- திரு. எஸ். பி. சாமி -
திரு. எஸ். பி. சாமி என்று பலராலும் அழைக்கப்பட்ட திரு. செல்லையா பொன்னுச்சாமி 19-2-2025 ஆம் ஆண்டு தனது 89 வது வயதில் எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார். தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும், யாழ்ப்பாணம் சென்ரல் மருத்துவ மனை, நொதேன் பீச் ஹேட்டல் போன்றவற்றின் உரிமையாளருமான இவரது மறைவு எங்கள் தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பாகும்.
போர்;ச் சூழலில் போராளிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே அகப்பட்டு தங்கள் இருப்பைத் தக்க வைப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பது பலருக்குப் புரியும். அப்படி ஒரு சூழலில் நாங்கள் வாழ்ந்ததால், உயிரையே பணயம் வைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். இக்கால கட்டத்தில் இவர் புறக்கோட்டை வர்த்தக சங்கம், அகில இலங்கை இந்துமாமன்றம், மற்றும் கருணைப்பாலம் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றினார். வேலனை கிழக்கு 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்து வந்தார்.
இலங்கை வங்கியில் அதியுயர் முகாமையாளராகப் பணியாற்றிய (AGM & DGM) எனது மூத்த சகோதரர் கே. சிவகணநாதன் மூலம்தான் முதலில் புறக்கோட்டை வர்த்தக சங்கத் தலைவாக இருந்த இவரது அறிமுகம் கிடைத்தது. இவரது காலத்தில் கொழும்பு வர்த்தகர்கள் கொடிகட்டிப் பறந்தது எனக்கு ஞாபகம் இருக்கின்றது, காரணம் வங்கிகளை நம்பியே வர்த்தகம் இருந்தது. அந்தத் தொடர்பை இவர் சிறப்பாகக் கையாண்டார். இவரை முதலில் சந்தித்த போதே என் மனதில் இடம் பிடித்து விட்டார். காரணம் எனது தகப்பனார் போலவே வெள்ளை ஆடை, நரைத்ததலை, சிரித்த முகம். எனது தகப்பனார் காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரியில் கனிஸ்டபாடசாலை அதிபராக இருந்ததால் அவரும் வெள்ளை வேட்டி, வெள்ளை முழு நீளநாசனல் சட்டை அணிந்திருப்பார்.
அதன் பின் எனது மனைவி மாலினியின் நெருங்கிய உறவினர் இவர் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. போர்ச் சூழல் காரணமாக அவர் இந்தியாவில் நந்தனத்தில் தங்கியிருந்த காலத்தில் நான் மகாராஜா நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருமுறை இந்தியாவுக்குச் சென்ற போது, குடும்பத்தின் அழைப்பை ஏற்று அவரது இல்லத்தில்தான் தங்கியிருந்தேன். மிகவும் அன்பு பாசமாகப் பழகக் கூடியவர். இவர் மட்டுமல்ல வீரலட்சுமி மாமியும், அவரது குடும்பத்தினர் அனைவருமே பாசத்தோடு பழகக்கூடியவர்கள். அப்போது சாந்தி, நந்தி இருவரும் உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். விருந்தோம்பல் பண்புகள் நிறைந்தவர்கள். வரலாற்றுப் புகழ் பெற்ற மாமல்லபுரம் சென்று பார்த்து வரும்படி, தன்னால் வரமுடியவில்லை என்று கூறி, அவர் தனது பிள்ளைகளுடன் என்னை அனுப்பி வைத்தது என்னால் மறக்க முடியாத நினைவாக இருக்கின்றது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த எனது திருமணத்தின் போது அவரும், அவரது சகோதரர் திரு. நாகராஜா அவர்களும் அங்கு வந்து கலந்து கொண்டு எங்களை வாழ்த்தியிருந்தனர். திரு. நாகராஜா அவர்கள் பம்பலப்பிட்டியில் மேரிஸ் வீதியில் எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில்தான் குடியிருந்தார். அவரும் புறக்கோட்டையில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். இறுதிச் சடங்கின் போது ஒளிக்காட்சியில் அவரைப் பார்த்தேன், பல வருடங்களுக்கு முன் அவரைப் பார்த்தது போலவே இப்போதும் இருக்கின்றார்.
