சிறுகதை: பைரவி கதை சொன்னாள் - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
* ஓவியம் AI
மனதின் சாளரங்கள் திறப்பதற்கு மாமனிதர்களின் தத்துவங்கள் உதவுவது போல, சில வாசிப்புகளும் உதவுவதை அவள் அறிவாள். இறுகியிருந்த எண்ணங்கள் சிட்டுக் குருவிகளைப் போல சிறகடித்துப் பறக்கவும் , இனிய சங்கீதம் எங்கும் நிறைக்க வல்லதும் வாசிப்பு என்பதை மறுக்க முடியாது.
அறிதலுக்கும் விவாதத்திற்குமுரிய பல விடயங்களை அலசும் அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த திருப்தியுடன் அவள் விழிகளை மூடித் தன் அகவுலகில் நுழைந்தாள். அங்குதான் அவளது மனக்குதிரைகள் லாயத்தில் கட்டப்பட்டிருக்கும்.
அவள் அங்கு செல்லும் வரை மிக அமைதியாக இருக்கும் அவை , அகவுலகில் நுழைந்ததும் மட்டற்ற வேகம்கொள்ளும். சில சமயங்களில் கட்டுக்கடங்காது.
அவளுடைய மனக் குதிரைகளின் இயல்பு பற்றி முதலில் ஒரு அறிமுகம் தர வேண்டும்.
உறுத்தலான பல விடயங்களைக் கலந்தாலோசிப்பதற்கும் சிக்கலான உள்ளக விவாதங்களை நடத்துவதற்கும் அவை மிகமிக உறுதுணையானவை. இக்கட்டான சந்தர்ப்பங்களில் பல பயனுள்ள பக்கவாட்டுச் சிந்தனைகளைத் தந்து அவளுடன் கூடவே பயணிப்பவை. வேகமான மாற்றுவழிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுப்பதற்கு எப்போதும் துணை நிற்பவை.
மற்றவர்களின் கண்களின் ஊடாக அவர்களது மனதிற்குள் கணநேரத்தில் ஊடுருவும் வல்லமை கொண்டவையென்பதால் அவர்களின் உள்ளுணர்வை அறிவதற்கு எப்போதும் அவளுக்கு உதவுகின்றன. முரண் கருத்துடையவர்களிடம் வாதிடுவதற்கு உடனடியாகக் காரணிகளைக் கண்டறிந்தும் தருகின்றன.
ஆனாலும் மிகமிக இறுக்கமான அமசடக்கான மனிதர்களை சில சமயங்களில் அவை எடைபோடத் தவறி விடுகின்றன.