ஆய்வு: பூக்களை சூடிக்கொண்ட கவிதையல்ல இது ஈழத்துப் பெண் எழுத்து
ஈழத்தில் நிகழ்ந்த போர் அங்கு பல பெண் கவிஞைகளை உருவாக்கியுள்ளது. இவர்கள் போர்ச்சூழல்சார் அரசியல் விமர்சனக் கவிதைகளையும், போர் ஏற்படுத்தியுள்ள துயரினையும், காதலையும் பேசுவதோடு பெண் விடுதலையினையும் மிகநுட்பமாக தமது கவிதைவழி மொழிகின்றனர். ஈழத்துப் பெண் கவிஞர்களின் எழுத்துக்களில், அம்புலியின் கவிதை ஒன்று ஈழத்துப்போரின் ஊடாக வாழ எத்தனிக்கும் ஒரு பெண்ணின் முயற்சியாக புரிந்து கொள்ளமுடிகிறது. அம்புலியின் நாளையும் நான் வாழ வேண்டும், எரிமலைக் குமுறல், தேடி அடைவாய், நான் எப்பொழுதும் மரணிக்கவில்லை உள்ளிட்ட பல கவிதைகள் இத்தகைய பாடுபொருளையே கொண்டுள்ளன. “தேடி அடைவாய்” போரின் நெருக்குதலில் ஒரு தாய் தன் குழந்தைக்கு வழங்க வேண்டிய எதையும் வழங்க முடியாத இயலாமையின் வெளிப்பாடாக விரிகின்றது. மாரிக்குளிரில் நனைந்திடினும் உள்ளம் தணல் பூத்துக் கிடக்கின்றது. துயரங்களின் நடுவினில் நான் உன்னை வாரியணைக்க முடியாத தாயாகியுள்ளேன். ஓர் அழகிய காலையை உனக்குக் காட்டமுடியாத, உன்னோடு விளையாட முடியாத பாலைவன நாட்களையே உனக்கு பரிசளிக்கிறேன் என்று கழிவிரக்கத்தைப் பதிவு செய்கின்றது.
மேலும் எந்த நேரமும் வீழ்ந்து வெடித்து உயிர்குடிக்கும் எறிகணைக்குள், மேகம் கலைய வானத்துள் வட்டமிடும் போர் விமானங்களுக்கிடையில், துப்பாக்கி வெடியோசையின் சத்தங்களுக்கிடையில் எப்படி உனக்கு இனிமையை வழங்கிடமுடியும் என்னும் கேள்வியினையும் எழுப்புகின்றது. இது ஒரு பெண்ணின் மூலமாக எழுப்பப்படுவதன் மூலம் குழந்தைகளை வளர்ப்பதற்கான எந்த ஒரு சூழலும் ஈழத்தில் இல்லாமலிருப்பதை கவிதை அடையாளப் படுத்துகின்றது. இறுதியாக தீயச்சூழல் மாய்ந்து புதிய வாழ்வு பிறக்கட்டும் என்று ஒரு தாயின் ஏக்கமாக, வாழ்த்தாக நீளும் கவிதை என்னால் பரிசளிக்க முடியாத வாழ்வை நீயே சென்றடைவாய். வழிகளில் சிவப்பும் இறக்கைகளில் நெருப்பும் உனக்குச் சொந்தமாகட்டும். எம்மை வேகவைத்த காலம் உன்னால் வேகி சாம்பராகட்டும். ஒரு புதிய வாழ்வு உன் கரங்களில் மலரட்டும் என்பதாக எதிர்ப்புணர்வினையும் நம்பிக்கையினையும் ஒருங்கே வெளிக்கொணர்கின்ற கவிதையாக அம்புலி இந்த கவிதையினை முடிவுக்கு கொண்டு வருகின்றார்.
