நூல் அறிமுகம்: பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புதான் இதுவரை எழுதிய குறும்பாக்களில் பெரும்பாலானவற்றை தெரிவுசெய்து நூறு தலைப்புக்களில் நூறு குறும்பாக்களைத் தொகுத்து 84 பக்கங்களில் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் தனது நூலை வெளியீடு செய்துள்ளார். இந்த நூல் குறும்பா பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்திருக்கிறது. இன்று பலராலும் பெரும்பாலும் அறிந்து வைக்கப்படாத ஒரு வடிவமாகவே குறும்பாவைக் கருதலாம். ஆனாலும் அனைவரும் கட்டாயம் இந்த வகையான வடிவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. மறைந்த கவிஞர் மஹாகவி என்று அறியப்படுகின்ற து. உருத்திரமூர்த்தி அவர்ளே தமிழில் குறும்பா என்ற இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியவராவார். குறும்பாக்கள் குறுமையாக இருப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் குறும்பும் செய்கின்றன. அந்ந வகையில் இந்தத் தொகுதியில் உள்ள அநேகமான குறும்பாக்கள் குறும்பு, அங்கதம், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, எள்ளல், துள்ளல் என நகைச்சுவை ததும்புவனவாக அமைந்துள்ளன. எழுத்தினூடாக நகைச் சுவை உணர்வைக் கொண்டு வருவதென்பது காட்சி அமைப்பு, உடல் அசைவு, நடிப்பு, சம்பாஷணை என்பவற்றினூடாக அதனைக் கொண்டு வருவதை விடவும் சிரமமான காரியமாகும் என்பது புலனாகின்றது. ஆனாலும் அதனை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் பாலமுனை பாறூக் அவர்கள்.

இந்த நூலுக்கு தமிழ்மாமணி, செந்தமிழ்ச் செம்மல், கவிச்சுடர், கலைக்காமாமணி, பேராசிரியர், முனைவர் மு.இ. அகமது மரைக்காயர் நெய்திறம் மிக்க நெசவாளர் நெய்த நேரிய நூல் என்ற தலைப்பிட்டு தனது மதிப்புரையை பதிவு செய்துள்ளார். அதுபோல் முதுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு, குறும்பாவில் அமைந்து சுவைதரும் அங்கதப் பாக்கள் என்ற தலைப்பிலும், கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி கலைப் பெறுமானம் நிறைந்த பாலமுனை பாறூக் குறும்பாக்கள் என்ற தலைப்பிலும் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். பாலமுனை பாறூக் அவர்கள் குறும்பா விருந்து வைத்து என்ற தலைப்பில் தனதுரையை முன்வைத்துள்ளார். நவாஸ் சௌபி அவர்கள் நூலுக்குரிய பிற்குறிப்பை வழங்கியுள்ளார். இந்த பல்வேறுபட்ட மூத்த எழுத்தாளர்களின் கருத்துக்களை வைத்தே பாலமுனை பாறூக் அவர்களின் குறும்பாக்களை அவதானித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாய் அமையும் என்று கருதுகின்றேன்.

ஈழத் தமிழ்க் கவிஞர்களுள் குறிப்பிட்டுப் பெயர் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக பாலமுனை பாறூக் அவர்கள் காணப்படுகிறார். 1987 இல் பதம் என்ற கவிதைத் தொகுதியையும், 2009 இல் சந்தனப் பொய்கை என்ற கவிதைத் தொகுதியையும், 2010 இல் கொந்தளிப்பு என்ற குறுங்காவியத்தையும், 2011 இல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத்தையும், 2012 இல் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு என்ற குறுங்காவியத்தையும் ஆக ஐந்து நூற்களை இலக்கிய உலகுக்கு தந்தவர், தனது ஆறாவது நூலாகவே இந்ந குறும்பாக்களைத் தொகுத்து முன்வைத்துள்ளார்.

