- வெங்கட் சாமிநாதன் -இவையத்தனையும் முதலில் சொல்லிவிட்டு, இப்பொழுது நாம் கூத்தின் முதல் நாளின் அரங்கேற்றத்துக்குத் திரும்பப் போவோம், அதாவது திருவிழாவின் 10வது நாள்.அன்றையச் சம்பவம் திரௌபதியின் திருமணம்.பாஞ்சால மன்னனின் அரண்மனையில் நடக்கும் சுயம்வரத்தில் ஆரம்பிக்கிறது நாடகம்.அரசர் வில்லை எடுத்து வர ஆணையிடும் கட்டத்தில் மேடையில் நாடகம் நின்று போகிறது.இதற்குள் நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மல்லர்கள் போல் வேடமணிந்த சில நடிகர்கள் (பழந்தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் போர்வீரர்கள்/ மல்யுத்தக்காரர்கள் இவர்கள்) கோவிலுக்குச் சென்று 30 அடிக்கு 40 அடி நீளத்தில் மூங்கிலால் செய்யப்பட்டு பூஜை செய்வித்து புனிதப்படுத்தப்பட்ட ஒரு வில்லை எடுத்து வருகிறார்கள். கிராமத்து மக்களும் பறை மற்றும் சிலம்பு ஒலிக்க இவர்களுடன் வருகிறர்கள். ஆங்கில எழுத்து F  போன்ற ஒரு மரச் சாதனமும் வருகிறது. ஒரு வில்லில் மரத்தாலான ஒரு மீனுடன் ஒரு சின்னச் சக்கரம் உள்ளது. அந்த வில்லைத்தான் அங்கு கூடியுள்ள மன்னர்கள் எடுக்க முயற்சி செய்து தோற்பார்கள், ஆனால் அருச்சுனன் அதைத் தூக்குவதில் வெற்றியடைந்து இலக்கையும் அடித்து விடுவான். கூத்து நிகழ்ச்சி திரௌபதியின் திருமணத்துடன் நிறைவடையும். மறுநாள் திரௌபதியின் திருமணம் மீண்டும் கொண்டாடப்படும், அதாவது தென்னிந்தியக் கோவிலில் இத்தகைய கோவில் விழாக்களில் நடக்கும் அனைத்து சடங்கு முறைகளுடனும் அது நடைபெறும். கோவிலின் கர்ப்பக்கிருகத்தில் திரௌபதியின் சிலைக்கருகே அருச்சுனன் சிலையும் வைக்கப்படுகிறது.அனைத்துத் திருமணச் சடங்குகளும், அம்மனின் கழுத்தைச் சுற்றித் தாலி கட்டுவது உட்பட அனுஷ்டிக்கப்படுகின்றன.மறுபடியும் அந்தச் சிலை கிராமத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, கிராமம் முழுவது விழாக்கோலம் கொள்கிறது.பிறகு அம்மன் கோவிலுக்குத் திரும்புகிறாள்.இங்கே பண்டைய காலத்து அம்மன் மற்றும் காவல் தெய்வத்தை திரௌபதி அம்மனுடன் இணைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.காவியம் (பிரசங்கி), நாடகம் (தெருக்கூத்து) மற்றும் சடங்கு (அம்மன்) என்பவற்றின் ஒருங்கிணைப்பும் இங்கே நடக்கிறது.ஒவ்வொன்றும் அவற்றின் தனி அடையாளத்தைக் கைக்கொண்டிருக்கையிலேயே, அவற்றிடையேயான உறவுடன் ஒன்றிணைவது இது.