“எரிமலைக் குமுறல்” போரினால் அனுபவிக்க முடியாது போன பாலியல் சார் எண்ணங்களை ஏக்கங்களை அதன் துயரினை பதிவு செய்கின்றது. என் தோழர் எல்லையில் துயிலாமல் நானோ வெம்புகிறேன் நள்ளிரவில். தனியாக உரத்த குரலில் கானம்பாடுவதற்கு சத்தம் வரவில்லை என்பதாக பேசுகின்றது. “நான் எப்பொழுதும் மரணிக்கவில்லை” எனக்கு யுத்தம் பிடிப்பதில்லையாயினும் அதன் முழக்கத்தினிடையே எனது கோபம் காலநிர்பந்தத்தில் மாற்றமடைந்து விட்டது என போர் மனித வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை முன்வைக்கின்றது. தொடர்ச்சியாக குண்டுகளின் அதிர்வோசை கேட்காத ஒரு தேசத்தை தேடும் அம்புலி ஒரு மயானத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட மகிழ்வோடு பூரிக்கும் என் தேசத்தை தேடி கால்கள் விரைகின்றன என்கிறார். அம்புலியின் கவிதை ஆக்கத்தில் துயரின் ஊடாக தேசத்தைக் காக்கின்ற எண்ணங்களும், போரிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு ஒரு புனரமைக்கப்பட்ட தேசத்தை கண்டடைய முயற்சிப்பதும் அதன் மீது முழு நம்பிக்கை கொள்வதும் பெரிய விஷயமாக தென்படுகிறது.

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியா். (தொல்.மெய்.நூ3) அவற்றுள் அச்சமெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக அணங்கு, விலங்கு, கள்வா், தம்இறை என்பவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியா் விரித்துரைக்கும் அச்சத்திற்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியா்களின் உரைகளில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கின்றது.
அறம் எனும் கூற்றின் தனிப்பெரும் பொருளாகக் காலந்தோறும் முன்மொழியப்படுவது ஈகை போர் செய்யாத நாள் மட்டும் வீண்அன்று, பொருள் ஈயாத ஒவ்வொரு நாளும் வீணே! (அ) வீணாகிய நாட்களே என்று வாழ்ந்து காட்டிய மூத்த இனம் தமிழ் இனமாகும். “ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதில் ஈயேன் என்பது அதனெனின் இழிந்தது கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்கொள்ளேன் என்பது அதனின் உயர்ந்தது!” என்று ஈகை நெறியை வாழ்வியலின் வாகை நெறியாய் முன்நறுத்திய தனிப்பெரும் இனம் தமிழ் இனமாகும். கடையேழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைத்திறமைப் பற்றியும் நல்லூர் நத்தத்தனாரின் சிறுபாணாற்றுபடையில் கூறுவதை காணலாம்.
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர் ‘பெருந்தலைவர் காமராசர்’. தமிழகத்தின் மானுட மேம்பாட்டுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டும் குரல்கொடுத்தும் செயலாற்றியும் வாழ்ந்த தொண்டருக்குத் தொண்டர், தலைவருக்குத் தலைவர், அறிஞருக்கு அறிஞர், அரசியல் வித்தகர் மாமேதை காமராசர். தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுள் தலைசிறந்த தலைவராக விளங்கிய காமராசரை நம் காலத்திற்குக் கொண்டு வந்து, நம் விருப்பப்படியான கண்ணோட்டத்தில் விளக்கம் கொடுத்து நம்மைப் போல ஆக்கிவிட முயற்சிக்கக்கூடாது. நம்முடைய முழு அறிவையும் பயன்படுத்தி, சான்றோர்களின் துணையையும் நாடி, அவர் காலத்திற்குச் சிந்தனை வழி செல்லவும், அக்கால சமூக நடைமுறைகளை யூகித்துப் புரிந்து கொள்ளவும் முயல்வதே அறிவார்ந்த செயலாகும். ஏனெனில், தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘கருப்புக் காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘ஏழைப் பங்களான்’, ‘கர்ம வீரர்’, ‘கிங் மேக்கர்’, ‘கல்விக்கண் திறந்தவர்’ எனப் பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் இவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, இவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கிச் சிறப்பித்தது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கிய பெருமையும் இவரைச்சேரும். இவ்வாறான பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாறுகளையும், அவரின் உன்னதமான பல்வேறு சாதனைகளையும் இச்சமுதாயம் அறிந்திருப்பது அவசியம்.
