சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோது, நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங்குடன் அவரது காரில் கொழும்பில் சிலரை பார்க்கச் சென்றிருந்தேன்.

சில வீதிகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. அவ்வாறு நெரிசல் உருவாகும் இடங்களில் தரிக்கும் வாகனங்களைச் சுற்றி பிச்சைக்காரர்கள் மொய்ப்பதை அவதானித்தேன்.

நண்பர் காரின் கண்ணாடி யன்னலை மூடிக்கொண்டு ஒரு செய்தியைச் சொன்னார்.

“பூபதி அண்ணன்… இங்கே பிச்சைக்காரர்களுக்கு நூறு ரூபாவுக்கு மேல்தான் கொடுக்கவேண்டியிருக்கிறது. ஒரு நாள் ஒரு வயது முதிர்ந்த பெண் பிச்சைக்காரிக்கு இருபது ரூபா நாணயத்தாளை கொடுத்தேன். அந்தப்பெண், அதனை சுருட்டி எனது முகத்திற்கே விட்டெறிந்து, கெட்ட வார்த்தையினால் திட்டிக்கொண்டு சென்றாள். “

தெகிவளையில் ஒரு கப் பால்தேநீர் ( சீனியில்லாமல் ) நூறுரூபாவுக்கு வாங்கி அருந்தினேன்.

அவுஸ்திரேலியாவிலிருந்து கொழும்புக்குச் சென்ற எனது நண்பர் ஒருவர் சொன்ன தகவல் இது: கொழும்பு வீதியொன்றில் நடந்து செல்லும்போது, “பசிக்கிறது சாப்பாடு வாங்கித்தாருங்கள் எனச்சொல்லிக்கொண்டு “ ஒருவர் அவர் முன்னே தோன்றினாராம். நண்பர் நூறு ரூபா தாளைக்கொடுத்துள்ளார். அதனை வாங்கிக்கொண்ட அந்த மனிதர், மற்றும் ஒருவரிடம் சென்று பசிக்கிறது எனச்சொல்லி பணம் கேட்டுள்ளார்.

அதனைக்கண்டு விட்ட எனது நண்பர், குறிப்பிட்ட நபரை அருகே அழைத்து, “இப்போதுதானே உமக்கு நூறு ரூபா கொடுத்தேன். அதற்கிடையில் மற்றும் ஒருவரிடம் சென்று கையேந்துகிறீரே…?“ எனக்கேட்டுள்ளார். உடனே அந்த நபர், “ஐயா நீங்கள் தந்த நூறு ரூபாவுக்கெல்லாம் இங்கே சாப்பாடு கிடைக்காது. “ என்று சொன்னாராம்.

தென்னிலங்கையில் கடந்த ஆண்டு மக்கள் எழுச்சிக்கொண்டமையால் நாட்டின் அதிபரே அரசியலைவிட்டு ஓட நேர்ந்தமை சமகால வரலாறு.
புதிய அதிபர் நாட்டை மீட்பதற்காக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, மற்றும் வல்லரசுகள், உட்பட வளர்முக நாடுகளிடமும் கையேந்திக்கொண்டிருக்கும்போது, சாதாரண ஏழை மக்கள்தான் என்ன செய்வார்கள்..?

இலங்கையில் பாடசாலைகளுக்கு காலை உணவும் உட்கொள்ளாமல் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இனிமேல் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சொல்லியிருக்கிறார்.

இது இவ்விதமிருக்க சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் நாம், தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியபோது, இங்கு புலம்பெயர்ந்துவந்த தமிழ்க்குழந்தைகளுக்காக மனனப்போட்டிகளையும் நாவன்மைப்போட்டிகளையும் நடத்தினோம். இந்த நாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்காக நடத்தப்பட்ட அந்தப் போட்டியில் ஒளவையாரின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, அதனை மனப்பாடம் செய்து கருத்தும் சொல்லுமாறு கேட்டிருந்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.

அப்பொழுது எனது மகனுக்கு நான்கு வயது. அவன் அத்திசூடியை மனப்பாடம் செய்யும் பயற்சியில் பலநாட்கள் ஈடுபட்டான். கருத்தும் சொல்லிக்கொடுத்தபோது, ஒளவையார் முரண்படுகிறார் என்றான். அவனது வாதம் இதுதான்.

