espo59.jpg - 60.16 Kb

இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ.  அவுஸ்திரேலியாவில் சிட்னியில்  26-11-2014 மறைந்தார்.  கடந்த  காலங்களில்  எனக்குத்தெரிந்த -  நான்  நட்புறவுடன்  பழகிய பல  படைப்பாளிகள்  சமூகப்பணியாளர்கள்  குறித்து எழுதிவந்திருக்கின்றேன்.  வாழும்  காலத்திலும்  அதில்  ஆழமான கணங்களிலும்   அவர்களுடனான  நினைவுப்பகிர்வாகவே  அவற்றை இன்றும்   தொடர்ந்து  எழுதிவருகின்றேன். காலமும்  கணங்களும்  ஒவ்வொருவர்   வாழ்விலும்  தவிர்க்க முடியாதது. எஸ்.பொ.  அவர்களை  1972  ஆம்  ஆண்டு  முதல்  முதலில்  கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில்  ரெயின்போ  அச்சகத்தில்  சந்தித்தேன். அதன்பிறகு  கொழும்பில்  பல  இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன்.   எஸ்.பொ  இரசிகமணி   கனக செந்திநாதன் கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை  உட்பட  பல  இலக்கியவாதிகள்   எமது நீர்கொழும்பு   இந்து  இளைஞர்  மன்றம்  தொடர்ச்சியாக  மூன்று நாட்கள்  நடத்திய  தமிழ்  விழாவிற்கு  வருகை தந்துள்ளனர்.

எஸ்.பொ.  1980  களில்  நைஜீரியாவுக்கு  தொழில்  நிமித்தம்  புறப்பட்ட வேளையில்   கொழும்பு -  ஜம்பட்டா  வீதியில்  மலையக  நாடகக் கலைஞரும்   அவள்  ஒரு  ஜீவநதி  திரைப்படத்தின்   தயாரிப்பாளரும் அதன்  வசனகர்த்தாவுமான   மாத்தளை   கார்த்திகேசுவின்  இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக    நடந்த   பிரிவுபசார  நிகழ்வில்   சந்தித்தேன். மீண்டும்   அவரை  சில  வருடங்களின்   பின்னர்   1985   இல்   ஒரு விஜயதசமி   நாளில்  வீரகேசரியில்  நடந்த  வைபவத்தின்பொழுது என்னைச்சந்திக்க  வந்த   எஸ்.பொ.வின்   ஆபிரிக்க   அனுபவங்கள் பற்றிய    நேர்காணலை  எழுதி   வெளியிட்டேன்.  1987  இல்  நான் அவுஸ்திரேலியாவுக்கு   வந்த    பின்னர்  -  1989  இல்  எனது  இரண்டாவது  சிறுகதைத்தொகுதி  சமாந்தரங்கள்  நூலின்  வெளியீட்டு  விழாவை  மெல்பனில்  நடத்தியபொழுது  சிட்னியில் மூத்த   புதல்வர்  டொக்டர்   அநுராவிடம்  அவர்   வந்திருப்பது   அறிந்து அவரை    பிரதம பேச்சாளராக   அழைத்தேன்.   அன்றைய   நிகழ்வே அவர்   அவுஸ்திரேலியாவில்   முதல்  முதலில்  தோன்றிய   இலக்கிய பொது நிகழ்வு. 1972 முதல் 2010 வரையில்   சுமார்  38  ஆண்டுகள்  மாத்திரமே அவருக்கும்  எனக்குமிடையிலான  இலக்கிய  உறவு   நீடித்தது.   அந்த உறவு எவ்வாறு   அமைந்தது    என்பதுபற்றிய  தகவல்களை  இந்தத் தொடர்   ஆக்கத்தில்    பதிவுசெய்யவில்லை. கலை  இலக்கிய  ஊடகத்துறையில்   ஈடுபடும்  எவரும்  அன்றாடம் சந்திக்கக்கூடிய   அனுபவங்களே    அவர்தம்  வாழ்வின் புத்திக்கொள்முதலாகும்.    எஸ்.பொ.  குறித்து  நானும்  என்னைப்பற்றி அவரும்   ஏற்கனவே   நிறைய   எழுதிவிட்டோம்.    ஒரு கட்டத்திற்குப்பிறகு  எழுதுவதற்கு   எதுவும்   இல்லை என்றாகிப்போனாலும் -  அவர்தம்   எழுத்தூழிய   ஆளுமை   தமிழ்    சமூகப்பரப்பில்   தவிர்க்க  முடியாதது. மூத்த    இலக்கிய  சகா  எஸ்.பொ. வின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என பிரார்த்தித்து அன்னாரின் மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும்  அவரது கலை- இலக்கிய ஊடகத்துறை நண்பர்களின்  துயரத்தில் பங்கேற்று   இந்த   ஆக்கத்தை  தொடருகின்றேன்.

இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ.  என  பரவலாக அறியப்பட்ட  எஸ்.பொன்னுத்துரை   யாழ்ப்பாணத்தில்  நல்லூரில் சண்முகம்  தம்பதியரின்  மகனாக   04-06-1932   ஆம்    ஆண்டு  பிறந்தார். அவருக்கு  இந்த   ஆண்டு  82  வயது. யாழ்ப்பாணத்தில்  தமது  ஆரம்பக்கல்வியையும்  உயர்கல்வியையும் தொடர்ந்து  - மேற்கல்விக்காக  தமிழ்நாட்டிற்குச்சென்றார்.  அங்கு தாம்பரம் கிறிஸ்தவக்கல்லூரியில்  பட்டப்படிப்பை நிறைவுசெய்துகொண்ட   எஸ்.பொ. அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும்  பயின்றார். பாடசாலைப்பருவம்  முதல்  தீவிர  வாசிப்பில்  ஈடுபட்டிருந்த பொன்னுத்துரை -  இளம் வயதிலேயே  சிறுகதை,  கட்டுரை, விமர்சனங்கள்  எழுதி   கலை    இலக்கியத்  தேடலை  தவமாகவே தொடர்ந்தவர்.     ஆங்கில  இலக்கியங்களின்  மீதும் ஈடுபாடு காண்பித்தார். தமது  13  வயதில்   எழுத   ஆரம்பித்திருப்பவர்.  1940  ஆம்  ஆண்டில் அவரது  மூத்த  சகோதரர்  தம்பையா    ( இவரும் தமிழ்ப்புலமையுள்ளவர்)   மாணவர்   தேர்ச்சிக்கழகத்தின்   சார்பில் ஞானோதயம்   என்ற  கையெழுத்து   சஞ்சிகையை  நடத்தியபொழுது அதன்  பக்கங்களை நிரப்புவதற்காகவும்  இலக்கியப்படைப்புகளை அதில்    எழுதியிருக்கிறார். பெரும்பாலான  இலக்கியவாதிகளை   பாரதியும்  பாரதிதாசனும் ஆரம்பகாலத்தில்   பெரிதும்   பாதித்திருப்பதுபோன்று பொன்னுத்துரைக்கும்  இந்த   இரண்டு   ஆளுமைகளும்  தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.    அவர்களின்    கவியாற்றலின்  பாதிப்பினால் பொன்னுத்துரை    எழுதிய   முதலாவது   கவிதை   வீரகேசரியில்   வெளியானது.   அதுவே  அச்சில்  வெளிவந்த  அவரது  கன்னிப்படைப்பு.

1947  இன்  பின்னர்  த.ராஜகோபால்  என்ற  ஒரு  பெரியவரின் தொடர்பினால்  இந்திய   எழுத்தாளர்களின்  படைப்புகள் பொன்னுத்துரைக்கு    படிக்கக்கிடைத்திருக்கிறது.    குறிப்பிட்ட ராஜகோபால்தான்    தன்னையும்   இலக்கியத்தின்பால்  திசை திருப்பிவிட்டவர்   என்று    டொமினிக்ஜீவா   குறிப்பிட்டுள்ளார்.

தமது   பதினைந்து  வயதிலேயே  இந்தியாவின்  புகழ்பூத்த படைப்பாளிகளின்   தீவிர  வாசகராகிவிட்டதனால்  பொன்னுத்துரையும்  இலக்கியப்பிரதிகளை   எழுதத்தொடங்கினார். தம்மை    இந்தத்துறையில்  வளர்த்துவிட்ட    த. ராஜகோபால் என்பவருக்கே   தமது   தீ   நாவலையும்    சமர்ப்பணம்   செய்தார். பொன்னுத்துரையின்   முதலாவது  சிறுகதை  1948  இல்  தந்தை செல்வநாயம்   கொழும்பிலிருந்து  வெளியிட்ட  சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது.   இலங்கை  இதழ்களில்  மட்டுமன்றி தமது  17   வயதில்    தமிழக   இதழ்களான   காதல்இ  பிரசண்ட  விகடன்இ ஆனந்த போதினி முதலானவற்றிலும்  எழுதியிருக்கிறார்.