காய் காய் தேமா
காய் காய் தேமா
காய் காய்
காய் காய்
காய் காய் தேமா

என்ற வகையில் 90 குறும்பாக்களை அமைத்தும், ஏனைய குறும்பாக்களை வேறு யாப்பிலும் அமைத்துள்ளார். இயைபுத் தொடையும், மோனைத் தொடையும் குறும்பாக்களை அணிசெய்கின்றன. எதுகையும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. பல குறும்பாக்களில் எள்ளல் துள்ளி விளையாடுகின்றது.

குறும்பாவின் குணங்கள் என்ன? வெண்பா, குறள்வெண்பா போன்று கூரான பார்வை கொண்டது. கவிதைக்குரிய அழகும், ஆழமும், அடர்த்தியும், சுருக்கமும் கொண்டது. ஐந்தடி கொண்ட இப்பா மூலம் வாழ்வியலைப் பற்றிக் கலாபூர்வமாகப் பேசலாம். வார்த்தைக் கட்டமைப்புக்குள் வாழ்வியல் கலாச்சாரங்களை வடித்துத் தரலாம். ஈரடி எழுசீர் கொண்ட குறட்பா போலும் ஐந்தடி பதின்மூன்று சீர்களைக் கொண்ட குறும்பா மூலம் கவிஞர் தனது கருத்துக்களை அழகுபடச் சொல்லியுள்ளார். நகைச் சுவையும் எள்ளலும் நயந்து இரசிக்கத் தக்கவாறு இக்குறும்பாக்கள் அமைந்துள்ளன. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பனுவலுக்கும் ஒவ்வொரு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. கவிச்சுவை கூட்டப்பட்டுள்ளது. ஐந்தடிப் பாவுக்குள் அர்த்தமும் அழகும் காட்டப்பட்டுள்ளது.

இந்நூலில் பல அறிவுரைகள் விரவிக் காணப்படுகின்றன. அநீதியான சமூகத்தோடு முரண்படுகின்ற அறிவாளிகளின் பேச்சு எப்போதும் அங்கதமாகவே இருக்கும். குறும்பாவின் இயல்பும் அங்கதம் சார்ந்ததே. மேற்கு நாடுகளில் இருந்த நுனறயசன டுநயச  இன் டுiஅநசiஉ (லிமறிக்;) ஆங்கில கவிதை வடிவமே இங்கு குறும்பாவாக வந்தது என்பது பலரது அபிப்பிராயம். இக் குறும்பாவினை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் மஹாகவி ஆவார். கேலியையும், கிண்டலையும், சமூக ஊத்தைகளையும் வெளிப்படுத்த மிகவும் பொருத்தமான வடிவமாக இந்த குறும்பாக்கள் இருந்தது. கேலியும், ஆபாசமும், நகைச் சுவையும் இதில் இருந்ததால் செம்மொழி இலக்கியத்துள் இதைப் பலர் இணைத்துக்கொள்ளவில்லை. இங்கும் அதே நிலைதான்.

1965 களில் வெளிவந்த மஹாகவியின் குறும்பாக்களிலும் இக்கேலியும் கிண்டலையும் காணலாம். 2002 இல் ஒலுவில் எஸ். ஜலால்தீன் சுடுகின்ற மலர்கள் என்ற தலைப்பில் ஒரு குறும்பா நூலினை வெளியிட்டுள்ளார். அதுபோல் 2010 இல் ஒலுவில் ஜே. வஹாப்தீன் வெட்டுக்கற்கள் என்ற குறும்பா நூலினை வெளியிட்டுள்ளார். இந்தத் தொடரில் நான்காவது நூலாகவே பாலமுனை பாறூக்கின் இந்த நூல் 2013 டிசம்பரில் வெளிவந்துள்ளது.

இந்தத் தொகுதியில் சில குறும்பாக்களில் ஆங்கிலச் சொற்கள் இடம்பிடித்துள்ளன. கவிஞர் அதற்கு காரணமாக, அந்த ஆங்கிலச் சொற்கள் தமிழ்ச் சொற்களுடன் கலந்து புலக்கத்தில் உள்ளதாலும், நகைச்சுவை உணர்வை அந்த ஆங்கிலச் சொற்கள் கூட்டித் தருவதாலும் பொருத்தம் கருதி அவற்றை தான் சேர்த்திருப்பதாகக் கூறுகின்றார்.

