கட்டுரைச் சுட்டு

பதிவுகள் ஆகஸ்ட் 2003; இதழ் 44

மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து [பத்து கவிதைகளுடன்]

கவிதையின் இரு அடிப்படை அம்சங்கள்

ஜெயமோகன்எந்த மொழியினாலும் கவிதைக்கு இரு இயல்புகள் இருக்கும். ஒன்று அதன் பொதுத்தன்மை  இன்னொன்று அதன் தனித்தன்மை. பொதுத்தன்மை என்பதை அனைத்து மானுடருக்கும் பொதுவான தன்மை என்று சொல்லலாம். ஒரு கவிதை மொழி பெயர்க்கப்படும் போது உலகம் முழுக்க அனைவருக்குமே அதன் சாரமான ஒரு பகுதி புரிகிறது, இதுவே கவிதையின் பொதுஅம்சம். நமக்கு நல்ல கவிதை உலகம் முழுக்க எப்படியோ நல்லகவிதையாக அடையாளம் காணப்படுகிறது. இந்த அம்சம் இருப்பதனால்தான் உலக கவிதை என்ற கருத்தே உருவாகியுள்ளது . யோசித்துப்பாருங்கள் நாம் இன்று மாபெரும் கவிஞர்களாக கருதும் பலர் நமக்கு மொழிபெயர்ப்பு மூலமே அறிமுகமானவர்கள். தாந்தேயானாலும் சரி தாகூரானாலும் சரி .

அதே சமயம் நம்மால் கவிதையின் ஒரு பகுதியை மொழிபெயர்க்கவே முடியாது என்பதை காணலாம். அப்பகுதி அம்மொழிக்கே உரிய தனித்தன்மையினால் ஆனதாக இருக்கும். அது அக்கவிதை முளைவிட்ட கலாச்சாரத்துக்கே உரியதாக இருக்கும். வேற்று மொழியில் வேற்று கலாச்சாரத்தில் இருந்தபடி அந்த அம்சத்தை புரிந்துகொள்ள முடியாது. 

அந்த மொழியை படித்தாலும் கூட அன்னியக் கலாச்சாரத்தை சேர்ந்த ஒருவரால் ஆதை முழுக்க அணுக முடியாது. ஷேக்ஸ்பியரை நாம் மூல மொழியிலேயே  படிக்கிறோம் ஆனாலும் நம்மால் அக்கவிதையுலகின் குறிப்பான ஒரு பகுதியை உள்வாங்கிக் கொள்ள முடியாது. அது ஆங்கிலோ சாக்ஸன் வாழ்வுடன் சம்பந்தப்பட்டது. அடிக்குறிப்புகள் விளக்கங்கள் மூலம் அதை நமக்குப் புரியச் செய்யலாம், ஆனால் நம் மனம் உணர்வு பூர்வமாக அதை வாங்கிக் கொள்ளாது. ஒரு சிறந்த கவிதை இவ்விரு பண்புகளையுமே கொண்டிருக்கும் என்று சொல்லலாம். அதில் மானுடப்பொதுவான கூறுகளும் இருக்கும், அக்கலாச்சாரத்துகேயுரிய தனித்தன்மைகளும் இருக்கும். ஆகவே தான் 'முற்றாக மொழிபெயர்க்க முடியாத கவிதையும் சிறந்த கவிதை அல்ல, முற்றாக மொழிபெயர்த்துவிடக்கூடிய கவிதையும் சிறந்த கவிதை அல்ல' என்கிறார்கள்.

மலையாளக் கவிதைகளை படிக்கும்போது இந்த பொதுவிதியை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டியுள்ளது . நாம் கேரளக் கலாச்சாரத்திலும் மலையாள மொழியிலும் முளைத்த கவிதைகளை படிக்கிறோம். நமக்கு வந்து சேர்வது இரு அம்சங்கள். கவிதையில் உள்ள அடிப்படையான மானுட உணர்ச்சிகள், மானுட விழுமியங்கள் ஆகியவை ஒரு பகுதி. கேரள , மலையாள கலாச்சாரத்துகே உரியதனித்த பண்பாட்டுக் கூறுகள் இன்னொரு பகுதி. முதல் அம்சம் நமக்கு எளிமையாக புரியும் ,மற்ற அம்சத்தை நாம் சிரத்தை எடுத்து புரிந்துகொள்ள வேண்டும். 

மரபுக்கவிதையும் நவீனக்கவிதையும்

இக்கவிதைகள் மலையாளத்தின் நவீனக் கவிதைகள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மரபுக்கவிதை , நவீன கவிதை என்பதற்கிடையே பெரிய வேறுபாடு உள்ளது.நாம் அறிந்த முதல்வேறுபாடு வடிவம் சார்ந்தது. மரபுக்கவிதை யாப்பில் இருக்கும். நவீனக்கவிதை யாப்பு இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த வேறுபாடு மேலோட்டமான ஒன்றே.மேலும் ஆழமான வேறுபாடுகள் உள்ளன. 

