அறிமுகம்
பார்த்திபனின் 'ஆண்கள் விற்பனைக்கு'பார்த்திபன் 1984 செப்டம்பரில் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். புகலிடத்திலிருந்து எழுதிய ஆரம்பகாலப் படைப்பாளிகளில் முதன்மையானவர். இவர் எழுதிய நாவல்களையோ சிறுகதைகளையோ படைப்புக்கள் சார்ந்த கூற்றுக்களையோ ஈழத்தில் மிகச் சாதாரணமாகப் பெற்றுவிடமுடியாத நிலையே தற்போது பார்த்திபனைப் பொறுத்தவரையில் உள்ளது. இதுவரை பார்த்திபனின் படைப்புக்களுக்கு எழுதப்பட்ட விமர்சனங்களில் 14 சிறுகதைகளை மையமாகக் கொண்டு யமுனா ராஜேந்திரன் ‘கிழக்கும் மேற்கும்’ மலரில் எழுதியதே ஓரளவு விரிவான பதிவாக இருந்தது. மேலைத்தேயப் படைப்பாளிகளில் நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரி, குர்திஸ் எழுத்தாளரான ஸோரக்லி போன்றோரின் படைப்புக்களின் கருத்துலகமும் பார்த்திபனின் கருத்துலகமும் ஒன்றுதான் என ஒப்பிட்டுக் கூறுமளவுக்கு அவரது சிறுகதைகளின் பேசுபொருள் இருக்கின்ற நிலையில் பார்த்திபனைத் தேடவேண்டும் என்ற சிந்தனை உதித்தது. இந்த வகையில் இக்கட்டுரையானது அவரது முழுப்படைப்புக்களையும் ஒரு வாசகனுக்கோ ஆய்வாளனுக்கோ தமிழ்ச்சூழலில் அறிமுகம் செய்தவற்கான ஆரம்ப நிலையாகவே அமைந்துள்ளது.

 

 பார்த்திபனின் படைப்புக்கள்

நாவல்/குறுநாவல்

நாவல்/குறுநாவல் என்ற அடிப்படையில் ஐந்து படைப்புக்களைப் பார்த்திபன் எழுதியுள்ளமை அறியப்படுகிறது. அவற்றுள்;

1. வித்தியாசப்படும் வித்தியாசங்கள் (1987, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 3வது வெளியீடு)
2. பாதி உறவு (1987, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 4வது வெளியீடு)
3. ஆண்கள் விற்பனைக்கு (1988, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 5வது வெளியீடு)
4. கனவை மிதித்தவன் (1988-1993 வரை வெளிவந்த தூண்டில் சஞ்சிகையில் 58 தொடர்களுடன் முற்றுப்பெறாத நாவல்)
5. சித்திரா - பெண் (நமது குரல் சஞ்சிகையில் தொடர்கதையாக வந்துள்ளது. ஆதாரம் :- மங்களேஸ்வரி தூண்டில் - இதழ் 30, ஜூன் 1990)

சிறுகதைத் தொகுப்புகள்

1. நிஜங்கள் (1986, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி 1வது வெளியீடு)
2. ஜனனம் (தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி 2வது வெளியீடு)

தேடிப் பெற்ற தகவல்களின்படி பார்த்திபனின் 25 கதைகள் கிடைத்துள்ளன. அவற்றுள் நிஜங்கள், குற்றமில்லாத கொலைகள், ஒரே ஒரு ஊரிலே, உயரம் பறக்கும் பறவைகள் ஆகிய நான்கும் ‘நிஜங்கள்’ தொகுப்பில் வந்துள்ளன. ‘ஜனனம்’ தொகுப்பில் வந்த கதைகள் பற்றி அறியமுடியவில்லை. ஏனையவை கல்லான கணவன், மனைவி இறக்குமதி, விபத்தை மறந்துவிடு, ஒரு காதல் நிராகரிக்கப்படுகிறது, தெரியவராதது, ஒரு அம்மாவும் அரசியலும், அத்திவாரமில்லாத கட்டிடங்கள், ஒரு தொழிலாளியும் ஒரு தொழிலாளியும், அம்பது டொலர் பெண்ணே, வந்தவள் வராமல் வந்தாள், மேற்கின் ஒரு பக்கம், தூள், பனி பெய்யும் காலம், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், அம்மா பாவம், பசி, ராதா பெரிசான பின், ஒரு நாள், ஒரு பிரஜை ஒரு நாடு, பலமா, தீவுமனிதன் ஆகியனவாகும்.


நாவல்/குறுநாவல்

புலம்பெயர் நாவல்களில் 1980 களின் இறுதிவரை வெளிவந்த படைப்புக்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்து நாவல்கள் படைக்கும் நிலை இருந்துள்ளது. பார்த்திபன், ஆதவன், ஆகியோர் இவ்வகை நாவல்களைத் தந்துள்ளனர். சீதனப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்திய படைப்புக்களாகவே அவை அமைந்திருந்தன.

