முல்லைத்திணையைப் பாடுவதிலும் புனைவதிலும் வல்லமை பெற்றவர் பேயனார். முல்லை நிலம் காடும் காடுசார்ந்த பகுதிகளையுமுடையது. காடு சார்ந்தது முல்லை நிலமாதலால், இங்குப் பல்வகை மரம், செடி, கொடி ஆகிய தாவரங்கள் பசுமையோடும், செழிப்போடும் காணப்படும். இம்முல்லை நிலத்தின் வருணனைகளைப் படிக்கும்பொழுது, நிலத்தின் செழுமையும், வளமிக்க மலர்கள் மலர்ந்திருத்தலும் காட்சியளிக்கும். ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள இம்முல்லை நிலமானது மலர்களால் சூழப்பட்ட புறவாகக் காட்சிப்புனைவுகளுடன் அமைந்துள்ளது. பல்வேறு சொல்லாட்சிகளில் முல்லை நிலம் சார்ந்த வருணனைக்காட்சிகள் குறைந்த அளவே காணப்படுகின்றன. குறைவான அளவில் முல்லைபற்றிய காட்சிகள் இடம்பெற்றாலும், வருணனைகள் உரிப்பொருள் விளக்கத்திற்கு துணைநிற்கின்றன. எனவே, ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள முல்லை நிலம் பற்றிய வருணனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

முல்லை நிலம்

            முல்லை நிலமானது, 1.புறவு, 2.கானம், 3.கான், 4.மென்புலம், 5.முறம்புகண், 6.வறந்த ஞாலம், 7.செந்நிலம், 8.வன்புலம், 9.புன்புலம், 10.இருநிலம் என்னும் பத்துச் சொல்லாட்சிகளில் பொருட்கூறுகளோடு பேயனரால் வருணிக்கப்பெற்றுள்ளன என்பதை ஆய்விற்குச் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து அறியமுடிகின்றது.

            முல்லை நிலமாகிய ‘புறவு’ என்பது ‘புறவு’ என்னும் பெயரில் ஐங்.முல்.404:3-4; 405:2-4; 406:3-4; 411:1-2; 412:1-3;  413:1-4;  414:1-4;  415:1-4; 416:1-5;    417:1-3;    418:1-2;    419:1-4;    420:1-3;    421:1-2;    424:1;    462:5;    485:4;    494:1-2;    495:1-2 ஆகிய பத்தொன்பது (19) பாடல்களில் ‘நறும்பூந்தண்’புறவு, ‘பூஅணி கொண்டன்றால்’ புறவு, ‘நறுந்தண்’புறவு, ‘மணம்கமழ்’புறவு, ‘கவினிப்’புறவு, ‘கார்கலந்தன்றால்’புறவு, ‘அழிதுளி தலைஇய’ புறவு, ‘நன்னலம் எய்தினை’ புறவு, ‘நறும்பூம்’ புறவு, ‘முகைஅவிழ்’புறவு, ‘மலர்அணிப்’புறவு, ‘தண்கமழ்’புறவு என்னும் அடைகளுடன் வருணனைக்காட்சியாக இடம்பெற்றுள்ளது.

புறவு

                புறவாகிய முல்லை நிலமானது நறுமணம் மிக்கப் பல மலர்கள் மலர்ந்து, பல வண்ண நிறங்களையுடைய மலர்கள் சூழ்ந்த புலமாக அழகுபெற்று விளங்குகின்றது. இதனை,

“காயா கொன்றை நெய்தல் முல்லை
போதுஅவிழ் தளவமொடு பிடவுஅலர்ந்து கவினிப்
பூஅணி கொண்டன்றால் புறவே.”1              

என்னும் பாடலும்,

“பொன்என மலர்ந்த கொன்றை மணிஎனத்
 தேம்படு காயா மலர்ந்த தோன்றியொடு
நன்னலம் எய்தினை புறவே.”                    

என்னும் பாடலும் எடுத்துரைக்கின்றது. மேற்காணும் பாடல்களில், இடம்பெற்றுள்ள காயா மலர் நீல நிறத்தையும், கொன்றை மலர் பொன் நிறத்தையும், நெய்தல் மலர் கருநிறத்தையும், முல்லை மலர் வெள்ளை நிறத்தையும், தளவம் (செம்முல்லை) காம்பில் சிவப்பு நிறத்தையும் மலரில் வெள்ளை நிறத்தையும் கொண்டு, பிடவம், தோன்றி (செங்காந்தள்) மலரும் மலர்ந்து பல வண்ணங்களுடன் புறவு அழகுறக் காட்சியளிக்கின்றதைக் காணமுடிகின்றது.