முக்கியமான வேறுபாடு கவிதையின் நோக்கத்தில் உள்ளது. மரபுக்கவிதை 'வலியுறுத்தும்' நோக்கம் கொண்டது .எதை? நெறிகளை, அறங்களை, சில அடிப்படை உண்மைகளை. இந்த அம்சத்தை நாம் பொதுவாக மரபுக்கவிதைகளிள்ல் காணலாம் . ஒரு கவிதையை எடுத்துப்பார்த்தால் அது எதைப்பற்றி பேசுகிறது, அதன் மையக்கருத்து என்ன என்பதை தெளிவாக சொல்லிவிடலாம். 

நமக்கு பள்ளி கல்லூரிகளில் பாடமாக வைக்கப்படுவது மரபுக்கவிதையே .ஆகவே தேர்வில் கேள்விகள் 'இந்த நாலடியார் பாடலின் மையக்கருத்து யாது?' என்ற வகையில் கேட்கப்படுகின்றன.நாமும் பதில் எழுதிவிடுகிறோம். நவீனக் கவிதையில் இந்த அம்சமே கிடையாது. நவீன இலக்கியத்தில் கருத்துக்கள் சொல்லப்படுவது இல்லை. கருத்துக்களுக்கு ஆதாரமான மன இயக்கம், உணர்வுகள் மட்டுமே சொல்லப்படுகின்றன. கருத்துக்களை வாசிப்பின் மூலம் நாம் தான் உருவாக்கிக் கொள்கிற்றோம்.  ஆகவே மரபுக்கவிதையில் செய்வது போல நவீனக்கவிதையில் "இதன் மையக்கக்கருத்து யாது?" என்றெல்லாம் கேட்கக் கூடாது.அது நவீனக்கவிதையை மிகத் தவறாக மதிப்பிடுவதில் சென்று முடியும். இந்த நவீனக்கவிதை பற்றி என்ன நினைக்கிறாய், உன்னுடைய வாசிப்பு என்ன, நீ கண்டடைந்த கருத்து என்ன என்றுதான் கேட்கவேண்டும். 

அடுத்த முக்கியமான வேறுபாடு நவீனக் கவிதை எதையுமே சொல்ல முற்படுவது இல்லை , உணர்த்தவே முற்படுகிறது என்பதாகும். அது எதையுமே வலியுறுத்திக் கூற முற்படுவது இல்லை. அதற்கு நேர்மாறாக ஏற்கனவே வலியுறுத்திக் கூறப்பட்டவற்றை மறு பரிசீலனை செய்யவே நவீனக்கவிதை முற்படுகிறது. மரபான கவிதை திட்டவட்டமான முறையில் ஒன்றை சொல்ல முற்படுகிறது.அதற்காகவே அது உவமை, உருவகம் முதலிய அணிகளை பயன்படுத்துகிறது .

ஆனால் நவீனக்கவிதை அம்மாதிரி எதையுமே சொல்லிப்புரியவைக்க முயல்வது இல்லை.அது ஓர் அனுபவத்தை மட்டுமே வாசகனுக்கு கொண்டு செல்ல முயல்கிறது. ஓர் அகமன ஓட்டத்தை வாசகனுக்குள் உருவாக்க எண்ணுகிறது.அதற்காகவே அது அணிகளை பயன்படுத்துகிறது. இவ்வகையான புதிய அணிகள் வேறுபெயரில் வழங்கப்படுகின்றன.இவை மொழியுருவகம் [metaphor] படிமம் [poetic image] என்ற இரு பொது அடையாளங்களால் குறிப்பிடப்படுகின்றன. 

ஒரு நிகழ்வையோ காட்சியையோ மட்டும் சொல்லி அதன் பொருளை முழுமையாக வாசகனின் கற்பனைக்கே விட்டுவிட்டால் அது படிமம் எனப்படுகிறது . அதாவது ஓர் உவமையில் எது உவமையோ அதை மட்டுமே சொல்லி  உவமிக்கப்படுவதை வாசகனின் கற்பனைக்கே விட்டு அவன் மனதை அச்சித்திரத்தை விரிவாக்க முடிந்தால் அது படிமம் . வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு    

[நீர்மட்டத்துக்கு ஏற்ப அல்லிமலரின் தண்டின் நீளம் இருக்கிறது . அதுபோல மனிதர்களின் உள்ளத்தின் உயரத்துக்கு ஏற்ப அவர்களின் உயர்வும் அமைகிறது] 

மலர்  உவமை. உவமிக்கப்படுவது தெளிவாகவே சொல்லப்பட்டு விட்டது - உள்ளம். தற்கால மலையாளக் கவிதைகள் நூலில் கெ ஜி சங்கரப்பிள்ளை எழுதிய பல்லி என்ற கவிதையை பாருங்கள் .உவமை மட்டுமே உள்ளது .உவமிக்கப்படுவது சொல்லபடுவதில்லை. இதுவே படிமம் என்பது. அறுந்து விழுந்த வால் பார்க்கிறது . பல்லி அதோ அமர்ந்திருக்கிறது , எந்த இழப்புணர்வும் இல்லாமல். ஒரு புதிய இரைக்காகவோ துணைக்காகவோ அமர்ந்திருக்கிறது பல்லி .