மற்றொரு நாள் நாடகத்தில் சுபத்திரையின் திருமணச் சம்பவம் நடிக்கப்படும்போதும், திருமணம் மீண்டும் அத்தனை வைபவங்களுடனும் கொண்டாட்டத்துடனும் நடக்கும். திருவிழாவின் மிக முக்கியமான நாள் திரௌபதி வஸ்திராபகரணம் நடிக்க எடுத்துக் கொள்ளப்படும் நாள்.சம்பவங்களின் கோர்வையில், நாம் நினைவில் கொள்ள வேண்டியது, திரௌபதி நாடகத்தில் ஒரு பாத்திரம் மட்டுமல்ல, அவள் கிராமத்தின் காவல்தெய்வம்.சூழலில் படிப்படியாக சுருதி ஏறிக்கொண்டு போவதற்கும். உணர்ச்சிகளின் தீவிரம் அதிகரித்துக் கொண்டு போவதற்கும், பார்வையாளர்களின் சீற்றத்துக்கும் இதுவே காரணம். திரௌபதியின் துகிலுரிப்பு நடக்கும் தருணம் வரும் சமயத்தில், கிட்டத்தட்ட பொழுது விடியும் நேரம், கூத்து முந்தைய இரவு 9.30 மணியிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது.அது வரையான உரத்த கோபவெளிப்பாடுகள், தரை அதிரும் வகையில் மிதித்தல், துரிதமான உடற்சுழற்சிகள் இவற்றின் தாக்குதலால் படிப்படியாய் சூழலின் பதற்றம் அதிகரித்துள்ளது.திரௌபதி மேடைக்குள் அழைத்துவரப்பட்டு அவளது ஆடை இதோ நீக்கப்படப் போகிறது.இப்பொழுது நாடகம் நிறுத்தப்ப்டுகிறது. கட்டியக்காரன் மேடைக்குள் வந்து திரௌபதி அம்மனைப் புகழ்ந்து பாடி மன்னிப்புக் கேட்கிறான். கற்பூரம் ஏற்றி பிரார்த்தனை செய்கிறான் “அம்மா, நாங்கள் இங்கு செய்வதற்கெல்லாம் எங்களை மன்னித்துவிடு.பாண்டவர்களைப் பொறுத்தது போல் எங்களையும் பொறுத்துக்கொள். கருணைகாட்டு, ஏனென்றால் நாங்கள் எங்கள் வயிற்றுக்காக இதைச் செய்கிறோம்” என்று சொல்லி புனித ‘வீரகந்த” த்தை திரௌபதியாக நடிப்பவருக்கும் துச்சாசனனாக நடிப்பவருக்கும் கொடுக்கிறான். திரௌபதியின் வஸ்திராபகரணம் தொடங்குகிறது.திரௌபதி கிருஷ்ணனிடம் பாதுகாப்பு வேண்டிக் கதறுகிறாள். துச்சாசனன் அவளை மேடைக்கு இழுத்துக் கொண்டுவந்திருப்பதாகப் பொருள்.ஆனால் அவள் துச்சாசனன் பிடித்திருக்கும் ஒரு கோலின் மறுமுனையைப் பற்றிக் கொண்டு ஓடிவருகிறாள். நாடகத்தின் திரௌபதி ஒரு ஆண் நடிகர்தான் இருப்பினும் துச்சாசனன் அவளைத் தொடுவதுகூட இல்லை.துகிலுரிப்பு சமயத்தில், பார்வையாளர்கள் ’கோவிந்தா’ ‘கிருஷ்ணா’ என அலறிக்கொண்டு திரௌபதியைப் பாதுகாக்க மேடைக்கு ஓடிவருகிறார்கள். பலருக்கும் சன்னதம் பிடிக்கிறது, பார்வையாளர்களில் நிதானமாக இருப்பவர்கள் அப்படி ஆவேசம் பிடித்தவர்களையும் மேடையை நோக்கி ஓடுபவர்களையும் இறுக்கமாக பிடித்துக் கொள்கிறார்கள். திரௌபதி மற்றும் துச்சாசனன் வேடமணிந்திருக்கும் நடிகர்களும் ஆவேசம் பிடித்து வெறிபிடித்ததுபோலக் காணப்படுகிறார்கள் அல்லது மயக்கமடைகிறார்கள். கிராமத்து நாடகவடிவில் திரௌபதி வஸ்திராபகரணத்தைக் கண்டவர்களுக்கு இந்தச் சூழலுக்கு வெளியே திரைக்கு முன் மாநகரப் பார்வையாளர்களுக்காக நடக்கும் ஒன்றரை மணிநேர நாடகங்களில் வழங்கப்படுவது உயிரிழந்து காணப்படும். தென்னிந்திய நாட்டார் கலைவடிவங்கள் அனைத்தையும்விட தெருக்கூத்தின் பெண் கதாபாத்திரங்கள் காணச் சகிக்காதபடி இருந்தபோதிலுமே இப்படி.(ஒரு தாக்கம்.)

இந்த நாடகப்பாத்திரம் அவளது வழக்கமான ஆடையின் மேல் இறுதி அடுக்காய் சுற்றிக்கொண்டு அவளது தூய்மையைக் காப்பாற்றும் இந்தப் புடவை கிராமத்தின் இடையர் சமூகத்தினரால் நன்கொடையாய் வழங்கப்படும், இது அவர்களது பரம்பரை உரிமை என்பது அவர்களுடைய கோரிக்கை, இது பொதுவாகவும் ஆமோதிக்கப்பட்ட ஒரு விஷயம். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைப்படி யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் அல்லவா அவளைக் காப்பாற்றியது?இதைக் கொடுப்பதினால் திரௌபதி அம்மனின் விசேஷமான ஆசிகளைத் தாம் பெறுவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.