            நெய்தல் நிலத்திற்குரிய நெய்தல் மலர் முல்லை நிலத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு, ஒருதிணைக்குரிய மலர் இன்னொரு திணையில் இடம்பெற்றால் இவற்றை அந்நிலத்திற்குரிய மலராகவே கொள்ளவேண்டும் என்கிறது தொல்காப்பியம். இதனை,

“எந்நில மருங்கின் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
வந்த நிலத்தில் பயத்த வாகும்.”                

என்னும் நூற்பா எடுத்துரைக்கின்றது.

                முல்லை நிலமாகிய புறவானது மலர்களை மட்டுமல்லாமல் மழை வளத்தினையும் கொண்டு செழிப்படைந்த புலமாகக் காட்சியளிக்கின்றது. இதனை,

“வானம் பாடி வறம்களைந்து ஆனாது
அழிதுளி தலைஇய புறவு.”4                                  

என்னும் பாடலும்,

“ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்
கார் தொடங் கின்றால் காமர் புறவே.”5                

என்னும் பாடலும் விளக்குகின்றது. மழையானது வானம்பாடிப் பறவையின் நீர் வேட்கையை நீக்கும் பொருட்டு மிகுந்த மழைபெய்தமை மட்டுமல்லாமல், இடிமுழக்கத்துடன் மிகுந்த மழைபெய்தமையையும் இப்பாடல்களில் காணமுடிகின்றன. இதன்மூலம், வானம்பாடிப்பறவை பாடினால் மழைபொழியும் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்திருப்பதையும் அறியமுடிகின்றது.

காடு

முல்லை நிலமான, ‘காடானது’, ‘காடு’ என்னும் பெயரிலேயே ஐங்.முல்.484:1-2 என்னும் இவ்வொரு (1) பாடலிலும்,  ‘கானம்’, என்னும் சொல்லாட்சியில் ஐங்.முல்.425:1-4; 433:1-3; 465:1-2; 499:1-2; ஆகிய நான்கு (4) பாடல்களிலும் , ‘கான்’ என்னும் பெயரில், ஐங்.முல்.430:1-3; 461:1-2 என்னும் இவ்விரண்டு (2)  பாடல்களிலும், ‘வேனில் நீங்கக் கார்மழை தலைஇ’ காடு, ‘இரங்கும்’ கானம், ‘கார்செய்’கானம், ‘கார்கவின் கொண்ட’ கானம், ‘குறுங்கால் கொன்றை அடர்பொன் என்னச் சுடர்இதழ் பகரும்’ கான், ‘பிடவுமுகை தகைய’ கான் என்னும் அடைகளுடன் வருணிக்கப்பெற்றுள்ளன.

காடும் காடுசார்ந்த பகுதிகளையுமுடைய முல்லை நிலம் மலர்களைப்பெற்று வளமுடன் காட்சியளிக்கின்றது. இதனை,

“பிடவம் மலர தளவம் நனைய
கார்கவின் கொண்ட கானம்”6                     

என்னும் பாடலும்,

“நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை
அடர்பொன் என்னச் சுடர்இதழ் பகரும்
கான்கெழு நாடன்”7                                    

என்னும் பாடலும் எடுத்துரைக்கின்றன. இப்பாடல்களின் வாயிலாகப் பிடவம், தளவம் (செம்முல்லை),கொன்றை ஆகியவற்றின் மலர்கள் மலர்ந்து காடானது செழுமையுடன் திகழ்கின்றதைக் காணமுடிகின்றது.

            காடாகிய முல்லைநிலமானது வேனில் காலத்தில் வெப்பமுடைய பகுதியாக இருந்திருக்கின்றது. பின்பு, கார்காலத்தில் மழைபொய்தமையால் அழகுபெற்றுத் திகழ்ந்திருக்கின்றது. இதனை,

“வேனில் நீங்கக் கார்மழை தலைஇ
காடுகவின் கொண்டன்று பொழுது.”8          

என்னும் பாடல் விளக்குகின்றது. இப்பாடலின் மூலம், முல்லைநிலம் வேனில்காலத்தில் வளமிழந்து பாலைப் பகுதியாகக் காட்சியளித்திருக்கின்றது என்பதனை அறியமுடிகின்றது.

மென்புலம்

            ‘மென்புலம்’ (மருதநிலம்) என்னும் பெயரில் முல்லை நிலமானது, ‘மென்’ என்ற அடையுடன் ஐங்.முல்.407:1-4; 489:1-5 என்னும் இவ்விரண்டு (2) பாடல்களில் வருணனைக்காட்சிகள் அமைந்துள்ளன.