இந்த படிமத்திலி¢ருந்து அர்த்தத்தை கற்பனைசெய்துகொள்வது வாசகனின் பொறுப்பு.  அந்த கற்பனையை தூண்டிவிடுவது மட்டுமே கவிஞனின் வேலை. கவிஞன் என்ன சொல்ல வருகிறான் என்ற கேள்விக்கே கவிதையில் இடமில்லை. நவீன இலக்கிய வடிவங்கள் எல்லாமே அப்படித்தான் 

அது எல்லா வாசகர்களாலும் முடியுமா என்று கேட்கலாம் .அதற்கான பயிற்சிதான் நவீனக் கவிதை வாசிப்பிற்கான பயிற்சி என்பது. இசை கேட்க , ஓவியத்தை ரசிக்க அனைத்துக்கும் பயிற்சி தேவை. பயிற்சி இல்லையேல் அவை வெறும் ஒலியாகவோ அல்லது நிறமாகவோ மட்டும் தென்படக்கூடும். பயிற்சி எப்படி வரும் ? தொடர்ந்த பழக்கம் மூலம்தான். மரபுக்கவிதையை படிக்க நாம் சிறு வயதிலேயே நாம் பழகிவிட்டிருக்கிறோம் . ஆகவே நமக்கு அது புரிகிறது. சொற்பொருள் மட்டும் தெரிந்தால் போதும்.  நவீனக் கவிதையில் சொற்கள் எல்லாமே தெரிந்தவை, கூறுமுறை மட்டுமே தெரிய வேண்டியுள்ளது .

இலக்கியப்படைப்பில்  பல வாசிப்புகளுக்கு இடமுள்ளது. எந்த படைப்பு அதிகமான வாசிப்புக்கு இடம் தருகிறதோ அதுவே நல்ல படைப்பு. நான் வாசிப்பது படைப்பில் உள்ளுறைந்துள்ள என் படைப்பு. இதை ஆங்கிலத்தில் இலக்கிய விமரிசகர்கள் மிக விரிவாக பேசியுள்ளனர்.

தமிழில் தமிழவன் 'படைப்பும் படைப்பாளியும் ' என்ற நூலில் விளக்கி எழுதியுள்ளார். ழாக் தெரிதா போன்ற சில வ்மரிசகர்கள் எல்லைக்கு போய் படைப்புக்கும் வாசிப்புக்கும் நேரடையான உறவே இல்லை என்கிறார்கள். படைப்பு மீது அர்த்தம் 'வழுக்கி' சென்றபடியே உள்ளது என்கிறார்கள். 

பல்லிவால் கவிதையை நான் எப்படி படிக்கிறேன் என்று சொல்கிறேன் .இது ஒருவாசிப்புதான் . இப்படி பல வாசிப்புகளுக்கு இடமுண்டு. அதாவது இது பொழிப்புரை அல்ல. பல்லியின் வால் உயிருள்ளது .ஆனால் அது பல்லியின் ஓர் உறுப்புமட்டுமே . அதற்கென எந்த தனியடையாளமும் இல்லை .பல்லிக்கு வாலை இழப்பது ஒரு தப்பித்தல். அதற்கு வேறு வால் முளைக்கும். ஆகவே அதற்கு கவலையே இல்லை. சமூகத்தில் பிறிதொருவரை சார்ந்து வாழக்கூடிய பலரை நாம் கண்டு வருகிறோம். கணவனை சார்ந்து வாழும் மனைவிகள் மிகச்சிறந்த உதாரணம். அபூர்வமாக சகோதரர்களை சார்ந்து வாழ்பவர்கள் உண்டு. அவர்கள்  அவ்வாறு துண்டித்து வீசப்பட்டால் அடையும் துடிப்பின் சித்திரத்தையே இக்கவிதை அளிக்கிறது. துடித்து துடித்து மரணத்தை நோக்கி செல்கிறது அந்தவால். அந்த வால் போல துடிக்கும் பலரை நான் கண்டதுண்டு என் வாழ்வில் .அப்போதெல்லாம் இக்கவிதையை எண்ணிக் கொள்வேன் . 

