வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'- மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிக்கம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியததானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் 'அமெரிக்கா' என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன் இன்றைய தலைமுறையினரும் , அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். இறுதி அத்தியாயம் மீளத்திருத்தி, எழுதப்பட்டுள்ளது.  - வ.ந.கி. -


அத்தியாயம் எட்டு: விஜயபாஸ்கரனின் வரவும்., விடிவும்!

இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்வில் சுவையான சம்பவங்களும் இல்லாமலில்லை. வாழ்வு தொடர்ந்து கொண்டிருந்தது.  நம்பிக்கையை நாங்கள் இன்னும் முற்றாக இழக்கவில்லை.  'ஃபாதர்' ஏபிரகாம் அடிக்கடி கூறுவார்: "ஒன்றிற்குமே கவலைப்படாதீங்க. இமிகிரேசனிலை இதைத்தான் சொல்லுறாங்க." ஒவ்வொருமுறை அவருக்குத் தொலைபேசி எடுக்கும்போதும் இதைத்தான் அவர் கூறுவார். ஃபாதர் பாவம். அவருக்கு நல்ல மனது.  ஆனால் எங்களுக்குப்புரிந்திருந்தது ஃபாதரிக்கு நம்பிக்கை போய்விட்டதென்று. ஃபாதருக்கும் புரிந்திருந்தது எங்களுக்குச்சூழலில் யதார்த்தம்  தெரிந்து விட்டதென்பது.  இருந்தும் சுதந்திரம் மறுக்கப்பட்டு, கூண்டுக்கிளிகளாகவிருந்த நிலையில் எங்களுக்கும் அத்தகைய  ஆறுதல் வார்த்தைகளின் தேவையிருந்தது.  அதே சமயம் நம்பிக்கையை இழந்துவிட நாங்களும் விரும்பவில்லை.  நம்பிக்கையின் அடிப்படையில்தானே இருப்பே நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இவ்விதமாக உப்புச்சப்பற்று போய்க்கொண்டிருந்த இருப்பினை மாற்றி வைத்தது விஜயபாஸ்கரனின் வரவு.

இவன் முகத்தில் சிரிப்பு மறைந்து நான் பார்த்ததேயில்லை. எத்தகைய இக்கட்டுகளையும் சமாளிப்பதற்கும் பழகியிருந்தான். யாழ்ப்பாணத்தில் பிரபலமான வர்த்தகர்களிலொருவராக விளங்கிய விநாசித்தம்பியின் ஒரே மகன் இவன். எங்களைப்போலவே கனடா செல்லும் வழியில் நியுயார்க்கில் பிடிபட்டிருந்தான். இவனைப்பார்க்கப்பாவமாயிருந்தது. நாங்களும் வந்து இரண்டரை மாதங்கள் ஓடி விட்டிருந்தன. இவனும் இனிமேல் எங்களில் ஒருவன். வந்ததுமே எங்களது எண்ணங்களைச்சொல்லி இவனது மனதைக்குழப்ப விரும்பவில்லை.  இவனது உறவினர்கள் பலர் நியூயார்க்கில் இருந்தனர். அவர்களுடன் கதைத்து, அவர்கள் மூலமாக விரைவாகவே பிரபல சட்டத்தரணியொருவரைத்தனக்காக அமர்த்திக்கொண்டான். இவனால் முடிந்ததைச் செய்யட்டும் என்று நாங்கள் பேசாமலிருந்தோம்.  இவன் வந்து சேர்ந்திருப்பது ஓர் இரும்புச்சிறை. இதை உடைத்துக்கொண்டு வெளியேறுவதென்பது அவ்வளவு சுலபமான செயலல்ல. காலம் அதனை இவனுக்கு உணர்த்தி வைக்கும்.  ஏற்கனவே நாங்கள் முயன்று பார்த்துச் சோர்ந்திருந்தோம்.  எனவே நாங்கள் யதார்த்த நிலையினை எம் அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தோம். இவனும் அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்வான்.