அறம்செய விரும்பு, ஐயம் இட்டு உண். இவை இரண்டும் தானதருமங்களை சொல்பவை. அதாவது இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது பொருள். ஆனால், ஏற்பது இகழ்ச்சி என்றும் ஒளவையார் சொல்லிவிட்டாரே. எப்படி இது சரியாகும்.? அதாவது பிச்சை எடுக்காதே என்பதுதானே பொருள்.

“ஒன்றுக்கொன்று முரணாகத்தெரியவில்லையா..? “ என்று மழலையில் கேட்டான் எனது பாலகன். அதனை நானும் குடும்பமும் ரசித்தோம். இப்படியும் மறுவாசிப்பு இருக்கிறது என்றுதான் அச்சமயம் என்னால் ஆறுதலடையமுடிந்தது.

உலகெங்கும் யாசகம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தருமம் செய்து பசிபோக்குபவர்களும் இருக்கிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாக இலங்கை உட்பட ஐந்து நாடுகளுக்கு பயணித்தேன். அவ்வாறு சென்ற நாடுகளில் தெருவோர பிச்சைக்காரர்களை சந்தித்தேன்.

பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு எது? வளர்முக நாடுகளும் வறுமைநாடுகளும் வல்லரசுகளிடம் பிச்சை எடுக்கின்றன. வல்லரசுநாடுகளிலும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். வங்கிகள்  இயங்கும் நகரங்களிலெல்லாம் கடன்காரர்களும் இருப்பார்கள். வங்கிகள் தரும் பிச்சை மாதாந்தம் வட்டியோடு அறவிடப்பட்டுவிடும். கடன் அட்டைகளும் பல்வேறு பெயர்களில் வாடிக்கையாளர்களுக்கு நிபந்தனைகளுடன் தரப்படுகிறது. கடன் அட்டை மோசடிகளும் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டன.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற   Mr.Been    பிரித்தானியா தொலைக்காட்சித் தொடரின் நாயகன் Rowan  Sebastian Atkinson   இடமிருந்த  கடன் அட்டையின் இலக்கத்தையும் யாரோ திருடி இலட்சக்கணக்கான டொலர்களை அபகரித்துக்கொண்டதாக முன்னர் செய்தி வெளியானது.
எங்கள் தமிழ்க்கொழுந்துகளும் புகலிடத்தில் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  பணத்தேவைக்காக திருடுபவர்கள், கடன் அட்டை மோசடி செய்பவர்கள், சீட்டுப்பிடித்து பணம் கையாடல் செய்து தலைமறைவாகின்றவர்கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்துவிட்டு சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து தப்பிவிடும் அரசியல்வாதிகள்.....இப்படி எத்தனையோபேரை தினம் தினம் அறிந்துகொண்டுதானிருக்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நின்றபோது ஒரு அதிசயமான செய்தியை பத்திரிகையில் படித்தேன். நீண்ட காலமாக ரயில்களில் பிச்சை எடுத்துவந்த ஒருவரின் வங்கிக்கணக்கில் இருபது இலட்சம் ரூபா சேமிப்பிலிருந்திருக்கிறது. அத்துடன் அவருக்குச்சொந்தமான இரண்டு முச்சக்கர வண்டிகளும் ( ஓட்டோ ) ஒரு வேனும் வெளியில் வாடகைக்கு ஓடிக்கொண்டிருக்கின்றன. தினமும் இரண்டு மணி நேரத்தில் சராசரி நான்காயிரம் ரூபா வரையில் பிச்சை எடுத்து சம்பாதித்திருக்கிறார். அங்கவீனரான அவர் தினமும் அழுக்கடைந்த ஆடைகளுடன் தனது வாகனத்தில் றாகம ரயில் நிலையத்திற்கு வந்து தனது பிச்சை எடுக்கும் தொழிலை ஆரம்பித்து வந்திருக்கிறார்.

பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் என்பார்கள். அந்த வாக்கு அவரிலும் விளையாடிவிட்டது. ரயில் சேவை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை காத்திருந்து பிடித்தபின்புதான் மேற்படி தகவல்கள் வெளியாகி பத்திரிகைக்கும் செய்தியானார்.