1. வித்தியாசப்படும் வித்தியாசங்கள்

83 இன் பின்னர் புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் நவீனங்களில் முதலில் வெளிவந்ததாக ‘வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’ என்ற குறுநாவலைக் கருதமுடியும். இது முழுமையாக சாதியத்தையே மையமாகக் கொண்டது. கிருபைராசா வைத்தியசாலையில் மலசலகூடம் சுத்தம் செய்யும் தொழிலாளி. அவரது மகன் ரவியும் அதே ஊரில் பாடசாலை அதிபராக இருக்கும் ராமலிங்கத்தின் மகன் சுகுமாரும் இணைபிரியாத நண்பர்கள். இது சுகுமாரின் தாயாருக்கோ சகோத ரிக்கோ அவளின் சிநேகிதிகளுக்கோ பிடிக்கவில்லை. வெளிப்படையாகத் தாய் பேசியும்கூட சுகுமார் அதைப் பொருட்படுத்தியதில்லை.83 இன் பின்னர் புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் நவீனங்களில் முதலில் வெளிவந்ததாக ‘வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’ என்ற குறுநாவலைக் கருதமுடியும். இது முழுமையாக சாதியத்தையே மையமாகக் கொண்டது. கிருபைராசா வைத்தியசாலையில் மலசலகூடம் சுத்தம் செய்யும் தொழிலாளி. அவரது மகன் ரவியும் அதே ஊரில் பாடசாலை அதிபராக இருக்கும் ராமலிங்கத்தின் மகன் சுகுமாரும் இணைபிரியாத நண்பர்கள். இது சுகுமாரின் தாயாருக்கோ சகோத ரிக்கோ அவளின் சிநேகிதிகளுக்கோ பிடிக்கவில்லை. வெளிப்படையாகத் தாய் பேசியும்கூட சுகுமார் அதைப் பொருட்படுத்தியதில்லை.

கிருபைராசா தன் மகன் படிக்கவேண்டும் தன்னைப் போல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக மேலதிக வேலைகளுக்கும் போகிறான். ஒருநாள் வைத்தியசாலை ஓவசியர் வீட்டில் பெரிய வேலை ஒன்றை முடித்தபின்னர் தனக்கு வீட்டுக்கு வெளியில் வைத்து வழங்கப்படும் சாப்பாட்டை ஓவசியரின் வீட்டுநாய் சாப்பிடும் நிலைக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறான்.

அப்போது நாட்டில் பிரச்சினை. ஷெல் வீச்சு அகோரமாக நடத்தப்பட்டபோது வைத்தியசாலையில் ஓவசியரும் குண்டடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். வைத்தியசாலையைச் சுத்தம் செய்யும் பணியில் இருந்த கிருபைராசா நிலைமையை உணர்ந்து ஓவசியருக்கு இரத்தம் கொடுத்து அவர் உயிர் பிழைக்க உதவுகிறான்.

மறுபுறம் ரவிக்கு மட்டும் சொல்லிவிட்டு இரவோடு இரவாக சுகுமார் இயக்கத்துக்குப் போய்விடுகிறான். இதுதான் ‘வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’ வெளிப்படுத்தும் கதை.

இக்குறுநாவலில் கிருபைராசாவின் பாத்திரத்துக்கு முதன்மை கொடுக்கப்படுகிறது. மறுபுறத்தில் சுகுமார் என்ற பாத்திரம்தான் முக்கியம் பெறுகின்றது. ஆனால் எந்தவொரு பாத்திரமும் இக்குறுநாவலில் அழுத்தமும் முழுமையும் பெறவில்லை என்பது மிகப்பெரிய குறைபாடாக இருக்கின்றது. இரண்டு வர்க்கப் பிரதிநிதிகளை கதையில் உலாவ வைத்து இருவரும் செய்கின்ற தியாகங்கள் சாதிவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதனை உணர்த்துவதே முதன்மையான கருத்தியலாக அமைந்துள்ளது. இதனாலேயே செ.யோகராசா அவர்கள்

“இலங்கைத் தமிழர் மத்தியில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுள் அண்மைக்காலம் வரையும் சாதிப்பிரச்சனை முக்கியம் பெற்று வந்துள்ளது. தற்போது இலங்கையில் இப்பிரச்சனை கணிசமான அளவு குறைந்துள்ளதாயினும் நாட்டுத் தமிழர் மத்தியில் குறைந்து போகவில்லை. ....... இப்பொருள் பற்றி ஏலவே பல நாவல்கள் இலங்கையிலிருந்து வந்துள்ளன. இவ்வித நாவல்கள் எழுதிய டானியல், செ. கணேசலிங்கம். ஆகியோர் நன்கறியப்பட்டவர்களே. இவர்களது நாவல்கள் போன்றே இந் நாவலும் மார்க்சிச நோக்கில் போராட்ட வடிவில் அமைந்துள்ளது. ஆயினும் ஆசிரியரது மார்க்சிசப் பார்வை தெளிவற்றமை கவனத்திற்குரியது. எனினும் இளந்தலைமுறை எழுத்தாளரொருவர் சாதிப் பிரச்சனையுடன் (விடுதலை இயக்கப் பின்னணி) அது தொடர்பு பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதே”(1)

என்று எழுதுகின்றார்.

2. பாதி உறவு

பார்த்திபனின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த ஏனைய நாவல்கள் போல் ‘பாதி உறவு’ என்ற நாவல் புகலிடத்தில் குழந்தை வளர்ப்புப் பற்றிய கருத்தினை வெளிப்படுத்துவதாக அறிய முடிகின்றது. (இக்குறுநாவல் கட்டுரையாளருக்கு கிடைக்கவில்லை) ‘ஆண்கள் விற்பனைக்கு’ நாவலின் இறுதிப்பகுதியில் உள்ள பாதி உறவு பற்றிய விபரமும் அந்நாவல் பற்றிய வாசகர் கடிதங்களும் இணைந்திருப்பதால் இந்நாவல் வெளிவந்துள்ளமை உறுதி செய்யப்படுகிறது.

