ந. பிச்சமூர்த்தியின் மரபு மனமும் நவீன தெறிப்பும் - முனைவர் ம இராமச்சந்திரன் -
நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கக் காலத்தில் பலர் கதைகளைச் சிறுகதையாக்க முயன்றனர். ஆங்கில இலக்கிய வாசிப்பு அவர்களைக் கதை கூறுதல் என்ற மேம்போக்கான மனநிலையிலிருந்து விடுவித்துப் படைப்பூக்க மனநிலைக்குக் கொண்டு செல்லவும் பரிசீலனை செய்யவும் விமர்சிக்கவும் தூண்டுகோலாக இருந்தது. கதை கூறும் முறை எந்தப் புள்ளியில் இலக்கியமாகப் பரிணமிக்கிறது என்ற தேடுதலும் கண்டடைதலும் பெரும் சவாலாக இருந்தது. 'மணிக்கொடி எழுத்தாளர்கள்' என்று பிறகு அடையாளம் காணப்பட்ட அல்லது தங்களை அவ்வாறு எண்ணிக்கொண்ட தொடக்கக் கால எழுத்தாளர்கள் இந்தத் தடுமாற்றத்தில் சிக்கிக் கொள்ளாமல் முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தனர்.
சமூகத்தில் நிகழும் அனைத்து விதமான நடைமுறைகளையும் உற்று நோக்கிக்கொண்டு, புதிய வரவுகளை வாசித்துக் கொண்டு, மரபிலிருந்து நவீனத்திற்கு மாற்றிக்கொண்டு என இலக்கியத்தை நோக்கி நகர்த்தி செல்ல படாதபாடுபட்டனர். பலர் அதில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பெற்றனர். சிலர் மொழியாலும் உள்ளடக்கச் சிறப்பாலும் புதுமையில் நீந்தி விளையாடினர். இவ்வாறு சீரிய இயக்கப் போக்கால் தனக்கான இலக்கியத்தையும் இலக்கிய வடிவத்தையும் பெற்றுக்கொண்டு சிறுகதை செம்மாந்து நின்றது. இந்தத் தொடக்கக் கால முயற்சிகளில் முக்கியமானவர் ந. பிச்சமூர்த்தி.
இலக்கிய வரலாற்றில் ந.பிச்சமூர்த்தி தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படும் நிலையில் இவரின் சிறுகதை பங்களிப்புக் குறித்த கேள்வி எழுகிறது. இக்காலத்தில் வ. வே. சு. ஐயர் சிறுகதையின் வடிவ நேர்த்தியிலும் கதை கட்டமைப்பிலும் வெற்றி பெற்றுச் சிறுகதைக்குத் தந்தையாகி விட்டிருந்தார். ஆகையால் கதை என்பது இலக்கியமாக மாறி சிறுகதை என்ற வடிவத்தைப் பெற்றுவிட்டது. ஆனால் இவ்வடிவம் இன்றும் சோதனை முயற்சியிலேயே இருந்துவந்தது. அச்சோதனை முயற்சி இரண்டு போக்குகளைக் கொண்டதாக இருந்தது. புதுமைப்பித்தன் தனக்கென ஏற்படுத்திக் கொண்ட கதைக்களமும் கதை மொழியும் புதுமையானதாகவும் விமர்சனங்களையும் மரபு உடைப்பையும் ஏற்படுத்துவதாகவும் இருந்தன.