மறைந்து போன ஈழத் தமிழ் இலக்கிய விடிவெள்ளி! – வீ. பா. கணேசன் -
- தமிழ்புக்ஸ்.காம் தளத்தில் வெளியான அஞ்சலிக் கட்டுரை. அனுப்பியவர் நண்பர் ஸ்நேகா பாலாஜி -
கடந்த சனிக்கிழமை (04/12/2021) அன்று காலை சென்னையில் இயற்கை எய்திய தோழர் செ. கணேசலிங்கன் பல வகையான பாரம்பரியங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். அவரது வாழ்க்கைப் பாதையின் சுவடுகளை திரும்பிப் பார்க்கையில் இலங்கை, தமிழ்நாட்டு இலக்கிய உலகு எத்தகைய ஆளுமையை இழந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. 1970களில் தமிழகத்தில் சமூக அக்கறையோடு எழுந்து வந்த எம்மைப் போன்ற மாணவர் தலைமுறையிடம்தான் அவரின் எழுத்துக்கள் முதன்முதலில் வந்து சேர்ந்தன.
ஈழத் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழகத் தமிழ் இலக்கியத்திற்கும் ஓர் உறவுப் பாலமாக பல்வேறு வகையில் அவர் விளங்கினார். ஓர் எழுத்தாளராகவும், மாத இதழ் ஒன்றின் ஆசிரியராகவும், நூற்பதிப்பாளராகவும் தமிழகத்துடன் அவர் மேற்கொண்ட உறவு இரு கரைகளிலும் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தின. ஈழத்து எழுத்தாளர்கள் இங்கு அறிமுகமானதும் தமிழ் எழுத்தாளர்கள் அங்கு அறிமுகம் பெற்றதும் அவர் தீவிரமாக இயங்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூலமாகவே நிகழ்ந்தது. அவரின் செறிவுமிக்க வாழ்க்கையில் சில முக்கிய அத்தியாயங்களை மீள் நோக்கிப் பார்ப்பதே இந்த அஞ்சலிக் கட்டுரையின் நோக்கம்.
செ. கணேசலிங்கன் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் எனும் கிராமத்தில் 09.03.1928 அன்று க. செல்லையா- இராசம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே படிப்பில் சூட்டிகையாக இருந்த அவர் யாழ்ப்பாணம் பரமேஸ்வரன் கல்லூரியில் எச்.எஸ்.சி. படித்து தேர்வு பெற்றதோடு, லண்டன் மெட்ரிகுலேஷன் தேர்விலும் தேர்ச்சி பெற்று, 1950ஆம் ஆண்டில் இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் ஓர் எழுத்தராகப் பணியில் சேர்ந்து 1981ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.