தமிழ் இலக்கிய மரபுகளுக்கெல்லாம் தனி சிறப்பாக இருப்பது அக மரபே ஆகும். அகத்திணையில் தோழிப்பாடல்களே அதிகம். சங்க காலம் கடந்து பிற்காலத்தில் தோன்றிய நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலையை அறிவதே இக் கட்டுரையாகும்.
உயிரினத்தின் பரிணாம நிலை, செயல்கள் யாவும் அடிப்படையில் இயல்பு விதிக்குள் அகப்பட்டு கிடக்கிறது. ஆம், உயிர்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு இணைந்து இன்ப வாழ்வுதனில் தழைக்கும் இயற்கை இன்ப விதியாம் காதல் : அது இயல்பான ஈர்ப்பு நிலை : காந்தமானது நேர் துருவமும் எதிர் துருவமும் ஒன்று மற்றொன்றை ஈர்த்துக் கொள்வது போல ஒரு ஆண் உயிரி பெண் உயிரியையோ பெண் உயிரி ஆண் உயிரியையே புற பார்வையிலிருந்து தொடங்கி அகத்துக்கு அடைப்பட்டு ஒன்று மற்றொன்றோடு இணைந்து விடுகிறது.
யாதும் ஊரே யாவரும் உறவினர்கள் என்று வாழ்ந்துவந்தவன் தமிழன். தீதும் நன்றும் அவர்அவர் செயல்களால் விளைவது என்ற யதார்த்ததை இலக்கியத்தில் பதிவு செய்து வாழ்தவன் தமிழன். இன்றைய கவிதைகளில் பாடுப்பொருள் புதுமைகளைப்பற்றி இக்கட்டூரையில் ஆய்வோம்
பரந்த உலகில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓர் அரிய முதல்வன் ஞாயிறு. அஞ்ஞாயிற்றினைத் தமிழ் இலக்கியங்கள் ஆழ்வான், இனன், உதயன், ஊழ், எரிகதிர், கதிரவன், ஒளியவன், ககேசன், காலை, தபனன், திவாகரன், தாமரை நண்பன், சூதன், சோதி, தினகரன், பகலவன், பரிதி, சூரியன், செங்கதிரோன் எனப் பல்வேறுபெயர்களில் குறிப்பிடுவதைக் காணலாம். ஞாயிற்றினை வழிபடும் வழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம். ஆணவ இருளில் அழுந்திக் கிடக்கும் உயிர்கட்குத் தன் இன்னருள் ஒளி கொடுத்து அவ்விருளைப் போக்கி அறிவிற்கு உட்பட்ட செய்கைகளைக் கிளர்வித்து இயக்கும் இறைவனையொப்பப் புறவிருளில் மறைபட்டுக் கிடக்கும் மண்ணுயிர்த் தொகைகட்குத் தன்னொளி அளித்து கண்ணொளி விளக்கி அவற்றின் அறிவிச்சை செய்கைகளை எடுத்து இயம்புவது ஞாயிறு என்னும் பலவனே எனலாம்.
