தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (8 -10)! - ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -
8
மஹாகவியின் கவிதை வெளிபாட்டில் காணக்கிட்டுவதாய் கூறப்படும் புதிய முறைகளும், சொல்வார்ப்புகளும், உவமானங்களும், உருவகங்களும் முற்றாய் புதியன எனவும் அதற்குரிய காரணம் அவரது கவிதை உள்ளமானது ‘கட்டற்ற ஓர் தேடலை’ கொண்டிருந்ததே என்பார் சண்முகம் சிவலிங்கம்.ப-49
‘கட்டற்ற தேடல்’ என்ற இச்சொற்பிரயோகம் சற்றே ஆபத்தானது. அல்லது அளந்து பிரயோகிக்கப்பட வேண்டியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
சண்முகம் சிவலிங்கம் வரையறை செய்தாற்போலவே, மஹாகவி யாழ்பாணத்து கிராமமொன்றின் சாதாரண மத்திய தர வர்க்கத்தில் பிறந்து, பெரும்பகுதி காலமும் கொழும்பில் உத்தியோகம் பார்த்து,ஈற்றில் அரசாங்க நிர்வாக சேவையாளராகவும் தேறியுள்ளார். சுருக்கமாகக் கூறினால், ‘எமக்குத் தொழில் கவிதை’ என்பது போல் இல்லாமல், இவர்க்கு தொழில் அரச உத்தியோகம், நிர்வாக சேவை என்பன இருந்துள்ளன என்பது தெளிவு. இருந்தும், கூடவே, இதனுடன் சேர்ந்தாற் போல் கலை இலக்கிய ஆக்கங்களிலும் முழுமூச்சுடன் ஈடுபடுபட்டவர் என்றாகின்றது.
நிர்வாக பரீட்சையினை ஒருவர் தன் வாழ்வில் எழுதக் கூடாது என்பதுமில்லை, எழுதுவதால் குறைவடைய போகின்றார் என்பதும் இல்லை. இருந்தும், பிரச்சினை தருவது ‘கட்டற்ற தேடல்’ என்ற சொற் பிரயோகமே. வேறுவார்த்தையில் கூறுவதானால், இப்பின்னணியில் நோக்குமிடத்து, மஹாகவியின் ‘கட்டற்ற தேடல்’ என்பது தன்மீது தானே விதித்துக்கொண்ட அநேக எல்லைப்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கும் ஒரு வகையான கட்டற்ற தேடல்தான் என்பது தெளிவு.