கல்வி, மருத்துவத்தில் உதவி நாடும் அனைவருக்கும் உதவும் 'அபயம்'! மருத்துவர் கந்தப்பிள்ளை பார்த்திபனின் சிறப்பான சமுதாயப் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -
- மருத்துவர் கந்தப்பிள்ளை பார்த்திபன் -
மே 4, 2024 அன்று 'டொரோண்டோ'வில் நடந்த யாழ் இந்துக் கல்லூரியின் கனடாச் சங்கத்தின் வருடாந்த இராப்போசன நிகழ்வான 'உண்டாட்டு'வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டவர் மருத்துவர் கந்தப்பிள்ளை பார்த்திபன். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் பணிபுரிந்த அமரர் கந்தப்பிள்ளை மாஸ்டரின் மகன். எனது பால்யப் பருவத்து நண்பர்களில் ஒருவரான கந்தப்பிள்ளை அநபாயனின் இளைய சகோதரர்.
எழுபதுகளில் நண்பர் அநபாயனைச் சந்திக்கக் குளப்பிட்டிக்குச் செல்கையில் காற்சட்டையுடன் இவரைப் பார்த்திருக்கின்றேன். அதற்குப் பின்னர் இந்நிகழ்வில்தான் பார்த்தேன். இவரைப்பற்றிய குறிப்பில் இவர் தன் துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளைச் செய்திருப்பதை அறிய முடிந்தது. சுவாசம் பற்றிய மருத்துவத் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். மார்பு மருத்துவராக 24 ஆண்டுகள் சேவையாற்றிய இவர் 18 ஆண்டுகள் மருத்துவ இயக்குநர் மற்றும் தலைமை மருத்துவராகப் பணியாற்றியிருக்கின்றார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நோயாளிகளைப் பராமரிப்புக்கான உள்ளக வழிகாட்டல்களை உருவாக்கப் பங்களித்திருக்கின்றார். லூடன் - டன்ஸ்டபிள் போதனா வைத்தியசாலையில் University College Londonன் மாணவர்களின் கற்கைக்கான உப பீடாதிபதியாகவும் ஆறாண்டுகள் பணியாற்றியிருக்கின்றார்.