இன்னொரு கோணத்திலும் யோசிக்கலாம். சில கொள்கைகளை, சில நிறுவனங்களை நம்பியே வெகுகாலம் வாழ்ந்து விடுபவர்கள் உண்டு . சட்டென்று அதிலிருந்து துண்டிக்கப்பட நேர்ந்தால் அப்படியே அழிந்து போய்விடுகிறார்கள் அவர்கள். கம்யூனிச இயக்கங்களை சேர்ந்த பலர் அப்படி அழிந்து போயிருக்கிறார்கள். ஏன் இப்படி யோசியுங்கள், நாற்பது வருடம் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்து ஒருவர் ஓய்வு பெறுகிறார் .அவரை பதினைந்து நாளில் அவ்வலுவலகம் மறந்துவிடும்.அவர் இப்பல்லிவாலின் நிலையிலிருக்கிறார் .அதாவது ஓரு உயிருள்ள அமைப்பிலிருந்து பிரிந்துபோய் தனித்தன்மை இல்லாமல் படிப்படியாக அழிய நேரும் வாழ்க்கைச்சந்தர்ப்பத்தை இக்கவிதைகனுபவமாக்குகிறது இல்லையா?

இதுதான் படிமக்கவிதையின் இயல்பு. நவீனக்கவிதையில் பெரும்பாலானவை படிமக்கவிதைகளே . படிமம் என்ற வடிவம் நவீனக்கவிதை என்ற வடிவம் எப்போது பிறந்ததோ அப்போதே பிறந்தது .நவீனக்கவிதையின் பிதாமகரான எஸ்ரா பவுண்ட் தான் படிமம் என்ற உருவத்தையும் சீர்படுத்தியவர். தற்கால மலையாளக் கவிதைகள் என்ற தொகுப்பில் குதிரை நடனம்[அய்யப்ப பணிக்கர்] ,ஒற்றையானையின் மரணம்[ என் என் கக்காடு], சிலைகள்[ கெ சச்சிதானந்தன்] முதலியவை தூய படிமக் கவிதைகள் .குதிரை நடனம் என்ன சித்திரத்தை தருகிறது? தகுதி உடையவர்களின் முன் தகுதி இல்லாத ஒருவன் ஆட வருகிறான்.தன்னுடைய தகுதியிமையையே அவன் தன் தகுதியாக ஆக்கிக் கொள்கிறான். இதை வாழ்வுடன் ஒப்பிடவேண்டுமா? வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன் அதிகாரியாகிறான். கடைசி மதிப்பெண் வாங்கும் மாணவன் அரசியல்வாதியாகி அவனுக்குமேலே அதிகாரத்தில் அமர்கிறான். இது ஓர் உதாரணம்தான். 

'ஒற்றையானையின் மரணம்' இதேபோல ஒரு படிமத்தையே முன்வைக்கிறது . ஒற்றையானை ஒரு போதும் கூட்டத்துடன் சேராது என நாம் அறிவோம். அது தன் வழியை தானே கண்டடைவது. தன்னம்பிக்கையும் தனியான தேடலும் கொண்ட மனிதர்களை அந்த யானை குறிக்கிறது எனலாம்.அது கொல்லப்பட்டு விட்டது [சுட்டுக் கொல்லப்பட்டு விட்டது] அந்த யானையின் மரண அலறலைகேட்டபடி ஒருவன் ஊரை விட்டு விலகி இடிபாடுகளி¢ன் வழியாக காடுகளை நோக்கி செல்கிறான். தன்னை வாழ அனுமதிக்காத ஊரை விட்டு செல்கிறான் என எடுத்துக் கொள்ளலாம். ஒற்றையானையின் மரணம் என்பது தனித்தன்மையின் மரணத்தை குறிக்கிறது என்று கொள்ளலாம். 1960கள் உலகம் முழுக்க மனிதனின் தனித்தன்மைக்காகவும் , சிந்தனை சுதந்திரத்துக்காகவும் கலகக் குரல்கள் எழுந்த காலகட்டம் என அறிவீர்கள்.நக்சலைட் இயக்கம் உருவான காலகட்டம் அது. அக்காலகட்டத்தின் முடிவை, அன்றைய இயக்கங்களின் வீழ்ச்சியை சொல்லும் கவிதை இது என நான் வாசிக்கிறேன். அதேபோல சிலைகள் ஒரு படிமத்தை முன்வக்கிறது . மாமனிதர்கள் எல்லாம் வரலாற்றில் வெறும் பெயர்களாக மாறிக் கொண்டிருப்பதை சித்தரிக்கும்  கவிதை அது. 