பதிமூன்றாம்   நாளைய நிகழ்ச்சி அருச்சுனன் பாசுபதாஸ்திரத்துக்காக சிவனுக்குத் தவம் புரியும் சம்பவம் பற்றியது.  இந்த சம்பவத்துக்கு முன்னேற்பாடாக, கிராமத்தினர் திருவிழாவின் துவக்கத்துக்கு முன்பே இதற்கென குறித்து வைத்துக்கப்பட்ட ஒரு 80 அடி பனைமரத்தை வீழ்த்தப் போவார்கள். அவ்விடத்துக்கு சடங்குகளுடன் ஊர்வலமாகப் போய், அந்த மரத்துக்குப் பூஜை செய்து பின் அதை வீழ்த்துவார்கள்.பின்பு அதை மேளதாளத்துடன் ஊர்வலமாக அரங்குக்கு எடுத்து வருவார்கள்.அதை நேர்த்தியாக சீவி 2 அடி’ இடைவெளியில் மூங்கில்களைப் படிபோலச்சொருகி ஏணி போலச் செய்வார்கள்.மரத்தின் இலைகளை நீக்கிவிட்டு அதன் உச்சியில் ஒரு மேடை எழுப்பப்படும்.தென்னிந்தியக் கோவில்களின் சுவர்களில் இருப்பதைப்போல சிவப்பும் வெள்ளையுமாய் வண்ணங்கள் அடுத்தடுத்து அடிக்கப்படும்.பின் ஒரு ஆழமான குழியில் அது இறக்கப்பட்டதும் குழி மூடப்பட்டு, ஒரு உயரமான கம்பத்தின் மேலான மேடையும் அதன் உச்சியை அடைவதற்கான படிகளும் அமைக்கப்பட்டுவிடும்.நிகழ்ச்சி நடக்கும் தினத்தன்று, கிராமத்துப் பெண்கள் அந்த இடத்தை சாணத்தால் சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட்டு அலங்கரித்திருப்பார்கள். அந்தக் கம்பம் சிவனின் இருப்பிடமான கைலாய மலையைக் குறிக்கிறது: அருச்சுனன் அதன் மேலேறித் தவம் புரிவான். இது கோவிலுக்கு அருகில் கூத்து நடக்கும் இடத்துக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும். நிகழ்ச்சியன்று இரவு 9.30 மணிக்கு அருச்சுனன், பூர்வாங்க சடங்கு பூஜை, ஒப்பனை எல்லாம் முடிந்ததும், பம்பை ஒலிக்க முழு வேடத்துடன் கோவிலுக்குப் போய் அம்மனை வழிபட்டு பின் தன் நடிப்பை ஆரம்பிக்க வருவான்.
தன் சகோதரர்களிடம் விடைபெற்று அந்தக் கம்பம், அதாவது சிவனின் இருப்பிடமான கைலாய மலையை நோக்கி நடப்பான். கிராமத்தில் மணமாகிக் குழந்தைகளில்லாத பெண்கள் இப்போது அதைச் சுற்றிக் கூடியுள்ளனர். அவர்கள் மங்கள ஸ்நானம் செய்து, ஈரப்புடவையுடனேயே, மணிக்கட்டுகளில் மலர்வளையங்களைக் கட்டிக்கொண்டு, வெற்றிலைப் பாக்கு, தேங்காய்கள், வாழைப்பழங்கள் போன்றவற்றை தாம்பாளங்களில் ஏந்திக்கொண்டு அந்த பனைமரக் கம்பத்தை வழிபாட்டுமுறைப்படி சுற்றிவந்திருப்பார்கள். இசைக்குழுவினர் கம்பத்துக்குச் சற்று தூரத்தில் ஒரு மரப்பலகையில் அமர்ந்து பாடிக்கொண்டும் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.அருச்சுனன் விருத்தப்பாடல்களைப் பாடிக்கொண்டு மூன்று முறை கம்பத்தை சுற்றி வருகிறான்.