திரு. எஸ். பி. சாமி அவர்கள் 1978 ஆம் ஆண்டு சென்ரல் மருத்துவ மனையை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார். அக்காலத்தில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்ட இந்த மருத்துவ மனையில் தான் எனது மூத்த மகன் அருச்சுனன் 1984 ஆம் ஆண்டு பிறந்தார். அப்போது பேபி அக்கா அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தார். சாமி அங்கிள் 1997 ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையை ஆரம்பித்தார். சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்த அமரர் பாரதி இராசநாயகம் தினக்குரல் வாரமலரில் ஆசிரியராக இருந்த போது. எனது ஆக்கங்களைக் கேட்டு வங்கி விரும்பி வெளியிட்டு வந்தார். ஒரு முறை தினக்குரல் பணியகத்திற்குச் சென்ற போது எனக்கு எற்கனவே நன்கு அறிமுகமான ‘பாட்டா’ செல்லத்துரை அவர்கள் என்னை வரவேற்று தனது அறைக்கு அழைத்துச் சென்று நீண்ட நேரம் உரையாடினார். அவர் அப்போது அங்கு முகாமையாளராகப் பணியாற்றினார். இவரது மகன் இளங்கோதான் சாந்தியின் கணவர். கொழும்பில் பக்கத்துத் தெருவில் வளர்ந்த இளங்கோ சின்ன வயதில் இருந்தே எனக்குப் பழக்கமானவர். அப்போது பாரதியும் அங்கு வந்து கதைத்தார். அவருக்கு நான் சாமி அங்கிளின் உறவினர் என்பது தெரியது. ஒரு நாள் தெரிய வந்த போது அவர் என்னிடம் கேட்டார். காரணம் ‘உறவினர் என்ற சலுகையை நான் எடுக்க விரும்பவில்லை’ என்று சொன்னேன். ‘உறவினர் இல்லாவிட்டாலும் கூட தரமான உங்கள் ஆக்கங்களை நான் கட்டாயம் வெளியிட்டிருப்பேன்’ என்று பாரதி குறிப்பிட்டிருந்தார். அமரர் பாரதியுடனான நட்பு அதன் பின் ஈழநாடு பத்திரிகையிலும் கடைசிவரை தொடர்ந்தது.
தொடக்க காலத்தில் சிங்களப் படங்களைத் தயாரித்த அனுபவம் திரு. எஸ். பி. சாமி அவர்களிடம் இருந்ததால் சிங்கள சினிமாத்துறை பற்றி அவரிடம் இருந்து பல தகவல்களை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அவரும் நல்லதொரு மேடை நடிகர் என்பதையும் அப்போது அறிந்து கொண்டேன். நான் நினைக்கின்றேன் அவர் சுசி (Susi) சலி (Sally) ஆதரே மங் ஆதரே (Athare Mang Athare) ஆகிய மூன்று சிங்கத் திரைப்;படங்களையாவது தயாரித்து இருக்க வேண்டும். இந்த மூன்று படங்களிலும் முன்நாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவரும், பிரபல சிங்கள நடிகருமான விஜே குமாரத்துங்க நடித்திருந்தார். இவருடன் இணைந்து சிங்கள சினிமாவின் கனவுக் கன்னி மாலினி பொன்சேகாவும் நடித்திருந்தார். சலி என்ற சிங்களப்படத்தில் சிறில் பி. அபேரத்ன மாலினி பொன்சேகா, விஜய குமாரதுங்க, ஜோ அபேவிக்ரம, விமல் குமார டி கொஸ்டா, பாப்டிஸ்ட் பெர்னாண்டோ, அலெக்சாண்டர் பெர்னாண்டோ ஆகியோர் நடித்திருந்தனர்.
விருது பெற்ற சுசி படம் ஐடிஎன் தொலைக்காட்சியில் 24-2-23 அன்று ஒளிபரப்பப்பட்டது. 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் விஜய குமாரதுங்க, மலானி பொன்சேகா, பி.எஸ். பெரேரா ஆகியோர் நடத்திருந்தனர். இந்தப் படத்தை சேன சமரசிங்க மற்றும் பியசேன டி சில்வா ஆகியோர் இயக்கி இருந்தனர். இந்தப் படத்தின் விளம்பரத்திற்காக அச்சடித்த பெரிய பதாகையை அடுத்த வீட்டில் குடியிருந்த நாகராஜா அங்கிள் வீட்டில் பார்த்திருக்கின்றேன்.
