Sidebar

பதிவுகளில் தேடுக!

பதிவுகள் -Off Canavas

இலங்கை வானொலி மற்றும் லண்டன் பி. பி. சி . யில் முன்னர் சேவையாற்றியவரும் இலங்கை நாடாளுமன்றில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவருமான புகழ் பூத்த அறிவிப்பாளர் ( அமரர் ) சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும், சுபத்திராவின் பாசமிகு தாயாரும், குலசேகரம் சஞ்சயனின் அன்பு மாமியாரும், சேந்தன், சேயோன் ஆகியோரின் பிரியத்திற்குரிய பேத்தியாருமான திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலையில் அவுஸ்திரேலியா சிட்னியில் அமரத்துவம் எய்திவிட்டார் என்ற துயரச் செய்தியுடன்தான் அன்றைய நாளின் காலைப்பொழுது எனக்கு விடிந்தது.

சிட்னியிலிருந்து இலக்கியச் சகோதரன் கானா. பிரபா, காலை வேளையில் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டால், ஏதோ ஒரு கலை, இலக்கியப் புதினம்தான் சொல்லப்போகிறார் என நினைத்துக்கொள்வேன். ஆனால், அவர் அன்று சொன்ன தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தத் தகவலைத்தான் இந்த அஞ்சலிக்குறிப்பின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். எங்கள் கலை, இலக்கிய, வானொலி ஊடகக் குடும்பத்திலிருந்து மற்றும் ஒருவரை நாம் தற்போது இழந்து நிற்கின்றோம். எம்மால் அக்கா என அன்புபொங்க அழைக்கப்படும் பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள், எமது அந்த நேசம் இழையோடும் உணர்வுபூர்வமான குரலை இனிமேல் கேட்கமாட்டார்கள்.

இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிட்னிக்குச் சென்றிருந்தவேளையில், என்னை அவரிடம் அழைத்துச்சென்றவர்கள் கவிஞர் அம்பியின் புதல்வன் திருக்குமாரனும், புதல்வி மருத்துவர் திருமதி உமாதேவி சிவகுமாரனும்தான். அன்று அக்கா, எங்களைக்கண்டதும் உற்சாகம் பொங்க நீண்டநேரம் உரையாற்றினார்.

சுமார் அரைநூற்றாண்டுக்கு முன்னர், அக்காவையும் அவரது கணவர் சுந்தா அண்ணரையும், இவர்களின் செல்வப்புதல்வி சுபத்ராவையும் முதல் முதலில் சந்தித்த கொழும்பு – 07 இல் பாமன்கடை வீதியில் அமைந்திருந்த இல்லத்தில் இவர்களுடன் மற்றும் ஒரு பகுதியில் வசித்த, பேராசிரியர்கள் மௌனகுரு – சித்திரலேகா தம்பதியருடன், அக்காவை அன்று உரையாடச் செய்வதற்காக இணைப்பினை ஏற்படுத்திக்கொடுத்தேன். அப்போது கொழும்பில் சித்திரலேகா மாத்திரமே இருந்தார். அன்று அக்காவும், புதல்வி சுபத்ராவும் சித்திரலேகாவுடன் உரையாடி சுகசேமங்களை பரிமாரிக்கொண்டனர்.

மீண்டும் இம்மாதம் 23 ஆம் திகதி காலைப் பொழுதில் சித்திரலேகாவுக்கு , அக்கா நிரந்தரமாக எம்மை விட்டு விடைபெற்றுவிட்டார் என்ற துயரச்செய்தியைத்தான் என்னால் சொல்ல முடிந்தது.

இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர், 2001 ஒக்டோபர் 29 ஆம் திகதி சிட்னியில் விடைபெற்றுவிட்ட தனது அருமைக்கணவர் சுந்தா அவர்களிடமே, இம்மாதம் 23 ஆம் திகதி அக்காவும் சென்றுவிட்டார் என்ற குருட்டு நம்பிக்கையுடன், என்னை நானே தேற்றிக்கொண்டே இந்த அஞ்சலிக்குறிப்பினை எழுதுகின்றேன்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து எங்கள் கலை, இலக்கிய, ஊடகக் குடும்பத்திலிருந்து அடுத்தடுத்து ஒவ்வொருவரையும் இழந்து கொண்டிருக்கும்போது நேர்ந்துவிடும் வெற்றிடத்தை அவர்கள் பற்றிய பசுமையான நினைவுகளின் மூலம்தான் நிரப்ப முடியும்..

