
முன்னுரை
தமிழ்மொழி இனிமையானது. பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இலக்கியவளம், இலக்கணச் செழுமை கொண்டது. செம்மொழி அந்தஸ்து கொண்டது. சொல்வளம் நிறைந்தது. ஒரு சொல்லுக்கு பல பொருளும், பல சொல்லுக்கு ஒரு பொருளும் உடையது. இதுபற்றி தருவது நிகண்டுகளாகும். திவாகரநிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு என்று பல நிகண்டுகள் உள்ளன. சரணம், பாதம், கால், அடி, கழல், தாள் ஆகிய சொற்கள் அனைத்தும் கால் என்ற ஒரு சொல்லையேக் குறிக்கும்.கம்பராமாயணத்தில் இச்சொற்கள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்து குறித்து ஆராய்வோம்.
திவாகரநிகண்டு
சரணம், பாதம், கால், அடி, கழல், தாள்
கம்பராமாயணத்தில் கால் என்பதற்கு பலசொல் ஒரு பொருள்
சொல்வளம் நிறைந்த நம் தமிழில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் உள்ளன. சரணம், பாதம், கால், அடி, கழல், தாள் ஆகிய சொற்கள் அனைத்தும் கால் என்ற ஒரு சொல்லையேக் குறிக்கும்.ஒரே சொல்லைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தாமல் அதேப் பொருளைக் குறிக்க வேறு வேறு சொல்லைக் கம்பர் பயன்படுத்தியுள்ளார்.
சரணம்
திருஅவதாரப்படலத்தில் திருமால் இராமனாக அவதாரம் எடுத்து இராவணனை அழிக்க இருப்பதாகக் கூறினார். எமது துன்பம் தொலைந்தது என்று கூறி, இந்திரன் உவகை அடைந்தான். தூய்மை மிகும் தாமரையில் வாழ்பவனான பிரம்மனும், சந்திரனைச் சடையில் அணிந்த சிவனும், மிக உயர்ந்த வானத்தே தேவர்களும், எமது இழிவு இன்றோடு ஒழிந்தது என்று உரைத்தனர். மிகப் பெரிய உலகத்தை உண்டவனான திருமால், கருடாழ்வார்மீது திருவடி வைத்து ஏறினான்.