திகில் நாயகன் 'நைட்' ஷியாமளன்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -
அன்றும் ஃபிலடெல்பியாவில் காலை சோம்பலுடன் விடிந்தது. அவன் கண்களைக் கசக்கிக்கொண்டு ஒரு சூடான காப்பியை ஊற்றி உறிஞ்சியவாறு ஹாலில் வந்து அமர்ந்தான். என்னதான் செய்வதாம்? டிவியை உயிர்ப்பித்து சனல் வேட்டையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அப்போது.....தன்பின்னால் மாடிப்படிகளில் ஏதோ கிசு கிசு சப்தங்களும் மகிழ்ச்சி சிணுங்கல்களும்.... என்னவாய் இருக்கும் என ஊகிக்கும் முன்னே மலரிலும் மென்மையான இரு கரங்கள் அவன் கண்களை பொத்திற்று. மற்றும் இரு சோடிக்கரங்கள் அவனின் தோள்களில் பரிவுடன் இறங்கி இறுகிற்று. இந்த குட்டிக் குறும்பில் அவன் திழைத்தான்.
"ஹப்பி ஃபாதேஸ் டே டாட்!"
அந்த அன்புக்கூக்குரலுக்கு சொந்தமான மூன்று பதிவயது பெண்களின் அன்பில் மூழ்கினான் அவன். ஒவ்வொருவராக தம் அன்புத் தந்தையை ஆரத்தழுவி கன்னங்களை நனைத்தனர். கடைக்குட்டி கையில் இருந்த 'தந்தை நாள்' பரிசு கைமாறி அவன் கைக்கு ஊர்ந்தது.
"ப்ளீஸ்.... ஓபிண் இட் டாட்!'
அவர்கள் மூவரினதும் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து மெதுவாய் அந்த பார்சலை கட்டியிருந்த இளநீல பட்டியை அவிழ்த்து பிரிக்கிறான். அவனுக்கு பிடித்த நான்கு புத்தகங்கள் புது மணத்துடன் அவனை வரவேற்கின்றன. அத்தனையும் கிராஃபிக் நாவல் எனும் வகுப்புக்குள் அடங்கும் பெரியோர் காமிக்ஸ். கனிவுடன் தன் செல்வங்களைப் பார்க்கிறான். பார்வை ஆயிரம் கோடி நன்றி என சொல்லாமல் சொல்லிற்று. நம் நாயகன் வேறு யாருமல்ல. ஹாலிவுட் கனவுலகையே தன் 'த சிக்ஸ்த் சென்ஸ்' The Sixth Sense படத்தின் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த திகில் மன்னன் நைட் ஷியாமளன்தான்!