காலமும் கணங்களும் என்ற எனது தொடரில் ஏற்கனவே சுந்தா அண்ணர் பற்றி விரிவாக எழுதியிருக்கின்றேன். வானொலிகளில் உரையாற்றியிருக்கின்றேன். அத்துடன், சிட்னியிலும் மெல்பனிலும் சுந்தா அண்ணருடைய நினைவரங்கத்திலேயே எனது நூல்களையும் வெளியிட்டிருக்கின்றேன்.

பலரை இழந்து, அவர்களின் நினைவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்போது , இதோ தானும் வருகின்றேன் எனச்சொல்லாமல் சொல்லிக்கொண்டு பராசக்தி அக்காவும் இணைந்துவிட்டார். நினைவுகளில் தங்கிவிட்டார்.

அக்காவின் மறைவுச்செய்தி அறிந்ததும், தாமதிக்காமல், இங்கிலாந்திலிருந்து எம்தமிழ் உறவுகள் காணொலி சமூக வலைத்தளமும் நடத்தியவாறு ஐ. ரி. பி. சி. வானொலியில் ஊடகவியலாளராகவும் இயங்கும் இனிய நண்பர் எஸ். கே. ராஜெனுடன் தொடர்புகெண்டு, அவரது ஊடகங்களில் அக்கா பற்றிய எனது அஞ்சலி உரையை சமர்ப்பித்தேன்.

2001 இல் சுந்தா அண்ணர் மறைந்து சில வாரங்களில் அக்கா எனக்கு அனுப்பிவைத்த வணக்கம் கூறி விடைபெறுவது சுந்தா சுந்தரலிங்கம் என்ற நூல் எனது மேசையில் என் கண்ணெதிரே இருக்கிறது.

அந்த நூலில் எஸ். சங்கரமூர்த்தி, ( லண்டன் பி. பி. சி. ) பேராசிரியர் கா. சிவத்தம்பி, பொன்மணி குலசிங்கம், ஆர். நடராஜன் ( உதவி ஆசிரியர் சென்னை இந்து ) பொன். பாலசுந்தரம், விமல் சொக்கநாதன், அ. முத்துலிங்கம், தமிழர் தகவல் எஸ். திருச்செல்வம், லேனா. தமிழ்வாணன், அண்ணாமலை ( சென்னை பி. பி. பி. சி. ) எஸ். சிவநாயகம், கலாநிதி மஞ்சுபாஷினி சிவநாதன், சிவா. சிவானந்தன், ஜெயம் சேவியர், எஸ். ஶ்ரீகரன், Kailash Budhwar ( London BBC ) எஸ். சத்தியலிங்கம், எஸ். குஞ்சிதபாதம், கலாநிதி கிருஷ்ணசாமி, வி. பி. தனஞ்செயன், வாசந்தி ( ஆசிரியர் இந்தியா டுடே ) வி. ஆர். தேவிகா, சம்பத்குமார், ராணி மைந்தன், சுரேஷ் அபுதாஸ், பத்திரிகையாளர் மாலி, ஆகியோருடன், நானும் சுந்தா அண்ணர் பற்றிய நினைவுகளை எழுதியிருந்தோம்.

இவர்களில் சிலர் இலங்கை, வானெலி மற்றும் லண்டன் பி. பி. சி. யுடன் நெருக்கமான உறவில் இருந்தவர்கள். இவர்கள் அனைவருடனும் பராசக்தி அக்காவுக்கும் நல்லுறவு நீடித்தது. அவர்களில் சிலர் இன்றில்லை. பராசக்தி அக்காவும் அவர்களிடமே சென்றுவிட்டார் என்றுதான் ஆறுதல்படவேண்டியிருக்கிறது.

அக்கா தேர்ந்த வாசகி, இனிய சுபாவங்களினாலும் மந்திரப்புன்னகையாலும் கலை, இலக்கிய உலகை வலம் வந்தவர். ஆனால், தன்னை எதிலும் முன்னிறுத்திக்கொள்ளாமல், தன்முனைப்பற்று வாழ்ந்தவர்.