இலங்கையில்  பல  மூத்த  எழுத்தாளர்கள்  ஆரம்பத்தில் - தமிழகத்தின்   சென்னைப் பாதிப்பினால்  தமது  கதைகளின் பின்புலமாக   மெரீனா  பீச்சையும்  மவுண்ட்  ரோட்டையும் சித்திரித்துக்கொண்டிருந்தபொழுது  தாமும்  அவ்வாறு அந்தப்பகைப்புலத்தை   உள்வாங்காமல்    ஈழத்து    மண்வாசனையுடன் படைப்பிலக்கியத்தில்    ஈடுபட்டவர்களின்   வரிசையில் இணைந்துகொண்டவர்   பொன்னுத்துரை.

முழுமையான  கற்பனாவாதத்தை   தவிர்த்து    யதார்த்த   இலக்கிய மரபினைத்தோற்றுவித்து  -  சிறுகதையில்,  உருவம்,  உள்ளடக்கம் உத்திகளில்  மாற்றங்களை   இலங்கையில்   ஏற்படுத்திய   மூலவர்களில்   ஒருவராக    விளங்கியவர்    பொன்னுத்துரை. இலங்கையின்    இலக்கிய    மறுமலர்ச்சிக்காலத்திலிருந்து பொன்னுத்துரையின்   ஆக்க   இலக்கியங்களை    இனம்காணமுடியும். அதனால்   ஏறக்குறைய   ஏழு தசாப்தகாலம்   ( அண்ணளவில் 68 ஆண்டுகள்)   அயராமல்  எழுதிக்கொண்டிருந்தவர்.

அவரது  முதலாவது  நாவல்  தீ   தமிழகத்தில்  சரஸ்வதி  இதழை நடத்திய  விஜயபாஸ்கரனின்   முயற்சியால்    வெளியானது. இந்நாவல்    ஈழத்து   இலக்கிய    வளர்ச்சியில்  திருப்புமுனையை தோற்றுவித்ததுடன்   சர்ச்சைகளையும்   உருவாக்கியது.  தீயை    தீயிட்டுக்கொளுத்துங்கள்   முதலான   குரல்களும்   எழுந்தன. இவ்வாறு   அவரது    முதல்   நாவல்    தீவிர  வாசிப்புக்கும் கவனிப்புக்கும்    சர்ச்சைக்கும்    இலக்கானது   முதல் பொன்னுத்துரையும்    இலக்கிய   உலகில்   சர்ச்சைக்குரிய மனிதராகவே தென்படலானார். தொடர்ச்சியாக    அவர்   பல   தளங்களில்    அவ்வாறே  விளங்கினார். அதனால்  - அவரை  ஒரு  இலக்கிய  கலகக்காரன்  என்றும்  பரீட்சார்த்த  முயற்சிகளில்  ஈடுபடும்  இலக்கியவாதி  என்றும் அழைக்கப்படலானார். சூழலில்  அவரது    கருத்துக்களுக்கு   நிகழ்ந்த  எதிர்வினைகளினால் அவர்   தன்னை   தொடர்ந்தும்  பல  நிலைகளிலும்  எதிர்வினைகளை எதிர்நோக்கும்   எழுத்தாளராகவே    இனம்காட்டி    வரலானார்.  தொடக்கத்தில்   அவரும்   அவரது   நண்பர்களும்  யாழ்ப்பாணத்தில் பின்வரும் புனைபெயர்களில்   தம்மை    அழைத்துக்கொண்டனர்.

இந்த   நண்பர்கள்   கம்யூனிஸக்கொள்கை   கோட்பாடுகளினால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தவர்கள்.   டானியல்   ( புரட்சி தாசன்)  டொமினிக் ஜீவா ( புரட்சி   மோகன் ) பொன்னுத்துரை   (புரட்சிப்பித்தன்)  பொன்னுத்துரை  இவ்வாறு  முற்போக்கு  கூடாரத்தில்  தமது  பெயரை   புரட்சியுடன்   இணைத்துக்கொண்டாலும்கூட    ஒரு கட்டத்தில்    தனது  புனைபெயரை   பழமை தாசன் என்றும் மாற்றிக்கொண்டவர். அவர்   அடிக்கடி  புனைபெயர்களில்  எழுதுவதை வழக்கமாகக்கொண்டிருந்தாலும்   இலக்கிய    உலகில்   நிலைத்த பெயர்   எஸ்.பொ.   என்ற   இரண்டு    எழுத்துக்கள்தான்.

