சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'என் முதல் ஆசிரியர்' பற்றிய சிந்தனைகள் (4) - ஜோதிகுமார் -
1
“என்ன நீங்கள்… … அப்படியெல்லாம் நீங்கள் யோசிக்க கூட வேண்டாம்… யார் மீதுதான் எனக்கு கோபம் வர முடியும்…? என் மீது வேண்டுமனால், நான் கோபம் அடையலாம்…!”
இது, ரயிலில் ஏறும் போது அல்தினாய் கூறுவது.
“உங்களை ஏதோ ஒரு வகையில் புண்படுத்திவிட்டோமோ -இப்படி நீங்கள் எம்மிடமிருந்து உடனடியாக பிரிந்து செல்ல” என்பதே கேள்வி. கிட்டதட்ட ஒரு வாரம் அளவில், கிராமத்தில் தங்கி இருக்கப்போவதாக வாக்களித்திருந்த அப்பேராசிரியர், இப்போது, சடுதியாக, 11 மணி நள்ளிரவில் மஸ்கோவிற்கு பயணமாகின்றார் என்ற முடிவு எதிர்பாராததுதான்.
இந்த திடீர் முடிவுக்கு வரும் முன்னர், அல்தினா அவ்விரு பாப்ளர் மரங்களை உற்று பார்த்த வண்ணம் இருந்தார்.
கண்களை சுற்றி, சுருக்கங்கள் விழுந்துவிட்ட இன்றைய வாடிய முகத்துடன், அவர், அந்த பாப்ளர் மரங்களை பார்ப்பதும், தன்னை மறந்து நிற்கும் தருவாயில்தான், அவ்ஓவியன் அவளிடம் கேட்பான்: “அல்தினா அம்மையாரே… இது இலையுதிர் காலம். இலைகள் இப்போது உதிர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நீங்கள் வசந்தத்தில்; இந்த மரங்களை வந்து பார்க்க வேண்டும். அப்படி பூத்துக்குலுங்கும்”
“ஆம். உயிருள்ள எல்லாவற்றிற்கும் அதனதன் வசந்தமும், அதனதன் உதிர்காலமும் வந்து போவது இயற்கை தான் போலும்…”
இதன் பின்னரே அவள் தனது நீண்ட கடிதத்தை அவ்ஓவியனுக்கு அனுப்பி வைக்கின்றாள்.
கடிதத்தை கவனத்துடன் படிக்கும் அவன், அவளது வாழ்வையும் சமூகமானது அன்றைய தினத்தில் வாழ்ந்த முறைமையையும் தன் ஓவியத்துள் அடக்கப் பார்க்கின்றான். ஆனால், அதுவோ மாறுகின்ற ஒரு சமூகம்.