மொழியுருவகம் என்பது மரபுக்கவிதையில்பயன்படுத்தப்பட்ட உருவக அணியேதான். ஆனால் உருவக அணியில் உருவகித்தல் என்பது திட்டவட்டமான ஒரு கருத்தை தெளிவுபடுத்தும் ஓர் உத்தியாக உள்ளது. நவீனக்கவிதையில் அப்படி திட்டவட்டமான கருத்து இல்லை. அந்த கருத்து வாசகனின் கற்பனைக்கே விடப்படுகிறது . ஆனால் வாசகனின் கற்பனையை பலதளங்களைச்சார்ந்து  விரித்தெடுப்பதற்கு உதவியாக பல மொழிக்குறிப்புகள் அளிக்கப்பட்டு உருவகம் மேலும்மேலும் விரிவு படுத்தப்படுகிறது. தொடர்புள்ள பல விஷயங்கள் அதில் கொண்டுவந்து இணைக்கப்படுகின்றன. இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் மரபான உருவகம் ஒரு காட்சியாகவோ ஒரு தருணமாகவோ இருக்கும். ஆனால் நவீனக்கவிதையில் உள்ள உருவகம் மொழிசார்ந்ததாக இருக்கும். மொழியை பயன்படுத்தும் விதம் மூலமே அது விரிவடையும். ஆகவே அதை மொழியுருவகம் என்று சொல்லலாம். [இங்கே ஒரு எச்சரிக்கை மெட்ட·பர் என்ற சொல் தத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. அது அங்கே முற்றிலும் மாறுபட்ட தளத்தில் பயன்படுத்தப்படுகிறது .அதை இங்கே குழப்பிக் கொள்ளக் கூடாது.]

மலையாளக் கவிதைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கவிதை உத்தி மொழியுருவகம்தான் .   ஓர் உருவகத்தை முன்வைத்து அதை மொழியின் வழியாக வளர்த்து சென்று அது குறிப்பிடும் பொருளை மிக விரிவானதாக ஆக்குவது இந்த உத்தி.  பிறவி[ஆற்றூர் ரவிவர்மா] ஓர் உதாரணம்  ஒரு பெரும் புயலுக்கு முந்தைய கணத்தை சொல்ல முற்படும் கவிதை பிறவி. அப்புயல் ஒரு புது யுகத்தின் பிறவியின் குறியீடு எனலாம். ஒரு மீட்பர் , ஒரு தலைவர் பிறக்கப்போகிறார் என்ற எண்ணமும் வழி தெரியாத தத்தளிப்பும் இக்கவிதையில் இருக்கிறது . இங்கே நம் கற்பனை தூண்டப்படுவதுடன் அது ஒரு 'குறிப்பிட்ட' அர்த்த தளம் நோக்கி ஆற்றுப்படுத்தப்படுகிறது. அந்த குறிப்புப்பொருள் கவிதைக்குள் திடமாக உள்ளது . ஆகவேதான் இது உருவகம்.

மரபுக் கவிதையில் நேரடியாக கருத்துக்களைச் சொல்லும் [staement]கவிதைகள் ஏராளமாக உண்டு . உண்மையில் அவை கருத்துக்களைச் சொல்லும்போது அக்கருத்துக்களுக்கு பின்னால் உள்ள உணர்வுகளையே சொல்கின்றன. கருத்துக்காக சொல்லப்பட்ட கருத்து கவிதை அல்ல.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அற்றே 
செல்வத்தை தேய்க்கும் படை

[சுரண்டப்பட்டவன் துயரப்பட்டு தாங்காது அழுத கண்ணீர் செல்வத்தை அழிக்கும் ஆயுதமாகும்] போன்ற கவிதைகளை உதாரணமாக சொல்லலாம். நவீனக் கவிதை இம்மாதிரி நேரடியாக பேசுவது இல்லை .ஆனால் நேரடியாக பேசுவது போன்ற ஓர் உத்தியை அது கைகொள்கிறது . அப்படிப் பேசும் போது ஒன்று அது இடக்காக உள்ளர்த்தங்களை காட்டிப் பேசுகிறது. அல்லது குறிப்பு என்ற வடிவில் சில விஷயங்களை மட்டும் சொல்லி பலவிஷயங்களை வாச்க ஊகத்துக்கு விட்டு பேசமுற்படுகிறது. இவ்விரு முறைகளுக்கும் உதாரணமாகும் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

நானும் சைத்தானும் [எம் கோவிந்தன்]    சக்ரட்டீஸ¤ம் கோழியும்[கெ சச்சிதானந்தன்]' இரவுணவு ' [ஏ.அய்யப்பன்] ஆகிய கவிதைகள் இடக்கான முறையில் பேசும் கவிதைகள் எனலாம். அவை எவற்றை அங்கதமாக விமரிசிக்கின்றன என்பதே முக்கியமாக கவனிக்கப் பட வெண்டும்.  .சாக்ரட்டீஸ¤ம் கோழியும் கவிதையில் சச்சிதானந்தன் தத்துவ சிந்தனையை எள்ளலுக்கு ஆளாக்குகிறார் .சாக்ரட்டீஸின் ஒரு கடன்  கிரேக்கத்தையே கடனாளிஆக்கியது என்ற வரியில் ஒரே சமயம் பாராட்டும் சிரிப்பும் ஒளிந்துள்ளது. எள்ளல், துக்கம் போன்ற உணர்வுகளின் வழியாக நாம் அடையும் அனுபவமே இக்கவிதைகள் அளிப்பவை.
 