இனி இரசனைக்காக கவிஞர் பாலமுனை பாறூக்கின் சில குறும்பாக்களை எடுத்து நோக்குவோம்.

அழகு, குணம், அறிவு என்ற எது இருந்தபோதிலும், இன்று திருமணம் செய்வதற்கு ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய முக்கிய விடயம் சீதனம் ஆகும். சீதனம் கொடுக்க வழியில்லை என்றால் எத்தகைய அழகிகளும் இரண்டாம் பட்சமாகிவிடுகின்ற நிலை தற்காலத்தில் தோன்றியிருக்கின்றது. அழகுக்காக மாத்திரம் திருமணம் செய்தல் கூட அண்மைய காலங்களில் வழக்கொழிந்து போயிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதுபற்றிய விடயங்களை உள்ளடக்கியே தேவை (பக்கம் 26) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா அமைகிறது.

பக்கத்து வீட்டிலொரு பாவை
பால்நிலவு வதனத்தாள் பூவை
முப்பதையும் தாண்டிவிட்டாள்
முடியவில்லை திருமணமே
எப்படியும் சீதனமாம் தேவை!

தாய் தந்தையர் கஷ்டப்பட்டு பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சொத்து சுகங்களைத் தேடி வைப்பார்கள். ஆனால் பிள்ளைகள் பெரியவர்களாகி, திருமணம் முடித்த பிறகு சொத்தில் பாகப் பிரிவினை கேட்டு சண்டையிடுவார்கள். பிறகென்ன நடக்கும்? மொத்த சொத்தையும் பெரிய தொகைக்கு விற்றுவிட்டு ஆளுக்காள் பணத்தை பகிர்ந்து கொள்வார்கள். எதிர்காலத்தில் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய எண்ணமெல்லாம் தாய் தந்தையர்க்கு சிதறிப் போய்விடும். இறுதியில் அவர்களுக்கு வீடுமில்லை. பிள்ளைகளின் அன்பும் இல்லை என்ற பரிதாப நிலைமை உருவாகி விடுவதை இன்றுகளிலும் காணக்கூடியதாய் இருக்கிறது. சொத்து (பக்கம் 29) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா அதை ஒட்டியே எழுதப்பட்டிருக்கின்றது.

பிள்ளைகளில் அவர்க்கதிகம் பற்று
பெருமளவில் சேர்த்தாராம் சொத்து
பிள்ளைகளோ சண்டையிட்டுப்
பிரிந்தனராம் தனித்தனியாய்
உள்ளதெல்லாம் வேறாக்கி, விற்று!

பெருங்குடி (பக்கம் 31) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது. இதில் குடியின் கெடுதியைப் பற்றி சொல்லப்படடிருக்கின்றது. கணவன் குடியில் மூழ்கிவிட்டால் பால்மா வாங்குவதற்குக் கூட முடியாத நிலை தோன்றும். பிறகு குழந்தை பசியால் வாடி நிற்கும். குடி குடியைக் கெடுக்கும் என்பது நிதர்சனமாக எழுதப்பட்டிருக்கின்றது.

தவழ்கிறது மதலையவள் மடியில்
தவழ்கின்றான் கணவனுமோ குடியில்
மதலையது பாலின்றி
மடியிலிருந் தழுகிறதே
குடிகுடியைக் கெடுத்திடுமோ முடிவில்!

இலஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம். அப்படியிருக்க இன்றெல்லாம் சிறியதொரு காரியம் ஆக வேண்டும் என்றால் கூட இலஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. வாங்குபவர்களைவிட கொடுப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். காரணம் நேரத்துக்கு முடிய வேண்டிய காரியங்கள் பொடுபோக்குத் தனத்தால் பிற்போடப்படுகின்றன. அவற்றை சீக்கிரம் செய்துகொள்வதற்காக அலுவலக பியூன் முதல் மேலதிகாரி வரைக்கும் ஷகைக்குள் வைக்க| வேண்டும். அதை உணர்த்தி (பக்கம் 33) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.