இந்த நிகழ்வுக்கான பாடல்கள் சைவ அருட்தொண்டர்களின் பாடல்களிலிருந்து அண்மைய கடந்தகாலத்தில் சிவனைப் புகழ்ந்து இயற்றப்பட்ட பாடல்கள் வரை எடுக்கப்பட்டிருக்கும். அவனும் தன் கையில் ஒரு மஞ்சள் துணியில் தேங்காய், வெற்றிலைகள், வில்வ இலைகள், பூக்கள் இவற்றை எடுத்துச் சென்று, சிவனை பூஜிக்க மேடை மேலேறி சிவனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறான். மேலே வரும்வரை பல மணி நேரங்களுக்கு அவன் நிதானமாக ஒவ்வொரு பாட்டாகப்பாடி, படிப்படியாய் மேலேறி உச்சியை அடைந்ததும், மரப்பலகையில் அமர்ந்துள்ள வாத்திய கோஷ்டியும் அவன் பாட்டுக்குத் துணையாக இசைத்துப் பாடுவார்கள். இறுதியில் சிவன் ஒரு வேடன் வேடத்தில் வெளிப்பட, 80 அடி உயரக் கம்பத்தின் மேலிருக்கும் அருச்சுனனுக்கும், நிலத்தில் நின்றிருக்கும் சிவனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. வேடன் வேடத்தில் வந்திருப்பது சிவன் என்பதை அறிந்ததும் அருச்சுனன் கற்பூரம் ஏற்றி மேலிருந்து பூஜை செய்கிறான். அர்ச்சிக்கும் மலர்களும், வில்வ இலைகளும், விபூதியும் விழ ஆரம்பிக்கையில், கீழே கம்பத்தைச் சுற்றி நின்றிருக்கும் பெண்கள் தங்கள் புடவை முந்தானைகளை விரித்து அவற்றைத் திரட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆசி கிடைத்துவிட்டது, இனி அவர்கள் குழந்தையின்றி இருக்கமாட்டார்கள்.அன்றைய நாடகம் தவம் முடிந்து பாசுபதாஸ்திரத்தைப் பெறுவதுடன் முடிகிறது.

பதினைந்தாம் நாளின் கதை விராடபர்வத்தில் நடக்கும் சம்பவங்கள்.அன்றைய தினம் நாடக அரங்கம் ஊருக்கு வெளியேயுள்ள ஒரு வயல்வெளிக்கு நகர்கிறது. கிராமத்தின் ஆடுமாடுகள் வழிதவறிப் போய்விடாமல் இருப்பதற்காக அங்கேயே ஓட்டிச்செல்லப்பட்டு சூழப்பட்டுள்ளன..அம்மனின் விழா ஊர்வலம் அங்கு செல்கிறது.பிரசங்கியும் அங்கே இடம்மாறி தன் விளக்கவுரையை அங்கே நடத்துகிறார்.அலிவேடம் பூண்டுள்ள அருச்சுனனும், விராடத்தின் உத்தரகுமாரனுடன் பறை இசை ஒலிக்க அங்கே வந்து காளியின் பூஜைமாடத்தில் பிரார்த்த்னை செய்து கோவிலின் புனித வாளால் அங்குள்ள ஒரு வாழை மரத்தை வெட்டியபின் ஆடுமாடுகளை கிராமத்துக்குள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கிறான். கைப்பற்றப்பட்ட ஆடுமாடுகளை விடுவிப்பதற்கு சம்பந்தமே இல்லாமல் உத்தரகுமாரன் அவ்விடத்தில் அங்கும் இங்கும் ஓடுகிறான்.இங்கும் முழு கிராமமும் இச்சம்பவத்தைக் காண வந்திருக்கிறார்கள். மழை பொய்த்த இடங்களில் விராடபர்வ நாடகத்தை நடத்தினால் மழை வருவது நிச்சயம் என்றவொரு நம்பிக்கையினால் இந்தச் சம்பவத்தை மட்டும் எடுத்துக் கூத்து நடத்தத் தனியாக உபயம் செய்து நடத்தும் வழக்கம் உண்டு.