இம்மலையாளக் கவிதைகளின் ஒரு பொது அம்சத்தை சொல்ல விரும்புகிறேன். இவை 1960,70 காலகட்டங்களில் எழுதப்பட்டவை. நக்சலைட் இயக்கம் கேரளத்தில் உருவாகி ஒடுக்கப்பட்டு அழிந்த வரலாற்று தருணத்தின் பின்னணி இவற்றுக்கு உண்டு.  பிறவி போன்ற கவிதைகளில் அந்த எழுச்சியையும் ஒற்றை யானையின் மரணம்  போன்ற கவிதைகளில் அதன் வீழ்ச்சியையும் காணலாம். இக்கவிதைகளில் நாம் நமது கவிதை ரசனைமூலம் பொதுவாக அறியக்கூடிய அம்சங்கள் இவை. இவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு கவிதைக்கும் அவற்றுக்கேயுரிய தனிப்பட்ட கலாச்சார தனித்துவம் உள்ளது.   கேரள கலாச்சரக் கூறுகள் உள்ளன.அவற்றை நாம் கவிதையை கூர்ந்து படித்து உள்வாங்கிக் கொள்வதன்மூலமே அறிய முடியும். கவிதைபடிப்பதன் நோக்கங்கள் இரண்டு. கவிதை அனுபவம் ஒன்று. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்துடன் உறவு கொள்ளுத்ல் இரண்டு. இரண்டு தளங்களிலுமே வாசிப்பு நிகழவேண்டும். 

அதாவது இன்றுவரை நீங்கள் கவிதை வாசித்த முறையை இவற்றுக்கு போடாதீர்கள். கவிஞன் என்ன சொல்கிறான் என்று தேடாதீர்கள். இச்சொற்கள், படிமங்கள் உங்கள் மனதில் என்ன விளைவை உருவாக்கின என்று பாருங்கள். நீங்கள் அடைந்த அர்த்தமே இக்கவிதையின் அர்த்தம் -- உங்களைப் பொறுத்தவரை .

நானும் சைத்தானும்

தேவனுக்கு உரியதை தேவனுக்கும்
தேசத்துக்கு உரியதை அதற்கும்
தந்துவிட நான் முன்வந்தபோது
ஒருவன் என் முன் வந்து சொன்னான்
"எனக்குரியது எனக்கே" என.
'யார் நீ" என்றேன்
"தெரியாதோ சைத்தானை?" என்றான்
"அப்படியானால் கேள்
என்னுடையதெல்லாமே எனக்கே
என்பதே என் வேதம்"
என்றேன்
'என்னுடையதை தந்தாய் நன்றி "
என்று சிரித்து போனான்,
சைத்தான்

- எம் கோவிந்தன் -
 

குதிரை நடனம்

நான்கு பெரும் குதிரைகள்
அலங்கரித்துவந்தன.
ஒன்று வெள்ளை ஒன்று சிவப்பு.
ஒன்று கருமை ஒன்றுக்கு தவிட்டுநிறம்.

ஒன்றுக்கு நான்குகால்.
ஒன்றுக்கு மூன்றுகால்.
மூன்றாவதற்கு இரண்டுகால்.
நான்காவது ஒற்றைக்காலன்.

ஒற்றைக்கால் குதிரை சொன்னது,
மற்றவற்றிடம்
நடனத்துக்கு நேரமாயிற்று தோழர்களே
நாம் ஒற்றைக்கால் நடனம் ஆடுவோம்.

நடனம் தொடங்கியது .

நான்குகாலன் நடுங்கி விழுந்தது.
மூன்றுகாலன் மூர்ச்சையாயிற்று.
ரெட்டைக்காலன் நொண்டியடித்தது.

ஒற்றைக்காலன் குதிரை மட்டும்
நடனம் தொடர்ந்தது.

- அய்யப்ப பணிக்கர் -

ஒற்றையானையின் மரணம்

ஒற்றை யானையின் பிளிறலைகேட்டபடி
கட்டிமுடியாத வீடுகளின்
அடித்தளம் மீது நடப்பவன் எண்ணிக் கொண்டான்,
காடு தொலைவிலா அருகிலா?
அந்திமீது
அடர்கானக அமைதியும் குளிரும்
படிந்துள்ளன.
ஆனால் சுற்றிலும்
கட்டிமுடிவடையா மாநகர்.
காலியான தெருக்கள்.
விரிந்தகன்ற மைதானங்கள்.
குறுக்கும் நெடுக்கும் மொட்டைமேடுகளின்
முடிவற்ற வரிசை.
எங்கோ கடலின் நினைவு.

