இன்று மே மாதம் 01 ஆம் திகதி. உலகத்தொழிலாளர் தினம்! உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற கோஷத்துடன் எமது தாயகம் இலங்கையில், தொழிலாளர்கள் ஒன்றுபடாமல், பிளவுபட்டு, ஏழெட்டு ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தும் நாள். கொரொனா வந்து அந்தத் தொழிலாளர்களையும் ஒன்றுபடவிடாமல் தடுத்து வீடுகளில் முடங்கியிருக்கச் செய்துள்ளது. ஒரு காலத்தில் தந்தை செல்வநாயகமும் பிரதமர் பண்டாரநாயக்காவும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக பண்டா – செல்வா ஒப்பந்தம் என்ற இன்றும் வரலாற்றில் பேசப்படும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டபோது ஜே.ஆர். ஜெயவர்த்தனா அதனை எதிர்த்து பிக்குகளையும் அழைத்துக்கொண்டு, கண்டி தலதா மாளிகை நோக்கி பாதயாத்திரையை ஆரம்பித்தார். அக்காலப்பகுதியில் நடந்த மேதின ஊர்வலங்களில் அவருடைய யூ. என். பி. கட்சியினர் “ பண்டாரநாயகம் – செல்வநாயகம் ….  ஐயா…. தோசே மசாலவடே “ என்று இனவாதம் கக்கி கோஷம் எழுப்பிச்சென்றனர். அந்த ஒப்பந்தம் பின்னர் கிழித்தெறியப்பட்டது. ஆனால், பண்டாரநாயக்காவும் செல்வநாயகமும் தமது காணிகளை பூர்வீக சொத்துக்களாக ஒரே வீதியில் முன்னர் வைத்திருந்தனர் என்ற செய்தி யாருக்காவது தெரியுமா..?
அந்த வீதிக்குப்பெயர்தான் பண்டாரநாயக்கா மாவத்தை!

அண்மைக்காலமாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் நெருக்கடியை ஏற்படுத்தியதனால், நாடாளுமன்றமும் இயங்காமல் முடங்கியிருப்பதுடன், தலைநகரத்தில் பல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை அறிவோம். கொழும்பில் உயர் நீதிமன்றம் உட்பட மேலும் சில நீதிமன்றங்கள் அமைந்துள்ள பிரதேசம் உட்பட அதற்கு அண்மித்த பண்டாரநாயக்கா மாவத்தையிலிருந்த ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பு தரப்பினர், அழைத்துச்சென்று முல்லைத்தீவில் தனிமைப்படுத்தி தடுத்து வைத்துள்ளனர். அவ்வாறு அங்கு சென்றவர்களில் எனது உறவினர்கள், நண்பர்கள் பலரும் அடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் தட்டாரத்தெரு என அழைக்கப்பட்ட இந்தப்பிரதேசத்தில் தமிழ் - முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இந்தப்பிரதேசத்திற்கும் எனக்கும் நீண்டகாலமாக நெருக்கமான உறவு நிலைத்திருக்கிறது. அதனால், அவ்வாறு முல்லைத்தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட எனது சித்தப்பாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் தொடர்புகொண்டு உரையாடினேன். தம்மை முகாமில் தடுத்துவைத்து நன்கு பராமரிப்பதாகவும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி படுக்கை தரப்பட்டு தினமும் மூன்று வேளையும் மருத்துவர்களும் தாதியர்களும் சிகிச்சை தந்து கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர்.

முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் பூர்வீகமும் இந்த பண்டாரநாயக்கா மாவத்தைக்கு சமீபமாகவிருக்கும் வாழைத்தோட்டம் பிரதேசமாகும். புதுக்கடை என்றும் ஹல்ஸ்ரோப் எனவும் அழைக்கப்படும் இந்தப்பகுதி வெறிச்சோடிப்போயிருப்பதாக அறியப்படுகிறது. இலங்கையிலிருந்த காலப்பகுதியில் இந்தப்பிரதேசத்திற்கு நான் அடிக்கடி சென்று வந்திருக்கின்றேன். அதனால், இந்தப்பகுதி பற்றிய நினைவுகளை மறக்க இயலவில்லை. பண்டாரநாயக்கா மாவத்தையில் பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளடங்கியிருக்கின்றன. ஏன் இந்த வீதிக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் பெயர்வந்தது...?அவர் அத்தனகல்லை தொகுதியில் ஹொரகொல்லையில் பிறந்தமையால் அந்தப் பிரதேசத்தை ஹொரகொல்லை வளவ்வை என்றும் அழைப்பர். அவரது தந்தையாரின் பூர்வீகக்காணியில்தான் வியாங்கொடை ரயில் நிலையமும் அமைந்துள்ளது என்றும் ஒரு செய்தி இருக்கிறது. அதனால் அந்தப்பாதையினால் பயணிக்கும் அனைத்து ரயில்களும் அங்கே நிச்சயம் தரித்துச்செல்லும். பண்டாரநாயக்கா குடும்பத்தினருக்கு இந்தப்பத்தியில் நாம் குறிப்பிடும் மாவத்தையிலும் ஒரு வளவ்வை (பெரிய காணி) முன்பிருந்திருக்கிறது.