திருக்குறள் எத்துணைக் காலங்கடந்தாலும் கற்பக மலர்போல் நின்றொளிரும் நீர்மையது என்று முன்னோர்களால் பாராட்டப்பெற்றது. தமிழரின் தனிக்கருவூலமான திருக்குறளையும் அதன் உரைகளும் ஆராய்தல் வேண்டும். இந்நூலுக்கு உரை எழுதிய பண்டை ஆசிரியர்கள் பதின்மர். இடைக்காலத்தில் கருத்து மாற்றங்களுடன் விளக்கவுரை எழுதியவர்கள் சிலர். பண்டைய பலருரைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சி அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்குறள் உரைவளம், திருக்குறள் உரைக்களஞ்சியம், திருக்குறள் உரைக்கொத்து ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
சங்கம் என்னும் அமைப்பின் சிறப்புக்கும், சங்கத் தமிழர்களின் பெருமைக்கும் சான்றளிப்பனவாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள் ஆகும். அவை தொன்மைத் தமிழர்களின் பழைழையை, தொல்பழங்கால நாகரிகத்தை, அவர்தம் வாழ்வியல் வெளிப்பாடுகளை எடுத்துரைப்பதோடு, பிறர் அறியத்தக்க, கற்கத்தக்க, ஏற்கத்தக்க நற்க்கருத்துக்களை அறமாக வகுத்துரைக்கின்றன. சங்கச் சமூகத்தில் அறம் தழைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயலாற்றியவர்கள் நமது புலவர்கள் ஆவர். அதன் பொருட்டே அவர்கள் சான்றோர் என்று சிறப்பித்து உரைக்கப்பட்டனர்.
சங்க காலப் பெண் கவிஞர்களின் காலத்தை நோக்குகையில் பெண்ணிற்கானக் கட்டுப்பாடுகள் பெரும்பான்மையும் வெளிப்படையாகத் தோற்றம் அளிக்காமல் மறைமுகமாகவே இருந்தன. இருப்பினும் இக்கால பெண் கவிஞர்களின் படைப்புகள் என்பது பல்வேறு தடைகளைத் தாண்டி வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்கள் சார்ந்திருக்கும் சமூகம் அச்சமூகங்களில் ஊடாடும் சமயங்கள், சாதிகள், குடும்பம் போன்றவை உருவாக்கிய கட்டுப்பாடுகளும் தடைகளும் அத்தோடு அல்லாது மேலும் பெண் என்பதானாலேயே உருவாகும் மரபார்ந்த சட்டகம் வார்த்த மனத்தடை என இவ்வாறு பல தடைகளைத் தாண்டியே இக்கால படைப்புகளைப் பெண் கவிஞர்கள் உருவாக்க வேண்டியுள்ளது. 18, 19ஆம் நூற்றாண்டிற்கு முன்பும் சிற்றிலக்கியக் காலத்திற்கு பின்பும் சமூகத்திலும், அரசியல் களத்திலும் பல்வேறு மாற்றங்கள் உருவாயின. பல மொழிகள் நாட்டில் ஆதிக்கம் செலுத்தின. சுதந்திர இந்தியாவிற்கு முன்பும் பின்பும் ஆங்கிலவழிக் கல்வியே கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மை போதிக்கப்பட்டன. இதனால் தமிழ்ச் சூழலில் இலக்கியங்களும் தமிழ்க் கல்வி குறித்த சிந்தனையும் பின் தள்ளப்பட்டன எனலாம். அதனால் இவற்றைக் கற்கும் ஆர்வமும் குறைந்தே காணப்பட்டன. பெண்களுக்கோ அவ்வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அதற்கான சூழலைச் சமூகமும் உருவாக்கித் தரவில்லை எனலாம். இத்தகையப் பல காரணங்கள் பெண் கவிஞர்கள் தம் படைப்புகளைப் படைப்பதற்கு நீண்ட இடைவெளி தேவைப்பட்டது. இத்தனை சூழ்நிலைகளையும் கடந்து பெண் கவிஞர் இக்காலத்தில் தமக்கான வெளியையும் மொழியையும் உருவாக்கி வருகின்றனர். படைப்பு முயற்சிகளில் பெண் கவிஞர்களுக்கு இருந்த தயக்கங்கள் தற்போது குறையத் தொடங்கியுள்ளன. பெண் குறித்து ஆண் நோக்கில் உருவாக்கப்பட்ட படைப்புகளையும் பெண் பற்றி ஆண் உருவாக்கிய பார்வையையும் விடுத்து இன்றைய பெண் கவிஞர்கள் தமது தமிழ்ப் படைப்புத் தளத்தில் மாற்றுச் சிந்தனையை உருவாக்கி அதைப் பதிவு செய்து வருகின்றனர்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பழமொழிநானூறு பல அரசியல் கருத்தாக்கங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. அரசின் இயல்புகளை முறையே பாடல்கள் 231 முதல் 257 வரையிலும், அரசினை ஆளும் அரசனுக்குத் துணையாக நிற்கும் அமைச்சர் குறித்தும் முறையே பாடல்கள் 258 முதல் 265 வரையிலும், மன்னரைச் சேர்ந்தொழுகும் தன்மைக் குறித்தப் பாடல்கள் முறையே 266 முதல் 284 வரையிலும், மன்னரின் அங்கத்தினராயிருக்கும் படைவீரர் குறித்த பாடல்கள் முறையே 311 முதல் 326 வரையிலும் இடம்பெற்றுள்ளன. ஆக பழமொழிநானூறில் 44 பாடல்கள் அரசியல்பு தொடங்கி படைவீரர் உள்ளிட்ட தன்மைகளை ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் வரும் பழமொழிகளின் வழி வலியுறுத்தி நிற்கின்றன எனலாம்.
