தமிழ் ஊடகத்துறையில் மூன்று தசாப்த காலத்தை நிறைவுசெய்யும் தேவகௌரி சுரேன் ! - முருகபூபதி -
இலங்கை, இந்தியா உட்பட கீழைத்தேய - மேலைத்தேய நாடுகளில் ஊடகவியலாளர்கள் மிகுந்த கவனத்தை பெற்றிருப்பவர்கள். அவர்களுக்கு எழுத்துத்தான் வாழ்வளித்தது. அதேசமயம் பலரது உயிரையும் அந்த எழுத்து வாங்கியிருக்கிறது ! ஊடகத்துறையில் காணாமல் போனவர்கள் , கொல்லப்பட்டவர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள் பற்றியெல்லாம் நாம் அறிந்திருக்கின்றோம். சிலர் நாடு கடத்தப்பட்டனர். வேறும் சிலர் நாடுவிட்டு நாடு ஓடியிருக்கின்றனர்.
இராணுவத் தளபதியாகவும் அரசியல் தலைவராகவுமிருந்த நெப்போலியன் போனபார்ட் ( 1769 – 1821 ) ஒரு தடவை, “ வீரனிடமிருக்கும் போர் வாளைவிட எழுத்தாளனிடமிருக்கும் பேனா கூர்மையானது “ எனச்சொன்னாராம். எனினும், நெப்போலியன் எழுத்தாளனோ, ஊடகவியலாளனோ அல்ல!
அன்றும், இன்றும் அரசுகளும் அரசுத் தலைவர்களும் பயப்படும் தொழில், ஊடகத்துறை சார்ந்ததாகத்தான் இருக்கிறது ! அதனால்தான், காலத்துக்கு காலம் ஊடகத்துறை தணிக்கைக்கும் உட்படுகிறது. அதற்கு எதிராக சட்டங்களும் இயற்றப்படுகின்றன.
எமது தமிழ் சமூகத்தில் பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் படித்து முன்னேறி, மருத்துவராக, பொறியியலாளராக, கணக்காளராக, சட்டத்தரணியாக வரவேண்டுமென விரும்புவதுதான் வழக்கம். இந்தத் துறைகளில் தமது பிள்ளைகள் தேர்ச்சி பெறாவிட்டாலும், குறைந்த பட்சம் பாடசாலை ஆசிரியராக வந்தாலும் போதும் எனக்கருதுபவர்கள். அத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு அரசாங்க வேலைதான் கிடைக்கவேண்டும் எனவும் கனவு காண்பார்கள்.