1956  இல்  ஆசிரியத்தொழில்சார்ந்து   அவரது  வாழ்வு  கிழக்கு மாகாணம்    நோக்கி   திசை   திரும்பியது.    கருத்து  ரீதியாக முற்போக்கு  எழுத்தாளர்களுடன்  முரண்பட்டு,  1960  களில்  கொழும்;பு சாகிராக்கல்லூரியில்  நடந்த  மாநாட்டிலிருந்து  வெளிநடப்புச்செய்தார். அப்பொழுது   அவருடன்    இணைந்து   வெளியேறியவர்கள் இளம்பிறை   ரஹ்மான்,   வ.அ. இராசரத்தினம்   உட்பட   வேறும்  சிலர். இவர்களில்   இராசரத்தினம்    மூதூரைச்சேர்ந்த   ஆசிரியர். மறைந்துவிட்டார்.   மற்றவர்    கொழும்பில்   ஆட்டுப்பட்டித் தெருவில் நீண்ட காலம்    ரெயின்போ   என்ற    அச்சகத்தை  நடத்தி   அரசு வெளியீடு   என்ற  பதிப்பகத்தின்  மூலம்  பல   நூல்களையும் இளம்பிறை   என்ற  மாசிகையையும்   வெளியிட்ட  ரஹ்மான்.   இவர் தற்பொழுது    சென்னையில்    கோடம்பாக்கத்தில்   வசிக்கின்றார்.

பொன்னுத்துரையின்    இலக்கியச்செயற்பாடுகளுக்கு  தொடர்ந்தும் உறுதுணையாக   விளங்கியவர்  ரஹ்மான்.   பொன்னுத்துரையின் இலக்கிய  வாழ்வில்  இரண்டறக்கலந்த  இவரின்  தொடர்ச்சியான நட்பினால்தான்   பிற்காலத்தில்   சென்னையில்   மித்ர   பதிப்பகம் உருவானது.   எனவே   ரஹ்மான்    பொன்னுத்துரையின்   வாழ்வில் மிகவும்   முக்கியமான   இலக்கியசகா.

எஸ்.பொ.   சென்னையில்  மித்ர  பதிப்பகத்தை   உருவாக்குவதற்கு பக்கபலமாக   இருந்தவர்    அவரது   மூத்த   புதல்வன்  டொக்டர் அநுரா. முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்திலிருந்து  வெளியேறிய பொன்னுத்துரை அடுத்த  கட்டமாக  அதற்கு  எதிராக  நற்போக்கு இலக்கிய முகாமை  தோற்றுவிக்க  முனைந்தார். முற்போக்குக்கு   எதிராக  பிற்போக்கு  என்று  எதனையும்  தொடங்க முடியாது.   அதனால்    நற்போக்கு    என்பது - முற்போக்கு - (சய) கம்யூனிஸ்ட்    கட்சி.   பிற்போக்கு  முகாம்  அமைக்க முடியாது. அதனால்   நற்போக்கு  எனச்சூட்டிக்கொண்டோம்  என்று  தமது வாக்கு மூலத்தை  பதிவுசெய்துகொண்ட  பொன்னுத்துரை - காலம் கடந்து   மேலும்   விரிவாக    தேடல்  என்ற    நேர்காணல் ( டென்மார்க் தர்மகுலசிங்கம்  எழுதியது)    நூலிலும்   நற்போக்கு   என்ற  நூலிலும்   முற்போக்கு  இலக்கிய   முகாமிலிருந்து   தான் வெளியேறியதற்கான    நியாயங்களை  விரிவாக    பதிவு   செய்துள்ளார்.

