தேவகாந்தனின் 'கதாகாலம்'[[எழுத்தாளர் தேவகாந்தனின் 'கதாகாலம்' மகாபாரதத்தின் மறுவாசிப்பென்றால் , 'லங்காபுரம்' இராமயணத்தினை, குறிப்பாக இராவண கதையினை மறு வாசிப்பு செய்கிறது. இவ்விரு நூல்கள் பற்றிய என்.கே.மகாலிங்கத்தின் கட்டுரையும், கிருத்திகனின் 'இன்னாத கூறல்' வலைப்பதிவும் இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள்-]  தேவகாந்தனின் கதாகாலம் நூல் அரங்கேற்றம் அல்லது வெளியீடு முதலாவது அமர்வில் நடைபெற்றது. அது சம்பிரதாய பூர்வமாக நடைபெற்ற நிகழ்ச்சி. அதில் நூலைப் பற்றிய குற்றம் குறை காணும் விமர்சனங்களுக்கு இடம் இருக்கக் கூடாது என்று நம்புபவர்கள் இருக்கின்றார்கள். அதனால், இந்த இரண்டாவது அமர்வு. பொதுவாக நடன அரங்கேற்றம் என்று இன்று வழங்கப்படும் சொல்லாடல் அன்று நூல் அரங்கேற்றத்துக்கும் உரித்தானதே.

கூடவே, அன்று, அதாவது, சங்க காலத்தில,; -அப்படியான ஒரு காலம் இருந்தது உண்மையோ கற்பனையோ- எதுவாக இருந்தாலும், நக்கீரனை முக்கண்ணன் எரித்து விடுமாப் போல் பார்த்தபோது அவரைப் பார்த்து சொன்னதாகக் கூறப்படும் வீர வசனமான நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்பது இன்றும் இந்நூலை மதிப்பிடும்போது பொருத்தமானதே. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சங்கப் பலகை ஒரு நூலை ஏற்றுக் கொண்டால் அது நல்லது என்றே கொள்ளப்படும். அந்த வகையிலும் இவ்விடத்தை சங்கப்பலகையாக எடுத்து இந்நூலை சொற் குற்றம், பொருட் குற்றம், பிற குற்றம் போன்றவற்றை ஆய்ந்து நாம் அரங்கேற்றி வைப்போம்.

கதா காலம் என்ற இந்நாவல், உங்களுக்கு எங்களுக்கு உலகத்திற்குத் தெரிந்த, மூவாயிரம் ஆண்டுகளாக வழங்கிவரும் மகா பாரதக் கதையை வைத்தே எழுதப் பட்டுள்ளது. நீங்கள் அனைவருமே ஏதோ ஒருவகையில் இக்கதையைக் கேட்டிருப்பீர்கள். வாசித்திருப்பீர்கள்.

ராஜாஜி எழுதிய வியாசர் விருந்தாகவோ பள்ளியில் மகாபாரதச் சுருக்கமாகவோ பாரதியின் பாஞ்சாலி சபதமாகவோ எஸ்.ராமகிருஸ்ணனின் உபபாண்டவமாகவோ அரவானாகவோ கர்ணன் படமாகவோ தொலைக்காட்சியில் வந்த மகா பாரத படமாகவோ வாரியாரின் சொற்பொழிவுகளாகவோ வாசித்தும் பார்த்தும் கேட்டும் இருப்பீர்கள். இப்படியாக எங்கள் வாழ்வில் எம் நிழல் போல் எம்முடன் ஒட்டி வந்த இந்த இதிகாசத்தை திரும்பவும் நாவலாக எழுத தேவகாந்தன் எப்படித் துணிந்தார். அதில் வெற்றி பெற்றும் விடுவேன் என்று அவருக்கு எப்படி நம்பிக்கை வந்தது? அந்த அசாத்தியத் துணிச்சல் சிலவேளை முட்டாளுக்கும் வரும். சிலவேளை தன்னம்பிக்கையுள்ளவனுக்கும,; ஆற்றல் உள்ளவனுக்கும் வரும். இவர் உண்மையிலே நல்ல ஆற்றலுள்ளவர் என்பதை வாழ்வியலாக நடந்து கொண்டிருக்கும் அக்கதையை தன் திறமையான எழுத்தில் நாவலாக, தற்கால வடிவமான நாவலில், வடித்து தந்ததனின் மூலம் நிரூபித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். என் கணிப்பீட்டை பொறுத்தளவில், இந்நூல் சங்கப் பலகையில் ஏற்றி வைக்கக் கூடியதென்றும், கூடவே, தகுதி காண் பரீட்ஷையில் வெற்றியும் அடையும் என்றும் சொல்வேன்.

கதா காலம் என்பது இந்நாவலின் தலைப்பு என்றும், உபதலைப்பாக மகா பாரதத்தின் மறு வாசிப்பு என்றும் போடப்பட்டுள்ளது. இக்கதை காலாகாலமாக வியாசர், உக்கிரவஸ், வைசம்பாயனர், ஜைமினி, சஞ்சயன், பின்னர் சூதர், , மாகதர், பாணர், நடர் போன்றவர்களால் சொல்லப்பட்டு வந்து இன்று எங்கள் சிறுகதை ஆசி¡¢யர்கள், நாவலாசிரியர்கள் கையில் கிடைத்துள்ளது. எத்தனையோ பேரால் சொல்லப்பட்டு, உபகதைகள், கிளைக்கதைகள்; சேர்க்கப்பட்டு, பெருகி வந்த ஆற்றைப் போல, வந்துள்ளது. இப்பாரதக் கதையை முழுவதாக அறிந்தவர், வாசித்தவர் எவரும் இல்லை என்றும், அதேவேளை எல்லாருக்கும் கொஞ்சமாவது தெரியும் என்றும் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வார்.