சேதுநாடு என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டம் பெரும் புகழுடைத்தது. புவியரசராக மட்டுமின்றி, கவியரசாரகவும் சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கு சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் எனப் பல வழிகளில் சான்றுகள் கிடைக்கின்றன. புலவரொடு கூட பிறந்தது வறுமை. வறுமையில் வாடும் புலவர்கள் தங்கள் கவித்திறமையை அரசர்களிடம்காட்டி பொருளுதவி பெற்று, வாழ்க்கையை நடத்திச்செல்வது அக்காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்தது. அவ்வாறு தேடிவந்த புலவர்களுக்குப் புரவலர்களாக அமைந்து, மண்ணும் பொன்னும், பொருளும் அளித்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக, சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாது பிற மாவட்டத்தைச் சேர்ந்த பெருமைமிக்கப் புலவர்களையும் ஆதரித்து சிறப்புச் செய்ததும் இம்மன்னர்களே. இத்தகைய பெருமைமிகு புலவர்கள் வாழ்ந்த மண்ணில் கா.கூ.வேலாயுதப்புலவரும் ஒருவர். இவர் இயற்றிய பாடல் அடிகளைத் தொகுத்து ‘திருப்பாடல் திரட்டு’ எனும் நூல் இரா.பாண்டியன் என்பவரால் வெளிவந்துள்ளது. இந்நூல் வழியாக கா.கூ.வேலாயுதப்புலவரின் வாழ்க்கை வரலாறு, தமிழ்ப்பணி அவர்தம் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்குமான பொது விதியாகவும், குழந்தையைப் பெற்று வளர்த்தும், சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், தம் வாரிசை பெறுவதற்குமான காரணியாகவும் பொதுப்படையாகக் கருதப்படுகிறது. எனின் உலகளவில் மனிதக் குழுக்கள் செய்து கொண்ட திருமண முறைகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப பலவகையில் நிகழ்ந்திருக்கின்றது. இதனை ஆராய்ந்து, பல சமூக விஞ்ஞான ஆய்வாளர்கள் திருமணம் பற்றி பல்வேறு கருத்துரைகளை எடுத்துரைத்தனர்.
