மரணதண்டனை: நாகரிகத்தின் அநாகரிகம்!
தற்போது இந்தியாவில் முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுத் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணைமனுக்களை இந்திய ஜனாதிபதி நிராகரித்து விட்டதையடுத்து அவர்களுக்கான தூக்குத்தண்டனை நிறைவேற்றுப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. இந்த மரணதண்டனை என்பது தர்க்கரீதியாகப் பார்த்தால் கேலிக்குரியது. கொலைகளுக்கு மரணதண்டனைதான் சரியான தீர்வென்றால் , கொலையாளிகளெனக் கருதப்படுபவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதும் இன்னுமொரு கொலையே. அரசினால் நடாத்தப்படும், சட்டரீதியிலான கொலை. கொலைஞர்களுக்குரிய தண்டனை மரணதண்டனை என்றால் கொலையாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றும் அனைவருக்குமுரிய தண்டனையும் மரணதண்டனைதான். ஏனெனில் சட்டத்தின்முன் கொலைகளுக்கு இருவேறு தண்டனைகளிருக்க முடியாது. ஆனாலும் நடைமுறையில் சட்டமென்பதும் கூட ஒருபக்கச் சார்பானதுதான். முதலாளித்துவ அரசென்றாலென்ன, இனத்துவேசம் மிக்க அரசென்றாலென்ன, அவ்வகையான அரசுகளால் நிறைவேற்றப்படும் நீதிமனற நடைமுறைகள், தீர்ப்புகளும் அவற்றுக்குச் சார்பானவையாகவே இருக்கும். மரண தண்டனை எல்லா நாடுகளிலும் கொலைக்குற்றங்களுக்குத்தான் விதிக்கப்படுமென்பதில்லை.