வியாசர், பாரதக் கதையை குருகுல, ஷத்திரிய ஆண்கள் சம்பந்தமான கதையாக மட்டுமே எழுதி இருக்க, அதில் விடுபட்ட அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்படாத பெண் பாத்திரங்களான சத்தியவதி, காந்தாரி, குந்தி, மாத்ரி, அம்பை, துரோபதை ஆகியவர்களை மையப்படுத்தி, ஆண் பாத்திரங்களை பின்னகர்த்தி, அவர்களுக்கும் அனைத்துப் பாத்திரங்களுக்குமே மானிடத்தன்மையைக் கொடுத்து, அதாவது பாரதக் கதையில் காணப்படும் அமானுஷ்யத் தன்மையையும், மர்மங்களையும் விடுவித்து, மனித இயல்பு நிலைக்கு அல்லது யதார்த்த வியாக்கியானத்துக்கு உட்படுத்தக் கூடியதாக அவர்களை இறக்கி, அழகான, கலைத்துவமான தமிழ் நடையில் ஜெயக் கதை என்ற பெயரில் படைத்துள்ளார், தேவகாந்தன். அது இலங்கைத் தமிழ் உரை நடைக்கும், இலக்கியத்துக்கும் புதியது. செழுமை சேர்ப்பது.

அனைவருக்கும் தெரிந்த கதையை, சிலவேளை சேலையை அடித்தடித்து தோய்த்து நைந்து பழசாகிப் போனது போன்ற ஒரு கதையை, பாரதியாரும், இராமகிருஷ்ணனும், தங்கள் தமிழ் நடையால், பார்வையால்; புதிதாக்கித் தந்துள்ளனர். திரும்ப திரும்பப் படிப்பதற்கும் சுவைப்பதற்கும் உரியதொன்றாக்கியுள்ளனர்.

பாரதியின் பாஞ்சாலி சபதத்தை எத்தனை தரம் வாசித்திருக்கின்றோம். இருந்தும், அது அதன் சுவையை இழக்கவில்லை. அதுபோலவே, தேவகாந்தனின் நாவலில் பல இடங்களைத் திரும்ப திரும்ப படித்தாலும் சுவை குன்றாது. பாரதியரின் சூரியாஸ்தமனம் பற்றிய பகுதி அதன் கற்பனைக்காகவும் கலைக்காகவும் வாசித்து மகிழக் கூடியது போல, இவரின் சில பக்கங்களையும் பலருக்கும் வாசித்துக் காட்டி
மகிழக் கூடியதாகவும் இருக்கும். உயர் வகுப்பு மாணவர்களுக்கு விரசமில்லாத ஆனால் பால் சம்பந்தமான பந்திகளையும் பக்கங்களையும்

வாசித்துக் காட்டி ரசிக்கவும் முடியும். உதாரணமாக, அர்ச்சுனன் துரோபதையைத் தேடி அவளறைக்குச் செல்கையில் யுதேஷ்ரனும் அவளும் இருந்த நிலையை வர்ணிக்கும் இடம், அர்ச்சுனன் திரும்புவது, பின்னர் வனவேகுவது, அங்கே நாக கன்னிகையைக் காண்பது, சந்தனு கங்கையைக் காண்பது, பராசுரன் ஜோஜனகந்தியைக் கண்டு மயங்குவது, பெண்ணுரு எடுத்து வந்த விஷ்ணுவுடன் இன்பம் துய்த்த
அரவானின் இன்பத் துய்ப்பு. இப்படிப் பல இடங்களை நாம் ரசிக்கலாம். தேவகாந்தன் வாத்சாயனாரின் கலையில் கைதேர்ந்தவராக இவ்விடங்களைப் படைத்துள்ளார். டி.எச்.லோறன்சின்; லேடி சட்டலிஸ் லவர்ஸில் வரும் கேம்ஸ்மனுக்கும் லேடி சட்டலிக்கும் நடைபெறும் இணைவிழைச்சு ரசவாத வர்ணனை இவரது.

பத்துப் பகுதிகளில் இந்த நாவல் சொல்லப் பட்டாலும் சொல்லும் முதுசூதன், இளம் சூதன் ஆகியோரின் களம் வேறுபட்டன. வட பாரத நகரில் ஆரம்பித்த கதை சொல்லி, தென்மேல் கிராமம் ஒன்று, அத்தினாபுரம் கலா மண்டபம், வடகீழ் தேசம், கீழ்ப்புறத் தேசம், வட புறத் தேசம், இலங்கையின் கிழக்கு மாகாணம், அதுவும் நவீன காலம், வடமேல் புறத் தேசம், இலங்கையின் தென்மராட்சி என்று களங்களை மாற்றி ஒரே பாரதக் கதை, இடம், காலம் என்ற எல்லைகள் ஒரு பொருட்டல்ல என்று கூறக் கூடியதாக அக் கதையை சூதர்கள் சொல்லி வருகிறார்கள் என்ற அர்த்தப்படக் கூடிய உத்தியைக் கடைப்பிடித்துத் தேவகாந்தன் கதை சொல்லும் முறைமை வியக்கத்தக்கது.

இருந்தும், கதாகாலம் என்னில் சில கேள்விகளையும் எழுப்பின என்று சொல்லத்தான் வேண்டும்:

முதலாவது: மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் இவ்விதிகாசம் வியாசர், வைசம்பாயனர், சூதர், பெளராணிகர், போன்றோர்களால் காலங்காலமாக எடுத்துச் சொல்லப்பட்டு வந்திருக்கின்றது. சமூகம், சூழல், இடம், காலம் போன்றவற்றாலும் கதைசொல்லிகளின் கற்பனைக்கும் ஆற்றலுக்கும் கேட்போ¡¢ன் விருப்பத்துக்கும் இசைவாக அக்கதை மாற்றமடைந்து, மறு வாசிப்புச் செய்யப்பட்டுத் தான் வந்திருக்கும் என்பதை நாம் நம்பத்தான் வேண்டும். தேவகாந்தனும் தற்காலத்துக்கு உகந்தமாதிரி தற்கால மாந்தரின் அறிவுவாதக் கொள்கைக்கும் தாக்க முறைமைக்கும் ஏற்றதுபோல, யதார்த்தப் பாங்கில், பாரதக் கதையை, இக்காலத்தில் நம்ப முடியாத பகுதிகளை நீக்கி விட்டு நாவலாக்கித் தந்திருக்கிறார். அது சில இலக்கியவாதிகளைத் திருப்திப்படுத்தலாம். ஆனால், காலங்காலமாக ‘தருமத்தைச் சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்’ என்று நம்பியுள்ளவர்களைத் திருப்திப்படுத்துமா? பாஞ்சாலியின் துகிலைச் துச்சாதனன் உரிகின்றான். அவள் உலகத்தை மறந்து, உட்சோதியுள் கலந்தாள். கண்ணனை வேண்டினாள். அவனருளால் ‘தம்பி களற்றிடக்
களற்றிடத் துணி புதிதாய் வண்ணப் பொற் சேலைகளாம் -அவை வளர்ந்தன வளர்ந்தன, வளர்ந்தனவே’ என்பதை நம்பியவர்களையும் அனைத்தையும் இழந்து அநாதரவாய் நிற்கும் ஏழை மக்களுக்கும், யுத்தம், பஞ்சம், சுனாமி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரை இறை நம்பிக்கையால் இன்னும் வைத்திருப்போருக்கும், கூந்தலும், துகிலும் மாறி மாறி அவள் நிர்வாணத்தை, மத்தின் மையச் சுழற்சி போன்ற பொறிமுறையால் மானம் காப்பாற்றப்பட்டது என்று தேவகாந்தன் தன் அறிவுவாத தாக்கத்தால் மறுவாசிப்புச் செய்திருந்தாலும், அது இறைவனின் செயலே என்றுதான் மகாசனம் நம்பினார்கள். நம்புவார்கள். மர்மங்கள், அதிமானுட, அபெளதீகச் செயல்கள் இறைவன் செயல்கள் என்ற மானிட நம்பிக்கை அவர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால்தான் இன்றும்
மகாபாரதம் பொது ஜனங்கள் மத்தியில் வாழுகின்றது. பேசப்பட்டு வருகின்றது.