“பெற்றோரின் கவனக்குறைவால் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் அவர்களின் மனதில் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை இந்தக் கதையில் நன்றாக சித்தி ரிக்கிறீர்கள் ”(2)

என்று மேற்கு ஜேர்மனியில் இருந்து நா.நிருபா பார்த்திபனின் நூலில் குறிப்பிடுகின்றார். செ. யோகராசாவும் இந்நாவலை உள்ளடக்கப்புதுமையும் உளவியற் பாங்கும் கொண்டமைந்தது எனவும் இலங்கை நாவலாசிரியர் எவரும் தொட்டிராத பிரச்சினையைக் கூறுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

“குழந்தைகளுடன் அவர்களின் மனங்களும் படிப்படியான அனுபவங்களினாலும் படிப்பினாலும் தான் வளர்ச்சியடைகின்றன. திடீரென அவர்கள் பெரியவர்களாகி விடுவதில்லை. குழந்தைப் பருவத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. குழந்தைகளைப் பெற்றோர்களுடன் சூழ்நிலைகளும் சேர்ந்தே வளர்க்கின்றன. தமது பிள்ளைகள் தீயவர்களாக வளரவேண்டும் என எந்தப் பெற்றோரும் திட்டம் போட்டு வளர்க்காவிடினும் தங்களது கவனக் குறைவால் பிள்ளைகளை அழிவுப் பாதையில் செல்ல அனுமதித்து விடுகிறார்கள் இதைத் தடுக்க முடியாதா? முடியும் என்பதனை, ரவீந்திரன் நந்தினி குடும்ப வாழ்க்கையூடாக வெளிப்படுத்துகின்றார் நாவலாசிரியர்.”(3)

குழந்தை வளர்ப்பு என்ற பொருட்பரப்பில் உள்ள இந்நாவலை புகலிடத்திலிருந்து பார்த்திபனே முதலில் எழுதியுள்ளார். இது உள்ளடக்க மற்றும் அழகியற்பார்வை என்ற வகையில் பல குறைபாடுகள் உள்ளனவாயினும், புலம்பெயர் நாவல் இலக்கிய உலகின் முதன்முயற்சி என்ற வகையில் கவனிக்கத்தக்கது.

1. ஆண்கள் விற்பனைக்கு

பார்த்திபனின் 'ஆண்கள் விற்பனைக்கு'சீதனப்பிரச்சனையை எடுத்துக் காட்டும் நாவல்கள் புகலிடத்திலிருந்து வெளிவந்தவை மிக அரிது. என்றாலும் பார்த்திபனின் ‘ஆண்கள் விற்பனைக்கு’ என்ற நாவல் இப்பிரச்சினையைக் கருவாகக் கொண்டு அங்கிருந்து முதலில் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றில் வாழும் இரு இளம் பெண்களின் கதையாக நாவல் விரிகின்றது. பத்மா, உமா என்ற இரண்டு பெண்கள். பத்மா அறிவிலும் அநுபவத்திலும் உமாவை விடவும் முதிர்ச்சியானவள். பத்மா விரும்பும் வாலிபன் தன் தங்கையின் திருமணத்தைக் காரணம் காட்டி சீதனம் வாங்கி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறான்.

மறுபுறத்தில் உமா பள்ளிப்பருவ வயதில் நிரஞ்சன் என்ற வாலிபனுடன் கொண்ட காதல் உமாவிடம் வசதியி;ல்லாத காரணத்தால் அவனால் நிராகரிக்கப்படுகிறது. அவன் கொழுத்த சீதனம் வாங்கி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய பெற்றோரால் நிர்ப்பந்திக்கப்படுகிறான்.

இந்நாவலில் வரும் இரண்டு ஆண்களும் தாம் சீதனம் வாங்கித் திருமணம் செய்வதற்காக தமக்கேற்றவகையில் நியாயம் கற்பிக்கின்றனர். இருவருமே தாம் காதலித்த பெண்களை நிராகரித்தும் விடுகின்றனர். இறுதியில் பத்மாவின் கூற்றானது பின்வருமாறு அமைகிறது.

“எப்பவாவது உண்மையான ஆம்பிளை ஆராவது எங்களைச் சந்திக்கும்மட்டும் இப்பிடியே இருப்பம். சந்திச்சா கலியாணத்தைப் பற்றி யோசிப்பம் அப்பிடி சந்திக்கவில்லை யெண்டாலும் பிரச்சனையில்லை. இப்பிடி நாங்கள் இருக்கிறதுதான் வாழ்க்கை.” (ஆண்கள் விற்பனைக்கு)

பார்த்திபனின் இந்நாவல் புலம்பெயர் நாவல்களின் ஆரம்பகால நாவல் என்ற வகையில் முக்கியத்துவம் பெற்றாலும்; மனித உறவுகளின் உணர்வுகளை விடவும் அது எடுத்துக் கொண்ட கருத்திற்கு, குறிப்பாகச் சமூக சீர்திருத்தத்திற்கே முதன்மையளித்துள்ளது. இதனை குப்பிளான் ஐ. சண்முகன் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