கந்தோரில் கையூட்டுப் பெற்றான்
கடமைகளில் தவறியவன் கெட்டான்
வந்தவனை பொலிஸாரே
வலைவீசிப் பிடித்ததனால்
இன்றவனோ கூண்டிலகப் பட்டான்!

அலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஒரு வகை முரட்டுத் தன்மையோடு பழகுவார்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அதற்குக் காரணம் தான் கந்தோரில் வேலை செய்கிறோம் என்ற பெருமையும், அலுவலகத்தில் ஏற்படும் டென்ஷனும் ஆகும். அவற்றை எல்லாம் உதறிவிட்டு எல்லோருடனும் இயல்பாக, அன்பாகப் பழகி, தமக்குக் கீழுள்ளவர்களிடமும் பணிவாக நடந்தால் எல்லாம் அழகாக இருக்கும் என்பதை அழகு (பக்கம் 39) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா விளக்கி நிற்கின்றது.

மக்களொடு அன்பாகப் பழகு
மதித்தவர்க்குப் பணிபுரிய இளகு
கட்டிவைத்த நாயாகக்
கடமையினில் குரையாமல்
ஒத்துழைப்பாய், உத்தியோகம் அழகு!

இலங்கையைப் பொறுத்தவரை எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பு மிகக் குறைவு. எழுத்தறிவு வீதம் இலங்கையில் உயர் மட்டத்தில் காணப்படுகின்றபோதும், வாசிக்கும் வீதம் மிகக் குறைவு என்றே சொல்லலாம். புத்தகங்கள் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதிலிருந்தே அதை புரிந்து கொள்ள இயலும், தமது கற்பனைளை உட்செலுத்தி படைப்புக்களை எழுதி ஒரு நூல் வெளியிட்டால் போதும். அந்த எழுத்தாளன் இனி வாழ்நாள் முழுக்க கடனாளியாகவே இருக்க வேண்டும் என்கிற நிலையும் காணப்படுகின்றது. அதைத்தான் வாட்டம் (பக்கம் 47) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா சுட்டி நிற்கின்றது.

இலக்கியநூல் வெளியீட்டுக் கூட்டம்
எத்தனைநாள் அதற்காக ஓட்டம்
பலவர்ண அழைப்பினிலே
பதவியொடு பெயர்பொறித்தும்
வரவிலையே எழுத்தாள்வோர், வாட்டம்!

கலாநிதி என்ற பட்டம் இன்று எல்லா துறைகளுக்கும் வழங்கப்படுகின்றது. குறித்த ஒரு துறையில் சாதனைகளை நிகழ்த்துவதனாலும் இப்பட்டம் வழங்கப்படுகிறதெனலாம். படித்து கலாநிதி ஆனவர்களுக்கும், புகழால் கலாநிதி ஆனவர்களுக்கும் வித்தியாசம் காண முடியாத நிலை காணப்படுவதை எடுத்துக்காட்ட, க(ல்)லாநிதி (பக்கம் 51) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.

கல்லாதான் ஆள்சும்மா வாட்டம்
கலாநிதியாம் இன்றவனோ கொட்டம்
பல்வேறு சங்கங்கள்
பலரகத்தில் விற்பதனால்
கல்லாதான் வாங்கினானாம் பட்டம்!