தொலைவில்
குண்டடிபட்ட யானையின் கடைசி பிளிறல்.
கரைந்து மறைந்தது சோகம்.
துடித்துசரிந்த வானச்செம்மையை
உண்டு களித்தது இரவுக்கருமை.
நானோ
முளியான மேடுகளினூடாக
எங்கெனத்தெரியாமல்
நடந்துகொண்டிருக்கிறேன்.

பிறவி

கண்மூடினாலும் திறந்தாலும்
வேறுபாட்டு இல்லா இருளில்
சொன்னதையே சொல்கிறது
என்காதில் பெருமழை.

மழைபெய்யலாமென எண்ணாமலோ
இருண்டுவிடுமென அறியாமலோ
கிளம்பியவனல்ல நான்
எதற்கென்றா?
முழுக்க சொல்லவில்லை என்னிடம் கூட
அத்தனை ரகசியம்.

மழை ஓயக் காக்கவோ
விடியும்வரை தரிக்கவோ
முடியாத தவிப்பு.

கூவினேன் குரல்
துணையின்றி திரும்புகிறது
வாரிக்கொட்டிய இருளெல்லாம்
குன்றென குவிந்தது.

புள்ளிகள் நிறைந்த வானம் என்னுடன்
நான்குகாலில் நடந்தது.

காட்டுதீ எரிவதைபோல ஏதோ
கண்மூடினாலும் தெரிகிறது.
கடல்பொங்குதல் போலொன்று
கால்களில் அலைக்கிறது
புயல்போல பேரிரைச்சல்
காதுகளில் நிறைகிறது,.

பூமியின் பிரசவ வலி,
தீயல்ல காற்றல்ல கடலல்ல
யாதவர் குலத்திலோ
இடையர் குடிலிலோ
பூமியில் ஒரு குழந்தை பிறக்கிறது.

எங்கேஎன்று தெரியாமல்
எவ்வழி என்றும் அறியாமல்
முன்னோக்கி செல்லவும் முடியமல்
பின்னோக்கி நகரவும் முடியாமல்
கிளைகளினால் துழாவுகிறேன்.
வேர்களினால் தேடுகின்றேன்.

- ஆற்றூர் ரவிமர்மா -

சக்ரட்டீஸ¤ம் கோழியும்

உன்னையே அறிவாயாக
ஒரு மாலைநேரத்தில் விஷக்கோப்பை
அவன் காதில் சொன்னது.
வீட்டுக்குள் அனுமதிக்கா மனைவியிடமிருந்தும்
வசைபாடும் குழந்தைகளிடமிருந்தும்
தன்னை காத்த சகமனிதர்களுக்கு
நன்றிசொல்லி சிரித்தபடி
அவன் தன் கால்முதல் தலைவரை
படர்ந்த சில்லிப்பால்
மரணத்தை நிர்ணயித்தான்

அஸ்க்ளோப்பீஸ¤க்கு தரவேண்டிய
கோழியைப்பற்றி கிரீட்டோ மறந்துவிட்டான்.
பிளேட்டோவும் அரிஸ்டாடிலும்
சிண்டைப்பிடித்துக் கொண்டது அதற்காகவே
கடனுக்காகன வட்டி ஏறி எறி
கிரீஸையே விழுங்கியது

கோழிகள் என்ன அறியும்
கலாச்சாரத்தைப் பற்றி இல்லையா? 

- கெ சச்சிதானந்தன் -
 

 சிலைகள்

இன்று எங்கள் மகாகவிஞன் சிலை
இந்த தெருவழியாக சென்றது.
எழுத்துக்களும் அசைவுகளும் அற்ற
வெண்கல உதடுகள் மீது
இரு ஈக்கள் இணைசேர்ந்தன.
சுழிகளும் அலைகளும் எழுப்பிய
சுட்டுவிரலில்
ஒருகாகம் வந்தமர்ந்து மலமறுத்து திரும்பியது.
இதே தெரு வழியாகத்தான்
முன்பு எங்கள் நாட்டை ஆணிடிருந்த மன்னர்பிரானின்
கருங்கல் சிலையும் சென்றது.
இன்று அவர் கம்பீரம் குலையாமல்
நாற்சந்தியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறார்.
பிறகும் எத்தனை சக்கரவர்த்திகள்
ராஜதந்திரிகள் மக்கள் தலைவர்கள்
கவிஞர்கள் படைத்தலைவர்கள்
இந்த தெருவழியாகக் கொண்டு செல்லப்பட்டனர்
அனைவரும் 
நகரத்தெருக்களுக்கு திருஷ்டிப்பொம்மைகளாக ஆயினர்.
சட்டென்று  
உயிருள்ள அனைத்தையும் தொட்டு சிலையாக்கும் சூனியக்காரியாக
காலம் என் முன் வந்து நிற்கிறது.

இறப்பது என்றால்
திருஷ்டிப்பொம்மையாக மாறுவதென்று அர்த்தம்.