அதற்குச்சான்றாக அக்கா, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி எனக்கு எழுதியிருக்கும் மின்னஞ்சலை இங்கே பதிவேற்றுகின்றேன். அன்றைய காலப்பகுதி அனைத்துலக பெண்கள் தினத்திற்குரியது. 28 பெண் ஆளுமைகள் பற்றிய எனது பதிவுகளை தொகுத்து, யாதுமாகி நூலின் முதல் பாகத்தை மின்னூலாக வெளியிட்டு, அமேசன் கிண்டிலில் பதிவேற்றிவிட்டு, அதற்கான மெய்நிகர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தேன். யாதுமாகி நூலை அக்காவுக்குத்தான் சமர்ப்பித்திருந்தேன். ஆனால், நூல் வெளியாகும் வரையில் இந்தத் தகவலை அக்காவுக்குச் சொல்லவில்லை. அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இணைந்திருந்த அக்கா, தாமதமின்றி எனக்கு எழுதியிருந்த மடல் இது. அந்த நேரம் நிச்சயமாக நடுச்சாமம்தான்.

அருமைச் சகோதரன்  முருகபூபதி அவர்களுக்கு அன்போடு எழுதுகிறேன். இன்றைய நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது, நிறைவாக இருந்தது !   பாராட்டுகள்! உரைகள் யாவும் உயர்ந்த தரத்தில் அமைந்திருந்தன ! எல்லோருமே உள்ளன்புடன் பேசினார்கள். சகோதரி கலையரசி அவர்கள் சிறந்த முறையில் ,தொகுத்தளித்தமை நிகழ்ச்சிக்கு மகுடமாக அமைந்திருந்தது! இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு சிறந்த எழுத்தாளருக்கு!!!

உங்களுடைய ஆற்றல் பிரமிக்க வைத்தது சகோதரரே. அன்னப்பட்சி போன்ற எழுத்தாற்றலோடு நிர்வாகத் திறமை மிக்கவராகவும்   வியக்க வைத்து விட்டீர்கள்! சரியான தெரிவுகள்! ஆசிகள் ஆசிகள் ஆசிகள்!!!!! இதுவே எனக்குத் தெரிந்த மொழி !

என் மனதில் ஏற்பட்டுள்ள ஒரு நெருடலை நான் மறைக்க விரும்பவில்லை திருமதி ஞானம் இரத்தினம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு திடுக்கிட்டுப் போனேன்!- அதனைத் தொடர்ந்து சமர்ப்பணம் பற்றிய செய்தி!!

சான்றோர் பலரால் புகழ்ந்துரைக்கப்படும்  சாதனைப் பெண்களைப் பற்றிய ஓர் உயர்ந்த படைப்பை.  என்னைப் போன்ற ஒரு சாதாரண வாசகிக்கு ,உங்களைப் போன்ற ஓர் எழுத்தாளர் சமர்ப்பித்திருப்பதை என்னென்பது   !  நான் இதற்குத் தகுதியானவளா?

நான் எழுத்தாளரோ பேச்சாளரோ அல்ல!. இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும்! எங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் உங்கள் அன்பும் அபிமானமும் மனதை நெகிழ வைக்கின்றன சகோதரரே. உங்கள் எழுத்துப் பயணம் தடைகளேதுமின்றித் தொடர வேண்டும் என நன்றியுடன் வாழ்த்துகிறேன். அன்புச் சகோதரி மாலதிக்கும் உங்களுக்கும்  அன்பும் ஆசிகளும்.

அன்புடன்
அக்கா

அக்காவின் இந்த மடலை பொக்கிஷமாக பேணிப்பாதுகாக்கின்றேன். அவரிடமிருந்து நாம் கற்றதும் பெற்றதும் அநேகம்.

இலக்கியம், நாடகம், நடனம், கூத்து, இசை , ஓவியம், சினிமா, ஒளிப்படம், கைவினை முதலான துறைகளில் எவர் ஈடுபட்டாலும், அவர்களின் செயற்பாடு சமூகப் பயன்மிக்கதாகவிருந்தால்தான், அவர்களின் பெயர் நிலைத்து நிற்கும். அவ்வாறு நிலைத்திருப்பதற்குரிய அங்கீகாரத்தை தருபவர்கள் கலா ரசிகர்களே. ரசிகர்கள் இல்லையெனில், கலைஞர்களும் இல்லை. ஆனால், கலைஞர்களை வாழவைக்கும் கலா ரசிகர்கள் பற்றி யாராவது பேசுகிறார்களா..? எழுதுகிறார்களா…? ஆம் . அவ்வாறு எழுதியவர்களில் ஒருவர் எம்மத்தியில் வாழ்ந்த பராசக்தி அக்கா.