“பொதுவாக இவரது படைப்புக்கள் சமூக சீர்திருத்தக் கருத்துக்களுக்காகவே உருவாக்கப்பட்டவையாகும். கருத்துக்களை மையமாக வைத்தே கதைகள் கட்டியெழுப்பப்படுகின்றன. இதனால் மனித உணர்வுகளை அவை கவனமாக சித்திரிக்க முயலப்பட்டபோதும் இரண்டாமிடத்திற்கே போய் விடுகின்றன. உன்னதமான படைப்புக்கள் மனிதனையே சித்திரிக்கின்றன. அவனது எழுச்சி வீழ்ச்சிகளுடன் மகிழ்ச்சி துயரங்களுடனும் குறை நிறைகளுடனும் பலவீனம் உன்னதங்களுடனும் அவனே சித்திரிக்கப்படுகின்றான். பார்த்திபனின் படைப்புக்கள் இந்த இடத்தில் பலவீனப்படுகின்றன. கருத்துக்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையிலான இந்தச் சமனின்மை நிரவப்படுமானால் இவரின் படைப்புக்கள் உயர்ந்ததோர் தளத்திற்கு செல்லலாம். பார்த்திபனின் அடுத்த கட்டப் பாய்ச்சல் அவ்வாறே அமையும் என்ற நம்பிக்கையை ‘ஆண்கள் விற்பனைக்கு’ என்ற இந்த நாவல் ஏற்படுத்துகின்றது.”(5)

ஈழத்தமிழர்களிடையே பாரம்பரியமாக ஆண்களுக்குச் சீதனம் கொடுத்து பெண்வீட்டார் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால் அப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு திருமண பந்தமே இல்லாமல் ஏங்குகின்ற எத்தனையோ இளம்பெண்களின் வாழ்வும், சீதனத்திற்காகவே தம்மை வருத்தி சிறுகச் சிறுகச் சேகரித்து வரும் பெற்றோரும் கூட, தம் வாழ்வின் பெரும் பகுதியை பெண்பிள்ளைகளைக் கரையேற்றுவதற்காகவே செலவழிக்கின்றனர்.

பார்த்திபனின் ‘ஆண்கள் விற்பனைக்கு’ நாவலின் முன்னுரையில் குறிப்பிடப்படும் கருத்து இந்நாவலுக்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.
“சீதனம் என்பது இப்போது பெரிய பிரச்சனை அல்ல என்பதுபோல பலர் பேசிக்கொள்கிறர்கள்; அது தவறானது என்பதை என்னால் நேரடியாகக் கண்டுகொள்ள முடிந்தது. சகோதரிகளுக்கு பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக ‘காச்’ சம்பளத்தில் அடுப்பு வெக்கைக்கு முன்னால் வெந்து கொண்டிருக்கும் சகோதரர்களைச் சந்தித்தபோதும் அட்டகாசமான திருமணக் கொண்டாட்டங்களில் பங்கு பற்றும் பலர் தங்களுக்குள் மணமக்களைப் பற்றிக் கதைத்துக் கொள்ளும் போதும் அரசினால் தஞ்சம் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் வேலை செய்பவர்கள் குடியேற்ற அந்தஸ்து கிடைத்தவர்கள் தங்களுடைய விலை கூடிவிட்டதாக அறிவிக்கும்போதும் ஊரிலுள்ள ஆதனங்களை விற்று கூடவே குடும்பத்தையும் கடனாளியாக்கி விட்டு சீதனப் பொதியுடன் பிராங்போர்ட் விமான நிலையத்தில் வந்து குவியும் தமிழ்ப் பெண்களைப் பார்த்தபோதும் சீதனம் என்பதன் பாதிப்பு தெளிவாகவே புரிந்தது.”(4)

என்று குறிப்பிடும் பார்த்திபனின் கருத்து முக்கியமானது. ஒரு வகையில் ஆண் சகோதரர்கள் தமது சகோதரிகளுக்காக தம்மை உருக்கிக் கொண்டிருப்பவர்கள் தான். இதுவே இவ்வாறான படைப்பை உருவாக்க காரணமாக இருந்திருக்கலாம்.

தமிழர் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சீதனப்பிரச்சினையை முன்வைத்து ஈழத்தில் பல படைப்புக்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. எனினும் இதனை புலம்பெயர்ந்த பின்னரும் படைப்பாளிகள் தொடர்ந்து எழுதியிருப்பது சீதனம் எமது தமிழர் சமூகத்தில் இன்னமும் தீராத ஒரு பிரச்சினை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

பார்த்திபனின் முற்றுப்பெறாத நாவலாகிய ‘கனவை மிதித்தவன்’ மற்றும் தொடர்கதையென அறியப்படும் ‘சித்திரா - பெண்’ ஆகியவை முழுமையாக கட்டுரையாளனுக்குக் கிடைக்காதபடியால் அவை பற்றிய கருத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.

சிறுகதைகள்

பார்த்திபனின் நாவல்களைவிட சிறுகதைகளிலேயே அவரின் எழுத்தின் வீச்சும் தொடர்ச்சியான வளர்ச்சியும் வெளிப்படுகிறது. இன்று புகலிட எழுத்துக்கள் என அடையாளப்படுத்தப்பட்ட சிறுகதைகளைத் தேடுவோமாயின் நிச்சயமாக அதில் பார்த்திபனுக்கும் ஓரிடம் இருக்கும். அந்த வகையில் அவரது சிறுகதைகளை நோக்குவோம்.

இவரின் கதைகள் ஈழத்தமிழரின் வாழ்வனுபம் என்பதையும் தாண்டி உலகில் அகதியாக அலைந்து திரியும் பல்கலாசார மாந்தர்களை நோக்கியும் நகர்கின்றது. இவர் எழுதிய சிறுகதைகளில் எனது வாசிப்புக்கு எட்டியவகையில் ‘தெரியவராதது, வந்தவள் வராமல் வந்தாள், ஒரு அம்மாவும் அரசியலும், ஐம்பது டொலர்ப் பெண்ணே, தீவு மனிதன்’ ஆகியவற்றை அவரின் படைப்புக்களில் முக்கியமானவையாகக் கருதுகிறேன்.

