   
கவிதாயினி முனைவர்.ச.சந்திரா கவிதைகள்!
1.
காலணி

நீயின்றி நானில்லை !நானின்றி நீயில்லையென
ந்ட்புமொழி பரிமாறிக்கொள்ளும் நீங்களிருவரும்
உலகின் தலைசிறந்த தத்துவஞானிகள் !
தரையோடு பயணம் என்றாலும்
தரணியில் உங்களுக்கு நிகர் எவருண்டு ?
குடியானவர் முதல் கோடீஸ்வரன்வரை
நீங்களே துணை வெயிலுக்கும் மழைக்கும்
பொன்னணி இல்லையேல் மாற்றுக்கு
புன்னகையுண்டு.!நீங்கள் இல்லையேல்
பயணம் முழுதும் வெறுமையே!
அடிமுதல் முடிவரை ஆறடி மனிதனைச்
சுமக்கும் காலணியே !திடீரென
ஆயுதமாக மாறி அடிதடிச்சண்டைக்குத்
துணைபோவது ஏனோ?
2.
பணப்பை

நீயில்லாமல் அணுவும் அசையாது !
காலணாவையும் ஏற்றுக்கொள்வாய் !
காந்தி நோட்டையும் ஏற்றுக்கொள்வாய் !
பெண்ணக்கூடப் பத்திரப்படுத்தி விடலாம்
உன்னைப் பத்திரப்படுத்துவது பெருஞ்சாதனை !
நீ இல்லையெனில் பயண வேளை சோதனை !
பணத்தோடு மனித மானமும்
உன்னுள் அல்லவா அடைக்கலம் ?
எத்தனை முறை திறந்து மூடினாலும்
பூமாதேவியாய் பொறுமைகாக்கும் பணப்பையே !
நீ தீடீரெனச் சினங்கொண்டு கொள்ளையர்
கரங்களுக்குள் புகுவது ஏனோ?
அனுப்பியவர்:
albertgi@gmail.com
ராம்ப்ரசாத் (சென்னை) கவிதைகள்!
1. போராட்டத்தின் முதல் படி

நான் உளிகள் உருவாக்கிய
காயங்களின் அழகான
தழும்பு...
வலிகளை இன்னும் தழும்புகள்
நினைவில் கொண்டிருப்பது பற்றி
காயங்களுக்கு என்ன கவலை...
என்னையன்றி வலிகளால் மட்டும்
என்னாகிவிடப்போகிறது...
நானிருப்பது எங்கு பிடித்தமில்லையோ
அங்கு தொடங்குகிறது போராட்டத்தின்
முதல் படி...
2. தெறிக்கும் உவமைகள்.

அடைமழைக்குப் பிறகு
தேங்கி நிற்கும் மழை நீரில்
தலை நனைக்கும்
சிட்டுக்குருவிகளின் தலையுதறலில்
தெறிக்கிறது ஒரு கவிதைக்கான
உவமை...
உன் குளியல்களில் நனைந்து
தோட்டத்து கொடிகளில்
காயும் துணிகளை
நீ உதறுகையில்
அவ்வுவமைகள் பயன்படலாம்
என்றே சேகரிக்கிறேன்
அவைகளை...
-
ramprasath.ram@googlemail.com |