இரண்டாவது: பாஞ்சாலி சபதத்தை எழுதிய பாரதி அதற்கான ஒரு விளக்கத்தில் ‘பல தரனுடைய தொழில் செயும் மகாசனமும் பொதுப்படைப்படையான குடிகள். இவர்களே தேசத்துக்கு உயிராவர். இவர்களைச் சூத்திரர் என்பது இக்கால வழக்கு. சூத்திரா; என்னும் பெயரைச் சில மூடர் இழிவான பொருளில் வழங்குவது பற்றி நூலில் அப்பெயர் தரவில்லை’ என்கிறார். பாரதியார் வேத, இதிகாசங்களை மூலத்தில் பயின்றவர் என்பதைக் குறிப்பிட வேண்டும். தேவகாந்தன் சில இடங்களில் ‘சூத்திரர்களிலும் பார்க்க ஈனர்கள்’ என்று குறிப்பிடுவதை தவிர்த்திருக்கலாம். இது ஷத்திரியர்களின் கதை. என்றாலும் பாரதியின் கருத்தின்படி சத்திரர்கள் அப்படியான கருத்தில் சொல்லப்படவில்லை என்றும் தெரிகின்றது.

மூன்றாவது: கதா காலம் நாவல் நல்ல நடையில், நவீன தமிழில் எழுதப் பட்டது என்று ஏற்கெனவே சொன்னேன். நவீன மொழியில் புழங்கு தமிழ்ச் சொற்களைக்; கையாள வேண்டும் என்பதும் ஓர் அடிப்படை. அதாவது வழக்கொழிந்த சொற்கள், பழந் தமிழ் சொற்கள் எனக்கு இடைஞ்சலைத் தந்தன. தமிழர்களாகிய, தமிழ் படித்த நாமே பல சொற்களுக்கு அகராதியைத் தூக்க வேண்டிய நிலை சிலவேளைகளில் இடம்பெறுகின்றது. உதாரணமாகப் குறைந்தது முப்பது சொற்களுக்கு மேற்பட்ட அப்படியான சொற்களை என்னால் சுட்டிக் காட்ட முடியும். இருந்தாலும், உதாரணமாகச் சில: நிதம்பம், கபாடம், முருக்கம், கொழுமுனை, கதா சரஸ், பவம், தவனம், அட்டி, செவியறிவுறூஊ. தேவகாந்தன் மொழி நடை அழகானது. ஆனால், வாக்கிய அமைப்பு சிலவேளைகளில் இடர் தருகின்றது. முதல் ஐந்து பக்கங்களிலும் அப்படிப்பட்டவை அதிகம். எந்த எழுத்தையும் வாசிக்க ஆரம்பிக்கையில் அப்படித்தான் இருக்கும் என்பது நாம் அறிந்ததே.

அவர் வாக்கியங்களை கலைத்துப் போட்டிருக்கின்றார். எழுவாயை பயனிலை இடத்திலும் பயனிலையை எழுவாய் இடத்திலும் மாறிப் போட்டிருப்பார். பெயர்த்தொடர், வினைத் தொடர், போன்றவை நீண்டதாக, வினைமுற்று அற்றிருக்கும். அப்படி எழுதுபவர்கள் காற்புள்ளி அரைப்புள்ளிகளைப் போட்டு அப்படியான சிக்கல்களைத் தீர்த்திருப்பார்கள். அதற்கு நன்றாக மெய்ப்புப் பார்ப்பவர், பதிப்பாசிரியர்கள் மேல் நாட்டில் உதவுவார்கள். இந்தப் பிரச்சினை,; ஆங்கில வாக்கிய அமைப்பை, அதாவது றழசன ழசனநச ஐ அதிகம் மாற்ற முடியாது என்பது தெரியும். தமிழில் அதற்கு நெகிழ்ச்சி அதிகம். சொற்களை இடம் மாற்றியும் போடலாம். ஆனால், வினைமுற்றையும் நீக்கி, தொடர்களையும் கலைத்துப் போட்டால். அதன் சிக்கல் இன்னும் கூடிவிடும்.

இந்தச் சிக்கல்கள் தேவகாந்தனின் கதாகாலத்தில் சொற்குற்றம், பொருட்குற்றம் ஆகியவற்றைக் காணும் நக்கீரர்களுடையது. ஆனால், அவை இவர்ன் ஒட்டு மொத்த நாவலைச் சுவைப்பதற்கு தடையற்றவை.

இன்னுமொரு குறிப்புடன் என்னுரையை முடித்துக் கொள்கிறேன். தேவகாந்தனை எனக்கு கடந்த ஐந்து மாதங்களாகத்தான் தெரியும். நல்ல மனிதப் பண்புகள் உள்ளவர். பழகுவதற்கு இனியவர். எளிமையானவர். அவர் தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்திருக்கிறார்.