பொன்னுத்துரையிடமிருந்த   ஆழமான   தமிழ்  இலக்கிய   ஆற்றலும் கல்வியினால்   அவர்  பெற்றுக்கொண்ட  ஆங்கில  அறிவுமே பிற்காலத்தில் -   புகழ்பெற்ற  சில  பிறமொழி   இலக்கியப்படைப்புகளை ஆங்கிலமொழி  மூலம்  படித்து  தமிழுக்கு மொழிபெயர்க்கச்செய்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து    தமது  பட்டப்படிப்பை  நிறைவு  செய்துகொண்டு திரும்பியவேளையில்  வடமாகாண  தமிழ்   சமூக   அமைப்பு   குறித்த பிரக்ஞை   அவரை   தீவிரமாக    சிந்திக்கவைத்திருக்கிறது. அவ்வேளையில்   அவருடைய   தோழர்களாக    விளங்கிய   பலர் முற்போக்கான    சிந்தனை    உடையவர்களாகவும்   மார்க்ஸீய கோட்பாடுகளை    வரித்துக்கொண்டவர்களாகவும்   விளங்கினர்.

பொன்னுத்துரையின்   மூத்த  சகோதரி  திருமணம்  முடித்த  எம்.ஸி சுப்பிரமணியம்   வடமாகாண   சிறுபான்மை  வெகுஜன  அமைப்பின் ஸ்தாபகராகவும்  சமூகப்பணியாளராகவும்  விளங்கியவர்.  இலங்கை கம்யூனிஸ்ட்   கட்சியின்   (மாஸ்கோ)   உறுப்பினர்.    பின்னாளில் இலங்கை    பாராளுமன்றத்தில்    நியமன   எம்.பி.   ஆகவும் பதவியேற்றவர். பொன்னுத்துரையின்    குடும்ப  உறவுக்குள்ளும்  அவரது  தோழர்கள் வட்டத்திலும் சாதி  ஒழிப்புக்குறித்த  எண்ணங்களே பரவலாகியிருந்தமையினால்    பொன்னுத்துரையும்   அவர்களினால் உள்வாங்கப்பட்டார்.    அவர்கள்   மட்டத்தில்    பட்டம்   படித்த   ஒருவர் என்ற மேலதிக   தகைமையும்  இவருக்கு   கிடைத்தது.

இலங்கையின்    மூத்த  எழுத்தாளர்கள்   கே. டானியல்,  டொமினிக்ஜீவா, செ. கணேசலிங்கன்    முதலானோருடன்   தினமும்   இலக்கியம் தொடர்பான    உரையாடல்களை   தொடர்ந்தார்.   கணேசலிங்கன்  யாழ். பரமேஸ்வராக்கல்லூரி   மாணவராக   அவ்வேளையில் பயின்றுகொண்டிருந்தார். டானியலும்    டொமினிக் ஜீவாவும்   தத்தமது  குடும்பச்சூழல்களினால் படிப்பைத்தொடர    முடியாமல்   தொழில்களில்   ஈடுபட்டனர். எனினும்   இவர்கள்   நால்வரும்   அடிக்கடி   சந்தித்து  தமக்குள்   ஒரு இலக்கிய  வட்டத்தையும்   ஏற்படுத்திக்கொண்டனர்.   பொன்னுத்துரை ஆசிரியப்பணியில்   ஈடுபட்டார்.    அவர்   மட்டக்களப்பில்  பணியாற்றிய   காலத்தில்  தம்முடன்  பணியாற்றிய   ஆசிரியையை  காதல் திருமணம்   செய்துகொண்டார்.

பொதுவாக    எழுத்தாளர்களின்  மனைவிமார்  தமது   கணவரின் கலை  - இலக்கிய   பொதுவாழ்வில்   அந்நியப்பட்டிருப்பவர்கள்.  ஆனால்,  பொன்னுத்துரையின்  மனைவி  -  மகாகவி   பாரதியின்  கூற்றுப்போன்று  - காதலொருவனைக்   கைப்பிடித்தே   அவன் காரியம்   யாவிலும்   கைகொடுத்து   வாழ்ந்தவர். 