இது இப்படி இருக்க.... ஒரு செய்தியாளரே பிச்சைக்காரன் வேடம் போட்டு மும்பாயில் அசத்திய  கதையையும் சொல்லிவிடுகின்றேன்.
இது பல வருடங்களுக்கு முன்னர்  நடந்தது.

ஒரு பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பணியிலிருந்த நிருபருக்கு வழங்கப்பட்ட ஊதியம் செலவுக்கு போதவில்லை. தனது குறையை பலதடவை நிருவாக பீடத்திடமும் பிரதம ஆசிரியரிடமும் சொல்லிப்பார்த்தார். பலன் இல்லை. ஒரு நாள் கோபித்துக்கொண்டு வெளியே போய்விட்டார். இனிமேல் அவர் கடமைக்கு வரமாட்டார், வேறு எங்காவது வேலை தேடிச்சென்றிருப்பார் என்றுதான் பிரதம ஆசிரியரும் நிருவாகத்தினரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.

மறுநாள் மாலை வேளை,  அந்தப் பத்திரிகை நிறுவனத்தின் வாசலில் ஒரு பிச்சைக்காரன் தோன்றினான். அழுக்கடைந்த ஆடைகள். கால், கைகளில் இரத்தம் கசிந்த கட்டுப்போட்ட பண்டேஜ்கள். அவலட்சணமான தோற்றம். தன்னை உள்ளே அனுமதிக்கவேண்டும், அங்கும் பிச்சை எடுக்கவேண்டும் என்று வாயில் பாதுகாவலர்களிடம் கேட்டிருக்கிறான். பிச்சைக்காரர்களை உள்ளே அனுமதிக்கமுடியாது என்று காவலர்கள் தடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்களையெல்லாம் தள்ளிவிட்டு வேகமாக ஆசிரிய பீடத்துக்குள் நுழைந்துவிட்டான் அந்த பிச்சைக்காரன். அலுவலகம் பரபரப்படைந்துவிட்டது. அதற்குள் அங்கிருந்த ஒரு படப்பிடிப்பாளர் அவனைப்படம் எடுத்துவிட்டார். அவரது மனதிற்குள் செய்திக்கான தலைப்பும் உருவாகிவிட்டது.  பத்திரிகை காரியாலயத்தில் பரபரப்பு, பிச்சைக்காரனின் அட்டகாசம்.

உள்ளே வந்த அந்தப்பிச்சைக்காரன், நேரே பிரதம ஆசிரியரின் அறைக்குள் பிரவேசித்தான். அலுவலகம் ஸ்தம்பிதமாகிவிட்டது. பிரதம ஆசிரியர் பொலிஸை வரவழைக்க தொலைபேசி எடுத்தார்.

உடனே அந்த பிச்சைக்காரன், “ சேர் முதலில் எனக்கு பிச்சை போடுங்கள். அதன் பிறகு போய்விடுகிறேன்” என்றான். அவர் தனது பேர்ஸை எடுக்கும்போது அவனது குரல் எங்கோ ஏற்கனவே கேட்டதுபோல் உறைத்தது. அவரிடம் பிச்சை வாங்கிவிட்டு தனது வேடத்தை  அவர் முன்னிலையில் களைந்துவிட்டு தன்னிடமிருந்த சிறிய பொட்டலத்தை அவர் முன்னால் பிரித்தான். அங்கே நாணயத்தாள்களும் நாணயக்குற்றிகளும் இருந்தன. பிச்சைக்காரன் வேடமிட்டு வந்தவன் அங்கு பணியிலிருந்த  சம்பள உயர்வு கேட்ட அந்த நிருபர்தான். அந்த அலுவலகமே வியப்பில் ஆழ்ந்தது.

அவனது அன்றைய ஒருநாள் உழைப்பு மூன்னூறு ரூபாவுக்கு மேல். வீதிகள், ரயில், பஸ்நிலையங்கள் மக்கள் கூடும் சந்தைகள், மருத்துவமனை, மசூதிகள், தேவாலயங்களின் வாயில்கள்தான் அந்த வருமானத்தை தனக்குத் தந்ததாகச்சொன்னான்.