அங்கு செல்வதற்கு முன் ஈழநாடு பத்திரிகையில் வேலைசெய்திருக்கிறார். இவை அனைத்தும். அவரிடம் துருவி துருவிக் கேட்டதால் கிடைத்தவை. அப்படியில்லாவிட்டால் அவையும் கிடைத்திருக்கா. அவர் 12 நூல்களை வெளியிட்டிருக்கிறார் என்று கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சொன்னார். அதற்கு முன் ஒரு இரண்டாண்டுகளுக்கு முன் வரன், தேவகாந்தன் என்பவர் ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட ஒரு நாவலை ஐந்து பாகங்களாக எழுதியுள்ளார். அந்தப் பெரிய புத்தகத்தை எழுதியதற்காகவே அவர் பேசப்படுவார் என்று சொன்னார். தலையணை அளவு புத்தகங்களை வாசித்தது இளமையில். இப்போது அப்படியானவற்றைக் கண்டாலே

எனக்குக் கிலி. அதனால் செல்வத்திடம் அதன் இரண்டு பாகங்களைக் கண்டபோது அதை வாங்காமலே விட்டு விட்டேன். அதன் முன்பின்னாக இவரின் பேட்டியொன்றை இலங்கைப் பத்தி¡¢கை ஒன்றில் வாசித்தேன். நல்ல, ஆழமான, விஷயமறிந்த பதில்கள் அவற்றில் இருந்தன. அதைவிட, கதாகாலம் நாவலை மட்டும் தான் இப்போது வாசித்திருக்கிறேன். இதை வைத்து, அவர் முக்கியமான நாவலாசிரியர் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். அதனால் அவா¢ன் மற்ற நூல்களைத் தரும்படி அவரிடம் கேட்டேன். தன்னிடம் இல்லை என்று கையை விரித்து விட்டார். அப்படிப்பட்டவரை நாங்கள் வாசித்து, அறிந்திருப்பது எப்படி? என்பது கேள்விக் குறியே.

அடுத்தது, அவர் அவர் இலங்கை எழுத்தாளரா? இந்திய எழுத்தாளரா என்ற கேள்வி. அக்கதையெல்லாம் அவரின் நாவலைப் பொறுத்தளவில் அவசியமில்லாதவை. இலங்கை எழுத்தாளருக்கில்லாத இலக்கியத் தரமான தமிழ் நடை அவருக்குக் கைவந்துள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணனின் நடையை நாம் சிலேகித்துப் பேசுகின்றோம். அது போன்ற கொஞ்சம் வித்தியாசமான நடை இவருடையது. இந்தப் பண்பு இலங்கை எழுத்தாளர்களுக்கு இல்லை. கருத்தே அவர்களின் கவனம்.

அடுத்தது, இவரை ஏன் எழுத்தாளர்களோ வாசகர்களோ அதிகம் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வி? அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்பது என் அபிப்பிராயம். ஓன்று, அதற்கு இவரே அதிகம் காரணம். இவர் 1986 இல் தன் முதற் புத்தகத்தை இந்தியாவில் ஏதோவொரு பதிப்பகம் மூலம் போட்டிருக்கின்றார். அவருடைய பன்னிரண்டு புத்தகத்தில் பத்து அங்கே வெளிவந்துள்ளன. இந்தியப் பதிப்பகத்தார் நூலகங்களுக்குப் போட்டு தங்கள் காசை எடுத்தவுடன், இவருக்கு ஓரளவு றோயல்டியை கொடுத்தவுடன் இரண்டு பகுதியாரின் வேலையும் முடிந்தது. அதனால், எங்களைப் போன்ற வாசகர்களுக்கும் எட்டவில்லை. இரண்டு, இந்திய விமர்சகா; பலர் இவருடன் நெருங்கிப் பழகியும் இருக்கிறார்கள். உதாரணமாக வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் என்று இன்னும் பலர். அவர்களும் இவரைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இரண்டொரு கதைகள், கவிதைகள் எழுதிய புலம்பெயர்ந்;த படைப்பாளிகள் அவர்கள் கடைக்கண்ணின் பார்வைக்கு உட்பட்டுள்ளனர். இனிமேல் புலம்பெயர்ந்துள்ளதால் இவரும் கவனிக்கப்படுவார். ஆனால் அவர்தான் நான் இங்கிருந்து போய் விடுவேன் போய் விடுவேன் என்று விளையாட்டுக் காட்டுகின்றார். ஆனால், கோவணச் சாமியார் குடும்பஸ்தன் ஆகிய கதைதான் இங்குள்ள பலருக்கும் நடந்துள்ளது என்பதை அவருக்கு நான் அடிக்கடி ஞாபகம் ஊட்டிக் கொண்டிருக்கின்றேன். அதற்கு அவர் புறநடையும் ஆகிவிடலாம். யார் கண்டது? கதா காலம் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய தமிழ் நாவல். [கட்டுரைக்காக, தலைமை உரையின் திருத்திய பதிப்பு]

பதிவுகள்: மே 2005 இதழ் 65 -மாத இதழ்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


'இன்னாத கூறல்' வலைப்பதிவிலிருந்து: லங்காபுரம்- உடையும் விம்பங்கள்   - கிருத்திகன் -

12/30/20106 Comments  சிறிது காலத்துக்கு முன்னால் மே-18 என்ற அமைப்பின் சார்பில் வியூகம் என்கிற அரசியல் கோட்பாட்டு சஞ்சிகை வெளியீட்டுவிழா பற்றிய சேதிகேட்டு Mid Scarborough Community Center போன நாள் ஞாபகம் இருக்கிறது. வழமை போலவே நிகழ்வுக்கு நேரத்தோடே சென்றிருந்தேன். மே.ப. Mid Scarborough Community Center என்கிற பெயர் இப்போது புழக்கத்திலில்லை. ஆதலால் சரியான இடம் சேர்ந்தோமா என்கிற தயக்கத்தோடு மெள்ள வாகனத்தில் இருந்து எட்டிப்பார்த்தேன். அதற்கு முன் ஒரு விழாவில் கண்டு இன்னாரென சுதன் பெயர் சொல்லித் தந்த காலம் செல்வம் புகைத்துக்கொண்டிருந்தார். அவரோடு இன்னுமொரு மனிதரும். வியூகம் இதழின் தேசியம் பற்றிய ஒரு கட்டுரைக்கான மதிப்புரையை அந்த மனிதரே செய்தார். பெரிதாக அவரை அறிமுகப்படுத்தவில்லை விழா ஒருங்கமைப்பாளர்கள். அவரது பெயரை அறிந்துகொள்ளும் ஆர்வம் அவர் சொன்ன ஒரு வசனத்தில் போயேவிட்டது. ‘தமிழர் தேசிய பிரச்சினையை மார்க்சிய கண்ணோட்டம் கொண்டவர்கள் கவனமாக அணுகவேண்டும்’ என்கிற பொருள்பட அவர் ஒரு வசனம் சொன்னார்.