- கெ சச்சிதானந்தன் -

பல்லிவால்

பல்லியின் முறிந்து விழுந்த வால்
அமைதியாக திரும்பி பார்த்தது.

அதோ இருக்கிறதென் பல்லி.
ஏதும் நிகழ்ந்த சாடையே இல்லை.
பூவைப்பிரிந்த கொடி என
கண்ணீர்துளி உதிர்ந்த கவிஞன் என
அதோ இருக்கிறதென் பல்லி.

'சென்றது நினைந்து வருந்தா
பண்ணித சிரேஷ்டனாய்'
அதோ இருக்கிறதென் பல்லி.

யாரோடும் எந்தவிதமான பகையும் இல்லாமல்
பிரபலமான அந்த
'மதிப்பீட்டுச் சரிவுத்துயரம்' கூட இல்லாமல்
அதோ இருக்கிறதென் பல்லி.
பின்பக்கம் தன்னைவிட பெரிய நிழலுடன்
அதோ இருக்கிறதென் பல்லி.
புதிய இரையோ துணையோ காத்து
அதோ இருக்கிறதென் பல்லி.

- கெ.ஜி.சங்கரப்பிள்ளை -

திரும்புதல்

மியூசியமருகேபூங்காவில் 
பென்ஷன் வெயில்.
முன்னாள் மந்திரி முன்னாள் நீதிபதியிடம் சொன்னார்.

'இந்த பூங்கா நான் கட்டியது.
இதோ கற்பலகையில் பெயர் .
இளஞ்சிவப்பு மலர்களுடன் இந்த பூமரம்.
நான் சமத்துவ புரியிலிருந்து கொண்டுவந்தது.
அங்கே நாடெங்கும் ந்கரமெங்கும் இந்தப்பூக்கள்தான்.
கொண்டுவரும்போது சிவப்பு.
ரத்த மலர்கள் என்றார்கள்.

தேவாலயங்கள் கோயில்கள் நிரம்பிய மண்ணின்
வெண்ணிறக்காற்றில் இவை நிறம்கரைந்தன.
காவியின் மண்ணில்
இன்று இவையும் காவி நிறம்.

- கெ.ஜி.சங்கரப்பிள்ளை -

இரவுணவு

கார்விபத்தில் இறந்த வழிப்போக்கனின்
ரத்தம் மிதித்து கூட்டம் நிற்க
செத்தவன் பையிலிருந்து பறந்த
ஐந்துரூபாய் நோட்டில் இருந்தது என் கண்.

நான் இருந்தும் தாலி அறுத்த மனைவி.
என் குழந்தைகளோ
பசியின் நினைவுப்பொம்மைகள்.

இன்றிரவு இரவுணவின் ருசியுடன்
என் குழந்தைகள் உறங்கும்.
என் மனைவிக்கும் எனக்கும் அரைவயிறு ஆனந்தம்.

செத்தவனின் பிணப்பரிசோதனையோ அடக்கமோ
இந்நேரம் முடிந்திருக்கும்.
நினைத்துக் கொண்டேன்
ரத்தம் மிதித்து நின்ற கால்களை.

வாழ்பவர்களுக்கு வாய்க்கரிசியிட்டு
செத்தவனை.

- ஏ.அய்யப்பன் -

இருப்பு

ஒரே இருப்பில் நான் பல வேலைகள் செய்கிறேன்
பொடிக்கவும் கலக்கவும் அரைக்கவும் செய்கிற
சமையல் யந்திரம் போல.
ஒரே நாவினால் பல மொழிகள் பேசுகிறேன்
காரமும் இனிப்பும் புளிப்பும் மாறி மாறி பரிமாறும்
ஓட்டல்தட்டுபோல.
நுழைந்து அமர்ந்து மறையும்
கதாபாத்திரங்கள் மீது மின்விசிறிபோல
மாறாத வேகம் நான்.
ஒரேநொடியில் எரியத்தொடங்கும் ஒளிபோல
எப்போதும் கவனமானவன்.
என் இருப்பும் பார்வையும் நடிப்பும்
கதகளி நடிகன் போல
கனகச்சிதம்.
பாத்திரத்துக்கு ஏற்ப உருமாறுவதும் 
நிறமோ மணமோ ருசியோ அற்றதுமான
தூய்மை நான்.

- ஆற்றூர் ரவிவர்மா -

[தற்கால மலையாளக் கவிதைகள் என்றபேரில் தொகுப்பாக 1989ல்  வெளிவந்த நூலில் உள்ள கவிதைகள் இவை. மதுரை பல்கலைகழகத்துக்கு இவை பாடமாக வைக்கப்பட்டன. மாணவர்களுக்கு கவிதை வாசிப்புக்கு உதவும்பொருட்டு அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி தமிழ்துறையால் ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டத்தில்பேசியவற்றின் பதிவு இவ்வுரை ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  
 
- பதிவுகள் ஆகஸ்ட் 2003; இதழ் 44 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்