அந்தக் காலத்தில் தமிழர் ஒருவர் சிங்கள சினிமாத் துறையில் தடம் பதித்திருப்பதென்பது எனக்குப் பிரமையாக இருந்தது. ‘உங்களிடமும் திறமை இருக்கின்றது திரைப்படங்களுக்கு நீங்களும் திரைக்கதை எழுதலாமே’ என்று அவர் எனது எழுத்தாற்றலை அறிந்து என்னிடம் சொன்ன போது அதை நான் அப்போது பெரிதாக எடுக்கவில்லை. ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, கலைமகள் போன்ற பிரபல தமிழக இதழ்களில் எனது கதைகள் வெளிவந்த காலமது. சினிமாத்துறை பற்றி நான் அப்போது நினைக்கவும் இல்லை.
ஆனால் என் மனதில் அவரது வார்த்தைகள் பதிந்திருந்ததாலோ என்னவோ, கனடா வந்த பின், மூன்று திரைப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியது மட்டுமல்ல, ‘சுகம் சுகமே’ என்ற ஸ்ரீமுருகனின் திரைப்படத்தின் திரைக்கதை வசனத்திற்கு சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவுக்கான ‘ஜனகன் பிச்சேஸாரின் விருது’ கிடைத்த போது அவரது வாக்குப் பலித்திருப்பதை எண்ணிப் பெருமைப்பட்டேன். அதிக ரசிகர்களை உள்வாங்கும் துறையாகத் திரைப்படத்துறை இருந்தாலும், தனது எதிர்கால நன்மை கருதி அத்துறையில் இருந்து அவர் விலகிக் கொண்டதாகச் சொன்னார். ‘சினிமாத்துறைக்கு ஒரு எல்லை உண்டு அத்துடன் நின்றுவிட வேண்டும், அதற்கு அப்பால் சென்றால் உங்கள் குடும்ப வாழ்க்கையையே அழித்துவிடும்’ என்றார்.
எனது நூல்களை மகாஜனக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினர் கொழும்பு வெள்ளவத்தை தழிழ் சங்கத்தில் வெளியிட்டு வைத்த போது, திரு. எஸ். பி. சாமி அவர்கள் தான் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் சொன்ன நேரத்திற்கு மனைவி வீரலட்சுமியுடன் வந்திருந்தார், ஆனால் ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லித் திரும்பிப் போய்விட்டார். திரும்பி வந்தபோது ஒரு பை அவரது கையிலே இருந்தது. அந்த நிகழ்வில் எனது மனைவி மாலினிதான் வரவேற்பு உரை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் எங்கள் இருவரையும் மேடையில் வைத்து பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார். அப்போதுதான் அவர் தான் முதலில் ஒரு பொன்னாடைதான் கொண்டு வந்ததாகவும், எழுத்தாளரான மருமகளையும் மேடையில் கௌரவிக்க வேண்டுமென்று விரைந்து சென்று இன்னுமொரு பொன்னாடை எடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.
அவர்கள் வெள்ளவத்தையில் இருந்த தங்கள் வீட்டிற்கு எங்களை அழைத்து மறுநாள் விருந்துபசாரமும் செய்திருந்தார்கள். யார்யாருக்குத் தகுதிகள் இருக்கின்றனவோ அவர்களை எல்லாம் தேடிப்பிடித்துக் கௌரவிக்க அவர் தயங்கியதில்லை. இவரைப் போன்றவர்கள் கொடுத்த கௌரவிப்புத்தான், மாலினி அரவிந்தனைப் ‘பறவைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பைப் புலம்பெயர்ந்த மண்ணான கனடாவில் வெளியிடத் தூண்டியது. கனடாவில் இருந்து முதன் முதலாக வெளிவந்த தமிழ் பெண்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான ‘நீங்காத நினைவுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலும் மாலினியின் கதை இடம் பெற்றிருந்தது.
அமரர் எஸ். பி. சாமி அவர்களின் இறுதிக் கிரிகையின் போது எனக்குப் பழக்கமான பல அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள், வர்த்தகர்கள், சமயப்பிரமுகர்கள் எல்லாம் கலந்து கொண்டு உரையாற்றியதைக் காணொளியில் காணமுடிந்தது. பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் உறவுகளும் சுற்றி நின்று தீப்பந்தம் ஏந்தி நின்ற காட்சி அவர் வாழ்ந்த வாழ்க்கையை நினைவூட்டி, நேற்றிருந்தார் இன்றில்லை என்பதை உறுதிப் படுத்தி நின்றது. அவரது ஆத்மா சாந்தியடைய அவரது குடும்பத்தினருடன் இணைந்து கனடாவில் இருந்து நாங்களும் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.