பண்டாரநாயக்காவுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு ஒப்பந்தம் செய்துகொண்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் (அமரர்) தந்தை செல்வநாயகத்திற்கும் இந்த மாவத்தையில் ஒரு காணி முன்பிருந்தது. அங்கிருந்த ஒரு இல்லத்திலிருந்துதான் சுதந்திரன் பத்திரிகை 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி வெளிவரத்தொடங்கியது. முதலில் நாளிதழாக வெளியான சுதந்திரன், 1951 ஆம் ஆண்டு முதல் வார இதழாக 1977 வரையில் வெளிவந்து, தலைநகரில் அதற்கு பாதுகாப்பில்லை என்பதனால் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து 1983 வரையில் வெளியாகி நின்றது. பண்டாரநாயக்கா மாவத்தையில் சுதந்திரன் பத்திரிகை தொடங்கப்பட்டவேளையில் அதன் முதலாவது ஆசிரியராக இருந்தவர் தேசபக்தன் என்னும் பட்டம் பெற்ற கோ. நடேசய்யர். அதன்பின்னர் பல எழுத்தாளர்கள் அங்கு ஆசிரியபீடத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். எஸ்.டி. சிவநாயகம், செ. இராசதுரை, அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், பிரேம்ஜி ஞானசுந்தரன் ஆகியோரும் இறுதிக்காலத்தில் கோவை மகேசனும் சுதந்திரனில் பணிபுரிந்துள்ளார்கள். கவியரசு கண்ணதாசன் இலங்கைக்கு வந்த சமயத்தில் சுதந்திரன் காரியாலயத்திற்கும் வருகை தந்துள்ளார். பல ஈழத்து எழுத்தாளர்களின் கன்னிப்படைப்புகளுக்கு அக்கால கட்டத்தில் களம் வழங்கி அறிமுகப்படுத்தி ஊக்குவித்துள்ள சுதந்திரன், காலப்போக்கில் கோவை மகேசன் ஆசிரியரானதும் 1970 இற்குப்பின்னர் தீவிர தமிழ்த்தேசிய நிலைப்பாட்டினை எடுத்தது. 1970 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஶ்ரீமாவோ - என். எம். பெரேரா, பீட்டர் கெனமன் ஆகியோரின் கட்சிகள் இணைந்த கூட்டரசாங்கத்திற்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையே இனப்பிரச்சினை தொடர்பாக முரண்பாடுகள் உக்கிரமடைந்தமையாலும் 1972 இல் நடைமுறைக்கு வந்த புதிய அரசியலமைப்பினாலும் சுதந்திரனில் தமிழ் உணர்வைத்தூண்டும் செய்திகளுக்கும் ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. சுதந்திரன் வெளியான குறிப்பிட்ட இல்லத்தில் கவிஞர் காசி ஆனந்தன், வாகரை வாணன் முதலான எழுத்தாளர்களும் தங்கியிருந்துள்ளனர். தந்தை செல்வநாயகத்திற்குப்பின்னர் அவரது தனயன் சட்டத்தரணி சந்திரகாசனின் நிருவாகத்தின் கீழ் சுதந்திரன் வெளியானது. இங்கிருந்து சுடர் என்ற கலை, இலக்கிய இதழும் வெளியாகியது. இதன் ஆசிரியராக மட்டக்களப்பு கிரானைச்சேர்ந்த கனகசிங்கமும் பணியாற்றியுள்ளார்.