அடுத்தநாள் நிகழ்ச்சி கிருஷ்ணன் தூதுபோவது பற்றியது, தெருக்கூத்து நடக்கும் அனைத்து இடங்களிலும் இந்தநாளைய நிகழ்ச்சிக்கான செலவுகள் யாதவர் சமூகத்தினரின் உபயத்தில் நடக்கும். கிருஷ்ணன் ஒரு யாதவன். அதைத் தவிர, விதுரனின் விருந்தாளியான கிருஷ்ணனுக்குக் கொடுப்பதற்காக அனைத்து யாதவ வீடுகளிலிருந்தும் உணவுப்பொருட்களும், இனிப்புகளும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு எடுத்துவரப்படும். சண்டையிடும் இரு பிரிவினருக்கிடையில் சமாதானமுயற்சிகளில் கிருஷ்ணன் தோல்வியடைவதால் கதையின் இப்பகுதியை மட்டுமே தனியாக எடுத்துக்கொண்டு எந்தக் கூத்தும் நடைபெறுவதில்லை. இச்சம்பவத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு கூத்து நடத்தினால் கிராமத்தில் சண்டை உண்டாகும் என நம்பப்படுகிறது.இது தப்பாமல் நடந்திருக்கிறது என சாட்சியளிக்கப் பலரும் உண்டு. அப்படி ஏதாவது கட்டாயக் காரணங்களுக்காக இந்தச் சம்பவத்தைத் தனியாக எடுத்து நடிக்க நேர்ந்தாலும், அந்தக் கூத்து கிருஷ்ணனின் முயற்சி தோல்வியடைவதில் முற்றுப்பெறாமல், “நான் திரும்பை வருகிறேன். இதைப் பற்றி யோசியுங்கள்” என கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம் சொல்லிச் செல்வதாக முடிவடையச் செய்யப்படும். பாரதவிழாவின் 16வது நாளன்று அரவானின் பலி நடிக்கப்படும். ஊரில் காளிக்குக் கோவில் இருந்தால் அதற்கு வெளியே ஒரு 25 அடி உயர உருவம் எழுப்பப்படும், இல்லையெனில் பலி கொடுக்கவேண்டிய வயல்வெளியில் ஒரு காளி உருவமும் உருவாக்கப்பட்டு வைக்கப்படும். கிரீடத்துடனான அரவானின் தலை கிராமத்துக் குயவர் ஒருவரால் தனியாக களிமண்ணால் செய்யப்பட்டு, மற்ற கூத்து நடிகர்களைப் போலவே சாயம் பூசப்பட்டு இருக்கும்.கண்ணை வரைவது ‘கண் திறப்பு’ என்ற ஒரு சடங்கு. அரவானின் தலையும் கிரீடமும் ஊர்வலமாக காளியின் பீடத்துக்கு எடுத்துச் செல்லப்படும், அங்கு ஏற்கனவே அரவானின் பிரும்மாண்டமான உடல் செங்கற்களால் கட்டப்பட்டுத் தயாராக இருக்கும். வலதுகாலை மடித்து இடது தொடையின் மேல் வைத்துக்கொண்டு, ஒருகையில் வில்லுடன் அமர்ந்த நிலையிலுள்ள உருவம் அது.சமைக்கப்பட்ட தலை கிரீடத்துடன் அதன் மேல் பொருத்தப்படும்.இருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டபடி, கோவில்பூசாரி கையில் உயர்த்திய புனித வாளுடன் (பலிக்கத்தி) அங்கு வருகிறார்; அவர் ஒரு ஆவேசநிலையில் இருக்கிறார்.காலியை வழிபட்டபின் அரவான் உருவத்தினருகே சென்று அதைச் சுற்றி வந்து, இரத்தம் வழியும் விளைவை ஏற்படுத்துவதற்காக குங்குமம் பூசிய ஒரு பூசணிக்காயை வெட்டுகிறார்.முற்காலத்தில் ஒரு ஆடு பலி கொடுக்கப்படும், இப்போது அதற்கு பதிலாய் பூசணிக்காய் உபயோகிக்கப்படுகிறது.இந்த”இரத்தம்’ அரவானின் உடலில் தெளிக்கப்படும்.நாககன்னி வேடம் தரித்த கூத்து நடிகர் விரைந்து வந்து அரவானின் இறப்புக்காக புலம்ப ஆரம்பிக்கிறார்.அரவானின் பலி முற்காலத்தைய ஒரு திராவிட வழிபாட்டு வடிவத்தையும், வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி, அதை பாரதவிழாவுடன் இணைத்துள்ளது என்பது தெளிவு.இதற்குப் பின் அன்றைய கூத்தில் அரவான் பலி நடிக்கப்படுகிறது. ஆனால் கூத்தில் அரவானின் பலியைக் குறிக்கும் வகையில் ஒரு சேவல் மேடையில் பலி கொடுக்கப்படும் வேளையில், அரவானுக்கு ஆவேசம் வர அவர் ஒப்பனை அறைக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்படுகிறார்.