முரம்பு

            முல்லைநிலமானது, ‘முரம்பு’ (பருக்கைக்கற்களையுடைய மேட்டுநிலம்) என்னும் பெயரில் ஐங்.முல்.449:1-4 இவ்வொரு பாடலில் வருணனையாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வறந்த ஞாலம்

‘வறந்த ஞாலம்’ (வறட்சிப்பட்டுக்கிடந்த முல்லைநிலம்) என்னும் சொல்லாட்சியில் ‘வறந்த’ என்ற அடையுடன் ஐங்.முல்.452:1-2, இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சி இடம்பெற்றுள்ளது சுட்டத்தக்கதாகும்.

பாலையாகிய முல்லையும் முல்லையாகிய பாலையும்

                முல்லை நிலம் வறட்சியுடன் காட்சியளித்திருக்கின்றது என்பதனைக் கீழ்க்காணும் பாடலொன்று எடுத்துரைக்கின்றது.

“வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசிக்
கறங்குகுரல் எழிலி கார்செய் தன்றே.”9                 

இப்பாடலில், முல்லைநிலம் கோடைகாலத்தில் நீர்வற்றிய பாலைப்பகுதியாகத் திகழ்ந்திருந்தமையும், வறட்சியுற்ற பாலைப்பகுதி கார்கால மழைபொலிவால் செழிப்படைந்ததையும் காணமுடிகின்றது.

செந்நிலம்

‘செந்நிலம்’ (செம்மண் பாங்கான முல்லைநிலம்) என்னும் பெயரில் ‘செம்மை’ (‘செந்’) என்ற அடையுடன் ஐங்.முல்.495:1-2 இவ்வொரு பாடலில் மட்டும் வருணனை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வன்புலம்

‘வன்புலம்’ (முல்லை நிலத்துத் தோட்டக்கால்கள், புன்செய் நிலப்பகுதி) என்னும் சொல்லாட்சியில் ‘வன்மை’ (‘வன்’) என்ற அடையுடன் ஐங்.முல்.469:1-2 இவ்வொரு பாடலில் வருணிக்கப்பட்டுள்ளது எடுத்துரைக்கத்தக்கதாகும்.

இருநிலம்

‘இருநிலம்’ (பெரிய நிலம்) என்னும் பெயரில் ‘இரு’ என்ற அடையுடன் ஐங்.முல்.470:1-2 இவ்வொரு பாடலிலும் வருணிக்கப்பட்டுள்ளது. இவ்வருணனையில் வடிவம் என்னும் வருணனைக்கூறு அமைந்துள்ளது.

மலை

            முல்லை நிலத்தில் இடம்பெற்றுள்ள ‘மலை’யானது, ‘குறும்பல்’பொறை, ‘நெடும்’பொறை, ‘அணிநிற இரும்’பொறை, ‘மாம’லை என்னும் அடைகளுடன், ஐங்.முல்.404:3-4; 430:1-2; 431:2-3; 496: 2 ஆகிய இந்நான்கு பாடல்களில்  வருணனைக்காட்சியாக அமைந்துள்ளது.  மலை வருணனையில் மலையின் வடிவம், அகலம், நீளம், நிறம் ஆகிய வருணனைக் கூறுகள் இடம்பெற்றுள்ளன.

                 நீளமான மலையின் மீது குட்டையாக வளர்ந்துள்ள மலர்களையுடைய கொன்றை மரமானது மலர்களைப் பரப்புவதால் மலையானது அழகுடன் காட்சியளிக்கின்றது. இதனை,

“நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை
 அடர்பொன் என்னச் சுடர்இதழ் பகரும்.”10           

என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது. இப்பாடலில், நீண்ட மலை, குட்டையான மரம், மலரின் நிறம், மலரின் நிறத்தினைச்சுட்டுவதற்குக் கூறப்பட்ட பொருத்தமான உவமைப் பொருள் ஆகியவற்றை நோக்கும்போது பேயனாரின் நுட்பமான, கூர்மையான புலமைத்திறனை அறியமுடிகின்றது.

