
* ஓவியம் - AI
எம் மண்ணழகு.
என் தாய்மொழியழகு.
ஊரைக் கடந்தால்
உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் அழகு.
நாலடி எடுத்துவைத்து
மனம்மகிழ வீட்டுப்
படலையைத் திறந்தால்,
காவல் தெய்வமாய் நின்றுகொண்டு,
எங்கே போன ராசா?உள்ளே வா"
என்றொரு ஜீவன்
கூப்பிடுமே!
அதுதான் எங்களின் பூவரசு.
அதுவே என்றும் எனக்குப் பேரழகு.
சொந்த பந்தம் வந்துவிட்டால்,
பெரிசுகள் வேம்புக்குக்கீழே கூட,
சின்னஞ் சிறிசுகள் நாம்
கூடிச் சேர்ந்து விளையாடியது
பூவரசுடன்தான் !
பூவரசிலை பிடுங்கி
'பிப்பீ' ஊதினோம்.
பப்பாக் குழலுக்குள்
பூவரசம் இலை வைத்து
நாதஸ்வரம் வாசித்தோம்.
பூவரசம் பூப்பிடுங்கி
காதில் செருகி
சாமி கும்பிட்டு,
தகர டப்பாவும்,
வேப்பம் குச்சியும் கொண்டு
தவில் வாசித்து
பூவரசைச் சுத்தி வலம் வந்தோம்.
ஆடுகள் 'மே'என காட்டல் (கத்தல்) கொண்டாலும்,
மாடுகள் 'மூ' என மூசல் (கத்தல்) செய்யினும்,
இலங்கை வானொலியில்
இதமான மெட்டுக்களுடன்
பாட்டுக்கள் கேட்ட போதும்,
எங்கள் கூத்துக்கள் ஓய்ந்த பாடில்லை.
எங்கள் விளையாட்டுக்களைக்
கூடிநின்று பார்க்கும் காகங்களும்
கா கா வென்று கரைந்தும்,
வாலை அசைத்து அசைத்து
கீக் கீக்கென்று அணில்கள்
தாவித்தாவி பாய்வதுமாய், மட்டுமன்றி
வேடிக்கை பார்த்துக் கொண்டே
கெக்கட்டம் விட்டுச்
சிரித்த சொந்தங்களின்
சிரிப்பொலிகளும்
என்று..அப்பப்பா,
என்ன வாழ்க்கை,
எத்தனை சந்தோசம்?