அரவானின் பலி நடிக்கப்படலாம் அல்லது நடிக்கப்படாமலும் இருக்கலாம்.அது தவிர்க்கப்பட்டால், அபிமன்யு வதம் நடிக்கப்படும்.இது மேடையில் மட்டுமே நடிக்கப்படும், மேடைக்கு அப்பால் நீளும் மற்ற சடங்குகள் இருக்காது.சண்டைக் காட்சியோ, தெருக்கூத்து பாணியில், உரத்த கோப வெளிப்பாடுகளுடனும் மிகைபடுத்தப்பட்ட வீரதீர கையசைவுகளுடன் இருக்கும்.அடுத்த நாள் ’கர்ண மோட்சம்’ என அழைக்கப்படும் கர்ணவதம் பற்றியது.அன்றைய தினத்தின் முற்பகுதியில் பிரசங்கி கர்ணனின் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து அவன் வாழ்வு முழுவதையும் விரிவாக விளக்கியிருப்பார்.தெருக்கூத்தில் வாளாலும் வார்த்தைகளாலும் இருவரிடையே சண்டையின் சிறப்பு வெளிப்படும்.வாய்ச்சண்டையில் திறமையான வாக்குவாதம் உபயோகிக்கப்படும், வாள் சண்டையில் அத்தனைக் கழைக்கூத்தாடித்தனமும் உபயோகிக்கப்படும். 18ம் நாள் துரியோதன வதத்துடன் குருச்சேத்திரப்போர் முடிவதோடு பாரத விழாவும் முடிவடையும்.பிரசங்கியும் கூத்தில் கதை விரியும் வரிசையிலேயே தன் உரையையும் நடத்திக்கொண்டு வருகிறார்.திறந்த வெளி போர்க்களமாக மாறியுள்ளது (இதை ‘படுகளம்’ என்பார்கள்).பிரும்மாண்டமான 70லிருந்து 80 அடி வரையிலான உயரத்துக்கு துரியோதனின் மண் உருவம் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் கட்டப்பட்டிருக்கிறது.முந்தைய வருடங்களில் அப்படிக் கட்டப்பட்ட துரியோதனின் உருவங்கள் இப்போது கலைந்துபோன மண்மேடாய் அங்கு இருக்கின்றன. இரவுமுழுவதும் 50,60 மாட்டுவண்டிகளில்மண்ணைக் கொண்டுவந்து அந்த மேட்டின் மேல் போட்டு புது துரியோதன உருவத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கூத்து துரியோதனனைப் போலவே, சில நாட்களுக்கு முன்பு அரவான் உருவம் வடிவாக்கப்பட்டதுபோல அதற்கும் சாயம் பூசப்படுகிறது.அதன் தொடையில் ஓரிடத்தில் சிவப்புச் சாயம் நிரப்பிய மண்குடம் (இரத்தத்தைக் குறிக்க) புதைக்கப்பட்டு அதனுள் ஒரு மரக்கத்தி சொருகப்பட்டிருக்கிறது. மதியத்துக்குள் அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்தெல்லாம் வந்த நிறைய மக்கள் அங்கு திரண்டிருக்கிறார்கள், பலவிதமான கடைகள் எழுப்பட்டுள்ளன, அது ஒரு கிராமத்துச் சந்தை போல ஆகிவிட்டிருக்கிறது. நிகழ்ச்சி காலையிலேயே ஆரம்பிக்கிறது.துரியோதனன், பீமன் வேடம் போடும் நடிகர்கள் முழு ஒப்பனையுடன், மேளதாளங்களுடன் விழாக்கால ஊர்வலமாய் கோவிலுக்குப் போய் அம்மனை வழிபடுகிறார்கள்.திரும்பும் போது ஊர்வலம் அவர்க்ளை கிராமத்தின் தெருக்களுடே அழைத்துச் செல்கிறது. துரியோதனும் பீமனும் ஒருவரை ஒருவர் வாய்ச்சண்டைக்கு இழுத்து, வம்பு செய்து, கழைக்கூத்தாடிகளைப் போல பலவித துணிச்சலான காரியங்கள் செய்து நடனமாடி, எகிறிக் குதித்து ஒருவரை ஒருவர்  மிரட்டிக்கொண்டு போகிறார்கள் ஆனால் அவர்கள் இருவருக்குமிடையே ஒரு பெரிய கயிறு,  இருபக்கமும் மக்கள் நின்று அவர்களை வேடிக்கப் பார்க்கிறார்கள்.

