படகு அகதிகள் - தாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' நாவலை முன்வைத்து ஒரு பார்வை! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
மலர்களின் வாசனை மனதுக்கு உவப்பானது. அனைவரும் அறிந்தது. ஆனால் உயிரின் வாசனையை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே இருப்பர். விலைமதிக்க முடியாத உயிரின் மேன்மையை மனிதன் உணரும் கணங்கள் அநேகமாக மரணத்தை நிகர்த்த துன்பம் தருவனவாகவே அமைந்திருத்தல் கூடும்.அவ்வாறான வலிமிகுந்த தருணங்களை எழுத்தினால் மொழிபெயர்க்கும் வல்லமை கொண்ட படைப்பாளர்கள் அவற்றின் மூலம் வரலாற்றுக்கான தமது தடங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டே செல்கின்றனர்.
தாமரைச்செல்வியின் உயிர்வாசமும் அத்தகைய ஒரு படைப்பு என ஐயமின்றிக் கூறலாம். மனிதஜீவன்களின் அவல வலிகளையும், குருதியின் வாசனையையும் தன் எழுத்தெங்கும் தெளித்துக் கொண்டே செல்லும் இந்தப் படைப்பு கற்பனையல்ல. தமிழர் வரலாற்றின் உணர்வு பூர்வமான ஆவணமாகவும் கருதப்படும் தகைமை கொண்டது. நேர்மையான எழுத்தாளர்கள் முக்காலத்தினை பிரதிபலிக்கும் பிரதிநிதிகள். அவர்களின் மூலமே பல வரலாறுகள் இன்றும் உயிர் வாழ்கின்றன.
தாமரைச்செல்வி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகின் அனுபவமும் புகழும் மிகு படைப்பாளி ஆவார். தமது 'பச்சைவயல் கனவு' என்ற நாவலுக்காக இலங்கை அரசின் சாகித்தியவிருது உட்பட பல பெருமைகளை தனதாகக் கொண்டவர். தமது இலக்கிய வாழ்வில்பொன் விழாவினை அண்மிக்கும் இவர் ஆறு நாவல்களையும், மூன்று குறுநாவல்களையும், இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இலங்கை, இந்திய பாடநூல்களின் இவரது இருகதைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. பல்கலை இறுதியாண்டு மாணவர்கள் இவரது எழுத்துகளை ஆய்வு செய்திருக்கின்றனர் என்பது மேலதிக பெருமை.
இந்த நாவலில் அவர் பேசவிழைந்தது யுத்தம் தந்த நெருக்கடிகளினால் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், வாழ்வாதாரத்தை இழந்த தமது உறவுகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், ஆபத்துகள் நிறைந்த படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவை வந்தடைந்த உண்மையான அகதிகள் பற்றியதாகும். போருக்குப் பின்னரான தமிழ்மக்களின் வாழ்வியலில் முக்கிய கூறான இந்த அகதிகளின் அவலங்கள் நியாயமான பார்வையுடன் பார்க்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும், எதிர்கால தலைமுறைக்கு புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் கடத்தப்பட வேண்டும் என்பதும் இவரது எழுத்தில் முதன்மைப் படுத்தப் படுகின்றன.