ஏனோ எனக்கு அந்த வசனம் பிடிக்கவில்லை. அவரை நான் ஒரு அரசியல் செயற்பாட்டாளராகவே நினைத்துக்கொண்டேன். சுதனின் திருமணவரவேற்புக்கு அவரும் வந்திருந்தார். பக்கத்தில் இருந்த பிரியத்துக்குரிய மெனா முனா ‘இவர்தான் எழுத்தாளர் தேவகாந்தன். இவர் எழுதியிருக்கிற ------, ------- போன்ற நாவல்கள் முக்கியமானவை’ என்பதாகச் சொன்னார். என்னுடைய முன் அனுமானம் வேறாக இருந்ததால் மெலிஞ்சி சொன்ன நாவல்களின் பெயர்கள் மனதில் நிற்கவில்லை. ஆனால், மெலிஞ்சியால் தமிழின் முக்கியமான நாவல்கள் என்று சொல்லப்படுபவை சோடையாக இருக்காது என்கிற எண்ணம் மட்டும் மனதில் விரவியிருந்தது. சுதன் மூலமாக நான் அறிந்தது நிறைய. ஒருமுறை Hamilton, Webster  Falls என்கிற இடத்துக்கு தீபன் அழைத்திருந்தார். சுதனுடன் பேச்சு சுவாரஷ்யத்தில் Hamilton கடந்து கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பயணித்து திரும்பி வந்திருக்கிறோம். அந்த நீண்ட கொடிய பயணத்திலும் சுதன் தேவகாந்தன் பற்றிச் சொன்னதாக ஞாபகம். இந்தத் தேவகாந்தனின் விதி மற்றும் லங்காபுரம் ஆகிய இரு நாவல்கள் சென்ற நவம்பர் 6ம் திகதி அவரை முதன் முதலில் கண்ணுற்ற Mid Scarborough Community Center ல் நடைபெற்றது. அன்றைக்கும் நான் போனபோது வாசலில் புகைத்துக்கொண்டிருந்தார் தேவகாந்தன்.

’தேவகாந்தன் சிகெரெட்டுப் புகைக்கிற ஒரு அரசியல்வாதி’ என்று ஒரு முன்முடிவை எப்படி மெலிஞ்சியும் சுதனும் மெல்ல மெல்ல உடைத்தார்களோ அதே போல் காலகாலமாகச் சின்ன வயதிலிருந்து மனதுக்குள் விழுந்துவிட்ட பலவிம்பங்களை வலிக்க வலிக்க உடைத்திருக்கிறது ’லங்காபுரம்’. அன்றைக்கு வெளியிடப்பட்ட இரண்டு நாவல்களிலும் லங்காபுரத்தை முதல் வாசிப்புக்காக நான் தேர்ந்தடுத்ததுக்கு எந்த இலக்கியக் காரணமும் இருக்கவில்லை. ’விதி’யை விட ‘லங்காபுரம்’ பருமனில் சிறிதாக இருந்தமையே ஒரேயொரு காரணம். கிட்டத்தட்ட ஒரே மூச்சில் வாசித்து முடிக்கிற அளவுக்கு லயிக்க வைத்த இந்த எழுத்தாளனின் எந்த ஒரு த்தகத்தையும் இன்றைவரை நான் வாசித்திருக்கவில்லை என்ற நினைப்பு கொஞ்சம் உறுத்தியது.

நாகன் என்கிற ஊரோடி ஒருவன் லங்காபுரத்து அரசன் இராவணனுக்கு ஒரு சேதி கொண்டு செல்கிறான். இந்த நாகனுக்கும் சிவபக்தனும் மகாவீரனுமான இராவணனுக்கும் இனம்புரியாத ஒரு நட்பு இருக்கிறது. வழமையான தலைநகர் பற்றிய விபரிப்புகள், நாகன் பற்றிய அறிமுகம் என்று போகிற நாவல் முதல் அத்தியாயம் முற்றுந்தறுவாயில் வியாழி என்கிற பாத்திரம் உள்நுழைந்ததும் ஒரு வேறு வண்ணம் பெறுகிறது. மெல்லிய தீற்றலாய் நாவல் முழுதும் வருகிற காமம் வியாழி உருவத்தில்தான் நுழைகிறது. வியாழி-நாகன் கூடும் தருணம்பற்றிய அந்த வர்ணனை புதிது. பதின்மங்களில் நண்பன் ஒருவனிடம் பறித்த ஒரு புத்தகத்தில் முதன்முதலாக புணர்ச்சி பற்றி வாசித்த ஞாபகம் வந்து போனது. அதுவும் ஒரு சரித்திரக் கதைதான். சாண்டில்யனின் யவன ராணி என்றொரு சந்தேகம் உண்டு. ஒரு ஆண் இரு பெண்டிரோடு புணர்வது பற்றி ஒரு ஒன்றரைப் பக்கம் விபரித்திருப்பார் எழுத்தாளர். அதே பாணியில் எத்தனையோ கூடல்கள் பின்னர் வாசித்திருக்கிறேன். ஆனால், வியாழி-நாகன் கூடலில் தேவகாந்தன் சொல்லியிருந்தது வேறு. கூடலின் போதான வெளி இயங்குநிலைகள் பற்றியதாய் இல்லாமல், உள்ளே ஊற்றெடுக்கிற சுகப் பிரவாகம் பற்றியதாய் அந்த வர்ணனை இருந்தது. இப்படியாக, வழமையான சரித்திரம் சம்பந்தப்பட்ட நாவல்களில் இருக்கிற வழமைகள் சில லங்காபுரத்தில் இருக்கப்போவதில்லை என்பதற்கான கட்டியம்தான் வியாழி-நாகன் கூடுகிற அந்தத் தருணம்.