இதற்குள் பிரசங்கி சல்லியன் மற்றும் கௌரவர் அணியில் இதரரின் வதம் பற்றி தன் உரையில் பேசி முடித்திருக்கிறார். துரியோதனனின் மண் உருவுக்கு அருகே 5 குழிகள் தோண்டப்பட்டு அக்குழிகளில் ஐந்து காப்புகாரர்களும் (திருவிழாவின் ஆரம்பத்தில் காப்பு கட்டப்பட்டவர்கள்) சாய்ந்தவாக்கில் ஈர மஞ்சள் துணி சுற்றிக் கொண்டு, உடம்பெல்லாம் மஞ்சள் பூசி படுத்திருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் இருக்கும் ஆண்கள் அவர்கள் மீது மஞ்சள் நீரை அடிக்கடித் தெளித்தபடி இருக்கிறார்கள், அவர்களை இறப்பினின்று காப்பது போல. அவர்கள் ஆவேசம் வந்தது போல ஒரு மயக்க  நிலையில் இருக்கிறார்கள். ஐவராக இருப்பதினால் அவர்கள் தூக்கத்தில் கொல்லப்பட்ட பாண்டவர்களின் மகன்களைக் குறிக்கலாம். துரியோதனனும் பீமனும் தெருக்கூத்து நடக்கும் இடத்துக்குள் நுழைகிறார்கள்.பிரசங்கி துரியோதன் ஆழ்கடலுக்குள் மறைந்துகொண்டிருக்கிறான் எனப் பார்வையாளர்களிடம் சொல்கிறார்.துரியோதனன் திரை மறைவில் மேடைக்குள் நுழைகிறான்.வயலில் பார்வையாளர்களிடையே காத்திருக்கும் பீமன் அவனை வெளியே வரச்சொல்லி அழைக்கிறான்.அவர்கள் இருவரும் துரியோதனின் மண் உருவத்தைச் சுற்றி ஒருவர் பின் ஒருவர் ஓடிக்கொண்டு ஒருவரையொருவர் எதிர்கொள்கிறர்கள்.இருவரின் பற்களிடையேயும் எலுமிச்சம்பழம் இருக்கிறது, இருவரும் ஆவேச நிலையில், உக்கிரமான வெறியில் இருக்கிறார்கள். தெருக்கூத்துக்கே உரிய பாணியில் அவர்கள் ஒருவரை ஒருவர் சண்டையில் எதிர்கொள்வது அதன் உச்ச வெறிநிலைக்கு எடுத்துப்போகப்பட்டு இறுதிக் கணத்தில் பீமன் துரியோதனனின் மண் உருவத்தின் தொடைப்பாகத்தில் (சிவப்புச்சாயம் நிரம்பிய) மண்குடம் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் அடிக்க, மண்குடம் உடைந்து இரத்தம் சுற்றிலும் சிதறியடிக்கிறது. இன்னும் ஆவேசநிலையிலேயே இருக்கும் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்துள்ள நடிகர்களைக் கூத்து அரங்கத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்குத் தூக்கிச் செல்கிறார்கள். துரியோதனன் கூத்து அரங்கிற்குத் திரும்பக் வரக்கூடாது, அவ்விரண்டு நடிகர்களும் ஒருவருக்கொருவர் சமீபமாக இருக்கக்கூடாது. ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும் திரௌபதி அம்மன் சிலையும், கூத்தில் திரௌபதி வேடம் போட்டிருப்பவரும் துரியோதனனின் மண் உருவம் தொடையிலிருந்த் இரத்தம் வழிய அடிக்கப்பட்ட இடத்தில் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். இரத்தத்தின் குறியீடான சிவப்புச் சாயம் அவ்விருவரின் அவிழ்ந்த கூந்தலிலும் பூசப்பட்டு, அதன் பின் கூந்தல் முடியப்படுகிறது.திரௌபதியின் சபதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.கிராமத்திலிருந்து ஓர் ஏணியில் ஊர்வலமாக ஒரு பெண் துரியோதனனின் மண் உருவத்திடம் அழைத்து வரப்படுகிறாள். அவளிடம் ஒரு துடைப்பமும், தானியங்கள் புடைக்க உபயோகப்படும் மூங்கில் முறமும் இருக்கிறது.அவள் உரத்த குரலில் ஒப்பாரி வைத்தபடி வருகிறாள்.அவள் துரியோதனின் அரண்மணைப் பெண்களின் பிரதிநிதிகளின் சின்னமாகக் கொள்ளவேண்டும்.அவள் துரியோதனின் மண் உருவத்தின் மேல் அமர்ந்து ஒப்பாரி வைக்கிறாள்.பார்வையாளர்கள் அவளுக்குப் பணம் கொடுக்கிறார்கள். திரௌபதியின் சிலை ஒரு பிரார்த்தனை சடங்குக்குப் பின் கிராமத்தினூடே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுப் பின் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.இதற்குள் மதியமாகி விட்டிருக்கிறது.