தேர்தல் மழைக்கு முளைக்கும் சில வேட்பாளர் காளான்களுக்கு போங்கையா... போங்க (பக்கம் 52) என்ற குறும்பா எழுதப்பட்டிருக்கின்றது. தேர்தல் காலத்தில் வந்து அதை செய்வோம், இதை செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன் பிறகு யார் நீங்கள்? என்று கேள்வி கேட்பார்கள். வேடிக்கை என்னவென்றால் காலம் காலமாக இது நடைபெற்று வருவது தெரிந்தும் தமது மக்கள் இதைப் பற்றி பேசிப்பேசியே காலம் கழித்திருப்பதுதான். முன்னேற்றம், முயற்சி, மாற்றம் என்ற எதுவுமே இல்லாமல் தேர்தல் கால வேட்பாளர்களைப் பற்றி பேசிப் பேசியே நமது முன்னோர் வாழ்க்கை முடிந்திருக்கிறது. நமது வாழ்க்ககை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேர்தல்தான் வருகிறதா? வாங்க
தேனாக வாக்குறுதி தாங்க
பேர்புகழப் பேசிடுங்க
பேசிஎங்க வாக்கெடுத்தா
போயிடுங்க... வரமாட்டீர் போங்க!

அந்தம் (பக்கம் 55) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா நாட்டின் தேசியத்தை வலியுறுத்துகின்றது. யுத்தம் தின்ற நம் பூமியில் இப்போதுதான் சமாதான விதை நடப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்னும் கூட இனவாதம், மொழிவாதம் பேசி மனிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் சில தீய சக்திகள் நம்முள்ளும் ஊடுறுவித்தான் இருக்கின்றன. இதை கீழுள்ள குறும்பா வலியுறுத்தி நிற்கின்றது.

எல்லார்க்கும் நாடுஇது சொந்தம்
எவர்மறுப்பார் எமக்குள்ள பந்தம்
பொல்லாத இனவாதப்
பூசகரின் இடைமறிப்பால்
தொல்லையடா ஒற்றுமைக்கே அந்தம்!

எமக்கான ஒரு குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கையில்தான், மக்கள் வாக்குகளை இட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அவர்களோ மக்களின் தீயில் சுகமாக குளிர் காய்கின்றனர். அவர்களால் உருவாகி, அவர்களையே அழிக்கின்றனர். சமூகத்தின் இருப்புநிலை குறித்த அக்கறை எதுமின்றி தானும் தன் குடும்பமும் என்ற வட்டத்துக்குள் சுருங்கிக் கொள்கின்றனர். கஷ்டப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கஷ்டமாகவே இருக்க, எம்.பி மார்கள் சொகுசான வாழ்க்கைக்குள் தங்களை உட்பொருத்திக் கொள்கின்றனர். இதைச் சொல்கிற குரல் (பக்கம் 57) என்ற தலைப்பில் அமைந்த குறும்பா பின்வருமாறு அமைகிறது.

எம்குரலே இவரென்று நம்பி
ஏமாந்தோம் போதுமடா தம்பி
எம்சமூகம் அழிகிறது
இருப்பெங்கோ தொலைகிறது
இவரெங்கோ? பிரதிநிதி.. எம்பி?

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது இலக்கியப் பங்களிப்புக்களைச் சிறப்பாகச் செய்துவருபவர். இவரது கொந்தளிப்பு என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2010 இல் அரச சாகித்திய மண்டல சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2012 கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் சிறந்த காவிய நூலுக்கான பணப்பரிசு, சான்றிதழ் ஆகியவையும், இலங்கை இலக்கியப் பேரவையின் (யாழ்ப்பாணம்) சிறந்த காவிய நூலுக்கான சான்றிதழும், 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த காவிய நூலுக்கான அரச சாகித்திய விருது, பணப்பரிசு போன்றவை கிடைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவரது குறும்பாக்கள் அடங்கிய இத்தொகுதி நகைச்சுவை கலந்த விடயங்களை சுவாரசியமாக சொல்லியிருப்பதினூடாக மக்கள் மனதில் பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. புது முயற்சிகளைக் கையாண்டு, ரசிக்கத்தக்க வகையிலும், சிரிக்கத்தக்க வகையிலும் குறும்பாக்களை எழுதி வெளியிட்ட நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - பாலமுனை பாறூக் குறும்பாக்கள்
நூலாசிரியர் - பாலமுனை பாறூக்
வெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்
விலை – 200 ரூபாய்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்