நூலகர் என்.செல்வராஜாவின் 'ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு' முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு! - வ.ந.கிரிதரன் -
ஐரோப்பியத் தமிழ் ஆவணக் காப்பகமும், ஆய்வகமும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கையேடு. இவ்வாய்வுக் கையேடு இலங்கைத் தமிழ் நாவல்களைப்பற்றிய முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு. 1856 தொடக்கம் 2019 வரையில் வெளியான நாவல்களை உள்ளடக்கிய ஆய்வுக் கையேடு இத்துறை பற்றிய ஆய்வாளர்கள் பலருக்கும் பல்வகைகளிலும் உறுதுணையாகவிருக்கும்.
இக்கையேடு பற்றிய தனது 'நுழைவாயிற்' குறிப்பில் இக்காலகட்டத்தில் வெளியான ஈழத்தின் கணிசமான தமிழ் நாவல்களை இவ்வாய்வுக் கையேட்டில் காணலாம் என்கின்றார் நூலகர் என்.செல்வராஜா.
இந் 'நுழைவாயிற்' குறிப்பின் இறுதியில் நூலகர் என்.செல்வராஜா அவர்கள் பின்வருமாறு கூறுவார்: "ஈழத்தித் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள முனையும் அறிமுக ஆய்வாளர்களுக்கும் ஆய்வுத்துறை மாணவர்களுக்கும் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் தமக்குரிய பின்புலத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள இப்பட்டியலில் உள்ள நூல்கள் உதவக்கூடும். இந்நூல் ஒரு தனிமனித முயற்சியாகும். வரையறுக்கப்பட்ட சொந்த முதலீட்டுடன் லாபநோக்கின்றி ஆய்வாளர்களின் நலன்கருதி வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் இருப்பினைப் பலருடனும் பகிர்ந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.''
நூலகராக இருந்த இவரது அனுபவம் இவர் வெளியிடும் ஆய்வுத் தொகுதிகளில் தெரியும். இலகுவாகத் தகவல்களைத் தேடியறியும் வகையில் பிரிக்கப்பட்டிருக்கும். இத்தொகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல. தொகுதியிலுள்ள நாவல்கள் 1. ஈழத்து நாவல்கள், குருநாவல்கள், 2. மொழிபெயர்ப்பு நாவல்கள், குறுநாவல்கள், 3. சிறுவர் நாவல்கள், சிறுவர் கதை நூல்கள், 4. சிறுவர் மொழிபெயர்ப்பு நாவல்கள், சிறுவர் கதைகள், 5. இவ்வாண்டில் வெளிவந்ததாகக் கருதப்படும் நாவல்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. தகவற் தேடலை இலகுவாக்கும் பிரிவுகள் இவை.