இதற்கிடையில் இவன் இலங்கையிலிருந்து நேராக வந்திருந்ததால் நாட்டு நிலைமைகளை விசாரித்தோம். தொடர்ந்தும் தலை விரித்தாடிக்கொண்டிருந்த இலங்கை அரச பயங்கரவாதத்தை இவன் விபரித்தபொழுது இலங்கை அரசின்மீது பயங்கரமான வெறுப்பு உணர்வு கலந்த கோபம் வெளிப்பட்டது.

விஜயபாஸ்கரன் கூறினான்: " ஒவ்வொரு ஊரிலையிருந்தும் பள்ளிக்கூட பெடியளெல்லாம் இயக்கங்களில் சேர்ந்து கொண்டிருக்கிறான்கள்.  இனி பிரச்சினை முந்தி மாதிரி ஒரு பக்க இடியாக இருக்காது."

அதே சமயம் எங்களுக்கு ஒருவித குற்றவுணர்வு தோன்றியது. நாட்டை விட்டுக் கோழைகளைப்போலவல்லவா தப்பி வந்திருக்கின்றோம்.
தொடர்ந்த சிவகுமாரின் கூற்று இதனை வெளிப்படுத்தியது: " இந்தச்சிறையிலிருந்து வெளியிலை போனால் இலங்கை அரசின் அக்கிரமங்களுக்கெதிராக வெளிநாட்டு மக்களைத்திருப்பப் பாடுபட வேண்டும்."

குறைந்தது எங்களால் எதையாவது செய்ய வேண்டுமென்ற தொனி அவனது கூற்றில் தென்பட்டது.  

ஒரு வாரம் விரைந்தது. அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அன்று விஜயபாஸ்கரனின் முகத்தில் இயல்பான புன்னகையைவிட ஒருபடி இன்னும் அதிகமாகவிருந்தது.  விசயத்தை அறியும் ஆவல் மண்டியிட்டது. அவன் கூறினான்: " என்ர லோயர் சொன்னவர் பிணையிலை வெளியிலை போகலாமாம்.  இரண்டாயிரம் டொலர் கட்டினால் கட்டினால் சரியாம். நாளைக்கு அல்லது நாளன்றைக்கு நான் வெளியே போகலாமாம்."

அவனது அக்கூற்று எங்களுக்குச் சந்தோசத்தையும், அதே சமயம் ஒருவித ஏக்கவுணர்வினையும் ஒருங்கே தந்தது. அதே சமயம் புதிதாக ஒருவித நம்பிக்கையும் குடிபுகுந்தது.  விஜயபாஸ்கரன் வெளியே போக முடியுமென்றால் ஏன் நாங்களும் அவ்விதம் பிணையில் வெளியேற முடியாது என்றொரு கேள்வியும் எமக்குள் எழுந்தது.

இராஜசுந்தரத்தாருக்குச் செய்தி அறிந்ததிலிருந்து இருப்புக்கொள்ளவில்லை.

"எங்கடை விசயத்திலை ஏதோ சுத்துமாத்து நடந்திருக்கு. எதுக்கும் பாஸ்கரன் மூலம் அவனுடைய லோயரிடம் விசாரித்துப்பார்ப்பம். " என்றும் அவர் ஆலோசனை கூறினார். இதற்கு நாமனைவரும் ஆமோதித்தோம். ஒரு வேளை எங்களுடைய நிலைமைக்கும், விஜயபாஸ்கரனுடைய நிலைமைக்கும் இடையிலேதாவது சட்டரீதியிலான வேறுபாடுகளிருக்கலாம். இவ்விதம் நாமும் வெளியே செல்லக்கூடிய சந்தர்ப்பமிருக்கும் பட்சத்தில் விஜயபாஸ்கரனின் சட்டத்தரணியையே எங்களுக்காகவும் அமர்த்துவது நல்லதாக எமக்குப்பட்டது. விஜயபாஸ்கரன் தன் மாமா மூலமாகத் தனது சட்டத்தரணிக்கு எங்களது நிலைமையை எடுத்துக்கூறினான்.  வெளியில் வந்தால் அவரையே எங்களுக்கும் சட்டத்தரணியாக அமர்த்த நாங்கள் அனைவரும் ஒருமித்து முடிவெடுத்தோம். அதனையும் அவருக்குத் தன் மாமா மூலம் எடுத்துக்கூறியிருந்தான் விஜயபாஸ்கரன். எங்களது பொஸ்டன் சட்டத்தரணியின் பெயர், தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களையும் விஜயபாஸ்கரனின் சட்டத்தரணிக்குக்கொடுத்தோம்.  அன்றிரவே எங்கள் விடயத்துக்கும் ஒரு முடிவு வந்தது.