இக்கதைகள் தாய்நாட்டுத் துன்பங்களையும் துரோகங்களையும் சுமந்து வருகின்ற அதேவேளை புலம்பெயர்ந்த அகதியாக, வெளிநாட்டவரால் தீண்டத்தகாதவர்களாக, ஒதுக்கப்படுபவர்களாக கிடந்து உழலுகின்ற ஒரு சாதாரண புலம்பெயர்ந்த அகதி மனிதனின் மனப்போராட்டங்களையும் வெளிப்படுத்துகின்றன.

இங்கு பார்த்திபனின் கதைகள் ஒவ்வொன்றும் எடுத்துக்கொள்ளும் கதைக்களங்கள் மிக முக்கியமானவை. அவர் அக்கதைகளுக்குத் தேர்ந்து கொள்ளும் மொழி மிகச் சாதாரணமானது. கதைகளில் அழகியலைத் தேடிக்கொண்டிருக்க முடியாது. மொத்தத்தில் எல்லாக் கதைகளிலும் பார்த்திபனின் ஆத்மா கிடந்து தத்தளிப்பதைக் கண்டு கொள்ளலாம்.


இவரின் கதைகளில் இருந்து சில பகுதிகளை இங்கு எடுத்துக் காட்டுதல் பொருத்தமென எண்ணுகிறேன்.

ஊரில் அக்கா தங்கையுடன் நிறையப் பொறுப்புக்களுடன் ஜேர்மனி வந்து, அங்கு அகதி அந்தஸ்து கிடைக்காத நிலையில், கூடுதல் வருமானம் பெற, யாருக்கும் தெரியாமல் கனடாவுக்கு விமானத்தில் பயணம் செய்யும்போது விமானம் நடுவானில் வெடித்து சிதறி விடுகிறது. இந்நிலையில் அவனின் மரணம் யாருக்கும் தெரியவராத நிலையினை, மனித மனங்களை உலுப்பிவிடும் வகையில் பார்த்திபனின் ‘தெரியவராதது’ என்ற சிறுகதை எடுத்துக்காட்டுகிறது.

“அமெரிக்காவில் சீவிக்கும் ஒரு கறுப்பனின் பாஸ்போர்ட் எப்படியோ தனக்குரிய வழிகளில் கிடைத்தது. முகம் சுமாராய் பாலுவைப் போலவே. தலைமயிர்கூட சுருட்டத் தேவையில்லை. சென்ற குறையின் பாக்கி இருந்தது. மொத்தத்தில் மாறுவேடம் இல்லாமல் அப்படியே போக இயலக் கூடியதாக இருந்தது………..தெரிஞ்ச பொடியனிட்ட வேற சிற்றிக்குப் போறன் சிலவேளை அங்கயிருந்து ஸ்சுவிசுக்குப் போனாலும் போவன். போனா போன் பண்ணிறன்.” என்று சிவகுமாருக்கும் பொய் சொல்லி வைத்தான். விமானம் இலண்டன் விமான நிலையத்தில் தரித்து சிறிது இளைப்பாறி மீண்டும் பறந்து பல நிமிடங்களின் பின் வானத்தில் வெடித்துச் சிதறி சிதையல்கள் ‘லொக்கபே’ எனும் இடத்தில் வீழ்ந்தன. ………………இரவுமுழுவதும் போதைவஸ்தும் கும்மாளமுமாய் இருந்து நேரம் கழித்து வந்து படுத்து இன்னும் எழும்பாமல் இருக்கும் ‘கிறிஸ்டோபர் பீலி’யை திட்டியபடி வாசலுக்கு வந்த அம்மா ‘லொக்பே’ விமான நிலையத்தில் கிறிஸ்டோபர் பீலி இறந்து விட்ட செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிப்பதாக வந்த தந்தியை வாங்கி வைத்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் குழம்ப, பாலகிருஸ்ணன் எங்கே என்ற உண்மை தெரியாமல் அவன் சுவிஸ் போய்விட்டதாக ஜேர்மனியில் இருந்த நண்பர்கள் நினைத்துக் கொள்ள, இலங்கையில் நடுமூலையில் உழைத்துத் தளர்ந்து போன அப்பாவும் ஓளவையாராகி கொண்டிருக்கும் அக்காவும், துப்பாக்கிகளுக்குப் பயப்பிடும் அண்ணாவும் எதிர்காலக் கனவுகள் பற்றிய ஆரம்பங்களுடன் தம்பி தங்கைகளும் பாலுவின் கடிதம் பணத்திற்காக காத்திருந்தார்கள். காத்திருப்பார்கள்” (தெரியவராதது)

இவரின் ஏனைய கதைகளான ‘அம்மாவும் அரசியலும், இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வந்தவள் வராமல் வந்தாள்’ ஆகியவற்றிலும் அகதி வாழ்வின் பல பிரச்சனைகள் எடுத்துக் காட்டப்படுகின்றன.

‘அம்மாவும் அரசியலும்’ என்ற சிறுகதையில் இரண்டு தாய்மார்களின் அப்பாவித்தனமாக சித்திரிப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்களின் கண்மூடித்தனமான போக்கும் நன்றாகப் பதிவாகியுள்ளன.

“நாசமாய்ப்போன அரசியல், கோதாரி விழுந்த அரசியல் ஐயோ என்ர பிள்ளையை கொண்டு போட்டாங்களே”

என்று தன் மகனின் பிணத்தைக் கட்டிப்பிடித்து வயிற்றில் அடித்துக்கொண்டு மண்ணில் புரண்டு அழுகின்ற அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது மனம் பேதலித்துப் போகின்றது.