அவரது  பக்கபலம்  பொன்னுத்துரையின்  படைப்பு  இலக்கிய முயற்சியில்   எதுவித  அயற்சிக்கும்  இடம்கொடுக்கவில்லை. அதனால்தான்    பொன்னுத்துரை   சிறுகதை,    நாவல்,    நாடகம், கட்டுரை,    வாழ்க்கை   வரலாறு,   விமர்சனம்,    ஆய்வு,   மொழிபெயர்ப்பு முதலான  பல்துறைகளில்   தடம்   பதித்து  பல   நூல்களை  படைக்க முடிந்திருக்கிறது   என்றும்  கருத  இடமுண்டு.  அத்துடன்  சில நூல்களின்   தொகுப்பாசிரியராகவும்   தமது   பணி  தொடர்ந்திருப்பவர். பின்வரும்   அவரது   நூல்களே  அதற்கு   ஆதாரம்:

வீ - ஆண்மை -  எஸ்.பொ   கதைகள்  - அவா  (சிறுகதைத் தொகுதி)-
  தீ -  சடங்கு  - மாயினி  (நாவல்)
அப்பையா-  கீதை  நிழலில் - அப்பாவும்  மகனும் - வலை -
 முள் - பூ -  தேடல் - முறுவல் - இஸ்லாமும்  தமிழும்
பெருங்காப்பியம்  பத்து (தொகுப்பாசிரியர்)    மத்தாப்பு + சதுரங்கம்
     ? -  (கேள்விக்குறியில் ஒரு நூல்)    நனவிடை   தோய்தல்
நீலாவணன்   நினைவுகள் -   இனி   ஒரு  விதி  செய்வோம்
வரலாற்றில்  வாழ்தல் (சுயசரிதை)
ஈடு  (நாடகம்)  (அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)
மணி மகுடம்  - தீதும் நன்றும்  - காந்தீயக் கதைகள்  - காந்தி தரிசனம்
மகாவம்ச ( மொழிபெயர்ப்பு )

பொன்னுத்துரை கிறிஸ்தவ கல்லூரியில் கற்றதனாலும் கிறிஸ்தவ பாடசாலையில் தொடக்கத்தில் பணியாற்றியதனாலும்தானோ  என்னவோ கிறிஸ்தவர்கள் தமது மதரீதியான சிந்தனையில் அடிக்கடி பயன்படுத்தும் ஊழியக்காரர் என்ற சொற்பதத்தை தமது வாழ்வில் அடிக்கடி பயன்படுத்திவந்திருக்கிறார். ஆனால் இவர் மதம் சார்ந்து அல்ல இலக்கியம் சார்ந்து தன்னை இலக்கிய  எழுத்தூழியக்காரன்  என்றே   குறிப்பிட்டு வந்தவர். பொன்னுத்துரைக்கு இலக்கியத்தில் பல்வேறு இஸங்களிலும் ஆபிரிக்க கறுப்பின மக்களின் இலக்கியத்திலும் ஈடுபாடு நீடித்த அதேசமயம் ஆன்மீக ரீதியான  சிந்தனைகளும்  அவரது  வாழ்வில் தொடர்ந்திருக்கிறது.

பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, தமிழ் நாடு அவுஸ்திரேலியா முதலான நாடுகளிலும் மேடையேறியுள்ளன. தமிழ் நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தனித்தும் எழுதினார் சிலருடன் இணைந்தும் எழுதினார். உதாரணமாக  அவர் இணைந்து எழுதியவை:- மத்தாப்பு - நாவல். எஸ்.பொ.வுடன் இணைந்தவர்கள்: இ.நாகராஜன், இரசிகமணி கனக செந்திநாதன், சு.வேலுப்பிள்ளை, குறமகள். ஈழத்து இலக்கியத்தில் முதல் முதலில் வெளியான பரீட்சார்த்த நாவல் மத்தாப்பு. சதுரங்கம் - கட்டுரை இணைந்தவர்கள்: ஆர். பாலகிருஷ்ணன், வ.அ. இராசரத்தினம், எம்.ஏ. ரஹ்மான், சாலை இளந்திரையன். பொன்னுத்துரை ஆக்க இலக்கியத்துறைக்கு அப்பால் சிற்றிதழ்களை நடத்தும் பெருவிருப்பும் கொண்டிருந்தவர். கொழும்பில் பிரபல்யமான விவேகானந்தா கல்லூரியில் அவர் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் ரஹ்மான நடத்திய இளம்பிறையில் பொன்னுத்துரை உத்தியோகப்பற்றில்லாத ஆசிரியராகவே விளங்கினார். ரஹ்மான் தொடங்கிய அரசு வெளியீட்டு நிறுவனம் அகஸ்தியர் தளையசிங்கம், பொன்னுத்துரை, இரசிகமணி கனகசெந்திநான்  உட்பட பலரது நூல்களை வெளியிட்டது.

