் நெருக்கமான நண்பரான தான் தோன்றிக் கவிராயர் திரு.சில்லையூர் செல்வராசன் அவர்களைச் சந்தித்தேன். பெப்ரவரி மாதம் அ.ந.க.வின் நினைவு நாள் வருகிறது என நினைவூட்டினேன்.