29.4.1891 இல் பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணிப்புரிந்தவர்.பாரதி மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.இவர் ஆத்திசூடி என்ற நூலை இயற்றியுள்ளார்.இந்நூல் 84 ஓரடி பாடல் அடிகளைக் கொண்டுள்ளது.இந்நூலில் பாரதிதாசன் எந்த ஒரு தெய்வத்தையும் நம்பாத நாத்திகர் ஆதலின் கடவுள் வாழ்த்து பாடவில்லை.ஒரு பாயிரம் பாட நூலைத் தொடங்குகிறார்.இந்த பாயிரம் பத்து அடிகளில் அமைந்துள்ளது.இனப்பற்றும்,நாட்டுப் பற்றும் உலகப் பற்றை வளர்க்கும் அடிப்படையில் அமைய வேண்டும்.பகை உணர்ச்சிக்கு அடிப்படையாக அமையக் கூடாது என்றும் அமைதி நிலவ இந்தக் குறிக்கோள் வேண்டும் என்றும் உலகில் பொது ஆட்சி நிலவத் தன்னுடைய நூல் பயன்பட வேண்டும் என்றும் ஒர் உயர்ந்த நோக்கத்தைப் பாயிரமாகக் கூறி பாரதிதாசன் ஆத்திசூடியை பாடத் தொடங்குகிறார். அவ்வையாரின் ஆத்திசூடியைப் போலவே அமைந்துள்ளதால் தம் நூலுக்கும் ஆத்திசூடி என்றே பெயர் வைத்ததாகச் சொல்கிறார் இதனை,
காப்பியம் என்பது காப்புடையது. பொருள் தொடர் நிலையில் அமைவது. அதாவது ஒரு மொழியை சிதைக்காமல் காப்பது காப்பியம். இதையே இலக்கண மரபு, மரபின் இயல்பு வழுவாமல் காத்தல் என்று கூறுகிறது.
இன்றைய அறிவியல் உலகில் அண்டவெளி பிரபஞ்சத்தை பற்றி (Universal) நொடியொரு பொழுதும் ஆராய்ந்து கொண்டே வருகின்றனர். நீண்ட மனித வாழ்வின் அறிவியல் தேடலும், நவீன அறிவியல் கருவிகளின் வரவுமே இவ்வுலகை இன்று ‘அறிவியல் யுகமாய்’ மாற்றியிருக்கின்றது. ஆனால் பண்டைய காலம் அப்படி இல்லை. ஊழி காலத்துள் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்வதற்கான போராட்டம் மிகப்பெரும் சவாலாக விளங்கியது. பின்னர் தேவைகள் ஒருபுறம் பூர்த்தியாக மற்றொரு புறம் இயற்கையைப் பற்றி ஆய்வினில் இறங்கினர். அதனால் இயற்கைக்கு உட்பட்ட இயல்பான வாழ்வினை அதனோடு இயற்கைப் புறவெளியையும் ஆய்ந்தனர். அறிவியலுள் ‘வானியல் அறிவும் பண்டைத் தமிழகத்துள் மிகுந்திருந்தது. வான்வெளியில் நிகழும் மாற்றங்கள், கோள்களின் இயக்கப் போக்குகள் அதனால் புவியில் ஏற்படும் மாற்றங்கள், பருவ மாற்றங்கள் என பலவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்தனர்.
அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையோ அல்லது அவற்றில் ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளில் வெண்பா யாப்பில் கூறுவன கீழ்க்கணக்கு நூல்களாகும். இவ்விலக்கணம் நீதி நூல்களுக்குப் பொருந்துவதாகும். இதன் காரணமாகவே வெண்பா யாப்பு நீதி நூல்களுக்கு உரியதானது. குறிப்பாக ஓரடி, ஈரடி, நான்கடி என்று சுருங்கிய அளவில் நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் போக்கு நீதி நூல்களில் காணப்படுகிறது. நீதி கூறுகையில் அது சுருங்கிய அளவில் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் படைப்பாளர்கள் எண்ணியுள்ளனர். மேலும் வாழ்க்கைக்குச் சட்டமாக அமையும் நீதி நூல்கள் விரிவான அடிவரையறை பெற்றனவாக இருந்தால் அதனுள் பல குழப்பங்கள் நேரும் என்பது கருதியும் இந்தச் சுருக்கமான அடி வரையறை நீதி நூல்கள் எழுதுபவர்களால் பின்பற்றப் பெற்றுள்ளது. தமிழ்ப் பரப்பில் தொடர்ந்து வந்த நீதி நூல்களிலும் இந்தச் சுருக்கமான அடிவரையறை என்ற கட்டமைப்பு பின்பற்றப் பெற்றுள்ளது. இதனை அறிந்துணர நீதி நூல்களின் அடி அளவு குறித்த செய்திகளைத் தொகுத்துக் காண வேண்டியுள்ளது.
முன்னுரை

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