சிட்னியில் நடக்கும் கலை, இலக்கிய நிகழ்வுகள் பற்றியும் நூல்கள், மற்றும் இணைய இதழ்கள் , பத்திரிகைகளில் தான் வாசித்துப்பெற்ற அனுபவங்கள் பற்றியும் உடனுக்குடன் எழுதி ஊக்குவிக்கும் சகோதரிதான் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள். இவரது எழுத்துக்களை ஐந்து தசாப்பதங்களுக்கு முன்பே ஈழத்து இதழ்களில் படித்திருக்கின்றோம்.

1975 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் வெளியான மல்லிகை இதழில் கைப்பணியில் இது ஒரு கலைப்பணி என்ற தலைப்பில் ஒரு பக்கத்தில் சில குறிப்புகள் என்ற ஆக்கத்தை பராசக்தி சுந்தரலிங்கம் அக்கா எழுதியிருந்தார். அவர் அவ்வேளையில் ஒரு திருமண வைபவத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு திருமண வைபவம் முடிந்ததும் சுவையான கேக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். ஆனால், எதில் என்பதுதான் அதிசயம். வழக்கமாக அழகிய வண்ணக் காகிதத்தில் சுற்றி, அதற்குப்பொருத்தமான அலங்கார வடிவமைப்புக்கொண்ட சிறிய காகிதப்பெட்டியில்தானே கொடுத்திருப்பார்கள் என நினைப்போம். ஆனால், அதுதான் இல்லை. அன்று விருந்தினர்களுக்கு சுவையான கேக், ஒரு சின்னஞ்சிறிய பனைஓலைக்குட்டான் பெட்டிக்குள் வைத்து தரப்பட்டிருக்கிறது.

வழக்கமாக என்ன நடக்கும் ? அதனை விநோதமாகப்பார்த்து சிரித்துவிட்டு, கேக்கை சாப்பிடுவோம். ஆனால், அந்த அழகிய கைவினை பற்றிய அறிமுகத்தையும் எழுதி, உள்நாட்டில் பனை அபிவிருத்திக்காக எமது சமூகம் எவ்வாறு இதுபோன்ற சிறிய விடயங்களிலும் அக்கறை செலுத்தவேண்டும் எனவும் சுட்டிக்காண்பித்து, விழிப்புணர்வூட்டும் வகையிலும் எழுதியிருந்தார், பராசக்தி சுந்தரலிங்கம்.

இவரை நான் முதல் முதலில் கொழும்பு தெற்கில் பாமன்கடையில் அமைந்திருந்த ஒரு அழகிய இல்லத்தில்தான் 1970 களில்தான் சந்தித்தேன். அவ்வில்லம் ஒரு கலாநிலையம்தான். பேராசிரியர்கள் மௌனகுரு – சித்ரலேகா தம்பதியர், கவிஞர் இ. சிவானந்தன், இலங்கை வானொலி - லண்டன் பி.பி. சி. புகழ் “அப்பல்லோ“ சுந்தா சுந்தரலிங்கம் தம்பதியர். இவர்களின் செல்வப்புதல்வி சுபாஷினி ஆகியோர் வசித்தனர்.

அங்கே எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டங்கள், மட்டுமன்றி, கலை - இலக்கிய சந்திப்புகளும் அடிக்கடி நடந்தன. சந்திப்புக்கு வருபவர்களை இன்முகத்துடன் உபசரிக்கும் பராசக்தி அவர்கள், எம்மனைவருக்கும் பாசமுள்ள அக்கா. ஆசிரியையாக பணியாற்றிய இவரது பெயரை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அக்காலப்பகுதியில் வெளியிட்ட தமிழ்ப்பாட நூல்களிலும் காணமுடியும்.

யாழ். வேம்படியில் இவர் பணியாற்றிய காலத்தில், இவரிடம் கற்ற பல மாணவியர்கள் பின்னாளில் பல துறைகளில் ஆளுமை மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் இதழியல், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளர் செல்வி கமலா தம்பிராஜா.

பராசக்தி சுந்தரலிங்கம் சிறந்த கலா ரசிகர். இவரது கணவர் எழுதிய மனவோசை நூலைப் படித்திருக்கிறீர்களா..? இலங்கை வானொலியின் சரித்திரத்தை தெரிந்துகொள்வீர்கள்.

ஆம்ஸ்ரோங் சந்திரனில் கால்பதித்தபோது, வானொலியில் அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க செய்தியை விவரணமாக தொகுத்து வழங்கியவர். அன்றுமுதல் அவர் “அப்பல்லோ சுந்தா“ வானார்.

“காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கைகொடுத்தே வாழ்ந்தவர்தான் “ சுந்தாவின் துணைவியார் பராசக்தி அவர்கள்.

இவரது குடும்பமே ஒரு கலைக்குடும்பம்தான். இக்குடும்பத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், வானொலி ஊடகவியலாளர்கள் இடம்பெறுகின்றனர். இவரது இரண்டு சகோதரிகளும் எழுத்தாளர்கள்தான். ஒருவர் திருமதி கனகேஸ்வரி நடராஜா . கனடாவில் வசிப்பவர். கல்வித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று   ஆசிரியராகப் பணியாற்றியவர். கனடாவில் நீண்டகாலமாக வெளியாகும் தமிழர் தகவல் இதழில் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

மற்றவர் திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம். இவர் தமிழில் முதுகலை பட்டம்  பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில்  விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தற்போது அவுஸ்திரேலியா கன்பராவில் இருக்கிறார். எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கன்பராவில் நடத்திய இலக்கிய சந்திப்புகளில் உரையாற்றியிருப்பவர். அத்துடன் அங்கிருந்து வெளியாகும் காவோலை இதழிலும் எழுதுபவர். இவரது கணவர் கணேசலிங்கமும் எழுத்தாளர்தான். கவிஞர் , சைவ சித்தாந்த நூல்களை எழுதியுள்ளார்.

மற்றும் ஒரு சகோதரி திருமதி சிவசக்தி பரிமளநாதனும் பட்டதாரி. இவர் சிட்னியில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர். இவரது கணவர் பரிமளநாதன் சிறந்த நாடக, கூத்து கலைஞர். சிட்னி இலக்கியப்பவர் அமைப்பில் இணைந்திருந்தவர்.

திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களின் நான்கு தம்பிமார் எழுத்துத் துறையில் ஈடுபடாவிட்டாலும், இவர்களும் கலை, இலக்கிய ஆர்வலர்கள்தான்.

பராசக்தி – சுந்தரலிங்கம் தம்பதியரின் ஏக புதல்வி சுபத்திராவின் கணவர் திரு. குலசேகரம் சஞ்சயன் சிறந்த வானொலி ஊடகவியலாளர். இவரது குரலை சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் S B S வானொலி தமிழ் ஒலிபரப்பில் வாசகர்கள், நேயர்கள் கேட்டு வருகின்றனர். இவ்வாறு ஒரு கலை, இலக்கிய, வானொலி ஊடகத்துறையுடன் நெருக்கமானவர்கள் மத்தியில் இயங்கிக்கொண்டிருந்தவர்தான் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள். சிட்னியில் நடக்கும் கலை, இலக்கிய, இசை நிகழ்ச்சிகள், குறிப்பாக அரங்கேற்றங்கள் குறித்தெல்லாம் சிறந்த ரஸனைக்குறிப்புகளை எழுதியவர். முதிய வயதிலும், தொடர்ச்சியாக வாசிப்பிலும் ஈடுபட்டவாறு இணையம், வானொலி, தொலைக்காட்சி முதலானவற்றில் சமூகப்பயன்பாட்டுடன் வெளியாகும் விடயங்கள் பற்றி கூர்மையான அவதானத்துடன் கருத்துக்களையும் பகிர்ந்து வந்தவர்.

புகலிடத்திலும் இலங்கையிலும் இந்தியாவிலும் கலை, இலக்கிய, அறிவியல் துறைகளில் தனக்கு வாசிக்கக் கிடைக்கும் நல்ல விடயங்களை எம்மில் பலருக்கு பகிர்ந்து, எமது ரஸனையையும் ஊக்குவித்து வளர்க்கும் இயல்பினையும் கொண்டிருந்தார். இவரது கருத்துக்கள் எப்போதும் எமக்கு ஊட்டச் சத்தாகவே திகழ்ந்திருப்பவை. கடந்த ஆண்டு கனடா தமிழர் தகவல் , பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தது.

எம்மத்தியில் வாழ்ந்த சிறந்த கலை இலக்கிய ரசிகையை நாம் தற்போது இழந்திருக்கின்றோம். அவர் பற்றிய நினைவுகளே இனி எம்மிடம் எஞ்சியிருக்கும். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இம்மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் அவுஸ்திரேலியா சிட்னியில் Macquarie Park ( Lotus Pavilion ) மயானத்தில் நடைபெறும்.

letchumananm@gmail.com - முருகபூபதி


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com