உங்கள் பத்திரிகையில் வேலை செய்வதிலும் பார்க்க இந்த பிச்சைக்கார உத்தியோகம் மேல். கூடுதல் வருமானம் கிடைக்கிறது எனச்சொல்லிவிட்டு “பம்பாய் நகரத்தில் ஒரு பிச்சைக்காரனின் ஒரு நாள் சராசரி வருமானம் இப்படி இருக்கிறது. ஆனால் அழகான சூட் அணிந்து காரியாலயங்களில் உத்தியோகம் பார்ப்பவர்களின் நாளாந்த சம்பளம் அதற்கும் கீழே இருக்கிறது. இந்த இலட்சணத்தில் நாங்கள் வைட்கொலர் ஜொப்பில் இருப்பதாகவேறு பீற்றிக்கொள்கிறோம்” – எனச்சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றானாம்.

1970 களில் நான் தினமும் வேலைக்காக கொழும்பு செல்வதற்கு எங்கள் நீர்கொழும்பு பஸ்நிலையத்திற்கு வருவேன். பிறப்பிலேயே  ஒரு காலை இழந்து ஊனமுற்ற ஒருவன் ஊன்றுகோல்களுடன் அங்கே பிச்சை எடுப்பான். வேறு பிச்சைக்காரர்களை அவ்விடத்தில் அனுமதிக்கவும் மாட்டான். அந்த பஸ்நிலையத்தின் ஆஸ்தான பிச்சைக்காரன் அவன். தனக்கு வேறு எங்கும் நடந்து சென்று பிச்சை எடுக்கமுடியாது. அதனால் பஸ்நிலையமே தனக்குரியது என்பது அவனது வாதம்.

அங்கு கடமையிலிருந்த பஸ் ஓட்டுனர்களுக்கும் நடத்துனர்களுக்கும் அவன் வட்டிக்கு பணம்கொடுத்து வருவதாகவும் அறிந்தேன்.
அதனால் அங்கு அவன்தான் நாயகன். இரவானதும் அரைப்போத்தல் சாராயத்துடன் தனது இருப்பிடத்திற்குப்போய்விடுவான். அவனை தனியே சந்தித்து படம் எடுத்து பேட்டி  எழுத விரும்பினேன். ஆனால், அவன் அதற்கு சம்மதிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின்பு 1997 இல் இலங்கை சென்றபோதும் அவனை அதே கோலத்தில் நீர்கொழும்பு பஸ்நிலையத்தில் கண்டேன். உடலில் முதுமைக்கான தளர்ச்சியிருந்தது. தாடி வளர்த்திருந்தான். 2012  இல் சென்றிருந்தபோது அவனைக்காணவில்லை. என்னவானான் என்பதும்  தெரியவில்லை.

ராகம ரயில் நிலையத்தில் கைதான தனவந்த பிச்சைக்காரனைப்போன்று நீர்கொழும்பைச்சேர்ந்த அந்த கால் ஊனமுற்ற வட்டிக்குப் பணம் கொடுக்கும் பிச்சைக்காரனும் கைதாகியிருந்தால் பல தகவல்கள் வெளியாகியிருக்கும்.

தற்காலத்தில் இலங்கையில் பிச்சைக்காரர்கள் கைத்தொலைபேசி வைத்திருக்கிறார்கள். வங்கியில் பணம் வைப்பிலிட்டு ATM அட்டைகளும் வைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் யாசகம்  வெவ்வேறு வடிவங்களில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

தற்போது இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நெருக்கடி உச்சம் பெற்றுள்ளது. அதனால், எரிபொருளும் விலையேறும். உலகெங்கும் பொருளாதார நெருக்கடியும் அதிகரிக்கும். வறிய – வளர்முக நாடுகளில் யாசகம் கேட்பவர்களின் எண்ணிக்கை மேலும் பெருகும்.

கொழும்பில் ஒரு பிச்சைக்காரர் தனது உரப்பையில் தான் நாளாந்தம் சேகரித்த நாணயத்தாள்களை அழுத்தி அழுத்தி அமத்தியதை கண்டதாக மற்றும் ஒரு நண்பர் தகவல் சொன்னார். எதிர்காலத்தில் நாணயக்குற்றிகளுக்கு அவசியமற்றுப்போகலாம்.


( தொடரும் )

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்