விஜயபாஸ்கரனின் மாமா ஃபாதர் ஏபிரகாமிடம் எல்லாவற்றையும் எடுத்துக்கூறியிருந்தார்.  ஃபாதர் ஏபிரகாம் எங்களுக்கு உடனேயே தொலைபேசி வாயிலாக அழைத்தார். நியூயார்க் சட்டத்தரணி கூறித்தான் பொஸ்டன் சட்டத்தரணிக்கே எங்கள் விடயத்தில் அமெரிக்கக்குடிவரவுத்திணைக்களம் இழைத்த தவறு தெரிய வந்ததாம்.  உடனேயே பொஸ்டன் சட்டத்தரணி குடிவரவுத்திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டிருக்கின்றார். அதன்படி இன்னும் ஒரு வாரமளவில் நாங்களும் வெளியே பிணையில் செல்லக்கூடியதாகவிருக்கும். இதுதான் ஃபாதர் ஏபிரகாம் கூறிய தகவலின் சாராம்சம்.

எங்களுக்கு இச்செய்தி தந்த களிப்பினை வார்த்தைகளால் எடுத்துரைக்க முடியாது. அவ்வளவு சந்தோசம். இறக்கைக்கட்டிக்கொண்டு விண்ணில் பறப்பதைப்போலிருந்தது.  உண்மையில் நாங்கள் விஜயபாஸ்கரனுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.  இவன் மட்டும் வராமலருந்திருந்தால் நிச்சயமாக எங்களுக்கு இவ்விதம் விடுதலைகிடைத்திருக்கப்போவதில்லை. இந்த விடயம் பற்றிய உண்மையும் தெரிந்திருக்கப்போவதில்லை.  அவ்விதம் தெரிய வந்தாலும் எவ்வளவு நாள்கள், மாதங்கள், அல்லது வருடங்கள் ஓடி விட்டிருக்குமோ?

விஜயபாஸ்கரனின் சட்டத்தரணி மூலமாக, ஃபாதர் ஏபிரகாம் மூலமாக எமக்குக்கிடைத்த தகவல்களின்படி அமெரிக்க அரசின் சட்டவிரோதக்குடிவரவாளர்கள் மீதான சட்டதிட்டங்களை அறியக்கூடியதாகவிருந்தது.  சட்டபூர்வமாக நாட்டினுள் நுழைந்த ஒருவர் குறிப்பிட்ட அனுமதிக்காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதக்குடிவரவாளராக மாறுகின்றார்.  அதே சமயம் சட்டவிரோதமாகக் கடல் மூலமாம அல்லது எல்லைப்புறத்தினூடாக நாட்டினுள் நுழையுமொருவரும் சட்டவிரோதக்குடிவரவாளரே. நாட்டுக்குள் ஒருவர் சட்டபூர்வமாகவும் அல்லது சட்டவிரோதமாகவும் நுழையலாம். இதுபோல் போலிக்கடவுச்சீட்டுகள் போன்ற பிரயாணப்பத்திரங்களுடன்  விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகளிடம்  அகப்பட்டு விட்டால், அவர்கள் சட்டவிரோதமாகக்கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாதவர்கள். இவர்களைப்போல் கடல் வழியாக வரும் ஒருவர் நிலத்தில் கால் வைக்கப்படும் முன்னர், கடலினுள் வைத்துக்கைது செய்யப்பட்டுவிட்டால், அவர்களும் சட்டவிரோதமாகக்கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாதவர்கள் என்ற பிரிவுக்குள் அடங்குவர்.  

சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைந்தவர்களைப்பொறுத்தவரையில் அவர்களுக்கு, குடிவரவு அதிகாரிகளிடம் அகப்படும் பட்சத்தில், அவர்களது வழக்கு முடியும் வரையில், பிணையில் செல்வதற்கு சட்டரீதியாக அனுமதியுண்டு.  ஆனால், அதே சமயம், சட்டவிரோதமாகக்கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாதவர்களைப்பொறுத்தவரையில் , அவர்களுக்கு அவர்களது வழக்குகள் முடியும் வரையில் பிணையில் செல்வதற்குக்கூட அனுமதியில்லை. அது வரையில் அவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுவார்கள். வழக்குகள் முடிந்து, தீர்ப்புகள் எதிராக அமையும் பட்சத்தில், தடுப்பு முகாம்களில் வைத்தே நாடு கடத்தப்பட்டு விடுவார்கள்.

இராஜசுந்தரத்தார் எங்களுக்கேற்பட்ட நிலைமையினை எளிமையாக, நன்கு விளங்கும்படி எடுத்துக்கூறினார்:

" எங்களுக்கு நடந்ததென்னவென்றால்.. எங்களையும் அமெரிக்கக்குடிவரவு அதிகாரிகள், நாட்டினுள் சட்டவிரோதமாகக்கூட நுழையாத சட்டவிரோதக்குடிவரவாளர்களாகக்கருதி தடுப்பு முகாமில் அடைத்து விட்டார்கள்."

"அப்படியென்றால்... நாங்களும் அப்படியான பிரிவுக்குள் அடங்கவில்லையா? எங்களையும் அப்படித்தானே விமான நிலையத்தில் வைத்து தடுத்தார்கள். விளங்கவில்லையே.." இவ்விதம் கேட்டவன் அருள்ராசா.

அதற்கு இராசசுந்தரத்தார் ஒரு பெரு மூச்சினை இழுத்து விட்டவாறு, தன் விளக்கத்தைத்தொடர்ந்தார்:

" இவங்கட இமிகிரேசன்காரன்களும் அப்படித்தான் எங்களைப்பிழையாக நினைச்சுப்போட்டான்கள். நாங்கள் அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாக நுழைந்தவங்களில்லை. நாங்கள் பொஸ்டன் ஏர்போட்டிலை இறங்கினதும், எங்கடை எல்லாருடைய பாஸ்போர்ட்டிலையும் ட்ரான்சிட் விசா குத்தினவங்கள் ஞாபகமிருக்கா..?

"ஓமோம். நல்லா ஞாபகமிருக்குது.." இவ்விதம் இராஜசுந்தரத்தாரின் கூற்றினைச்செவிமடுத்துக்கொண்டிருந்த சிவகுமார் இடையில் குறுக்கிட்டுக் கூறினார்.

"அப்ப நாங்கள் ஒருத்தரும் சட்டவிரோதமாக வந்தவங்களில்லையே. நாங்கள் சட்டபூர்வமாக உள்ளுக்குளை வந்தவங்கள். ஆனால் எங்களை டெல்டா எயார் லைன்ஸ் ஏத்த மாற்றோமென்று மறுத்துப்போட்டதாலைதானே நாங்கள் இங்கை அகதிக்கோரிக்கை வைத்தனாங்கள்.."

