சிறுகதை: வாரிசுகள் ! - சுப்ரபாரதிமணியன் -
” என்னமோ சீரியசா ஏதோ போயிட்டிருந்தது போல. நான் வந்து வாசல்லெ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சுதா திரும்பிப் பாத்தீங்க .. ”
“ விதவிதமான க்ளயண்ட்ஸ்.. குடிகார நாய் ஒருத்தன் எல்லார்த்தையும் கஷ்டப்படுத்தறான். தற்கொலை பண்ணிக்கவன்னு மிரட்டல் வேற பண்றானம்மா.அதெப்பத்தி பேசிகிட்டிருந்தன்.”
”குடிகாரனோட ஒண்ணு சேத்தி சொன்னீங்களே . அது உங்களுக்கும் சேத்தா ‘
தேவராஜன் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
” செரி.. உள் ரூம்லே போயி உட்காருங்க. வந்தர்ரன்.. மகளே உள்ள போயி உட்காரு. வந்தர்ரேன்” சியாமளா தளதளத்துக் கொண்டிருந்த சேலையை சரிசெய்து கொண்டு உள் அறையைப் பார்த்தாள். அவளின் சேலைத்தலைப்பைப் பிடித்திருந்த குழந்தை தன் மிரட்சிப்பார்வையைத்தவிர்த்து இயல்பாகிப் புன்னகைத்தது.
சியாமளா வாசலில் நின்று பார்த்தபோதே நாலைந்து பேர் மும்முரமான விவாதங்களில் இருப்பது தெரிந்திருந்தது. தேவராஜன் அவர்களைப் பார்த்த கணத்தில் அங்கிருந்தே வா மகளே என்றார்.
அங்கிருந்தவர்கள் அதைக் கேட்டு புருவம் உயர்த்துவது போல் பார்த்தார்கள். மகளே என்ற அவரின் விளிப்புதான் அந்த புருவம் உயர்த்தலுக்குக் காரணம்.புருவம் உயர்த்தினவர்களின் மத்தியில் மீண்டும் சென்று உட்கார்ந்து கொண்டான். முன்வாசலில் இருந்த நாய் குரைத்து புது ஆள் யாரோ வருவதைச் சொன்னது
.” சும்மா இருடா கருப்பா. சும்மா சும்மா விசுவாசத்தைக்காட்டிக்காதே “ தேவராஜன் உரக்கச் சப்தமிட்டார். அந்த ஆள் மறைந்து போனார். நாயின் குரைப்பும் நின்று போய் விட்டது. லேசான சப்தத்தில் அந்த விவாதம் ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு போல் குரல்கள் கேட்டன. முன் வாசலில் கட்டப்பட்டிருந்த கோழியொன்று கரகரத்து அதன் இருப்பைக்காட்டிக் கொண்டிருந்தது.