பண்டாரநாயக்கா வளவ்வை இருந்த காணியில் தற்பொழுது பாத்திமா மகளிர் பாடசாலையும் சுதந்திரன் வெளியான காணியிலிருந்து கணபதி வித்தியாலயமும் இயங்குகின்றன. இந்த வித்தியாலயத்தில்தான் எனது ஒன்றுவிட்ட தம்பியின் மனைவியும் ஆசிரியையாக பணியாற்றினார். எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயலாளர் கலாநிதி ஶ்ரீகௌரிசங்கரின் தங்கையும் ஆசிரியையாக பணியாற்றுகிறார். கணபதி வித்தியாலயம், இந்த பண்டாரநாயக்கா மாவத்தையில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் பின்புறம்தான் முன்னர் அமைந்திருந்தது. இந்தப்பிரதேசத்தில் திருவிளங்க நகரத்தார் சமூகத்தினர் செறிந்து வாழ்ந்தமையால் அவர்களின் குடும்பத்துப்பிள்ளைகளின் ஆரம்பக்கல்விக்காக ஒரு செட்டியாரின் பேருதவியினால் கணபதி வித்தியாலயம் 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த வித்தியாலயம் தனது வைரவிழாவை கொண்டாடியது. ஶ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள காணியில் பல குடியிருப்புகளுக்கு மத்தியில் முன்னர் அமைந்திருந்த கணபதி வித்தியாலயத்தில் புகழ்பெற்ற வானொலிக்கலைஞர் வித்துவான் இ.சி சோதிநாதன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் பங்கேற்ற பல வானொலி நாடகங்கள் இன்றும் இணைய ஊடகங்களில் பேசப்படுகின்றன. அதில் ஒன்று சில்லையூர் செல்வராசனின் தணியாத தாகம். பாடசாலை விடுமுறை நாட்களில் மேற்படி ஆலயத்தில் திருமணங்கள் நிச்சயிக்கும் பட்சத்தில், கணபதி வித்தியாலய மண்டபத்தில்தான் திருமண வைபவமும் நடைபெறும். தற்போது கணபதி வித்தியாலயமும் மக்களின் இடப்பெயர்வு போன்று தரமுயர்த்தப்பட்டு முன்னர் சுதந்திரன் பத்திரிகை பணிமனை இருந்த காணிக்கு இடம்பெயர்ந்துள்ளது. இந்த மாவத்தையில் ஆலயத்திற்கு முன்புறம் வசித்த திருவிளங்க நகரத்தார் சமூகத்தைச்சேர்ந்த வடிவேல் செட்டியார் என்பவர் பீடிக்கைத்தொழிலகமும் நடத்தியிருப்பவர். அவரது பவுண் பீடி அக்காலத்தில் பிரசித்தமானது. அவரும் அவருடைய புதல்வர் ஒருவரும் மலையகத்திற்கு சென்றிருந்தவேளையில் ஒரு நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்று மூழ்கி இறந்தனர். இக்குடும்பத்திலும் எமது ஒரு மருமகளுக்கு திருமணம் நடத்திவைத்திருக்கின்றோம்.

கொல்லப்பட்ட மனிதர் ஒருவரின் தலைமாத்திரம் பொதி செய்யப்பட்டு இந்த மாவத்தையில் வீசப்பட்டிருந்த செய்தியையும் அண்மையில் படித்திருப்பீர்கள். அந்நபர் பாதாள உலககோஷ்டியினால் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் வேறு ஒரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இத்தகைய துன்பியல்களையும் பண்டாரநாயக்கா மாவத்தை தன்னகத்தே வைத்துள்ளது. மஸ்கன்ஸ் அஸ்பெஸ்டஸ் தொழிலகம் அமைந்துள்ள ஆமர் வீதியிலிருந்து தொடங்கும் பண்டாரநாயக்கா மாவத்தை நீதிமன்றங்கள் அமைந்துள்ள ஹல்ஸ்டோர்ப் பிரதேசத்தில் முடிவடைகிறது. இந்தப்பிரதேங்களை உள்ளடக்கிய பகுதியை புதுக்கடை எனவும் அழைப்பர். நானாவித தொழிலகங்கள் இயங்கும் இப்பிரதேசத்தில் மூவின மக்களும் செறிந்து வாழ்கின்றனர். நீதிமன்றங்களுக்கு வரும் சட்டத்தரணிகள் தொடக்கம் வழக்குவிசாரணைகளுக்கு தோன்றும் சாட்சிகள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள், நண்பர்களும் பண்டாரநாயக்கா மாவத்தையில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்குச்சென்று வழிபடுவதையும் அவதானிக்க முடியும். சட்டத்தரணிகளுக்கோ தாம் ஆஜராகும் வழக்குகளில் வெற்றி கிடைக்கவேண்டும் என்ற பிரார்த்தனை! குற்றவாளிகளுக்காக அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் விடுதலை வேண்டிப்பிரார்த்தனை! அந்த சுப்பிரமணியக்கடவுள் எத்தனைபேரின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது அவருக்கே வெளிச்சம்! அந்தச்சுப்பிரமணியரிடம்தான் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான மு. சிவசிவசிதம்பரம் அவர்களும் வழக்கு விசாரணைகளுக்கு முன்னர் தரிசனத்துக்கு வருவதை பார்த்திருக்கின்றேன். ஆனால், இன்று அந்த சுப்பிரமணியரும் தமது இரண்டு துணைகள் சகிதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்கா மாவத்தையின் மற்றும் ஒரு எல்லையில் அமைந்துள்ள வாழைத்தோட்டம் பிரதேசத்தில்தான் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் பிறந்தார். அவரது இல்லத்தின் பெயர் சுசரித்த! அவர் பிரதமராகவும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த காலகட்டத்தில் இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் முன்னுரிமை கொடுத்தார். இலங்கைத் தலைநகரத்தில் ஒரு காலகட்டத்தில் அமைந்திருந்த கட்டிடங்கள் ஒல்லாந்தர் காலத்திலும் அதன்பின்னர் பிரிட்டிஷாரின் காலத்திலும் உருவாக்கப்பட்டவை. சுதந்திரத்திற்குப்பின்னர் பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம் தலைநகரத்தை நவீனமயப்படுத்திவந்தார்கள்.