இவ்விதம் கூறிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக மூச்சிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திய இராசந்தரத்தார் மீண்டும் தொடர்ந்தார்:

" நல்ல காலம் விஜயபாஸ்கரன் நியூயார்க் விமான நிலையத்தில் பிடிபட்டவன். அதனால்தான் எங்களுக்கு இவங்கட அகதிகள் பற்றிய  ஓட்டைகள் தெரியவந்திருக்கின்றன. அவன் மட்டும் இங்கே வராதிருந்தால்... என்னாலை நினைச்சுக்கூடப் பார்க்க முடியவில்லையே. சட்டபூர்வமாக ட்ரான்சிட் விசா எடுத்து , எங்களுக்கு எட்டு மணித்தியால விசாவும் இவங்கட இமிகிரேசனாலை தந்திருந்த நிலையிலை, டெல்டா எயார் லைன்ஸ் ஏற்ற மறுத்ததாலைதானே நாங்கள் எட்டு மணி கடந்து, சட்டவிரோதமாக இங்கேயே நிற்க வேண்டி வந்தது.."

இப்பொழுது அருள்ராசா இடை மறித்து இவ்விதம் கூறினான்:

"சட்டவிரோதமாக நாட்டினுள் அகப்பட்ட ஒரு சட்டவிரோதக் குடிவரவாளனுக்குப் பிணையிலை வெளியிலை செல்ல முடியுது. ஆனால் நாங்கள் சட்டபூர்வமாக நாட்டினுள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நாங்கள் சட்டபூர்வமாக இங்கு தங்கியிருந்த நேரத்திலை இங்கு அகதிக்கோரிக்கையை வைச்சோம். நாங்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த நேரத்திலை பிடி படேலை. சட்டபூர்வமாகத் தங்கியிருந்த நிலையிலைதான் அகதிக்கோரிக்கையை முன் வைத்தோம். உண்மையிலை எங்களைப்பிணையில்லாமலேயே வெளியே அனுப்பியிருக்க வேணும்."

அடுத்த ஒரு வாரத்திலேயே நாங்களும் வெளியில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டோம். அதற்கு முன்னர் நாங்கள் புரிந்ததாகக் கூறும் குற்றப்பத்திரங்களை எங்களுக்குத்தந்தார்கள். அதில் குடிவரவுச்சட்டத்தின் பிரிவுகளான 241(a) (15) ஆகியவற்றுக்கேற்ப நாங்கள் நாடு கடத்தப்படுவதற்கான குற்றங்களைப்புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆக ஆகஸ்ட் 28 ஆம் திகதி நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்துக்காக நவம்பர் 23ந் திகதி எங்களுக்குக் குற்றப்பத்திரிகைகள் தரப்பட்டிருந்தன. இதில் கூட எத்தனையோ விடயங்கள் மூடி மறைக்கப்பட்டிருந்தன.  முதலாவதாக நாங்கள் சட்டபூர்வமாக நாட்டினுள் அனுமதிக்கப்பட்டவர்கள்.  முறையாக 'ட்ரான்சிட்' விசா பெற்றிருந்தவர்கள்.  நாங்கள் சட்டபூர்வமாகத் தங்கியிருந்த காலகட்டத்திலேயே டெல்டா 'எயார் லைன்ஸ்' மறுத்த நிலையில் அமெரிக்க மண்ணில் அகதிக்கோரிக்கையினை விடுத்திருந்தவர்கள்.