பார்த்திபனின் ‘தீவு மனிதன்’ சிறுகதையும் தனிமை அநுபவத்தினைக் கொண்டமைந்த கதைதான். துயர் மிகுந்த வாழ்விலே தூக்கி எறியப்பட்டு தனிமையில் வாழும் மனிதன் சமூகத்துடன் இணைந்து வாழ முற்படும் போது, வரையறுத்த கட்டுப்பாட்டுக்குள் இயைந்து செல்லவேண்டியவன் ஆகின்றான். புலம்பெயர் தேசத்தில் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் தனிமைத் துயருக்கு சிறந்ததோர் எடுத்துக் காட்டாக தீவுமனிதனைக் குறிப்பிடலாம் ‘இச்சிறுகதை ஏ.ஜே. கனகரத்தினா அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, டெல்லியில் இருந்து வெளிவரும் ‘The little magazine’ என்ற இலக்கியச் சஞ்சிகையின் பூகோளமயமாதல் சிறப்பிதழில் (தொகுதி v இதழ் 4+5> 2004) வெளிவந்துள்ளதாக அறியமுடிகின்றது’ (ஆதாரம்:- அ. யேசுராசா, 2005 வைகாசி – ஆனி, தெரிதல் இதழ்-9) இதுவும் இச்சிறுகதையின் சிறப்புக்கு இன்னோர் அடையாளமாகும்.

“எனது தீவு நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது. இந்தத் தீவில் என்னுடன் சேர்ந்து உடனிருந்தவை ஒரு புத்தக அலுமாரி, ஒரு கசற் றெக்கோடர், ஒரு செற்றி, ஒரு யன்னல் மட்டும்தான்……….. எனது தீவில் மட்டும் தான் நான் அழுவேன். இந்தத் தீவில் இருக்கின்றபோது அடிக்கடி அழுகை வருகிறது. வெளியே போகின்றபோதெல்லாம் அணிந்து செல்கின்ற சிரிப்பை கழட்டி எறிந்து விட்டு சுதந்திரமாக அழுவேன். யன்னலுக்கு இது வடிவாகத் தெரியும்” (தீவுமனிதன்)

புகலிடப் படைப்புக்களில் தொழிற்தளத்தை மையப்படுத்திய பலசிறுகதைகளிலும் இந்த அநுபவத்தைக் கண்டுகொள்ள முடியும். புலம்பெயர்ந்த நாடுகளிலே அகதிகளாக வாழும் நிலையிலே நிர்வாக கெடுபிடிகளுக்கும் மிகுந்த மன உழைச்சலுக்கும் மத்தியில் தொழில் புரிந்து வரும் இளைஞர்கள் மத்தியில் இருந்துதான் இந்த அநுபவம் அதிகமாக வந்துள்ளது.

இவரின் சிறுகதைகள் நமக்குத் தருகின்ற அநுபவங்கள் சில புதியவை அவை வட்டாரம் கடந்து நாடு கடந்து தேசம் தாண்டிச் செல்லக்கூடியவை யமுனா ராஜேந்திரனின் கூற்று இதனை வலுப்படுத்துகின்றது.

“ பார்த்திபன் தேர்ந்து கொள்ளும் புலம்பெயர் வாழ்வின் பிரச்சனைகள், இங்கு வாழ நேர்ந்த புலம்பெயர் மனிதர்கள் அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்சனைகள். நான் வாசித்த பெரும்பாலான பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புலகமும் பார்த்திபனின் படைப்புலகமும் ஒன்றுதான் என்கிற அவதானிப்பைப் பெற்றேன். ….இங்கு எடுத்துக் கொண்டுள்ள பார்த்திபனின் பதினான்கு கதைகளில் 1. இந்த நாடுகளுக்கு வந்து சேருவதற்கான பயணகால இடைவெளியில் நேரும் அனுபவங்களைக் குறித்த விசாரணை இருக்கிறது. 2. மேற்கத்தைய சூழலில் வாழ நேர்ந்தாலும் கூட தமது அசிங்கமான நிராக ரி க்கத்தக்க மரபுகளைத் தொடர்ந்து பேணுதல் பற்றிய கோபமான விசாரணை இருக்கிறது. 3. மேற்கின் விடுதலை பெற்ற பாலுறவு பழக்கங்களும் எமது பாலியல்பு வக்கிரங்களுக்கும் இடையிலான தொடர்பு விசாரிக்கப்படுகிறது.”(6)

என்று குறிப்பிடுகின்றார். இவரின் சிறுகதைகளில், வெளிநாட்டவருக்கு மத்தியில் தம்மை அந்நியராய் உணரும் அடையாளப் பிரச்சனையை எடுத்துக் காட்டும் ‘ஐம்பது டொலர்ப் பெண்ணே, அத்திவாரமில்லாத கட்டிடங்கள் ’ஆகிய கதைகளும்; வேலை செய்து கொஞ்சம் பணம் அனுப்பும் ஆசையோடு பயணித்தபோது நடுவானில் விமானம் வெடித்துச் சிதறி யாருக்கும் தெரியவராது போன பாலுவின் மரணத்தை காட்டும் ‘தெ ரி யவராதது, ’மற்றும் பயண வெளியிலே பெண் உடல் சிதைக்கப்படும் கதையைக் கூறும் ‘வந்தவள் வராமல் வந்தாள்’ ஆகிய சிறுகதைகளை மீளவும் மீளவும் படிக்கின்றபோது இன்னும் பல வெளிச்சங்கள் புலப்படும்.