கொழும்பு மாநகர சபையில் தொடர்ச்சியாக பெரும்பான்மை பலத்தை கொண்டிருப்பது ஐக்கிய தேசியக்கட்சியே. அதன் வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்வதற்காக அக்கட்சியினால் தெரிவாகும் மேயர்களும் அக்கட்சியின் கொழும்பு மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பிரதேச அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்திவந்துள்ளனர். ஏற்கனவே பிரிண்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதியில் சுகததாச ஸ்ரேடியம் அமைந்திருக்கத்தக்க நிலையில் ரணசிங்க பிரேமதாச ஏன் கெத்தாராமை என்ற இடத்தில் மற்றும் ஒரு பெரிய ஸ்ரேடியத்தை அமைக்கிறார்..? என்ற கேள்வியும் முன்னர் எழுந்தது! சோலியான் குடுமி சும்மா ஆடாது என்று எமது முன்னோர்கள் சொல்வார்கள்.

கொழும்பு மத்திய தொகுதி மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதனால் மூவின மக்களின் ஆதரவும்பெற்ற மூவினத்தலைவர்கள்தான் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவேண்டும். ஒருதடவை ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ரணசிங்க பிரேமதாசவும் ஜபீர் ஏ. காதரும் தெரிவானார்கள். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து ஹலீம் இஷாக்கும் எதிர்பாராதவகையில் தெரிவாகிவிட்டார். இப்படி ஒரு தேர்தல் முடிவு வரும் என்று பெரும்பான்மையினத்தின் பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ரணசிங்க பிரேமதாச தலைநகரத்தின் எதிர்காலம் குறித்து தீர்க்கதரிசனம் கொண்டிருந்தவர். கெத்தாராமை பிரதேசத்தில் வாழும் மக்களை இடம்பெறச்செய்வதற்கு வகுத்த திட்டத்தின் பலன்தான் இன்று அங்கு விளங்கும் பெரிய ஸ்ரேடியம். அங்கு வாழ்ந்த மக்களுக்கு கொழும்பின் புறநகரத்தில் முக்கியமாக நவகம்புர, மற்றும் மாளிகாவத்தை பிரசேங்களில் குடியிருப்புகளை அமைத்துக்கொடுத்து, வாக்கு வங்கியை இனரீதியாக நேர்செய்துகொண்டார்.
சமகாலத்தில் தேசிய விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெறுவதற்கும் கெத்தாரமை விளையாட்டு அரங்கத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கெத்தாராமையில் தற்போது 18 வலைப்பயிற்சி கூடங்களும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அகடமியின் பயிற்சியகமும் அமைந்திருக்கின்றன. ரணசிங்க பிரேமதாச, இந்த ஸ்ரேடியத்தின் மைதானத்தில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு பந்தை உதைந்து உதைபந்தாட்டத்தை தொடக்கிவைத்த படங்கள் அக்காலப்பகுதியில் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. அத்துடன் அவரது துணைவியார் நெட்போல் விளையாடிய படங்களும் வெளிவந்துள்ளன.

கொழும்பு மாநகர மேயராகியிருக்கும் ரோஸி சேனாநாயக்கா முன்னாள் திருமதி அழகுராணியாகவும் தெரிவானவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. அதனால் தலையிடி மாத்திரைக்கான பெணடோல் விளம்பரத்திலும் அவர் தோன்றியிருந்தார்.
இவற்றை அவதானித்த எதிர்க்கட்சியினர், தங்கள் மேடைகளில் பிரேமாட்ட ஃபுட்போல்! ஹேமாட்ட நெட்போல்! ரோஸிட்ட பெனடோல்! அபிட்ட பொலிடோல்!! என்று பிரசாரமும் செய்துள்ளனர். காலம் இந்த சுவாரஸ்யங்களையும் பதிவுசெய்துள்ளது.
குறிப்பிட்ட பண்டாரநாயக்கா மாவத்தை குறித்து மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை தனது மாயினி நவாலிலும் குறிப்பிட்டுள்ளார். அதுவே அவர் எழுதிய கடைசி நாவல் ! வைரஸ் தொற்றிலிருந்து காப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்ட எனது உறவுகளின் வரவுக்காக காத்திருக்கின்றேன். அவர்களையும் பண்டாரநாயக்கா மாவத்தை சுப்பிரமணிய சுவாமி காப்பாற்றவேண்டும்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்