எழுத்தாளர் தேவகாந்தனின் பார்வையில் புலம்பெயர்ந்தொர் நாவல்கள்... - வ.ந.கிரிதரன் -
காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'இலங்கைத்தமிழ் நாவல் இலக்கியம்' நூலில் எழுத்தாளர் தேவகாந்தன் புலம்பெயர்ந்தோர் படைப்புகள் பற்றிக் குறிப்பிடுகையில் படைப்புகளை இரண்டு காலகட்டங்களாகப் பிரித்துள்ளார்.
1. மேற்கில் புலம்பெயர்ந்தோர் நாவல்கள் - ஆரம்ப காலம்
2. இரண்டாம் அலையின் முக்கியமான காலம்
ஆரம்ப கால நாவலாசிரியர்களாக ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ('ஒரு கோடை விடுமுறை'), பார்த்திபன் ('வித்தியாசப்படும் வித்தியாசங்கள்', 'ஆண்கள் விற்பனைக்கு'), இ. தியாகலிங்கம் ('நாளை', 'அழிவின் அழைப்பிதழ்') ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் அலையின் நாவலாசிரியர்களாக ஷோபா சக்தி ('கொரில்லா, ம், இச்சா), தமிழ்நதி (கானல்வரி), இளங்கோ (மெக்சிகோ), மெலிஞ்சி முத்தன் (;வேருலகு, அத்தாங்கு, உடக்கு),வ.ந.கிரிதரன் (குடிவரவாளன்), பொ.கருணாகரமுர்த்தி (அனந்தியின் டயறி), ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (தில்லையாற்றங்கரையில்), விமல் குழந்தைவேலு (வெள்ளாவி, கசகறணம்), நொயல் நடேசன் (வண்ணாத்திக்குளம், அசோகனின் வைத்தியசாலை), தேவகாந்தனின் (லங்காபுரம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம், கதாகாலம்,கந்தில்பாவை, நதிமேல் தனித்தலையும் சிறுபுள்) ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
எனது குடிவரவாளன் நாவலை பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"1983 இன் இனக்கலவரத்தின்பின் கனடாவில் அகதித் தஞ்சம் கேட்கப் புறப்படும் இளங்கோவுக்கு, அமெரிக்க விமான நிலையத்தில் தொடர் பயணம் தடுக்கப்பட ஓராண்டைக் கழிக்க நேர்கிறது. அவனது அந்தத் தடுப்பு முகாம் அனுபவங்களூடாகப் படைப்பை விரித்திருக்கின்றார் ஆசிரியர். இவ்வகைப்பயணங்கள் அமெரிக்காவில்,கிழக்கு ஜேர்மனியில் ,இத்தாலியில், மெக்சிகோவில் என தடைப்பட்டுப்போக அவ்வனுபவங்களின் மேலாய் நிறைய நூல்கள் தமிழில் எழுந்திருக்கின்றன. ஆயினும் தனது 'மண்ணின் குர'லில் வந்த குறுநாவல்களைப்போலன்றி 'குடிவரவாள'னில் தன் அனுபவங்களைக் கலைத்துவமாக்க அவரெடுத்த முயற்சி நூலின் பக்கங்கள்தோறும் புலனாகின்றது. தடுப்பு முகாம் மண்ணில் ஓர் அகதியின் அனுபவங்களும் வித்தியாசமானவையாகவே பதிவாகியுள்ளன."