‘இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற சிறுகதையிலே மாஸ்கோ தெருவில் அநாதையாக செத்துக் கிடக்கும் புனிதாவின் கதை பயண வெளிகளின் தெரியாதுபோன எத்தனையோ மரணங்களை ஞாபகப்படுத்தும் கதையாக அமைந்து விடுகிறது. இக்கதையில் இருந்து மனதை உலுக்கிவிடக்கூடிய ஒரு உரையாடல் பின்வருமாறு.

“ஆர்?

அது நான் சிவா கதைக்கிறன்.

எந்தச் சிவா?

ராங்கி சிவா. இஞ்சை மொஸ்கோவிலை நிக்கிறன்.

என்ன புதினம்?

கேட்ட காசு தராததாலை புனிதாவை கோட்டல்லை விட்டிட்டு
வந்தனாங்களெல்லோ?

அவளுக்கென்ன? றெட்லைட் ஏரியாவிலை கொண்டுபோய் விட்டிட்டாங்களே?

அவன் செத்துப் போனாள். ஒரு குறுக்கு றோட்டிலை கிடந்து பொலிஸ்
சவத்தைக் கண்டெடுத்திருக்கு.

ஏதேன் டொக்குமென்ற்ஸ் அம்பிட்டிட்டுதோ?

என்னெண்டு. அதுதான் ஐடென்ரிக்காட்டிலையிருந்து எல்லாத்தையும் வாங்கி
வேற ஆளுக்கு வித்தாச்சே. ஆள் ஆர், எந்த நாடு எண்டு கண்டுபிடிக்கக்
கூடிய எந்த டொக்குமென்ற்சும் இல்லை. இதைவிட மினைக்கெடுறளவுக்கு
ரஷ்யப் பொலிசும் இல்லை.

அப்பாடா. அது சரி இப்ப என்னத்துக்கு எடுத்தனி?

இல்லை. என்ன இருந்தாலும் அவள் எங்கடை ஊர்க்காரி.
கடைசி நாங்கள் ஆரெண்டு சொல்லாமல் அவளின்ரை
சொந்தக்காரருக்கெண்டாலும் அடிச்சுச் சொல்லுவமோ?

பேப்…மண்டைக்கை ஒரு கொட்டையும் இல்லை. ஒண்டையும் நாத்தாம
உன்ரை அலுவலைப் பார்.”
(இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்)

என்றவாறு அமைகின்ற இக்கதை கடலிலும் பனிவெளிகளிலும் மலை இடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமலே காணாமற் போன எமது ஈழத்தமிழர்களின் கதைகளுக்கு ஆதாரமாக அமைகின்றது. மேலும்,

“ பார்த்திபனின் கதைகளில் புராணீகங்களும் தொல் மரபுகளும் இசையும் நளினங்களும் இடம்பெறுவதில்லை. சந்தோசத்தில் வீசுகிற சொற்கள் பார்த்திபனுக்கு அன்னியமானது. மலம் போன்ற சொற்கள் மனதின் வெக்கையை வெளிப்படுத்த தலித் கலை வெளிப்பாடுகளில் எடுத்துக் கொள்கிற இடத்தை இங்கு பார்த்திபனின் கெட்ட வார்த்தைகளும் துக்கம் பீறிடும் உணர்ச்சிகளும் எள்ளலும் கோபமும் எடுத்துக் கொள்கின்றன. …….புலம்பெயர் தமிழ் இலக்கியம் உலகின் புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் அவ்வகையில் பார்த்திபன் காட்டும் தமிழ் மனிதனின் உலகம் சர்வதேச புலம்பெயர் இலக்கியத்தின் படைப்புலகுக்குள் நிச்சயமாகவே நுழைந்து விட்டது.” (7)

என்று யமுனா ராஜேந்திரன் கூறுவதற்கு பல சிறுகதைகள் உதாரணமாகவே இருக்கின்றன.


தொகுப்பாக

பார்த்திபன் கவனிக்கப்படவேண்டிய படைப்பாளி. அண்மையில் ‘ஜேர்மனியில் தடம்பதித்த தமிழர்கள்’ என்ற நூலினைப் பார்க்கக் கிடைத்தது. அதில் இப்பொழுது எழுதிப் பழகிக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் பற்றிப் புகழ் பாடப்படுகின்ற பக்கங்களில் புலம்பெயர்ந்த ஆரம்பகால ஈழப்படைப்பாளிகளில் ஒருவராகிய பார்த்திபன் தொகுப்பாளர்களின் கண்ணுக்குத் தென்படாமற் போனது துரதிஷ்டமானதே. இலக்கியம், வளர்ந்து வந்த வரலாறே தெரியாத இன்றைய ‘டவுண்லோட்’ படைப்பாளிகளும் அவர்களைத் தூக்கிப் பிடித்து முதுகுசொறிகின்ற இலக்கியவாதிகளும் இப்படித்தான் தலையை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கின்ற கதையாக தமிழ்ச்சூழலில் மேலோங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு பார்த்திபனுக்கு நேர்ந்த அவலம் என்னவென்றால்

1. வெளிவந்த தொகுப்புக்கள்கூட மிகக் கடினப்பட்டு அச்சடிக்கப்பட்ட பிரதிகளாகவே இருந்துள்ளன. அவை தட்டச்சு செய்யப்பட்டு சாதாரண தரத்தில் பிரதி எடுக்கப்பட்டவை. அவற்றில் சில பிரதிகளே ஈழச்சூழலுக்குக் கிடைத்துள்ளன.