முன்முடிவுகளூடே வாசித்தல் என்பது ஒரு சுகமான அனுபவம், அம்முடிவுகள் உடைவுறும்போது சரியான கோணத்தில் அணுகுதல் சாத்தியம் எனில். அதிலும் நாவல்களில் முன்முடிவுகளூடே வாசித்தல் இனிய சுகம். நான் நாவல்களை பின்புற அட்டையிலிருந்தே வாசிக்கத் தொடங்குவது வழக்கம். பின்னர் முன்னுரைகளும் என்னுரைகளும். இவற்றை வாசித்து முடித்ததும் வாசிக்கப்போகிற புத்தகம்/நாவல் பற்றிய முன்முடிவுகள் சில வந்துவிடும். அம்முடிவுகள் எப்போதும் சரியாயிருப்பதில்லை. சரியாயிருக்கிறபோது ‘பாத்தியா?’ என்று சொல்லிக்கொள்வதும், தவறுகிறபோது அவற்றினூடான படிப்பினைகளை ஏற்றுக்கொள்வதும் என்னுடைய வாசிப்பில் ஒரு சின்ன அங்கமாயிருந்து வந்திருக்கிறது. அந்த வகையிலே, ‘லங்காபுரம் தோற்றவன் பக்கத்துக் கதை’ என்று சொல்லப்பட்ட காரணத்தினாலே, ‘இராவணன்’ என்கிற பாத்திரம் மிகவும் புனிதப்படுத்தப்பட்டுச் சித்தரிக்கப்பட இருக்கிறது என்பதை கிட்டத்தட்ட எழுதிவைத்துவிட்டே நாவலினுள் நுழைந்தேன். இராவணனை முதன் முதலில் நேரடியாக நாவலுக்குள் நுழைக்கிற தருணத்தில் இந்த முன்முடிவை அடித்துப் போட்டுவிடுகிறார் தேவகாந்தன். இராவணன், அவன் தங்கை சூர்ப்பாநகையைத் தேடியபடி வருவதாகவே அவனுடைய நுழைவு அமைகிறது. வருகிறவன் வசைபாடிக்கொண்டு வருகிறான், ‘இன்னுமா வரவில்லை, அந்தப் பரத்தை மகள். எங்கே போய்த் தொலைந்தாளோ. கூடச் சென்றது யார். ஒரு இரவு முழுவதுமா வெளியே தங்குவாள் ஒரு இளம்பெண். தன் தாயைப்போலவேதான் சரியாக. இப்படித்தான் அவளும் இரவிரவாய் யோனிப் பசிகொண்டு அலைந்தாள். வரட்டும், அந்த சின்னப் பரத்தையைத் திருகிப் போட்டுவிடுகிறேன்’  (ப. 35) என்று. இராவணன் என்கிற பாத்திரன் ஒரு சராசரிக் குடும்ப/நாட்டுத் தலைவனாகவே காட்டப்படப் போகிறது என்பது இங்கேயே தெரிகிறது. சர்வசாதாரணமாக தாயையும், சகோதரியையும் ‘பரத்தைகள்’ என்று வசைபாடுகிற, சின்னச் சின்ன சபலங்களை  பெரும் செல்வத்துக்கான ஆசையையும், அந்தச் செல்வத்தின் ஒரு பகுதியில் கடவுள் சேவைக்கான பெருவிருப்பையும் கொண்ட, ஒரு சராசரி ஆண் தலைவனாகவே இராவணன் நாவல்முழுதும் வருகிறான்.

இந்த அறிமுகப் படலத்திலேயே இன்னொரு விம்பம் உடைந்து போகிறது. நான் இராவணனை முதலில் கண்டது அம்புலிமாமா இராமாயணத்தில். கறுப்பாக, பென்னாம் பெரிய மீசையோடு இருப்பான். கும்பகர்ணன் (லங்காபுரத்தின் கதக்கண்ணன்) இன்னும் பெரிதாக கோரைப் பற்களோடு இருப்பான். இந்திரசித்து (சித்தன்) பொது நிறத்தில் இராவணனளவேயான உடம்போடு இருப்பான். மூவர் முகங்களும் கர்ணகடூரமாக இருக்கும். ஆனால், விபீடணன் (வீடாணன்) மிகுந்த வெள்ளை நிறமாக சாந்த சொரூபியாக, நெற்றியில் திருநீறோடு, அன்றைக்கு ‘அழகு’ என்று எந்த இலட்சணங்கள் சொல்லித்தரப்பட்டனவோ அந்த இலட்சணங்களோடு இருப்பான். இங்கே தேவகாந்தன் வீடாணனை இராவணனின் மறுவிம்பம் போலும் தோற்றமுடையவனாய்ச் சொல்கிறார். தருக்க ரீதியில், அம்புலிமாமா சொன்ன வீடாணனை விட, தேவகாந்தன் சொல்கிற வீடாணனுடைய இருத்தலுக்கே சாத்தியம் அதிகமாகப்படுகிறது. அதிலும் மிகச் சர்வசாதாரணமாக இந்தக் கறுப்பு வெள்ளை விம்பங்கள் எங்களுக்குள் கட்டமைக்கப்பட்டே வந்திருக்கின்றன. அதிலும் கம்பராமாயணம் எட்டாம் வகுப்பிலோ பத்தாம் வகுப்பிலோ படிக்கிற போது (கங்கைப் படலமாய் இருத்தல் வேண்டும்) ஒரு பாடல் வரும்

’வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்-
”மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவு” என்பதோர் அழியா அழகுடையான்’

என்று. இதை எங்கள் தமிழாசான் தவராசா விளக்கும்போது ஒரு புன்னகையோடு சொல்வார், ‘இராமன் அட்டைக் கருப்பு என்பதைக் கம்பன் எதோடெல்லாம் ஒப்பிட்டிருக்கிறான்’ என்பதாக. எனக்கு அப்போதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ‘இராமன் தெய்வாம்சம். அவன் நிறம் நீலம். கறுப்பில் தெய்வாம்சம் இருத்தல் கூடாது’ என்பதாகவே சொல்லித்தரப்பட்டிருந்தோம்.