உண்மையில் எங்களுக்கும் இரண்டு வருடங்கள் தங்குவதற்கான விசா பெற்று வந்த ஒருவர் வந்து ஒரு வருடத்தின் பின்னர் அகதி அந்தஸ்து கூருவதற்குமிடையில் சட்டரீதியில் வித்தியாசமேயில்லை. இவ்விதம் அகதிக்கோரிக்கையினை விடும் ஒருவரை இரண்டு வருடங்கள் கழிந்ததும் சட்டவிரோதமாக நாட்டில் இருப்பதாகக்கூறித் தடுப்பு முகாமில் தடுத்து வைப்பார்களா? அப்படி நடப்பதாகத்தெரியவில்லையே. நாங்களும் எங்களது ட்ரான்சிட் விசா முடிவடைவதற்குள் அகதிக்கான கோரிக்கையினைச்சமர்ப்பித்தவர்களல்லவா? ஆனால் எமக்குத்தரப்பட்ட குற்றப்பத்திரிகையில் நாங்கள் ட்ரான்சிட் விசா முடிவடைந்த பின்னரும், சட்டவிரோதமாகத்தங்கியிருந்ததாக அல்லவா குறிப்பிடப்பட்டுள்ளது.  நாங்கள்தாம் குறிப்பிட்ட காலத்துக்குள்ளேயே அமெரிக்க அரசிடம் அகதிக்கான கோரிக்கையினை விடுத்திருந்தோமே. அவர்களின் அனுமதியுடன்தானே, அதிகாரத்தின்கீழ்தானே, அவர்களின் காவலில்தானே தொடர்ந்தும் இருக்கின்றோம்.  இவர்கள் எப்படி இவர்களுடைய அனுமதியில்லாமல் தொடர்ந்தும் தங்கிருந்தோமென்று குறிப்பிடலாம்?

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் இன்னுமொரு விடயமிருந்தது. ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஆகஸ்ட் 28, 1983 தொடக்கம் நவம்பர் 13, 1983 வரை எங்களுக்கு அமெரிக்க அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டிருந்திருக்கிறது. குற்றம் புரிந்ததாகக்கூறும் பத்திரத்தை மூன்று மாதங்களின் பின்னரே கையளித்திருக்கின்றார்கள்.  இதை யாரிடம் போய் முறையிடுவது?  இந்த மூன்று மாதங்களாகச் சிறைக்கைதிகளாக உளவியல்ரீதியில் நாம் அடைந்த பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு?  அதுவும் சுதந்திர தேவியின்  சிலை கம்பீரமாகக்காட்சி தரும் நியுயார்க் மாநகரில்தான் எங்களுக்கு எங்களது மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.  வேடிக்கையாயில்லையா?

ஒருவாறு எங்கள் தடுப்புமுகாம் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.  அந்த மூன்று மாதங்கள்  நாங்கள் எங்கள் உரிமையினை  இழந்திருந்தோம். ஏற்பட்ட அனுபவங்களோ மறக்க முடியாதன.  பல்வேறு நாட்டைச்சேர்ந்தவர்களுடன் பழகிய அனுபவங்கள்  பயன் மிக்கவை.  டானியல், ரிச்சர்ட், அப்துல்லா, போன்ற நல்ல உள்ளங்களைப்பிரிவதை நினைக்கையில் வேதனையாகத்தானிருந்தது.  எங்களுக்கு விடுதலை என்ற செய்தியை வரவேற்று மகிழ்ந்த அதே சமயம் தங்களது எதிர்காலத்தையெண்ணி அவர்கள் முகத்தில் படர்ந்த ஏக்க உணர்வுகளை எங்களால் உணர முடிந்தது.  அவர்களைப்பொறுத்தவரையில் சட்டவிரோதமாகக்கூட நாட்டினுள் அனுமதிக்கப்படாத வகையினர் என்ற பிரிவினைச்சேர்ந்தவர்கள். வழக்கு முடியும் வரையில் அவர்களது நிலை திரிசங்கு நிலைதான். வழக்கில் சில வேளை தீர்ப்பு சாதகமாயிருக்கும் பட்சத்தில் நாட்டினுள் உரிமைகளுடன் அனுமதிக்கப்படலாம்.  இல்லாத பட்சத்தில் நாடு கடத்தப்படலாம். அதுவரை ஏக்கங்களுடன் , கற்பனைகளுடன் , கனவுகளுடன் அந்த ஐந்தாவது மாடித்தடுப்பு முகாம் என்றழைக்கப்படும் சிறையினுள் வளையவர வேண்டியதுதான். வேறு என்னதான் அவர்களால் செய்ய முடியும்?

[ முற்றும் ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்