2 மணியளவில் பாரதவிழாவின் கடைசி சடங்கான தீமிதிப்புச் சடங்குக்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன.இது எல்லா அம்மன் கடவுள் திருவிழாக்களுக்கும் (காளி, மாரியம்மன்) பொதுவான சடங்கு.திரௌபதி அம்மன் தாயாக வழிபடப்படும் தெய்வம், மேலும் வில்லிப்புத்தூராரின் தமிழ் பாரதக்கதையின் படி அவள் அக்னியில் பிறந்தவள்.ஒரு செவ்வகமான தீக்குழியில்பெரிய மரக்கட்டைகள் எரிக்கப்பட்டு அக்குழி ஒரு எரியும் படுக்கையாய் மாறியுள்ளது.குழியிலிருந்து வெளியேறும் இடத்தில் ஒரு சிறிய தண்ணீர்குட்டை உருவாக்கப்பட்டுள்ளது.கோவில் தர்மகர்த்தா, கோவில் அலுவலர்கள் மற்றும் கரகம் எடுப்பதற்காக விரதம் மேற்கொண்டுள்ள ஐந்து காப்புக்காரர்களும் கோவில் குளத்துக்குக் குளிக்கச் செல்கிறார்கள். அவர்கள் மஞ்சள்நீரில் நனைக்கப்பட்ட துணிகளைக் கட்டிக் கொண்டு வெளியே வந்து, மணிக்கட்டுகளைச் சுற்றி மலர்களைச் சுற்றிக்கொண்டு, கிராமத்து மக்களுடன் ஊர்வலமாகக் கோவிலுக்குச் சென்று, அங்கு சடங்கால் புனிதப்படுத்தப்பட்டிருக்கும் கரகப்பானைகளை எடுத்துக் கொள்வார்கள். கோவிலில் பிரார்தனை செய்த பின், கரகம் எடுப்பவர்களும் அம்மனும் ஊர்வலமாக தீக்குழிக்கு வருவார்கள்.அம்மன் சிலையை அங்கே வைத்து, எரியும் கரித்துண்டுகளைத் தீக்குழி முழுவதும் சமமாகப் பரப்புவார்கள்.அப்பொழுதுதான் வெட்டப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட ஒரு அக்கினியின் சிலையும் அங்கு வைக்கப்படுகிறது.பிரசங்கி தீக்குழியிலிருந்து ஒரு கையளவு தணல்கட்டிகளை எடுத்து அவற்றை மஞ்சள்நீரில் நனைத்த ஒரு துணியில் கட்டி அதை திரௌபதி அம்மன் சிலையின் மடியில் வைக்கிறார்.அந்தத் தணல் துணியை எரித்து வெளியே வரக்கூடாது.அப்படி வந்தால் அது கெட்ட சகுனமாகக் கருதப்படும்.அப்படி வரவில்லையானால், அது தீமிதிப்பை நடத்தலாம் என்பதற்கான அறிகுறி.எரியும் நெருப்புக் குழியினுள் மலர்கள் எறியப்படும். ஆவேச நிலையில் இருக்கும் கரகம் தூக்குபவர்கள் –அவர்களை நெருப்பில் எரிபட்டு மரிப்பதிலிருந்து காப்பாற்ற அவர்கள் உடலை அம்மன் ஆட்கொண்டிருக்கிறாள் – தீக்குழியின் முழு நீளமும் மூன்றுமுறை நடக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் குழியிலிருந்து வெளியேறும் கோடியில் இருக்கும் தண்ணீர்குட்டையை மிதித்துப் பின் திரும்பக் குழியின் ஆரம்ப இடத்துக்கு வந்து  மீண்டும் தீமிதிப்பார்கள். ஒருமுறை தீமிதிப்புச் சடங்கு முடிந்ததும், குழியைச் சுற்றி நின்றிருக்கும் கிராமத்தினர் இதற்குள் சற்றுக் குளிர்ந்திருக்கும் நெருப்பிலிருந்து ஒரு கையளவு கரித்துண்டுகளை அம்மனின் பரிசாக எண்ணித் தம் வீட்டுக்கு எடுத்துப் போவார்கள். மறுநாள் தர்மராஜாவின் பட்டாபிஷேகம் கோவிலில் நடத்தப்படுகிறது.இந்தச் சடங்கில் பிரசங்கி பாரதத்தில் இதுகுறித்த சம்பவத்தைப் பற்றிய விளக்கவுரையை நடத்தி அதன் பின் தர்மராஜாவின் சிலைக்கு மகுடம் அணிவிப்பார்.இத்துடன் 20 நாள் பாரத விழா முடிவடைகிறது.

(தொடரும்…)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்