அப்போதெல்லாம் கர்ப்பக்கிரகச் சிலைகள் கறுப்பு என்கிற நினைப்பிருந்ததில்லை. அப்பாபோலவே நானும் கறுப்பென்று மருகிய காலம். ஆகையால் தமிழாசானைப் பார்த்து ‘இந்தாள் தான் கறுப்பெண்டதால ராமனையும் கறுப்பாக்கீட்டுது’ என்று சொல்லி மனதை ஆற்றமுடிந்தது. இப்போதுகூட ‘வெய்யோன் ஒளி’ என்று இந்தப்பாடல் என் மனதில் பதியவில்லை. ‘மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ’ என்று நன்றாகப் பதிந்திருந்தது. முழுப்பாடலைத் தேட ‘மையோ, மரகதமோ’ தான் உதவிற்று. நல்லவிடயம் கறுப்பாக இருக்க முடியாது என்கிற அந்த அடிமனத்து எண்ணம், விபீடணனுக்கு அம்புலிமாமா கொடுத்த அந்த உருவத்தை நன்றாக உள்வாங்கிக்கொண்டது. கூடவே ஏனைய இராவண சகோதரர்களையும். ’ஐந்து விரலும் ஒருமாதிரியிருப்பதில்லை’ என்பதை யாவரும் அறிவர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இராவண சகோதரர்களில் வீடாணன் நிறம் மட்டும் மாற்றப்பட்டது ‘கறுப்பு-கெட்டது, வெள்ளை-நல்லது’ என்பதாக விதைக்கப்பட்டுவந்த விஷத்தின் ஒரு வடிவமாகவே என்னால் பார்க்கமுடிகிறது. இந்தப் பார்வையினடிப்படையில் ‘இராவணன் போல் பெருத்த உருவமொன்று’ என்று வீடாணனை தேவகாந்தன் சித்தரிக்கிறதை மனம் ஏற்றுக்கொள்கிறது. இதுவரைக்கும் சொல்லப்பட்டதுபோலவே வீடாணன் உத்தமன் என்றே வைத்துக்கொண்டால், அப்படிப்பட்ட உத்தமன் ஏன் உடற்தோற்றத்தில் இராவணனை ஒத்திருத்தல் கூடாது? அவனது தோற்றம் இராவணனுக்கு முற்று முழுதும் வேறுபட்டதாக இதுவரை காட்டப்பட்டதன் பின்னாலிருக்கக்கூடிய அரசியல் என்ன?

இராவண வீழ்ச்சிக்கு தேவகாந்தன் நிறையக் காரணங்களை அடுக்குகிறார். இராவணன் மனைவி மந்தாகினி சார்ந்த இனம் நாக இனம், நாக வழிபாட்டை முதன்மையாகக் கொண்டவர்கள். இராவணன் ஒரு இயக்க இனத்தவன். இயக்கர்களின் வழிபாட்டுச் சார்பு முன்வைக்கப்படாவிட்டாலும், இராவணன் சிவ வழிபாட்டை முதன்மையாகக் கொண்டிருப்பவன். இயக்க இனக்குழு தலைவனோடு தலைவியையும் மதிப்பதாயிருந்ததும் இராவணன் தன்னையே முன்னிறுத்தி மந்தாகினியைப் பின்னே தள்ளுவதுமாய் இருப்பது காரணத்தில் இருபேருக்குமிடையில் ஒரு இடைவெளி விழுந்திருந்தது. அண்ணனின் செல்வக் குவைகளில் கண்ணொற்றியிருந்த வீடாணன் இதைச் சந்தர்ப்பமாக வைத்து சதி செய்கிறான். மந்தாகினியையும் சதி தொடர்பில் தன்பக்கம் இழுக்க முயல்கிறான்.

அண்ணியும் கொழுந்தனும் ஒருவர் மீது ஒருவர் சின்னச் சபலம்கூடக் கொள்கிறார்கள். லங்காபுரச் சிற்பி பிரானுக்கு இராவணன் எழுப்பும் கோவில் வேலை தனக்குக் கிடைக்கவில்லை என்கிற கோபம் இருக்கிறது. ஏன், அந்தக் கோவிலில் இராவணன் கொண்டாடுகிற சிவ தெய்வம் தொடர்பில் இராவணனுக்கு எதிரான அலை கிளம்பியிருந்தது.  மந்தாகினிக்கும் இராவணனுக்குமிடையிலான ஊடற்காலத்தில் நாகன் சீதை பற்றிச் சொன்னதால் இராவணன் சலனம் கொள்கிறான். ‘சீதை என்கிற அந்தமில் அழகி வனமூர்ந்து வருதல்’ கேட்டு இராவணன் சலனப்படுகிறான். அவளைக் கவர எண்ணிக் கவர்கிறான். மந்தாகினிக்குத் தெரியாமல் சீதையைச் சிறைவைக்க முயல்கிறான்.

தனியே அவன் சீதை பொன்னொளி வீசும் திரவியம் என்பதாய்க் கவரவில்லை. அவன் மனதின் ஏதோ மூலையில் அவள் மந்தாகினிக்கான மாற்றாய்த் தெரிந்திருக்கிறாள். அதனாலேயே அந்த அந்தமில் அழகியை இராவணன் கவர்கிறான். அதனால் வருகிறபோர்.... வீழ்ச்சி. இப்படியாகப் போகிற இராவணனின் வீழ்ச்சிப் பொறிமுறையில் தேவகாந்தன் சொல்கிற இன்னொரு காரணம் கவனிக்கப்படாமல் போகலாம். மனிதகுல வரலாற்றில் சாமனியன் ஒருவனின் தோல்வியிலிருந்து, பெரிய பெரிய வீழ்ச்சிகளுக்கெல்லாம் காரணமாயிருந்த இந்தக் காரணம், இன்றைக்கும் கூட நிலைத்து நிற்கிறது.

சீதையைக் கவர இராவணன் விசைத்தேர் ஏறிப் போகிறான். காடுகள், மலைகள், மேடுகள், பள்ளங்கள் கடந்து அவன் போன அந்த நீண்ட பயணத்தின் ஒரு கட்டத்தில் அப்பயணம் பற்றிய ஆயாசமும், கேள்விகளும் இராவணனுக்கும், கூடவே வந்த மாரீசனுக்கும் வருகின்றன. வழியில் ஒரு மடத்தில் ஒரு இரவில் தங்கியிருக்கையில் இனம்புரியாத களைப்பொன்றை உணர்கிற இராவணன் மனதில் ஓடுகிற சஞ்சலங்களை தேவகாந்தன் வருமாறு விபரிக்கிறார்:

“மழை கடந்த இரவு வனமறுந்து பாலை தொடங்கும் அவ்வெளியில் நன்றாகப் பெய்திருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. ஒருவேளை இன்னும் மேற்கே இதைவிடக் கூடுதலான மழை பெய்திருப்பின் பாலை கடத்தல் அரிதாகக்; கூடும். இனம்புரியாத களைப்பொன்று ராவணனில் வந்து விழுந்தது அப்போது. தான் நாகனின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் அந்த நீண்ட பயணத்தைத் தொடங்கியது பிழையோவென எண்ணத் தலைப்பட்டான். ஆனாலும் இனி மீட்சியில்லை. அவன் தேரெடுத்துப் புறப்பட்ட காட்சி கண்டு மக்கள் ஆரவாரித்திருந்தனர். அது தலைமையின் மீதான பக்தி காரணமானது. அவன் சாதிப்பவன் என்ற கீர்த்தியுள்ளவன். அவன் விசைத் தேரெடுத்துப் புறப்பட்டுவந்து வெறுங்கையோடு திரும்பியதாய் ஒரு காலம் என்றுமிருந்ததில்லை. இனியும் அது இருக்கக்கூடாது. அது அவனது இறையாண்மையைக் கேள்விக்கு உள்ளாக்கிவிடும். மண்டோதரியிடம் இளக்காரப்பட நேரிடும். அரச காரியங்களில் கவனமற்று குலத் தலைவர்களாய் மட்டும் இருக்கும் நாக இன அந்த இளம் அரசுரிமைகாரர் மீண்டும் படை திரட்டி அவனை ஒழிக்க காப்பும் கட்டக்கூடும். அவன் அதற்கெல்லாம் ஆட்பட்டவனில்லை. அது ராவண வாழ்வில் என்றும் நடைபெறக்கூடாதது”  (ப.ப. 128-129)

இந்தவிதமான ஒரு இறுமாப்பு பல வீழ்ச்சிகளுக்குக் காரணமாகியது, காரணமாகிக்கொண்டிருக்கிறது, காரணமாகும். காரணம், மனித இயல்பு அது. எங்கள் ஒவ்வொருவருக்கும், ஏதோ ஒரு கணத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்த ஒரு பாதை பற்றிய கேள்விகள் வந்துதானிருக்கும். சில சமயங்களில் அந்தப் பாதையில் பயணிப்பதன்மூலம் நாம் கண்டடையப் போவது எதுவுமேயில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆனபோதிலும், அந்தப் பாதையிலிருந்தான விலகல் ஒரு தோல்வியாய், ஒரு வீழ்ச்சியாய், மிகப்பெரிய அவமானமாய்ப் பார்க்கப்படும் என்கிற ஒரு பயம் வரும். அந்தப் பயம் நம்மை பிழையான அந்தப் பாதையில் இனிமேல் நடக்காதே, கண்ணை மூடிக்கொண்டு ஓடு என்று சொல்லும். அப்படி ஓடி, பாதை முடிகிற போது கண்ணைத் திறந்து பார்க்கிறபோது எல்லாமே முடிந்துவிட்டிருக்கும். இந்தக் கணத்தைப் பலபேர் கடந்திருக்கிறோம். இந்தக் கணம் எங்களுக்குச் சொன்னதை ஏற்காமல் விட்டதால் வந்த வலிகளைப் பல்லைக்கடித்துக்கொண்டு ஏற்றுக்கொண்டு சிலபேர் போராடி உயர்கிறோம், பலபேர் மண்ணோடு மண்ணாக வீழ்கிறோம். இந்தக் கணத்தை தனி மனிதன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பில், மூன்றாம் தவணையில் உணர்ந்திருந்தான். இரசாயனம் நூற்றுக்கு முத்தத்தியேழு, மூன்றாம் தவணையிலேயே. கையில் இருந்த 'மாணவர் முன்னேற்ற அறிக்கை’ அவன் பின்னடைவைச் சொன்னது. இந்த வழியிலிருந்து விலகிக்கொள்ளச் சொன்னது. ஏதோ ஒன்று தடுத்தது. சின்ன வயதிலிருந்து வளர்க்கப்பட்ட ‘எஞ்சினியர்’ கனவுகள், ‘கணக்குப் பாடம் நல்லாச் செய்வான்’ என்ற நம்பிக்கை, சட்டைப்பைக்குப் பக்கத்தில் தொங்கிய Prefect Badge இவையெல்லாம் சேர்ந்து ‘கண்ணை மூடிக்கொண்டு ஓடு இந்தப் பாதையில்’ என்றது. ஓடாவிட்டால் ’சுற்றம் சிரிக்கும், நண்பர்கள் சிரிப்பர், பிறத்தியர் சிரிப்பர்’ என்றது. பாதையின் சாதகமில்லா முடிவைத் தெரிந்தே ஓடினான். அதே போல் இராவணனும் ஓடினான். இராவணன் பின்னால் இன்னும் எத்தைனையோ ”தலைவர்’கள் ஓடினார்கள். ஓடியவர்கள் நதிக்கரைகளிலும், கடற்கரைகளிலும், காடுகளிலும், பாலை நிலங்களிலும், வாய்க்கால்களின் ஓரத்திலும் வீழ்ந்து கிடந்தார்கள், கூடவே அவர்களை நம்பிய மக்கள் கூட்டமும் புதைந்து போனது. இந்த மமதை, ஒரு சின்னத் தோல்வி அல்லது பின்வாங்கலை ஏற்க முடியாத சாகசக்கார மனோநிலை எத்தனையோ பேரைப் புரட்டிப்போட்டபின்னரும் யாரும் பாடம் கற்றுக்கொண்டாரில்லை. இராவணன் வீழ்ச்சியிலும் இந்த ஒரு கணம் பெரிய பங்காற்றியிருக்கிறது. ‘இனிமேல் வெறுங்கையோடு திரும்புதலில்லை’ என்கிற மமதைவிடுத்து இராவணன் திரும்பியிருப்பின் ஒரு வீழ்ச்சி தவிர்க்கப் பட்டிருக்குமில்லையா? என் பார்வையில் லங்காபுரம், துரோகத்தின் கதையன்று. சதியின் கதையன்று. காமத்தின் கதையன்று. மேற்சொன்ன அந்தக் கணத்தின் கதை. “What if?'  என்கிற அந்தக் கேள்வியிலிருந்துதான் பெரும்பாலும் கதைகளும் வரலாறுகளும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன.... பலருடைய வாழ்க்கைப் போக்குகளும்.

நன்றி: http://www.kiruthikan.com/8/post/2010/12/1.html


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்