புனம்

முல்லைத்திணையில் ‘புனம்’ என்னும் சொல்லாட்சியில் ஐங்.முல்.417:1-2 இப்பாடலில் ‘பலஉடன் ஏர்பரந் தனவால்’ புனம் என்னும் அடையுடன் வருணனை அமைந்துள்ளது. அதாவது, முல்லை நிலத்தில் தினைப்பயிர் செய்யப்பட்ட இடமானது பிற உணவுதானியங்களுடனும், மலர்களுடனும் அழகுபெற்று விளங்குகின்றது. இதனை,

“கார்கலந் தன்றால் புறவே பலஉடன்
ஏர்பரந்தனவால் புனமே”11                          

என்னும் பாடல் விளக்குகின்றது.  தினைப்பயிர் மட்டுமல்லாது வரகு, துவரை, மலர்கள் போன்றவைக் கலந்து அழகுபெற்று முல்லை நிலம் விளங்குவதாக இப்பாடலுக்கு உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர்.

நல்வயல்

‘வயல்’ என்னும் பெயரில் ஐங்.முல்.459:3-5 என்னும் இவ்வொரு பாடலில் ‘நல்வயல்’ என்ற அடையுடன் வருணிக்கப்பட்டுள்ளது.

            முல்லைத்திணை வருணனையின் நோக்கம்

முல்லைநில வருணனையில் நிலம் எவ்வெப்பெயர்களில் காணப்படுகின்றது என்பதனை வெளிக்கொணர்தல். பல்வேறு பெயர்களில் வருணனையாக்கம் பெற்றுள்ள முல்லை நிலமானது, முல்லை திரிந்த பகுதி என்பதை எடுத்துரைத்தல். பாழ்பட்ட முல்லையில் பறவையின் நீர்வேட்கையை எடுத்துக்கூறுதல். நிலத்தினுடைய வறட்சியை எடுத்துரைப்பதற்கு நிலத்தில் நீரற்ற தன்மை, முல்லைநிலத்தில் மலர்கள், விலங்குகள் செழுப்புற்றிருந்தன என்று சுட்டுவதன் வாயிலாக நிலத்தினுடைய வளத்தினைக் கூறுதல். முல்லைநிலம் மலர்களால் சூழப்பட்ட மலர்கள் மலர்ந்த புலமாகவே வருணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, ஆசிரியர் பேயனார் வருணிருத்திருப்பதன் முக்கியநோக்கம் கார்கால வரவினை எடுத்துரைத்து முல்லையின் உரிப்பொருளான ‘இருத்தலை’ எடுத்துரைக்கவேண்டும் என்பதுதான்.

            முல்லைநில வருணனையில் நிலத்தின் குளிர்ச்சி, செந்நிறம், வடிவம், அழகு, காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தோன்றி, பிடவு, மலர்கள், மலரிதழ், நறுமணம், வண்டு, தேரை, வானம்பாடிப் பறவை, மயில், மயிலின் நிறம், புறா, முயல், தேர், குதிரை, கார்காலம், வளம், மென்புலம், வன்புலம், புன்புலம், மலை, மலையின் நிறம், காடு, புனம், வயல் ஆகியவை வருணனைக் கூறுகளாக அமைந்துள்ளன.

குறிப்புகள் :

1.    சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறுமூலமும்உரையும், ஐங்.முல்.412:1-3
2.     மேலது., ஐங்.முல்.420:1-3
3.    சுப்பிரமணியன்.ச.வே., தொல்காப்பியம், தொல்.அகம்.19.
4.     சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறுமூலமும்உரையும், ஐங்.முல்.418:1-2
5.    மேலது., ஐங்.முல்.411:1-2
6.    மேலது., ஐங்.முல்.499:1-2
7.    மேலது., ஐங்.முல்.430:1-3
8.    மேலது., ஐங்.முல்.484:1-2
9.    மேலது., ஐங்.முல்.452:1-2
10. மேலது., ஐங்.முல்.430:1-2
11. மேலது., ஐங்.முல்.417:1-2

துணைநூல் பட்டியல்:

1.    சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறு மூலமும் உரையும், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், 1/140, பிரகாசம் சாலை, சென்னை -1, முதற்பதிப்பு: 1972.
2.    மாணிக்கணார், அ.   , ஐங்குறுநூறு மூலமும் உரையும், முதல் பகுதி, இரண்டாம் பகுதி, வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர்.காம்ப்ளெக்ஸ், 141, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை – 600 017, மறுபதிப்பு:2001.
3.    தமிழண்ணல், உலகத் தமிழிலக்கிய வரலாறு (தொன்மை முதல் கி.பி.500 வரை) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சி.ஐ.டி.வளாகம், தரமணி, சென்னை – 600 113, முதற்பதிப்பு: 2004.
4.    சுப்பிரமணியன்.ச.வே., தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு. பாரி முனை, சென்னை 600 108, முதற் பதிப்பு: 1998.
5.    சுப்பிரமணியன்.ச.வே., கானல் வரி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.600 113. முதற்பதிப்பு:2002.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்