பொன்னுத்துரை இலக்கியத்தில் செம்மைப்படுத்தும் மரபினையும் ஈழத்து இலக்கியவளர்ச்சியில் உருவாக்கினார். பொதுவாக படைப்பாளிகள் தமது படைப்புகளை தாமே படைத்துவிட்டு அவசர அவசரமாக வெளியிடுவதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. பொன்னுத்துரை தமது சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனங்களையும் எழுதியபின்னர் மீண்டும் மீண்டும் படித்து செம்மைப்படுத்தும் இயல்பினைக்கொண்டிருந்தவர். மற்றவர்களின் படைப்புகளையும் நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து படித்து கருத்துச்சொல்லி அவற்றில் நீக்கவேண்டிய இணைக்கவேண்டிய செம்மைப்படுத்த வேண்டிய அம்சங்களை குறித்துக்கொடுப்பார்.

தனது படைப்புகளையும் மற்றவர்களிடம் படிக்கக்கொடுத்து கருத்துக்கேட்டதன் பின்னரே மேலும் செம்மைப்படுத்தி அச்சுக்கு அனுப்புவார். இந்த இயல்பு அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்தது. மற்றவர்களின் படைப்புகளை செம்மைப்படுத்தும் பொழுது அவருக்கிருக்கும் நிதானம் சிறப்பானது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் வதியும் பலரது படைப்புகளை அவர் செம்மைப்படுத்தியிருக்கிறார். சென்னையில் மித்ர பதிப்பகத்தின் வெளியீடுகளில் அழகியலையும் அச்சமைப்பிலும் பக்கவடிவமைப்பிலும்  கலைநேர்த்தியையும் காண்பித்தார். கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் ஞானம் இதழின் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக்கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக ஞானம் இதழில் வெளியானது. பின்னர் தீதும் நன்றும் பிறர்தர வரா என்ற தலைப்பில் குறிப்பிட்ட நேர்காணல் நூல் 2007 இல் வெளியானது. 1924 பக்கங்களில் எஸ்.பொ. எழுதிய அவரது சுயவரலாற்று ஆவணம் வரலாற்றில் வாழ்தல் இரண்டு பாகங்களாக ஒரேவேளையில் வெளியானது.

புலம்பெயர்ந்தோர் இலக்கியமே எதிர்காலத்தில் தலைமை ஏற்கும் என்ற கருத்தையும் அவர் சில வருடங்களுக்கு முன்னர் சொன்னதனால் இலக்கியஉலகில் குறிப்பாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது. குறிப்பிட்ட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பதப்பிரயோகத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவரும் பொன்னுத்துரைதான். 1989 இல் இந்தக்கனதியான இரண்டு சொற்களை அவர் மெல்பனில் நடந்த இலக்கிய விழாவில் முன்மொழிந்தார்.

அவருக்கு 2010 இற்கான கனேடிய இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது 2011 ஆம் ஆண்டு கனடாவில் வழங்கப்பட்டது. பொன்னுத்துரையின் பல நூல்களுக்கு தமிழகத்தின் மூத்த முன்னணி படைப்பாளிகளும் விமர்சகர்களும் முன்னுரை வழங்கியுள்ளனர். ஜெயமோகன் தமது ஈழ இலக்கியம் என்ற நூலில் எஸ்.பொ.வை யாழ்ப்பாணத்துப்பாணன் என்றே விளித்து தமது விரிவான பார்வையை பதிவுசெய்துள்ளார்.

சென்னையில் மித்ர பதிப்பகத்தின் சார்பில் முழுநாள் இலக்கியக்கருத்தரங்கினை நடத்தியிருக்கும் எஸ்.பொ. அவரது இலக்கியப்பிரவேச ஆரம்ப காலத் தோழர் மல்லிகை ஜீவாவை அதற்கு அழைத்து பாராட்டி விருதுவழங்கி கௌரவித்தார். பொன்னுத்துரையின் வாழ்வும் பணிகளும் இலங்கை - தமிழ்நாடு - ஆபிரிக்கா - அவுஸ்திரேலியா என்று பரந்துபட்டிருந்தது முக்கியமானது. அதனால் அவர் சர்வதேசப்பார்வை மிக்க ஆளுமையுள்ள படைப்பாளியாகவும் விளங்கினார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்