2. பார்த்திபனின் எழுத்துக்களை பார்த்திபனிடமே பெறமுடியாத நிலையில் அவரின் தொடர்புநிலை இருக்கின்றது (ஒருவிதத்தில் எழுத்துலகத்தில் இருந்து ஒதுங்குதல் மற்றும் தொடர்பு இல்லாமை)

3. புகலிடத்தில் இருந்தவர்களிற்கூட குறிப்பிட்ட சிலரைத்தவிர பார்த்திபனின் எழுத்துக்களுக்கு முறையான விமர்சனத்தினை முன்வைக்கவில்லை.

இவையெல்லாம் பார்த்திபனின் படைப்புக்கள் மீள் பதிப்புப் பெறவேண்டிய தேவையை வலியுறுத்துகின்றன.

கதைகளின் மொழிநடை ஈழத்திற்கே உரிய இயல்பான நடை. அதிலும் ஈழத்து மாந்தர்களின் உரையாடல்களில் வரும் மொழி இயல்பானது. பாத்திரவார்ப்பிற்கு ஏற்ப மொழியைச் செதுக்கியிருப்பது சிறுகதைகளில் முதன்மை பெறுகின்றது. இதன் உச்சமாக ‘தீவுமனிதன்’ சிறுகதை அமைந்திருக்கின்றது. நாவல் குறுநாவல்களில் குறைபாடுகள் இருப்பினும் சிறுகதைகளே பார்த்திபனின் படைப்புக்களைத் தூக்கி நிறுத்த வல்லவையாக உள்ளன.

மேலைத்தேயப் படைப்பாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படவேண்டிய அளவுக்கு அவரின் சிறுகதைகளின் கருத்தியல் அமைந்திருத்தல் அடுத்து கவனிக்க வேண்டியதாகும்.

இன்று உலக அளவில் அதிகாரத்தாலும் ஆயுதத்தாலும் ஒடுக்கப்படுகின்ற மனிதக்குழுமம் நாடோடி வாழ்வுக்கும் மனிதகுல அழிவுக்கும் அடையாள இழப்பிற்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறது. அந்தத் துயரங்களை எல்லாம் கடந்து செல்லக்கூடிய சில படைப்புக்கள் பார்த்திபனிடம் வந்து சேர்ந்துள்ளமை புலம்பெயர் படைப்புக்களின் வலிமையாகக் கொள்ள முடியும். எனவே 80 களில் இருந்தான ஈழத்தமிழரின் புலம்பெயர் படைப்புக்களின் செல்நெறியைக் கண்டுகொள்வதற்கு பார்த்திபனின் படைப்புக்கள் ஆதாரமாக இருக்கின்றமையை அவரின் படைப்புக்களை ஆழ்ந்து வாசிப்போர் புரிந்து கொள்வர். இதுவே அவரின் படைப்புக்களின் வலிமையுமாகும்.

அடிக்குறிப்புக்கள்

1. யோகராசா. செ. கலாநிதி: 2004 ஜூலை, ‘இலங்கைப் புகலிட நாவல்கள்’. சிந்தனை இதழ் 2, தொகுதி XIV, திருநெல்வேலி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கலைப்பீடம் ப.35
2. நிருபா. நா: 1998, ஆண்கள் விற்பனைக்கு (வாசகர் கடிதத்தில்), மேற்கு ஜேர்மனி, தென்னாசிய நிறுவனம், ப.126
3. யோகராசா. செ. கலாநிதி: மேலது 1, ப.35
4. பார்த்தீபன்: 1998, ஆண்கள் விற்பனைக்கு, மேற்கு ஜேர்மனி, தென்னாசிய நிறுவனம், ப.5
5. சண்முகன். ஐ. குப்பிழான்: 2003, அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள், கொழும்பு, நிகரி வெளியீடு, ப.41
6. யமுனா ராஜேந்திரன்: 1997, ‘பார்த்திபனின் பதின்னான்கு சிறுகதைகளை முன்வைத்து புலம்பெயர் இலக்கியம் குறித்து’, கிழக்கும் மேற்கும், (தொகுப்பாசிரியர் - பத்மநாதஐயர்) லண்டன், தமிழர் நலன்புரிச்சங்கம் ஐ. இ, ப.24
7. யமுனா ராஜேந்திரன்: மேலது 6

உசாவியவை

1. மார்க்ஸ். அ: 1997, வெள்ளைத்திமிர், ‘பழைய ஞாபகங்களில் எங்கள் சீவியங்கள் கழிகின்றன’ புலம்பெயர்ந்த தமிழர் பார்த்திபனுடன் ஓரு நேர்காணல், கோவை, விடியல் பதிப்பகம்.
2. குணேஸ்வரன். சு: 2006, “இருபதாம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை புனைகதைகள் பற்றிய ஆய்வு” (பதிப்பிக்கப்படாத முதுதத்துவமாணி ஆய்வேடு) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், உயர்பட்டப் படிப்புகள் பீடம்.
3. தூண்டில் சஞ்சிகைகள் 1-58
4. மங்களேஸ்வரி: 1990, ‘மேற்கு ஜேர்மன் தமிழ்ச் சஞ்சிகைகள் ஆக்கங்களில் பெண்நிலைவாதக் கருத்துக்கள்’, மேற்கு ஜேர்மனி, தூண்டில்.
5. சிறீரங்கன். ப. வி: 1990, ‘ஆண்கள் விற்பனைக்கு - ஒரு விமர்சனம்’, மேற்கு ஜேர்மனி, சிந்தனை.
6. www.noolaham.org

நன்றி – கலைமுகம் இதழ் 51, ஏப்ரல் யூன் 2011
http://kathiyaalkal.blogspot.com/2011/07/blog-post.html
பதிவுகளுக்கு அனுப்பியவர்: சு. குணேஸ்வரன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்